being created

சீவக சிந்தாமணி

From Tamil Wiki
Revision as of 00:40, 8 October 2022 by ASN (talk | contribs) (Para Added)

தமிழின் ஐம்பெருங்காப்பியங்களில் முக்கியமான நூலாகக் கருதப்படுவது சீவக சிந்தாமணி. இது ஒரு சமண சமயக் காப்பியம்.தமிழில் முதன் முதலில் விருத்தப்பாவில் பாடப்பட்ட காப்பியம் இதுதான். 'சிந்தாமணியே’ என்ற வரி இந்நூலில் இடம்பெறுவதாலும், சீவகனின் வாழ்க்கையைக் கூறுவதாலும் இதற்குச் 'சீவக சிந்தமணி’ என்ற பெயர் வந்தது. 'மணநூல்’ என்ற பெயரும் இதற்கு உண்டு.

காப்பிய இலக்கணம் கூறும் தண்டியலங்காரம் நூலில் கூறப்பட்டுள்ள இலக்கணம் முழுவதுமாகப் பின்பற்றப்பட்ட முதல் தமிழ்க் காப்பியம் சீவகசிந்தாமணிதான். இதனை இயற்றியவர் திருத்தக்க தேவர்.

பதிப்பு, வெளியீடு

சீவகசிந்தாமணியின் நாமகள் இலம்பகத்தை மட்டும் முதலில் பொதுயுகம் 1868-ல் ரெவரெண்ட். எச். பவர் என்பவர் பதிப்பித்து வெளியிட்டார். பின்னர் நாமகள் இலம்பகம், கோவிந்தையார் இலம்பகம், காந்தருவதத்தையார் இலம்பகம் என்ற மூன்றும், நச்சினார்க்கினியர் உரை, பதவுரையுடன் சோடசாவதனம் தி. க. சுப்பராய செட்டியாரால் பதிப்பித்து வெளியிடப்பட்டது. அதன்பின் முதல் ஐந்து இலம்பகம் மூலம் மட்டும் ப.அரங்கசாமிப் பிள்ளை அவர்களால் 1883-ல் பதிப்பிக்கப்பட்டது. சீவக சிந்தாமணியின் தெளிவான பதிப்பை பல்வேறு ஆராய்ச்சி மற்றும் குறிப்புரைகளுடன் 1887ல், உ.வே.சாமிநாதையர் வெளியிட்டார்.

1941-ல் சைவசித்தாந்த மகா சமாஜம் சீவகசிந்தாமணியின் மூலத்தை மட்டும் பதிப்பித்து வெளியிட்டது. சீவகசிந்தாமணியை புலவர் அரசு, பெருமழைப் புலவர் பொ.வே. சோமசுந்தரனாரின் உரையுடன் திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்டது. தொடர்ந்து புலியூர்க்கேசிகன் உள்ளிட்ட பலர் இந்நூலுக்கு உரை எழுதி உள்ளனர்.

நூல் அமைப்பு

சீவக சிந்தாமணி மொத்தம் 3145 பாடல்களைக் கொண்டது. பதின்மூன்று இலம்பகங்களையுடையது. இலம்பகம் என்பதற்கு மாலை என்பது பொருளாகும்.

இலம்பகங்கள்
  1. நாமகள் இலம்பகம்
  2. கோவிந்தையார் இலம்பகம்
  3. காந்தருவ தத்தையார் இலம்பகம்
  4. குணமாலையார் இலம்பகம்
  5. பதுமையார் இலம்பகம்
  6. கேமசரியார் இலம்பகம்
  7. கனகமாலையார் இலம்பகம்
  8. விமலையார் இலம்பகம்
  9. சுரமஞ்சரியார் இலம்பகம்
  10. மண்மகள் இலம்பகம்
  11. பூமகள் இலம்பகம்
  12. இலக்கணையார் இலம்பகம்
  13. முத்தி இலம்பகம்

சீவக சிந்தாமணி பிற பெயர்கள்

நூற்பொருளான அறம், பொருள், இன்பம், வீடுபேறு பற்றி இந்நூல் பேசுவதால் இதனை, ‘முடிபொருள் தொடர்நிலை’ என உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் குறிப்பிடுகிறார். சீவகன், குணமாலை முதல் இலக்கணை ஈறாக எட்டுப் பெண்களை மணந்ததாலும், மண்மகள் மற்றும் முக்தி மகள் ஆகியோரை அடைந்ததாலும் இந்நூலுக்கு மணநூல் என்ற பெயரும் உண்டு.

காப்பியத்தின் தன்மை

ஐம்பெருங் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி ஆகியன தமிழ் மண்ணில் தோன்றிய பெண் மக்களைக் காப்பியத் தலைமைப் பாத்திரமாகக் கொண்டிருக்கின்றன. ஆனால், சீவக சிந்தாமணி வடநாட்டு வேந்தனைக் காப்பியத் தலைவனாகக் கொண்டுள்ளது. காப்பியக் கதை, கதை மாந்தர்கள், கதைக்களம் முதலிய யாவையும் தமிழ் மண்ணைச் சேர்ந்தவை அல்ல.

வடநாட்டார் மரபு சார்ந்தது என்றாலும் காப்பிய ஆசிரியர் திருத்தக்க தேவர் தமிழர்; தமிழ் நாட்டைச் சார்ந்தவர். தம் சமயச் சார்பு காரணமாக தன் சமயம் சார்ந்த வடமொழிக் கதையை எடுத்துக் கொண்டுள்ளார். கதைப் போக்கை மாற்றாமல், அதே நேரத்தில் தமிழர் மரபு பிறழாமல் காப்பியத்தைப் புனைந்துள்ளார். இக்காப்பியம், சோழர் காலத்தில் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்ததை பெரிய புராணம் மூலம் அறிய முடிகிறது. இதன் இலக்கியச் சிறப்பும், தமிழ் இலக்கிய மரபும் புலவர்கள் பலராலும் பாராட்டப்பட்ட ஒன்றாகும்.

"சீவகசிந்தாமணி இப்பொழுதுள்ள தலைசிறந்த தமிழிலக்கியச் சின்னமாகும்; தமிழ்ப்பொருள் காதற் காப்பியம் ; உலகப் பெருங்காப்பியங்களுள் ஒன்று." என்பது டாக்டர் ஜி. யூ. போப் அவர்களின் கருத்து.

காப்பிய ஆசிரியர் திருத்தக்க தேவர்

சீவக சிந்தாமணி ஆசிரியர் திருத்தக்க தேவர், சமண சமயம் சார்ந்தவர். சோழர் குலத்தில் பிறந்தவர். திருத்தகு முனிவர், திருத்தகு மகா முனிவர், திருத்தக்க மகாமுனிகள், தேவர் என்ற சிறப்புப் பெயர்களால் சிறப்பிக்கப்பட்டவர். இவர், அகத்தியம், தொல்காப்பியம், சங்க இலக்கியம் முதலான தமிழ் நூல்களைக் கற்றறிந்தவர். வடமொழிyஇல் தேர்ந்தவர். சமண சமய நூல்களை முழுமையாகக் கற்றவர்.

இவர் மதுரையில் தன் ஆசிரியருடன் வாழ்ந்து வந்தார். சங்கப் புலவர்களுடன் ஏற்பட்ட விவாதம் ஒன்றில், புலவர் ஒருவர் ‘சமணர்களுக்குத் துறவை மட்டுமே பாடத் தெரியும்; காமச் சுவைபட இலக்கியம் படைக்க அவர்கள் அறியார்” என்று இழித்துப் பேசினார். அதற்கு திருத்தக்க தேவர் ‘சமணர்கள் காமத்தை வெறுத்தனரே யன்றிப் பாடத் தெரியாதவர்கள் அல்லர்’ என்றார். ‘அப்படி என்றால் காமச் சுவைபட ஒரு நூல் இயற்றுக’ என்றார் புலவர். இதனைத் தேவர் தன் ஆசிரியரிடம் கூற, அவர் தம் மாணாக்கரின் புலமைத் திறத்தை அனைவருக்கும் உணர்த்த, எதிரே ஓடிய நரி ஒன்றைக் காட்டி ‘இது பற்றிப் பாடுக’ என்றார். அவ்வாறே நரிவிருத்தம் என்ற நூலைப் பாடினார் திருத்தக்க தேவர்.

தொடர்ந்து ஆசிரியரின் வேண்டுகோளின்படி சீவகனின் வரலற்றை ‘சீவக சிந்தாமணி’ என்ற நூலாக இயற்றினார். ஆனால், அதில் காமச்சுவை மிக அதிகமாக இருந்தது. சிற்றின்ப அனுபவம் இல்லாத ஒருவரால் இந்த அளவுக்குச் சிற்றின்பத்தைப் பாடமுடியாது என்று புலவர்கள் கருதினர். திருத்தக்க தேவரின் துறவு நெறியின் மீது அவர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டது.

இதனை அறிந்த திருத்தக்கத் தேவர், “நான் உண்மையான துறவி என்றால் இந்தப் பழுக்கக் காய்ச்சிய இரும்பு என்னைச் சுடாதிருக்கட்டும்” என்று கூறி, பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கோலைத் தன் கைகளில் தாங்கினார். அதனால் அவருக்கு எந்தவிதத் துன்பமும் ஏற்படவில்லை. தேவரின் பெருமையை அறிந்த பிற புலவர்கள் அவரிடம் மன்னிப்பு வேண்டினர். திருத்தக்க தேவரும் அவர்களை மன்னித்தார்.

"திருத்தக்கத்தேவர் தமிழ்க் கவிஞருள் சிற்றரசர்." என்று வீரமாமுனிவர் குறிப்பிட்டுள்ளார்.

சீவக சிந்தாமணியின் காலம்

சீவக சிந்தாமணி கம்பராமாயணம், பெரிய புராணம் முதலிய நூல்களுக்கு முற்பட்டது. அந்த வகையில் இதன் காலம் ஒன்பதாம் நூற்றாண்டாகக் கருதப்படுகிறது. இக்காப்பியத்தின் மொழிநடை, விருத்தப்பா அமைப்பு ஆகியவை கொண்டு, இது பெருங்கதைக் காப்பியத்திற்குப் பின்னர் எழுந்திருக்க வேண்டும் என்பது ஆய்வாளர்களின் கருத்து. சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை ஆகியன நிலைமண்டில ஆசிரியப்பாவில் இயற்றப்பட்டன. முதன்முதலாக விருத்தப்பாவில் அமைந்த காப்பியம் சீவக சிந்தாமணிதான். விருத்தப்பாவின் தொடக்கம் சிந்தாமணியே. இதன் செல்வாக்கால் சூளாமணி, கம்பராமாயணம், பெரிய புராணம் போன்றவை விருத்தப்பாவில் இயற்றப்பட்டன.

சீவக சிந்தாமணி காப்பியத்தின் மூலம்

இந்திய மொழிகள் அனைத்திலுமே தொடக்க காலக் காப்பியங்கள் வடமொழிச் சார்புடனேயே அமைந்திருக்கின்றன. சீவகனின் வரலாற்றைக் கூறும் சத்திர சூடாமணி, கத்திய சிந்தாமணி, ஜீவந்தர நாடகம், ஜீவந்தர சம்பு என்ற நான்கு வடமொழி நூல்களை அடிப்படையாக வைத்தே சீவகசிந்தாமணி இயற்றப்பட்டுள்ளது. சமண சமயத்தின் வேதாகமமாகக் கருதப்படும் ஸ்ரீபுராணத்திலும், மகாபுராணத்திலும் சீவகனின் கதை இடம் பெற்றுள்ளது.

சிலர் சீவக சிந்தாமணி கத்திய சிந்தாமணியின் வழிவந்தது என்று கருதி, கத்திய சிந்தாமணியின் காலமாகிய ஒன்பதாம் நூற்றாண்டை யடுத்து இந்நூல் தோன்றியிருத்தல் வேண்டும் என்று கருதுகின்றனர்.

சீவக சிந்தாமணியின் கதைச் சுருக்கம்

ஏமாங்கத நாட்டின் தலைநகர் இராசமாபுரம்; அதன் அரசன் சச்சந்தன், தன் மனைவி விசயையுடன் காம இன்பத்தில் மூழ்கி, அரசாட்சியில் கவனம் செலுத்தாம இருக்கிறான். அதனால் சூழ்ச்சி செய்து அமைச்சன் கட்டியங்காரன், அரசனைக் கொன்று ஆட்சியைக் கைப்பற்றுகிறான். கட்டியங்காரன் சூழ்ச்சியையும், தன் இறுதி முடிவையும் அறிந்த சச்சந்தன் கருவுற்றிருந்த தன் மனைவியை, மயிற்பொறியில் ஏற்றி அனுப்புறான். பொறியை இயக்கத் தெரியாததால் அது சுடுகாட்டில் இறங்க, அங்கு அவளுக்குச் சீவகன் பிறக்கிறான்.

தெய்வ அருளால் கந்துக்கடன் என்ற வணிகன் குழந்தையை எடுத்துச் சென்று வளர்க்கிறான். பின்னர்க் கந்துக்கடனுக்கு நந்தட்டன், நபுலன், விபுலன் என்ற மகன்கள் பிறக்கின்றனர். சீவகன் அச்சணந்தி என்ற ஆசிரியரிடம் வித்தைகளைக் கற்றான். அவரே சீவகன் தந்தை சச்சந்தன் என்பதை அவனுக்குத் தெரிவித்து, நடந்த நிகழ்வுகளைக் கூறி கட்டியங்காரனை வெல்லும் வழிவகைகளையும் சொல்கிறார்.

அதன் படி நடந்து எண்மரை மணம்முடிக்கிறான். தன்னை அன்புடன் வளர்த்த தந்தையாகிய கந்துக்கடனுக்கும் தாயாகிய சுநந்தைக்கும் அரசுப் பட்டம் வழங்குகிறான். சகோதரன் நந்தட்டனை இளவரசனாக்குகிறான். பிற சகோதரர்களுக்கும் தோழர்களுக்கும் பல சிறப்புக்ளைச் செய்கிறான். சீவகன் தேவியர்க்கு எட்டு மகன்கள் பிறக்கின்றனர்.

சீவகன் தேவியர் எண்மருடன் பொழில் வளம் காணச் செல்கிறான். அங்குக் கடுவன் - மந்தி (குரங்குகள்) பெற்ற பலாப்பழத்தை வேடன் கவர்ந்து செல்வதைக் கண்டு செல்வம் நிலையாமையை உணர்கிறான். பின் நகரை அடைந்து அருகனை வழிபட்டுச் சாரணர் மூலம் பிறவி பற்றிய பல உண்மைகளையும் தன் முற்பிறப்பு பற்றியும் அறிந்து கொள்கிறான். பின் அரண்மனை சென்று தன் துறவை அறிவிக்கிறான்; தன் மகன் சச்சந்தனை அரசனாக்கித் தேவியர் எண்மரோடும் துறவு மேற்கொள்கிறான். வர்த்தமானரைத் தரிசித்து, விபுலகிரியில் தவம் செய்து சித்த சேத்திரம் அடைந்து வீடுபேறு அடைகிறான்.

பாடல் அமைப்பு

கடவுள் வாழ்த்து

மூவா முதலா வுலகமொரு மூன்றுமேத்தத்

தாவாத வின்பந் தலையாயது தன்னினெய்தி

ஓவாது நின்ற குணத்தொண்ணிதிச் செல்வனென்ப

தேவாதி தேவ னவன்சேவடி சோதுமன்றே.


-என்ற கடவுள் வாழ்த்துப் பாடலில் தொடங்கி,


திங்கள் மும் மாரி பெய்க திரு அறம் வளர்க செங்கோல்

நன்கு இனிது அரசன் ஆள்க நாடு எலாம் விளைக மற்றும்

எங்கு உள அறத்தினோரும் இனிது ஊழி வாழ்க எங்கள்

புங்கவன் பயந்த நன்னூல் புகழொடும் பொலிக மிக்கே


என்ற வாழ்த்துப் பாடலுடன் சீவகசிந்தாமணி நூல் நிறைவடைகிறது.

சீவக சிந்தாமணி பாடல் சிறப்புகள்

உசாத்துணை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.