இசைஞானியார்
To read the article in English: Isaignaniyar.
இசைஞானியார் சைவ சமய அடியார்களாகிய 63 நாயன்மார்களில் ஒருவர். அறுபத்து மூவரில் உள்ள மூன்று பெண்களுள் ஒருவர்.
வாழ்க்கைக் குறிப்பு
இசைஞானியார் திருவாரூரில்ஆதி சைவகுலத்தில் பிறந்தார். கௌதம கோத்திரத்தைச் சேர்ந்த ஞான சிவாச்சாரியாரின் மகள். இசைஞானியார் சிவபெருமானின் மீது பக்தி கொண்டவராக இருந்தார். இவர் திருமணப் பருவத்தினை அடைந்ததும், ஞான சிவாச்சாரியார் சிவபக்தரான சடைய நாயனார் என்பவருக்கு இசைஞானியாரைத் திருமணம் செய்து வைத்தார்.
இசைஞானியார் - சடைய நாயனார் தம்பதிக்கு சுந்தரமூர்த்தி நாயனார் பிறந்தார். இசைஞானியார், அவருடைய கணவர், மகன் என குடும்பம் முழுவதும் நாயன்மார்கள் நிரையில் இருக்கிறார்கள்.
பாடல்கள்
- திருத்தொண்டர் திருவந்தாதியில் இசைஞானியார் குறித்த பாடல்:
நலம்விளங் குந்திரு நாவலூர் தன்னில் சடையனென்னும்
குலம்விளங் கும்புக ழோனை உரைப்பர் குவலயத்தில்
நலம்விளங் கும்படி நாம்விளங் கும்படி நற்றவத்தின்
பலம்விளங் கும்படி ஆரூ ரனைமுன் பயந்தமையே
- திருத்தொண்டர் புராணத்தில் இசைஞானியார் கதையை விளக்கும் பாடல்:
நாவல்திருப் பதிக்கோர் செல்வர் சைவ
நாயகமாஞ் சடையனார் நயந்த இன்பப்
பூவைக் குலமடந்தை பொற்பார் கொம்பு
புனிதமிகு நீறணிந்து போற்றி செய்தே
ஆவில் திகழ்தலைவன் வலிய ஆண்ட
ஆரூரர் அவதரிக்க அருந்தவங்கள் புரிந்தார்
யாவக்கும் எட்டாத இசைந்த இன்ப
இசைஞானி எனஞானம் எளிதாம் அன்றே
குருபூஜை
இசைஞானியாருக்கு ஒவ்வோர் ஆண்டும், சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில், சிவாலயங்களில் குருபூஜை கொண்டாடப்படுகிறது.
உசாத்துணை
- நாயன்மார் வரலாறு - தமிழ்வளர்ச்சித்துறை - திரு.வி. கலியாணசுந்தரனார் - 2016
- சைவம் வளர்த்த அறுபத்து மூவர் - விஜயா பதிப்பகம் - சி.எஸ். தேவநாதன் - நான்காம் பதிப்பு - 2016
- http://www.tamilvu.org/slet/l4100/l4100pd2.jsp?bookid=111&pno=184
- 63 நாயன்மார்கள்- இசைஞானியார் - தினமலர் நாளிதழ்.
✅Finalised Page