first review completed

தனவணிகன்

From Tamil Wiki
Revision as of 17:39, 4 September 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Inserted READ ENGLISH template link to English page)

To read the article in English: Dhanavanigan. ‎

தனவணிகன் இதழ்

பர்மாவில் உள்ள நகரத்தார் சங்கத்தின் சார்பில் வெளியான இதழ் 'தனவணிகன்’. நகரத்தார்களின் தொழில் உதவிக்காகவும், இலக்கிய வாசிப்புக்காகவும் இந்த இதழ் 1933-ல் தொடங்கப்பட்டது. இரண்டாவது உலகப் போரின் சூழல்களால் 1941-ல் நிறுத்தப்பட்டது. வெ. சாமிநாத சர்மா பர்மாவில் வசித்த போது சில வருடங்கள் இதன் ஆசிரியராகப் பணியாற்றினார்.

எழுத்து, வெளியீடு

மார்ச்  9, 1933-ல் இவ்விதழ் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் சங்க உறுப்பினர்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டு வந்த இதழ், பின்னர் பொது வாசகர்களுக்காகவும் வெளியானது.

பெயர்க்காரணம்

வணிகம் செய்து பொருளீட்டி வந்த நகரத்தார்களைக் குறிக்கும் வண்ணம், அவர்களுக்கான இதழ் என்பதைக் காட்டும் வண்ணம் 'தனவணிகன்’ என்ற பெயர் சூட்டப்ப்பட்டது.

இதழின் ஆசிரியர்கள்

இதழின் ஆசிரியர்களாக ஆரம்பத்தில் ஏ.கே.செட்டியார், கண. முத்தையா ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். பின்னர் வெ.சாமிநாத சர்மா சில வருடங்கள் இதன் ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார்.

உள்ளடக்கம்

’தனவணிகன்’ இதழில் உலகச் செய்திகள், அரசின் அறிவிப்புகள், நகரத்தார் தொழில் சம்பந்தமான விளக்கங்கள், ஆலோசனைகள், அது குறித்த விளம்பரங்கள், அறிவிப்புகள் இவற்றோடு இலக்கியம் சார்ந்த கதை, கட்டுரைகளும் இடம் பெற்றன. தனவணிகன் பொங்கல் மலர், தனவணிகன் சங்க மலர் போன்ற மலர்களை ஆண்டுதோறும் வெளியிட்டுள்ளனர்.

தனவணிகன் இதழ் விளம்பரம்

'தமிழ்ப்பொழில்’ போன்ற இதழ்களில் வெளியான விமர்சனக் குறிப்புகள் மூலம், 'தன வணிகன்’, பொங்கல் மற்றும் ஆண்டு மலர்களில் இலக்கியம், சமூகம், வரலாறு, அறிவியல் சார்ந்த பல்வேறு கட்டுரைகள் வெளியாகியிருப்பதை அறிய முடிகிறது. மலர்களில் ஆங்காங்கே ஓவியங்களும் வெளியாகியிருக்கின்றன. உ.வே.சாமிநாதையர் உள்ளிட்ட தமிழறிஞர்கள் இவ்விதழில் கட்டுரைகள் எழுதியுள்ளனர். உ.வே.சா. எழுதிய தமிழ்நாட்டு வணிகர் (1935-பொங்கல் மலர்), தொண்டைமான் சரித்திரம் போன்றவை தனவணிகன் இதழில் வெளியாகியுள்ளன.

வெ.சாமிநாத சர்மா புனை பெயரில் சில கட்டுரைகளை எழுதியிருப்பதாக பெ.சு. மணி 'இந்திய இலக்கியச் சிற்பிகள்: வெ. சாமிநாத சர்மா’ நூலில் குறிப்பிட்டுள்ளார். அக்கட்டுரைகள்:

  • மைசூரின் முன்னேற்றம் - சரித்திரக்காரன்
  • ரங்கூனில் நான் கண்ட காட்சி - தேவதேவன்
  • துன்பத்தில் இன்பம் - மௌத்கல்யன்
  • பதினாயிரம் மாணாக்கர்கள் படித்த சர்வகலாசாலை - சரித்திரக்காரன்
  • ராஷ்ட்ரபதி (நேருஜி பற்றியக் கட்டுரை)
தனவணிகன் பொங்கல் மலர்-1934

பங்களிப்பாளர்கள்

மற்றும் பலர்

இதழ் நிறுத்தம்

1933-ல் தொடங்கி தடையில்லாமல் வந்துகொண்டிருந்த இவ்விதழ், இரண்டாவது உலகப் போர்ச் சூழல்களால் 1941-ல் நிறுத்தப்பட்டது.

ஆவணம்

தனவணிகனின் பொங்கல் மலர்கள் தமிழ் இணைய நூலகத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

உசாத்துணை












🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.