being created

எம். கந்தசாமி முதலியார்

From Tamil Wiki
Revision as of 20:48, 2 January 2023 by ASN (talk | contribs) (Para Added and edited; Imaged Added: Inter Link and: External Link Created:)
எம். கந்தசாமி முதலியார்

எம். கந்தசாமி முதலியார் (ம. கந்தசாமி முதலியார்; மயிலாப்பூர் கந்தசாமி முதலியார்; எம்.கே. முதலியார்) (1874-1939) தமிழ் நாடக முன்னோடிகளுள் ஒருவர். நாடக, திரைப்படக் கதை வசன ஆசிரியர். நடிகர். இயக்குநர். நடிகர் எம்.ஜி. ராமச்சந்திரனின் குரு. நடிகர் எம். கே. ராதாவின் தந்தை.

பிறப்பு, கல்வி

எம். கந்தசாமி முதலியார், சென்னையில், 1874-ல், தணிகாசல முதலியார்-பாப்பாத்தி அம்மாள் இணையருக்குப் பிறந்தார். மைலாப்பூரில் தொடக்க, உயர்நிலைக் கல்விகளைக் கற்றார். சென்னை சர்வ கலாசாலையில் ஆங்கில இலக்கியம் கற்றார். சென்னை கிறித்துவக் கல்லூரியில் சேர்ந்து பி.ஏ. பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

சென்னை அக்கவுண்டென்ட் ஜெனரல் அலுவலகத்தில் பணியாற்றினார். மணமானவர். இளம் வயதில் மனைவியை இழந்தார். மறுமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்தார். ஒரே மகன், நடிகர் எம்.கே. ராதா.

எம். கந்தாசாமி முதலியார்

நாடக வாழ்க்கை

கிறித்துவக் கல்லூரியில், கந்தசாமி முதலியாருக்கு ஆசிரியராக இருந்த வில்லியம் மில்லர் நடத்திய பாடங்களும், ஷேக்ஸ்பியர், இப்சன் போன்றோரின் படைப்புகளும் நாடக ஆர்வத்தை உண்டாக்கின. கல்லூரி நாடகங்கள் பலவற்றிற்கு வசனம் எழுதி நடித்தார். பம்மல் சம்பந்த முதலியார் ஆரம்பித்து நடத்தி வந்த ‘சுகுண விலாச சபை’யில் சேர்ந்து சிறு சிறு வேடங்களில் நடித்தார். சம்பந்த முதலியார், தான் தயாரித்து நடித்த ‘மனோஹரன்’ நாடகத்தில் ‘வசந்தசேனை’ பாத்திரத்தை கந்தசாமி முதலியாருக்கு அளித்தார். பெண் வேடம் பூண்டு, பெண் குரலில் பேசி வில்லிப் பாத்திரத்தில் திறம்பட நடித்து வரவேற்பைப் பெற்றார், கந்தசாமி முதலியார்.

பாய்ஸ் நாடகக் குழு

கந்தசாமி முதலியார், நாடக ஆர்வத்தால், தான் பார்த்து வந்த அரசு வேலையை ராஜினாமா செய்துவிட்டு முழுக்க முழுக்க நாடகங்களில் கவனம் செலுத்தினார். நடிப்பதையும், நடிப்பு சொல்லித் தருவதையும், வசனங்கள் எழுதுவதையும் தனது தொழிலாகக் கொண்டார்.

மகன் எம்.கே. ராதாவுடன் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் ஆசிரியராகச் சேர்ந்தார். சக ஆசிரியரான காளி என். ரத்னம் அங்கு நாடகம் பயிலும் மாணவர்களிடம் மிகுந்த கண்டிப்பு காட்டுபவராக இருந்தார். ஆனால், கந்தசாமி முதலியார், மாணவர்களை அன்போடு நடத்தினார். அவர்களின் நன் மதிப்பைப் பெற்றார். அதனால் பல இளம் மாணவர்கள் பாய்ஸ் கம்பெனியில் சேர்ந்தனர். பி.யு. சின்னப்பா தொடங்கி, என். எஸ். கிருஷ்ணன், பாலையா, எம்.ஜி. சக்ரபாணி, எம்.ஜி. ராமச்சந்திரன், கு.சா. கிருஷ்ணமூர்த்தி எனப் பலர் கந்தசாமி முதலியாரின் மாணவர்களாக இருந்தனர்.

நாடக உலகில் புது முயற்சிகள்

கந்தசாமி முதலியார் ஆங்கிலம் கற்றவர். முறையாக ஆங்கில இலக்கியங்களைப் பயின்றவர். அதனால் புராண, இதிகாசக் கதைகளாக வெளிவந்து கொண்டிருந்த நாடக உலகில் மாற்றம் செய்ய விரும்பினார். சமூக நாடகங்களுக்கு, சமூகச் சீர்த்திருத்தக் கருத்துக்கள் கொண்ட நாடகங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து மேடையேற்றினார். ’ஸ்வாமி’ ‘பிராண நாதா’, ‘சகியே’, ’நாதா’ என்றெல்லாம் வழங்கிக் கொண்டிருந்த சொற்களை மாற்றி, ‘ஹேய் மிஸ்டர்..’, ‘ஹலோ...’ ‘வாட் டூ யூ வாண்ட்?’ என்றெல்லாம் ஆங்கிலச் சொற்களும், ‘கண்ணே’, ‘கண்மணி’ என்று தமிழ் வார்த்தைகளும் புழங்கும் களமாக நாடக மேடையை மாற்றி அமைத்தார்.

தமிழில், புதினங்களை நாடகமாக்கும் வழக்கத்தை முதன் முதலில் தொடங்கி வைத்தவர் கந்தசாமி முதலியார். ஜே.ஆர். ரங்கராஜுவின் துப்பறியும் கதைகளான ‘இராஜாம்பாள்’, ‘இராஜேந்திரா’, ‘சந்திரகாந்தா’, ‘மோகன சுந்தரம்’ போன்றவற்றை நாடகமாக்கி முதன் முதலில் மேடையேற்றினார். வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் எழுதிய ‘மேனகா’வை, நாடகமாக்கி அரங்கேற்றினார்.

நாடகச் செயல்பாடுகள்

பாய்ஸ் கம்பெனியிலிருந்து விலகிய கந்தசாமி முதலியார், ‘ஸ்த்ரீ பார்ட்’ சுந்தரராவ் அவர்களின் நாடகக்குழுவில் பணியாற்றினார். பின் பாலாமணி அம்மாளின் நாடக கம்பெனியில் சில காலம் ஆசிரியராகப் பணிபுரிந்தார். அக்காலக்கட்டத்தில் வேல்ஸ் இளவரசருக்கு முன் நாடகங்களை நடத்தி அவரது பாராட்டுப் பத்திரத்தையும், தங்கப் பதக்கத்தையும் பெற்றார். ‘ஸ்ரீ குமார லட்சுமி விலாச சபா’ என்ற பெயரில் புதிதாக நாடகக் குழு ஒன்றை உருவாக்கினார். மைசூர் மகாராஜாவுக்கு முன்னால் நாடகங்கள் நடத்திப் பாராட்டுப் பெற்றார். 1925-ல் டி.கே.எஸ். சகோதரர்கள் நடத்தி வந்த ’ஸ்ரீபாலஷண்முகானந்த சபா’வில் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். சில வருடங்களுக்குப் பின் ‘ராமானுகூல சபா’ என்பதை நிறுவி, தமிழ்நாடெங்கும் சென்று நாடகங்கள் நடத்தினார். பின் பர்மா, இலங்கை போன்ற நாடுகளுக்குச் சென்று நாடகங்கள் நடத்திப் புகழ்பெற்றார். தமிழ்நாட்டில் அக்காலத்தின் முக்கிய நாடகக் குழுக்கள் அனைத்திலும் ஆசிரியராக, ஆலோசகராகப் பங்களித்த பெருமை கந்தசாமி முதலியாருக்கு உண்டு.

நாடகங்களில் ’பகல் காட்சி’ என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியவராக கந்தசாமி முதலியார் கருதப்படுகிறார். நாடகங்களுக்கு விதம் விதமாக விளம்பரம் செய்து, பல புதுமைகளைக் கையாண்டு பார்வையாளர்களைக் கவர்ந்தார்.

திரைப்பட வாழ்க்கை

‘மேனகா’ நாடகம் பெரு வெற்றி பெற்றதுடன் திரைப்படமாகவும் ஆனது. அதற்கு கந்தசாமி முதலியார் வசனம் எழுதினார். தனது நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த என்.எஸ். கிருஷ்ணனை, அப்படத்தில் அறிமுகப்படுத்தினார். நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த டி.கே.எஸ். சகோதரர்களுக்கு அதுவே முதல் படம். கே.ஆர்.ராமசாமி, எஸ்.வி. சகஸ்ரநாமம், சிவதாணு என அனைவருக்கும் அதுதான் முதல் படமாக அமைந்தது. பாரதியாரின் பாடல் முதன் முதலில் இப்படத்தில் இடம் பெற்றது.

எஸ். எஸ். வாஸனின் முதல் தயாரிப்பான ‘சதி லீலாவதி’ படத்திற்கான வசனத்தை கந்தசாமி முதலியார் எழுதினார். எல்லிஸ் ஆர். டங்கனுக்கு உதவியாளராகவும், துணை இயக்குநராகவும் அப்படத்தில் பணிபுரிந்தார். தனது மகன் எம்.கே. ராதாவை அப்படத்தில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார். எம்.ஜி. ராமச்சந்திரனையும் அப்படத்தில் நடிக்க வைத்தார். தொடர்ந்து பல படங்களில் எம்.ஜி. ஆர் நடிக்க கந்தசாமி முதலியார் உதவினார். ‘சந்திரமோகனா’, ’பக்த துளஸிதாஸ்’, ‘மாயா மச்சீந்திரா’ போன்ற பல படங்களுக்கு வசனம் எழுதினார்.

மறைவு

கந்தசாமி முதலியார், மார்ச், 8, 1939-ல், தமது 65 ஆம் வயதில்,  காலமானார்.

வரலாற்று இடம்

நாடகக் கலைகககவே தன்னை அர்ப்பணித்து வாழ்ந்தவர் கந்தசாமி முதலியார். முறையாக ஆங்கில இலக்கியம் கற்றவர் என்பதால், அதனை அடியொற்றி தமிழ் நாடகங்களில் பல்வேறு புதுமைகளைக் கையாண்டார். தமிழ் நாடக உலகின் போக்கை மாற்றி அமைத்து, சமூக நாடகங்கள் பல தொடர்ந்து வெளியாகக் காரணமானார்.

கந்தசாமி முதலியாரைப் பற்றி, ‘நான் கண்ட நாடகக் கலைஞர்கள்’ நூலில், பம்மல் சம்பந்த முதலியார், “இவர் சுகுண விலாச சபை நடத்திய எனது பல நாடகங்களை அநேக பால சபைகளுக்குக் கற்பித்தார். சிறு பிள்ளைகளை நடிக்கச் செய்வதில் மிகவும் நிபுணர் என்று பெயர் பெற்றதால் அநேக பால சபைகள் இவரை நாடினார்கள். அன்றியும் வேல் நாயர் கம்பெனி, பாலாமணி கம்பெனி, பாலாம்பாள் கம்பெனி முதலிய பெரிய கம்பெனிகளும் இவரது உதவியை நாடியது எனக்குத் தெரியும். தன் ஆயுளையெல்லாம் நாடகக்கலைக்கு அர்ப்பணம் செய்தவர்களுள் இவர் முக்கியமானவர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

நாடக உலகில் கந்தசாமி முதலியார் மேற்கொண்ட சீர்த்திருத்த முயற்சிகள் காரணமாக, ‘நாடக மறுமலர்ச்சியின் தந்தை’ என்று போற்றப்படுகிறார்.

உசாத்துணை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.