சார்வாகன்
சார்வாகன் (ஹரி ஸ்ரீநிவாசன்: 1929 - 2015) அடிப்படையில் தொழுநோய் அறுவைச் சிகிச்சை மருத்துவர். இலக்கிய ஆர்வத்தால் எழுத்தாளராகச் செயல்பட்டவர். கவிதைகளும் எழுதியிருக்கிறார். தனது மருத்துவப் பணிக்காக இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது பெற்றவர்.
பிறப்பு, கல்வி
ஹரி ஸ்ரீநிவாசன் என்னும் இயற்பெயர் கொண்ட சார்வாகன், வேலூரில் செப்டம்பர் 07, 1929-ல், ஹரிஹரன் - ஜானகி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். தந்தை ஹரிஹரன் சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்டவர். அவர் ஆரணியில் மருத்துவராகப் பணியாற்றி வந்தார். தொடக்கக் கல்வியை வேலூரில் பயின்றார், ஹரி ஸ்ரீநிவாசன். உயர்நிலைக் கல்வியை ஆரணியில் முடித்தார். சென்னை கிறித்துவக் கல்லூரியில் இண்டர்மீடியட் பட்டப்படிப்பை முடித்தபின் சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து மருத்துவத்தில் பட்டம் பெற்றார்.
தனி வாழ்க்கை
மருத்துவப் படிப்பை முடித்ததும் சில ஆண்டுகள் வேலூர் கிறித்துவ மருத்துவக் கல்லூரியில் சிலகாலம் அனாடமி துறையில் ட்யூட்டராகப் பணியாற்றினார். மேற்படிப்பிற்காக வெளிநாட்டிற்குப் பயணப்பட்ட சார்வாகன், FRCS எனும் மருத்துவப் பட்ட உயர்படிப்பை எடின்பர்கிலும், இங்கிலாந்திலும் நிறைவு செய்தார். பர்மிங்காம் மற்றும் லண்டனில் உள்ள மருத்துவமனைகளில் தலைமை மருத்துவர், பதிவாளர் என பல பொறுப்புகளில் பணியாற்றினார்.
திருமண வாழ்க்கை
தன்னுடன் பணியாற்றிய சக மருத்துவரான பத்மாவைத் திருமணம் செய்துகொண்டார். பின் இருவரும் இந்தியா திரும்பினர்.
மருத்துவ வாழ்க்கை
இந்தியா திரும்பியதும் மங்களூர் கஸ்தூரிபா மருத்துவக் கல்லூரியிn, தொழுநோய் அறுவைச் சிகிச்சைப் பிரிவில் சிலகாலம் பணியாற்றினார் ஹரி ஸ்ரீநிவாசன். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் முடநீக்கியல் பிரிவு மருத்துவராகப் பணியாற்றும் வாய்ப்பு வந்தது. இயல்பிலேயே காந்தியத் தாக்கமும் சேவை மனப்பான்மையும் கொண்டிருந்த ஹரி ஸ்ரீநிவாசன் அப்பணியை ஏற்றுக் கொண்டார். தொழுநோயின் பாதிப்பால் வாழ்விழந்தவர்களை மீட்பதையே தனது லட்சியமாய்க் கொண்டு செயல்பட்டார். அதன் பொருட்டு பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.
சீனிவாசன் மாடல் (Srinivasan Concept)
தொழுநோயால் மிகவும் பாதிப்படைந்து முடமாகிப் போன, செயல்பட முடியாத கை விரல்களை ஒரு சிறு அறுவைச் சிகிச்சையின் மூலம், முன்பு போல் இயக்க முடியும் என்பதை நிரூபித்தார். அவை உள்நாட்டு வெளிநாட்டு ஆய்வாளர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டன. ஹரி ஸ்ரீநிவாசனின் இந்த முறை, அவர் பெயராலேயே 'Srinivasan Concept' என்று அழைக்கப்பட்டது. அதற்கு உலகளாவிய அங்கீகாரமும், தமிழ்நாட்டு அரசின் அங்கீகாரமும் கிடைத்தது.
ஹரி ஸ்ரீநிவாசன், உள்நாடு, வெளிநாடு என பல மருத்துவக் கருத்தரங்குகளில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றியிருக்கிறார். சில பல்கலைக்கழகங்களில் வருகைப் பேராசிரியராகவும் பணி புரிந்திருக்கிறார்.
மருத்துவ நூல்கள்
ஹரி ஸ்ரீநிவாசன், முடநீக்கியல் துறை தொடர்பாக, ஆங்கிலத்தில் பல நூல்களையும், கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். “Prevention of Disabilities in patients with Leprosy - A Practical Guide” என்ற நூல் அதில் முக்கியமானது. நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை உலக அளவிலான ஆங்கில இதழ்களில் எழுதியிருக்கிறார். Indian Journal of Leprosy இதழில் ஆசிரியராக பனிரெண்டு ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார். உலக சுகாதாரக் கழகத்தின் (WHO) உறுப்பினராகப் பணிபுரிந்திருக்கிறார்.
இலக்கிய வாழ்க்கை
ஹரி ஸ்ரீநிவாசனின் தந்தை இலக்கிய ஆர்வம் உடையவர். ஹரி ஸ்ரீநிவாசனின் தாத்தா கிருஷ்ணய்யரும் இலக்கிய ஆர்வம் உடையவர். அவர் வீட்டிலேயே ஒரு நூலகத்தை வைத்திருந்தார். தன் சிறுவயதில் அதில் உள்ள நூல்களை வாசித்துத் தன் இலக்கிய ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார் ஹரி ஸ்ரீநிவாசன்.
மருத்துவப் பணியில் தனக்குக் கிடைக்கும் ஓய்வுநேரங்களை கதை, கவிதை, கட்டுரை என இலக்கியத்திற்காகச் செலவிட்டார். மகாபாரதத்தில் ‘சார்வாகன்’ பாத்திரம் இவரை மிகவும் ஈர்த்ததால் அதையே புனை பெயராக வைத்துக் கொண்டு இவர் எழுதத் தொடங்கினார்
முதலில் கவிதைகள் எழுதினார். அவை, ‘எழுத்து’, ‘புதுக்குரல்’, ‘தாமரை’, ‘வானம்பாடி’ போன்ற இதழ்களில் வெளியாகின. “கவிதைகளை விட, கதைகளை நீங்கள் அதிகம் எழுதுங்கள்” என்று சொல்லி சி.சு. செல்லப்பா ஊக்குவித்தார். தொடர்ந்து இதழ்களுக்குச் சிறுகதைகள் எழுத ஆரம்பித்தார். இவர் எழுதிய சிறுகதைகள் ‘தீபம்’, ’ஞானரதம்’,‘கணையாழி’ போன்ற இதழ்களில் வெளியாகின. ஒரு சில நீண்ட குறுநாவல்களையும் எழுதினார்.
வாசகர் வட்டம் வெளியிட்ட ‘அறுசுவை’ குறுநாவல் தொகுப்பில் இவருடைய ‘அமரபண்டிதர்’ கதை இடம்பெற்றது. ‘வளை’, ‘வெறிநாய் புகுந்த பள்ளிக்கூடம்’, ‘தர்ப்பணம்’, ‘சின்னூரில் கொடி ஏற்றம்’, ‘கனவுக்கதை’, ‘உத்தரீயம்’, ‘யானையின் சாவு’ போன்ற இவரது சிறுகதைகள் வாசக வரவேற்பைப் பெற்றன.
எழுத்தாளரும், கவிஞருமான நகுலன் தொகுத்த ‘குருக்ஷேத்திரம்’ நூலில் சார்வாகனின் படைப்புகள் சில இடம் பெற்றன. வெங்கட்சாமிநாதன் சார்வாகனின் சிறுகதை ஒன்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். ஹிந்தியிலும் சில கதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
1993ல் க்ரியா பதிப்பகம், இவரது சிறுகதைகளைத் தொகுத்து ‘எதுக்குச் சொல்றேன்னா..’ என்ற தலைப்பில் வெளியிட்டது. 2013ல் இவரது அனைத்து சிறுகதைகளும், நாவல்களும் தொகுக்கப்பட்டு முழுத்தொகுப்பாக நற்றிணை பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
விருதுகள்
- இவரது மருத்துவ சேவைக்காக இந்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கிச் சிறப்பித்தது
- இவரது மருத்துவ சேவைக்காக சர்வதேச காந்தி விருது அளிக்கப்பட்டுள்ளது.
- எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம், இவரது ஆராய்ச்சி மற்றும் சேவைகளுக்காக கௌரவ டாக்டர் பட்டம் வழங்கிப் பாராட்டியது.
மறைவு
தன்னை அதிகம் வெளிக்காட்டிக் கொள்ளாமல், தனது மருத்துவச் சாதனைகளை, இலக்கிய முயற்சிகளைப் பிரகடனப்படுத்திக் கொள்ளாமல் அமைதியாக வாழ்ந்த சார்வாகன், டிசம்பர் 21, 2015-ல், தனது 86-ம் வயதில் காலமானார். இவருக்கு லதா, பாரதி என்று இரு மகள்கள். இருவரும் மருத்துவர்களே!
இலக்கிய இடம்
“மருத்துவர்கள் மகத்தான எழுத்தாளர்களாக விளங்குவதற்கு நீண்ட வரலாறு இருக்கிறது. ஆண்டன் செகாவ், ஏ.ஜே.கிரானின், சாமர்செட் மாம் எனத் தொடங்கி சார்வாகன் வரை கூறலாம்” என்று சார்வாகனை மகத்தான எழுத்தாளர்களுள் ஒருவராக மதிப்பிடுகிறார் அசோகமித்திரன்.
நூல்கள்
உசாத்துணை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.