under review

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

From Tamil Wiki
வடுவூர் கே.துரைசாமி ஐயங்கார்

வடுவூர் துரைசாமி ஐயங்கார் (1880-1942) தமிழ் எழுத்தாளர். பொதுவாசிப்புக்குரிய வணிகக் கேளிக்கைப் படைப்புகளை எழுதிய முன்னோடிகளில் ஒருவர். திகம்பரச் சாமியார் என்னும் துப்பறியும் கதாபாத்திரத்தை உருவாக்கியவர்.

பிறப்பு கல்வி

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார், தஞ்சை மாவட்டத்தில் உள்ள வடுவூரில், கிருஷ்ணசாமி ஐயங்காருக்கு பிறந்தார். தந்தை மிராசுதாராக இருந்தார். துரைசாமி ஐயங்கார் தமிழில் பட்டப்படிப்பை முடித்ததுடன், ஆங்கிலத்திலும் பி.ஏ. பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

வடுவூர் துரைசாமி ஐயங்கார் படிப்பை முடித்ததும் வருவாய் ஆய்வாளராகச் சில காலம் பணியாற்றினார். பின்நர் தாசில்தாராக உயர்ந்தார். துப்பறியும் நாவல்கள் வழியாக புகழ்பெற்ற வடுவூர் துரைசாமி ஐயங்கார் தன் அரசுப்பணியை துறந்து முழுநேர எழுத்தாளரும் பதிப்பாளருமாக ஆனார்.

தனது நாவல்களின் விற்பனையால் செல்வந்தரான துரைசாமி ஐயங்கார், சென்னை திருவல்லிக்கேணியில் அப்போதைய ஃபைகிராஃப்ட்ஸ் தெருவில் (இன்றைய பாரதி சாலை) மிகப் பெரிய மூன்றடுக்கு வீட்டை வாங்கி, அதற்கு 'வடுவூர் ஹவுஸ்’ என்று பெயரிட்டா.ர்

வடுவூராரின் மனைவி நாமகிரி அம்மாள். குழந்தைகள் விஜயராகவன், ரங்கநாயகி, கிருஷ்ணசாமி.

க.நா.சுப்ரமணியம் வடுவூர் துரைசாமி ஐயங்காரை ’சேலம் பட்டுக் கரை வேஷ்டியும், காதில் டால் வீசும் வைரக் கடுக்கனும், நெற்றியில் ஒரு சிவப்பு ஸ்ரீ சூர்ணக் கோடுமாகவும் நான் பார்த்த வடுவூர் துரைசாமி ஐயங்காரை என்னால் இன்றுகூட நினைவுகூர முடிகிறது’ என்று தன் இலக்கிய சாதனையாளர்கள் என்னும் நூலில் வர்ணிக்கிறார்.

இலக்கிய வாழ்க்கை

தொடக்கம்

வடுவூர் துரைசாமி ஐயங்கார் சேலம், ராசிபுரம் பகுதிகளில் பணிபுரிந்தபோது காளன் - கூளன் என்னும் சேர்வராயன் மலைக்கள்ளர்கள் பற்றிய செய்திகளைக் கேள்விப்பட்டார். ஆர்தர் கானன் டாயில் போன்றோரது படைப்புகளைப் படித்துத் தாமும் அது போல் ஒரு படைப்பை உருவாக்க வேண்டுமென்ற ஆவல் கொண்டிருந்த துரைசாமி ஐயங்கார் 'பாலாமணி அல்லது பக்காத்திருடன்’ என்னும் தனது முதல் நாவலைப் படைத்தார். அதற்கு நல்ல வரவேற்புக் கிடைக்கவே தொடர்ந்து எழுதத் தொடங்கினார்,

நாவல்கள்

தமிழில் பிரிட்டிஷாரால் நவீன காவல்த்துறையும், நீதிமுறையும் உருவாக்கப்பட்டதை ஒட்டி குற்றங்களை காவலர் நவீன முறையில் துப்பறிவதன் மீது வாசகர்களின் ஆர்வம் உருவாகியது. தொடக்ககால தமிழ் பொதுவாசிப்பு எழுத்துக்கள் பெரும்பாலும் துப்பறியும் மர்மக் கதைகளாகவே அமைந்தன. துப்பறியும் நாவல் முன்னோடிகளான ஜே.ஆர். ரங்கராஜூ, ஆரணி குப்புசாமி முதலியார் வரிசையில் அதிக நாவல்களை எழுதியவர் வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்.

வடுவூர் துரைசாமி ஐயங்கார் தன் கும்பகோணம் வக்கீல் அல்லது திகம்பர சாமியார் என்னும் நூலில் திகம்பர சாமியார் என்னும் கதாபாத்திரத்தை உருவாக்கி அறிமுகம் செய்தார். . காவலதிகாரியான அவர் சாமியாராக துப்பறிபவர். திகம்பரச் சாமியார் தோன்றும் துப்பறியும் நாவல்களான மேனகா’, 'மாய சுந்தரி’, 'மருங்காபுரி மாயக் கொலை’, 'மரணபுரத்தின் மர்மம்’, 'முத்துலக்ஷ்மி அல்லது வெடிகுண்டு மர்மம்’, 'திரிபுரசுந்தரி அல்லது திகம்பரசாமியார் திடும் பிரவேசம்’, 'நீலலோசனி அல்லது கனவில் மணந்த கட்டழகி’ ஆகியவை வடுவூர் துரைசாமி ஐயங்காருக்கு புகழை அளித்தன.

வடுவூரார் துப்பறியும் நாவல்களை வெளியிடுவதற்காகவே மனோரஞ்சனி என்னும் வார இதழை நடத்தினார்.வடுவூரார் சுதேசமித்திரன் இதழிலும் சில தொடர்களை எழுதியிருக்கிறார். அவற்றுள் 'காங்கிரஸ் கமலம் அல்லது ஆணென்று அணைய அகப்பட்டது பெண் புதையல்’ என்னும் தொடரும் ஒன்று என க.நா.சுப்ரமணியம் தனது ’இலக்கியச் சாதனையாளர்கள்’ நூலில் குறிப்பிட்டுள்ளார். சுதேசமித்திரனில் வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் எழுதிய மற்றுமொரு தொடர், ’மோகனாங்கி அல்லது திவான் திருமலைராயன் ஸாகஸம்’ என்பதாகும். இது நாயக்கர் காலகட்ட பின்னணியைக் கொண்ட வரலாற்றுத் தொடர்.

தழுவல்கள்

ஷேக்ஸ்பியரின் 'சிம்பலின்’ என்ற நாடகத்தைத் தழுவி ’சுந்தராங்கி’ என்ற நாடகத்தை 1914-ல் வெளியிட்டார். பரவலான வரவேற்பைப் பெற்ற அந்நாடகம், பிரிட்டிஷாரால் ஏற்றுக் கொள்ளப்பட்டு பள்ளி இறுதி வகுப்பிற்குப் பாட நூலாகவும் வைக்கப்பட்டது. தொடர்ந்து வடமொழி மிருச்சகடிகத்தை, 'வஸந்த கோகிலம்’ ஆகவும், ஷேக்ஸ்பியரின் கிங் லியரை, 'மங்கையர் பகட்டா’கவும் உருமாற்றி அளித்தார்.

நாடகங்கள்

வடுவூர் துரைசாமி ஐயங்கார் 'மாணிக்கவாசகர்’, ’திலோத்தமை’, 'இராஜேந்திர மோகனா’ போன்ற’ நேரடி நாடகங்களையும் எழுதினார்.

பொது

வடுவூர் துரைசாமி ஐயங்கார் தன் இதழ்களில் பல பெயர்களில் எழுதியுள்ளர். அரசியல் தத்துவம், இங்கிலாந்து தேச சரித்திரம், தேக ஆரோக்கியம் போன்ற பல தலைப்புகளிலும் தாம் எழுதியுள்ளதாக தனது 'சமய ஆராய்ச்சி’ நூலில் வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் குறிப்பிட்டுள்ளார்

இதழியல்

துரைசாமி ஐயங்காரின் தொடர் : மோகனாங்கி

1919-ல் தனது படைப்புகளை வெளியிடுவதற்காக 'மனோரஞ்சனி’ என்ற மாத இதழைத் தொடங்கியதுடன், 'ஓரியண்டல் ஹோம் யுனிவர்சிடி’ என்ற சொந்த அச்சகத்தையும் நிறுவினார். இவரது நூல்களை அக்காலத்தின் புகழ்பெற்ற எம்.எஸ்.ராமுலு & கம்பெனியினர் வெளியிட்டனர். கலைமகள் நிலையம், கே.விஜயம் அண்ட் கம்பெனி போன்றவையும் இவரது நூல்களை வெளியிட்டன. மனோரஞ்சனி இதழில் தானும் எழுதியதுடன், வை.மு.கோதைநாயகி போன்றோரையும் எழுதச் சொல்லி ஊக்குவித்தார். 'கும்பகோணம் வக்கீல்’, 'மதன கல்யாணி’ போன்றவை முதலில் மனோரஞ்சனி இதழில் தொடராக வெளியாகி, பின்னர் நூலாக்கம் பெற்றன. மனோரஞ்சனி சிறந்த பொழுதுபோக்கு இதழாக விளங்கியது.

அழகியல்

பொதுவாசகர்களை கவரும் விதத்தில் மர்மங்களும் திடுக்கிடும் சம்பவங்களும் நிறைந்தனவாக துரைசாமி ஐயங்காரின் நாவல்கள் அமைந்தன. பேச்சுவழக்கிலும், கட்டுரை வடிவிலும் அமையும் நீண்ட உரையாடல்கள் அந்நாவல்களில் இருந்தன. சென்னை, கும்பகோணம் பகுதியின் உயர்குடியினரிடம் நிகழும் குற்றங்களை அவை சித்தரித்தன. பெரும்பாலான கதைகளில் அக்கால தாசிகள் பற்றிய விவரணைகள் உண்டு, கூடவே நல்லொழுக்க போதனைகளும் இடம்பெற்றிருக்கும்.

'எனது நாவல்களின் தலைப்புகளே வாசகர்களை ஈர்த்து நூலை வாங்க வைத்தன’ என்று வருவூரார் குறிப்பிடுகிறார். அவர் தனது கதாபாத்திரங்களுக்குச் சூட்டியிருக்கும் பெயர்களே நகைச்சுவைத் தன்மை உடையதாய் இருந்தன.

  • நரி, பரி: பரி, நரி நம்பெருமாள் செட்டியார்
  • வக்கீல் மிருதங்கம் ஐயர்
  • டாக்டர் மூஞ்சி
  • மகாஜாலப் பரதேசியார்
  • திவான் லொடபடசிங் பகதூர்
  • மிஸ் ப்ளிஸ்
  • மிஸ் இன்னோசென்ட் தேவி
  • பன்னியூர் படாடோப சர்மா
  • பாவாடைச் சாமியார்
  • சவுடாலப்பர்
  • அன்னக் காவடியர் பிள்ளை
  • கண்ட பேரண்ட சண்டப் பிரசண்ட வெண்ணைவெட்டி வீரசிங்கம் சர்தார் பகதூர்
  • ஜாம்புக் கிழவி
  • ஜடாயுக் கிழவி
  • ருத்ராக்‌ஷ பூனையார்
  • அடுக்கிளை வெட்டிக் கோனார்
  • சவுண்டியப்ப முதலியார்
  • சாப்பாட்டு ராமையங்கார்
  • அழுமூஞ்சி ஆனந்தராயர்
  • ஜபர்தஸ்து மரைக்காயர்
  • தோலிருக்கச் சுளை முழுங்கியா பிள்ளை
  • கூழையன் குஞ்சுண்ணி நாயர்

இவ்வாறு கதைமாந்தர் பெயர்களை ஆசிரியர் கேலி கலந்து, உருவகமாக போடுவது அக்கால பிரிட்டிஷ் வணிகநாவல்களிலும் இருந்த வழக்கம். இவை அச்சு ஊடகம் உருவானபோதே ஆங்கிலத்தில் உருவாகிவிட்ட வம்புசார்ந்த இதழியலில் இருந்து பெற்றுக்கொண்ட கூறுமுறையாகும்.

அத்தியாயத் தலைப்புகளிலும் இந்த முறையை வடுவூரார் கையாண்டார்.

  • அகட விகட அற்புத நாடகம்
  • அட்டகாசக் கோனாருக்கு கட்டை விரல் சன்மானம்
  • அந்தரத்தில் மனிதன்; அறையில் சூரியன்
  • நரியைப் பரியாக்கிய நம்பெருமாள் செட்டியார்
  • செத்தவனைப் பிழைக்க வைக்கும் எத்தன்
  • கெட்டிக்காரன் புரட்டுக்கு எட்டு நாள் வாய்தா
  • மந்திரத்தில் மாங்காய்; தந்திரத்தில் தேங்காய்
  • கோட்டான் மர்மம்-குண்டன் கர்வம்

போன்ற தலைப்புகள் உதாரணம். நாவல் தலைப்புகளை இரட்டையாக அமைப்பதும் (கும்பகோணம் வக்கீல் அல்லது திகம்பரச் சாமியார்) ஆங்கிலத்தில் இருந்து பெற்றுக்கொண்ட முறை.

ஆர்தர் கானன் டாயிலின் ரசிகராக இருந்தாலும் வடுவூரார் ரெயினால்ட்ஸ் (George William MacArthur Reynolds) எழுதிய நாவல்களையே பெரிதும் முன்னுதாரணமாக கொண்டார். நீண்டு நீண்டு செல்லும் கதை, செயற்கை மர்மங்கள் மற்றும் திருப்பங்கள் ஆகியவை கொண்டது இந்தக் கூறுமுறை.

திரைப்படத்துறை

வடுவூர் துரைசாமி ஐயங்கார் எழுதிய 'மேனகா’ நாவலால் ஈர்க்கப்பட்ட டி.கே.எஸ். சகோதரர்கள் அவரிடம் அனுமதி பெற்று அதனை நாடகமாக நடத்த முன் வந்தனர். எம்.கே.ராதாவின் தந்தையுமான எம்.கந்தசாமி முதலியார் அதற்கு வசனம் எழுதினார். அந்த நாடகத்திற்குக் கிடைத்த வரவேற்பால், 1935-ல், 'மேனகா’ நாவல் திரைப்படமாக உருவானது. (ராஜா சாண்டோ இயக்கினார். டி.கே.பகவதி, டி.கே.சண்முகம், டி.கே.சங்கரன், என்.எஸ்.கிருஷ்ணன் கே.ஆர்.ராமசாமி, எஸ்.வி.சகஸ்ரநாமம் உள்ளிட்டோர் அதில் நடித்திருந்தனர்.

தொடர்ந்து 'வித்யாபதி’ என்ற நாவல் திரைப்படமானது. வித்யாபதியில் சிறு வேடத்தில் தோன்றிய எம்.என்.நம்பியார், வடுவூராரின் நாவலான திகம்பர சாமியார் திரைப்படத்தில் பத்துக்கும் மேற்பட்ட வேடங்களில் தோன்றிப் புகழ்பெற்றார். பாலாமணி, சின்னதுரை (இருமன மோஹினிகள்), மைனர் ராஜாமணி போன்ற நாவல்களும் திரைப்படமாகின.

சமய ஆராய்ச்சி

சமய ஆராய்ச்சி - வடுவூர் துரைசாமி ஐயங்கார் எழுதிய நூல்

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் சமயம் சார்ந்த ஆராய்ச்சி ஒன்றிலும் ஈடுபட்டிருந்தார். இதனைத் தனது 'இலக்கியச் சாதனையாளர்கள்’ நூலில் நினைவு கூரும், க.நா.சுப்ரமண்யன், "அவர் பேசிய விஷயங்களிலே முக்கியமானதாக ஒன்று நினைவுக்கு வருகிறது. எகிப்தில் தலைமுறை தலைமுறையாக ஃபாரோக்கள் என்கிற பெயருடன் அரசாண்ட மன்னர்கள் தென்னாட்டிலிருந்து எகிப்து என்ற மிசிர தேசத்துக்குச் சென்ற வடகலை ஐயங்கார்கள்தான் என்று அசைக்க முடியாத ருசு இருப்பதாகவும், அதையெல்லாம் சொல்லித் தான் ஒரு நூல் எழுதிக் கொண்டிருப்பதாகவும் சொன்னார்" என்கிறார்.

ஐயங்காரின் அந்தப் பல்லாண்டு கால ஆராய்ச்சி 'Long Missing Links, Or, The Marvelous Discoveries about the Aryans, Jesus Christ and Allah - Volume 1’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் ஒரு நூலாக வெளியானது. அதில் உள்ள விவரங்களைத் தமிழில் 'சமய ஆராய்ச்சி’, 'ஜோதிட ஆராய்ச்சி’ போன்ற தலைப்புகளில் நூலாக எழுதி, தனது சொந்தப் பதிப்பகமான ’ஓரியண்டல் ஹோம் யூனிவர்ஸிட்டி’ மூலம் வெளியிட்டார்.

வடுவூர் கே. துரைசாமி ஐயங்காருக்கு வழங்கப்பட்ட நற்சாட்சிப் பத்திரம்.

விவாதங்கள்.

சர்ச்சைக்குரிய நாவல் தலைப்பு
  • நாவல்களுக்குத் தலைப்புகள் வைப்பதில் பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளானார் துரைசாமி ஐயங்கார். 'சமயசஞ்சீவி’ நாவலுக்குத் துணைத் தலைப்பாக, ஆரம்பத்தில், ’சமயசஞ்சீவி (அ) வெளுப்பாணுக்கு வெளுப்பான் ஜாதி வண்ணான்’ என்று வைத்திருந்தார். அதற்கு எதிர்ப்புகள் எழவே பின்னர் 'சமய சஞ்சீவி அல்லது பகையாளி குடியை உறவாடிக் கெடு’ என்று மாற்றிவிட்டார்.
  • வை.மு.கோதைநாயகி அம்மாள் எழுத வந்த ஆரம்ப காலத்தில் அவரை துரைசாமி ஐயங்கார் ஊக்குவித்தார். கோதைநாயகி அம்மாளின் சிறுகதைகள் சிலவற்றைத் தனது மனோரஞ்சினி இதழில் வெளியிட்டார். கோதைநாயகி எழுதிய ’வைதேகி’ என்ற நாவலை பிழைத்திருத்தம் செய்து சீராக்கி, மனோரஞ்சினியில் தொடராக வெளியிட்டார். அது புகழ் பெறவே, அதைக் கோதைநாயகி எழுதவில்லை என்றும் தானே எழுதியதாகவும் அறிவித்தார். அதனை வை.மு.கோதைநாயகி அம்மாள் எதிர்க்கவே நாவலைப் பாதியில் நிறுத்திவிட்டு, கோதைநாயகி தன்னிடம் அளித்திருந்த கைப்பிரதியையும் அழித்துவிட்டார். அதனால் சினமுற்ற வை.மு.கோதைநாயகி அம்மாள், தன் குடும்பத்தார் மூலம் 'ஜகன்மோகினி’ என்னும் இதழின் உரிமையை வாங்கி, மாதா மாதம் அதில் தொடராக வைதேகியை எழுத ஆரம்பித்தார். பின்னர் அந்தப் படைப்பைப் புத்தகமாகவும் வெளியிட்டார். ஜகன்மோகினி இதழால் மனோரஞ்சனி இதழின் விற்பனை பெருமளவு பாதிக்கப்படவே, வடுவூர் துரைசாமி ஐயங்கார், அதுவரை தன் 'மனோரஞ்சனி’ இதழில் வெளிவந்த கோதைநாயகியின் படைப்புகள் அனைத்தும் தான் எழுதியதே என்று தன் இதழில் அறிவிப்புச் செய்தார். ஆனாலும், வை.மு.கோதைநாயகி அம்மாள் அதனைக் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து பல நாவல்களை எழுதி, தமிழின் அக்காலத்து முன்னணிப் பெண் நாவலாசிரியர் ஆனார்.
  • துரைசாமி ஐயங்காரின் எழுத்திற்கு வரவேற்பு இருந்தது போலவே எதிர்ப்பும் இருந்தது. தமது நாவல்கள் மூலம் மேல்நாட்டுப் பழக்கவழக்கங்களையும், அவர்களது மனோபாவங்களையும் தமிழ்நாட்டில் பரப்பி அதன்மூலம் தமிழ்மக்களின் பண்பாடு, கலாசாரத்தைச் சீர்குலைக்கிறார் என்று அவர் மிகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.
  • ரெயினால்ட்ஸ் எழுதிய நாவலை தழுவி எழுதிய நாவலுக்காக வடுவூர் துரைசாமி ஐயங்கார் மீது காப்புரிமை மீறலுக்கு வழக்கு தொடுக்கப்பட்டு அபராதத் தண்டனை அளிக்கப்பட்டது.
  • வடுவூர் கே.துரைசாமி ஐயங்காரின் 'மைனர் ராஜாமணி’ நாவல் திரைப்படமானபோது, அதற்குச் சாதீய ரீதியாக எதிர்ப்புக் கிளம்பியது. துரைசாமி ஐயங்கார் மீது வழக்கும் தொடரப்பட்டது.
  • வடுவூரார் எழுதியிருந்த Long missing Links நூலும் அதிகம் விற்பனையாகவில்லை. அந்த நூல் உருவாக்கத்திற்காகத் தனது சொத்துக்களை விற்றுப் பெரும் பணம் செலவழித்திருந்தார் துரைசாமி ஐயங்கார். ஆனால் அது விற்பனையாகாமல் பெருத்த இழப்பைச் சந்தித்தார்.

மறைவு

1942-ல் வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் காலமானார்.

ஆவணம்

வடுவூர் கே. துரைசாமி ஐயங்காரின் படைப்புகள் தமிழக அரசால் 2009-ல் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இவரது நூல்கள் சில தமிழ் இணைய நூலகத்தில், ஆர்கிவ் தளத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. ஜெனரல் பப்ளிஷர்ஸ் (அல்லயன்ஸ் பதிப்பகக் கிளை நிறுவனம்) வடுவூர் கே. துரைசாமி ஐயங்காரின் சில நூல்களை மறுபதிப்புச் செய்துள்ளது.

இலக்கிய இடம்

பொதுவாசிப்புக்குரிய மர்மநாவல்களை, தழுவல் கதைகளை வாசகர்களைக் கவரும் வகையில் எழுதியவர் வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார். தமிழ் இலக்கிய வரலாற்றாசிரியர்கள் தமிழில் மாயூரம் வேதநாயகம் பிள்ளை, அ. மாதவையா, பி.ஆர். ராஜம் ஐயர் ஆகியோரால் நாவல் இலக்கியம் உருவானபின் வடுவூரார் போன்றவர்கள் எழுதிய காலகட்டத்தை இலக்கியம் தேக்கமடைந்திருந்த இருண்ட காலம் என மதிப்பிடுகிறார்கள். ஆ. இரா. வேங்கடாசலபதி தன் நாவலும் வாசிப்பும் என்னும் நூலில் நாவல் வாசிப்பை ஒரு பொதுமக்களியக்கமாக ஆக்கியவை அடுத்துவந்த வணிகக்கேளிக்கை நாவல்களே என்று மதிப்பிடுகிறார். இக்காலகட்டத்தின் முதன்மை முகம் வடுவூர் துரைசாமி ஐயங்கார்

வடுவூர் கே. துரைசாமி ஐயங்காரது படைப்புகளைப் பற்றி மது.ச.விமலானந்தம், தான் எழுதிய 'தமிழ் இலக்கிய வரலாறு’ நூலில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். "இந்த நூற்றாண்டின் தொடக்க 30 ஆண்டுகளில் தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான மக்களைத் தம் துப்பறியும் கதைகளால் பிணைத்தவர். புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி, பரந்த ஓர் வாசக உலகினைப் படைத்துக் கொண்ட பெருமையர்” என்று குறிப்பிடுகிறார்.

க.நா.சுப்ரமண்யம், தனது 'இலக்கியச் சாதனையாளர்கள்’ நூலில் வடுவூர் கே. துரைசாமி ஐயங்காரின் படைப்புகளைப் பின்வருமாறு மதிப்பிடுகிறார். "ஒரு நாவல் கலைப் பிரக்ஞையுடன், சுலபமாகப் படிக்கக் கூடிய நடையுடன், விரஸமான விஷயங்களையும்கூட அதிக விரஸம் தட்டாமல் எழுதுவதில் சிரத்தையுடன் எழுதிய வடுவூரார், உண்மையிலேயே இலக்கியப் பிரக்ஞை உடையவர் என்பதில் சந்தேகத்துக்கிடமேயில்லை. ரெயினால்ட்ஸின் மட்டமான நாவல்களைத் தழுவி எழுதினார் பெரும்பாலும் என்றாலும் அவர் விக்டர் ஹ்யூகோவின் Les Miserables என்கிற நாவலை அற்புதமாகத் தமிழில் தழுவி எழுதியிருக்கிறார். முதல்நூலைப் போலவே 'கனகாம்புஜம் அல்லது கள்வனும் விலைமகளும்’ என்கிற நாவல் அமைந்திருப்பதாகச் சொன்னால் அதில் தவறில்லை. அதே போல கிரேக்க புராணக் கதையான Eros and Psyche கதையை வஸந்த கோகிலம் என்கிற நாவலாகச் செய்திருக்கிறார்".

க.நா.சுப்ரமணியம் வடுவூராரை தமிழ் சரித்திரநாவலாசிரியர்களின் முன்னோடி என்று கருதுகிறார் “இன்று தமிழில் சரித்திர நாவல்கள் ஏராளமாக எழுதப்படுகின்றன. அவற்றுக்கெல்லாம் முன்னோடியாகக் கல்கியைக் கருதுவது வழக்கமாக இருக்கிறது. ஆனால், இதே அளவில் இன்று எழுதப்படுகிற சரித்திர நாவலாசிரியர்களுக்கு முன்னோடியாக 1924-ல் வெளிவந்த வடுவூராரின் 'விலாஸவதி’ என்பதைத்தான் சொல்ல முடியும்” என்கிறார்.

துரைசாமி ஐயங்காரின் ஆரம்ப கால நாவல் பட்டியல்

நூல்கள்

நாவல்கள்
  • பாலாமணி அல்லது பக்காத் திருடன் - இரண்டு பாகங்கள்
  • விலாஸவதி
  • கலியாணசுந்தரம் அல்லது வேலியே பயிரை மேய்ந்த விந்தை
  • மரணபுரத்தின் மர்மம் அல்லது லீலாவதியின் மூடுமந்திரம்
  • டாக்டர் சோணாசலம்
  • நங்கை மடவன்னம்
  • பாவாடைச் சாமியார்
  • முத்துலக்ஷ்மி அல்லது வெடிகுண்டு மர்மம்
  • பச்சைக்காளி அல்லது பணத்தைக் காத்த பயங்கரப் பேய்
  • மருங்காபுரி மாயக் கொலை
  • திரிபுரசுந்தரி அல்லது திகம்பரசாமியார் திடும் பிரவேசம்
  • இருமன மோகினிகள் அல்லது ஏமாளியை ஏமாற்றிய கோமாளி
  • சோமசுந்தரம் அல்லது தோலிருக்கச் சுளைமுழுங்கி
  • சௌந்திரகோகிலம் - நான்கு பாகங்கள்
  • நீலலோசனி அல்லது கனவில் மணந்த கட்டழகி
  • பூஞ்சோலையம்மாள்
  • பூர்ண சந்திரோதயம் - ஐந்து பாகங்கள்
  • மாயாவினோதப் பரதேசி - மூன்று பாகங்கள்
  • மேனகா - இரண்டு பாகங்கள்
  • வித்தியாசாகரம்
  • சொக்கன் செட்டி
  • லக்ஷ்மீகாந்தம்
  • துரைராஜா
  • கும்பகோணம் வக்கீல் அல்லது திகம்பர சாமியார் - இரண்டு பாகங்கள்
  • சமய சஞ்சீவி அல்லது பகையாளி குடியை உறவாடிக் கெடு
  • பிச்சு முத்துக் கோனான்
  • ஸதாநந்த போதக சாமியார்
  • தங்கம்மாள் அல்லது தீரபுருஷனின் தியாக கம்பீரம்
  • வசந்த மல்லிகா
  • சிவராமகிருஷ்ணன்
  • மிஸ்டர் பூச்சாண்டி எம்மே! அல்லது நீக்கு பெப்பே! நீ தாத்தாக்குப் பெப்பே!
  • சிங்கார சூரியோதயம் அல்லது திருட்டில் நவமணிகள்
  • நவநீதம் அல்லது நவ நாகரீக பரிபவம்
  • மதன கல்யாணி - மூன்று பாகங்கள்
  • திடும்பிரவேச மகாஜாலப் பரதேசியார் அல்லது புஷ்பாங்கி இரண்டு பாகங்கள்
  • கனகாம்புஜம் அல்லது கள்வனும் விலைமகளும்
  • காங்கிரஸ் கமலம் அல்லது ஆணென்று அணைய அகப்பட்டது பெண் புதையல்
  • புதையல்
  • திகம்பரசாமியார் பால்யலீலை
  • தில்லை நாயகி அல்லது திகம்பர சாமியார் அந்தரத்யானம்
  • திவான் லொடபடசிங் பகதூர்
  • பன்னியூர் படாடோப சர்மா அல்லது மயன் திருநடன மதிமயக்கம்
  • மன்மதபுரியின் மூடு மந்திரம் அல்லது திகம்பர சாமியார் திருநடன வைபவம்
  • மாய சுந்தரி
  • மிஸிஸ் லைலா மோகினி அல்லது மயன் ஜாலம்
  • லக்ஷ்மிகாந்தம்
  • வித்யா சாகரம்
  • துரைக்கண்ணம்மாள் அல்லது திருசங்கு சாஸ்திரியார்
நாடகங்கள்
  • சுந்தராங்கி
  • வஸந்தகோகிலம்
  • மங்கையர் பகட்டு
  • மாணிக்கவாசகர்
  • திலோத்தமை
  • இராஜேந்திர மோகனா அல்லது காதலின் மகத்துவம்
  • காட்டி ராஜன்
ஆராய்ச்சி நூல்கள்
  • Long Missing Links, Or, The Marvellous Discoveries about the Aryans, Jesus Christ and Allah
  • சமய ஆராய்ச்சி
  • ஜோதிட ஆராய்ச்சி

உசாத்துணை


✅Finalised Page