being created

கணியான் கூத்து

From Tamil Wiki
Revision as of 13:58, 20 September 2023 by Navingssv (talk | contribs)

கணியான் கூத்து - தமிழகத்தில் தென்மாவட்டங்களில் வழக்கில் உள்ள நாட்டார் நிகழ்த்துக் கலை. அண்ணாவி ஒருவர் பாட அவருடன் இருவர் ஆடுவதும், இருவர் மகுடம் இசைப்பதுமாக இந்நிகழ்த்துக்கலை அமையும். இந்நிகழ்த்துக்கலை வழிபாடு, புராணம், சடங்குகள் சார்ந்தது. திருநெல்வேலி, தூத்தூக்குடி பகுதியில் வாழும் கணியான் சாதியினர் கணியான் கூத்தை நிகழ்த்துகின்றனர்.

பார்க்க: பேயாட்டம், அம்மன் ஆட்டம்

கணியான் கூத்து

கணியான் கூத்து நாட்டார் தெய்வக் கோவில் விழாக்களில் நிகழும் நிகழ்த்துக் கலை. இக்கலை சுடலைமாடன் கோவிலிலும், அம்மன் கோவில்களிலும் விஷேச நாட்களில் நிகழ்த்தப்படும். கோவிலின் முக்கிய தெய்வம் இருக்கும் அறையின் எதிர்ப் பகுதியில் கணியான் ஆட்டம் நிகழும். இக்கலை சடங்கு சார்ந்தது என்பதால் தெய்வத்தின் நேர் எதிர் நின்று நிகழ்த்தப்பட வேண்டும் என்பது நியதி. அவ்வாறு இடம் இல்லாத கோவில்களில் வலதுபுறமோ, இடதுபுறமோ கூத்து நிகழ்த்தப்படும். கோவிலில் மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள இடங்களில் சாமியாடி வரும் போது கரகம், நையாண்டி மேளத்துடன் சேர்ந்து கணியான் குழுவினரும் ஆடி பாடி வருவர்.

கணியான் ஆட்டக்கதையில் பெரும்பாலும் அது நிகழும் கோவில் சார்ந்த மூலத் தெய்வத்தின் கதைகளே பாடப்படும். அதன் பின் கோவிலின் துணை தெய்வங்கள் தொடர்பான கதைகளைப் பாடுவர். முந்தைய காலங்களில் மாடன் கதைகளையும், காளி கதைகளையும் மட்டுமே பாடும் வழக்கம் இருந்தது. வில்லுப்பாட்டுக் கலைஞர்கள் ராமாயண, பாரதக் கதைகள் பாடத் தொடங்கிய போது கணியான் அண்ணாவிகளும் அக்கதைகளைப் பாடத் தொடங்கினர்.

ஆட்டமுறை

கணியான் ஆட்டக் குழுவில் எட்டு அல்லது ஐந்து பேர் இருப்பர். எட்டு பேர் கொண்ட குழுவில் அண்ணாவி ஒருவர், பின்பாட்டுக்காரர் இருவர், மகுடக்காரர்கள் இருவர், தாளம்/ சால்ரா அடிப்பவர் ஒருவர், நடனமாடுவர் இருவர் இருப்பர். ஐவர் குழுவில் அண்ணாவி, பின்பாட்டுக்காரர், நடனமாடுபவர் தலா ஒருவரும், மகுடக்காரர்கள் இருவரும் இருப்பர். கணியான் ஆட்டத்தின் துணை நிகழ்வாக நடக்கும் கைவெட்டுக்காரர், அம்மன்கூத்து ஆடுபவர், பேயாட்டம் ஆடுபவர் இந்த எண்ணிக்கையில் அடங்க மாட்டார்.

ஆட்டத்தின் நிகழ்த்து முறை பாட்டு, கதை விளக்கம், ஆட்டம் என அமையும். பாட்டும், மகுட இசையும், ஆட்டமும் ஒருங்கேயும், கதை விளக்கம் தனியாகவும் நிகழும். மைய கருவறை எதிரே நின்றுக் கொண்டு அண்ணாவி பாடுவார். அவருக்கு இருபுறமும் சற்று இடைவெளி விட்டு பின்பாட்டுக்காரர் நிற்பார். இவரே தாளமும் அடிப்பார். அண்ணாவியும், பின்பாட்டுக்காரரும், மகுடக்காரரும் நின்றுக் கொண்டு பாடி, இசைக்க ஆட்டக்காரர் கதையின் தன்மைக்கு ஏற்ப ஆடுகளத்தில் ஆடி வருவார்.

முதலில் அண்ணாவி பாடுவார், பாட்டின் போது மகுடம் அடித்தல், ஆட்டக்காரர்கள் ஆடரங்கில் ஆடுதல் நிகழும். பின் அண்ணாவி பாடிய பகுதிகளுக்கு உரைநடையில் விளக்கம் கூறுதல் பகுதி நிகழும். அண்ணாவி விளக்கம் கூறும் போது ஆட்டக்காரர்கள் ஆடுவதும், மகுடம் இசைப்பது நிகழாது. அண்ணாவியின் உரைநடை விளக்கமும் ராகத்திலேயே அமைந்திருக்கும். அண்ணாவி விளக்கம் சொல்லும் போது ஆட்டக்காரர்கள் முக்கிய தெய்வத்திற்கு தங்கள் பின்புறத்தை காட்டாது வந்து நிற்பர். அதற்கு ஏற்ப ஆட்டக்காரர்கள் காலால் தரையை தட்டி சிறிதாக சலங்கை ஒலி எழுப்புவர். அண்ணாவி விளக்கம் சொல்லும் போது பின்பாட்டுக்காரர்களும், மகுடக்காரர்களும் ‘ஆமா’ என ஒத்து போட வேண்டும்.

பொதுவாக ஆட்டமுறையை வட்டவடிவ ஆட்டமுறை, நேர்கோட்டு ஆட்டமுறை என இரண்டாகப் பிரிப்பர். இதில் வட்டவடிவ ஆட்டமுறை பழமையானது. ஆனால் தற்போது கணியான் ஆட்டத்தின் பெரும்பாலான ஆடல் நேர்கோட்டிலேயே நிகழும். ஆனால் சாமியாடி வந்தாடும் போது ஆட்டக்காரர்களை தன்னுடன் ஆடும்படி பணிவார். அவர்கள் ஆடும் போது அண்ணாவி கும்மிப் பாட்டு பாடுவார். பின்பாட்டுக்காரர்களும், மகுடக்காரர்களும் சேர்ந்து பாடுவர். அப்போது ஆட்டம் வட்ட வடிவில் மாறிவிடும். இது மரபாக நிகழும் கும்மி ஆட்டம் போன்றது.

கணியான் கூத்தின் ஆட்டமுறை தொடக்கம், வேகம், அதிவேகம் என மூன்று நிலைகளாக அமையும். அண்ணாவி பாடத் தொடங்கியதும் ஆட்டக்காரர்கள் தங்கள் பாதங்களை மெல்ல தட்டிக் கொண்டும், கைகளை அசைத்துக் கொண்டும் தொடங்கி பின் வேக நிலையிலும், அதிவேக நிலையிலும் சுழன்று ஆடி வருவர். ஆட்டக்காரர்கள் அதிவேக நிலையில் ஆடும் போது மகுடம் உச்சத்தில் ஒலிக்கும்.

கலைஞர்கள்

அண்ணாவி

புலவர் என்று பொதுவாக அழைக்கப்படும் அண்ணாவியே குழுவின் தலைவராக இருந்து அதனை வழிநடத்திச் செல்வார். கூத்தில் அண்ணாவியே முன் நின்று பாடுவார். அண்ணாவி பட்டு ஜிப்பாவும், வேட்டியும் அணிந்திருப்பார்.

பின்பாட்டுக்காரர்

அண்ணாவிக்கு சற்று இடைவெளிவிட்டு பின்பாட்டுக்காரர் நிற்பார். அண்ணாவி பாடும் போது உடன் பாடுவதும், தாளம் இசைப்பதும் இவர் நிகழ்த்துவார். அண்ணாவி பாட்டின் நடுவே ஓய்வெடுக்கும் போது இவரே முன் நின்று பாடுவதும் உண்டு.

மகுடக்காரர்

மகுடக்காரர்கள் அண்ணாவிக்கும், பாடுபவர்களுக்கும் இடமும் வலமுமாக நிற்பர். மகுடத்தின் தன்மை பொறுத்து அவர்களின் இடம் அமையும். மகுடத்தில் உச்சம், மந்தம் என இருவகை உண்டு. உச்ச மகுடம் அடிப்பவர் வலது பக்கமும், மத்த மகுடம் இசைப்பவர் இடது பக்கமும் இருப்பர். உச்ச மகுடத்தை உச்சக்கட்ட மகுடம், தொப்பி என்றழைப்பர். மந்த மகுடத்தை மந்தகட்டம், விளித்தலை என்று குறிப்பிடுகின்றனர். இதில் மந்த மகுடத்தை விட உச்ச மகுடம் அளவில் பெரியது. மகுடக்காரர்கள் பாட்டின் தாளத்திற்கு ஏற்ப உச்ச மகுடத்தையும், மந்த மகுடத்தையும் இசைப்பர்.

நடனக்காரர்

ஆட்டக்காரர் இருவரும் மகுடக்காரருக்கு அடுத்து நிற்பர். இவர்கள் இருவரும் பெண் வேடம் அணிந்திருப்பர். மைய கருவறைக்கும் அண்ணாவிக்கும் நடுவில் ஆடுகளம் அமைக்கப்பட்டிருக்கும். பார்வையாளர்கள் ஆடுகளத்தின் இரண்டு பக்கமும் இருப்பர். நடனக்காரர் ஆடுகளத்தின் முழுவதும் ஆடிவருவார். பேயாட்டம் ஆடுபவருடன் ஆட்டக்காரர்கள் ஆடுவதும் உண்டு.

நடனக்காரர் கதையின் தன்மைக்கு ஏற்ப தங்கள் ஆடலை அமைத்துக் கொள்வர். கதையின் உச்சத் தருணங்களில் உக்கிரமாகவும், பிற தருணங்களில் பார்வையாளர்களை மகிழ்விக்கும் பொருட்டு கோமாளி தனமாகவும் ஆடுவர். சில சமயம் பார்வையாளர்களை சீண்டுதல், அவர்களுடன் சேர்ந்து ஆடுவதும் நிகழும்.

இசைக்கருவி

மகுடம், ஜால்ரா இரண்டும் கணியான் ஆட்டத்திற்கு உரிய இசைக்கருவிகள். இதில் மகுடமே முக்கிய இசைக்கருவி என்பதால் இக்கலை மகுடாட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. தெய்வத்திற்கு கோமரமாடுபவரின் (சாமியாடுபவர்) கோமரத்தை (தெய்வ அருள்) கூட்ட மகுடம் அடிக்கப்பட வேண்டும் என்ற நியதி உள்ளது. மகுடத்தின் ஒலி சாமியாடுபவரை உச்ச நிலைக்கு கொண்டு செல்லும்.

முந்தைய காலங்களில் கோவில்களில் வில், மகுடம் போன்ற இசைக்கருவிகள் கோவிலுக்குச் சொந்தமாக வைத்திருந்தனர். விழாக்களில் அவற்றை முக்கிய தெய்வத்தின் முன் வைத்து பூஜை செய்து கலைஞர்களிடம் கொடுப்பர்.

பார்க்க: மகுடம்

நிகழும் மாதங்கள்

நாட்டுப்புறத் தெய்வங்களின் விழாக்கள் பங்குனி முதல் புரட்டாசி வரை நிகழும். பிற மாதஙளில் தனிப்பட்ட காரணங்களால் விழா நிகழ்த்தப்படுவதும் உண்டு. பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்களில் பெருமளவும் கொடை நிகழும். ஆடி மாதத்திலும், கார்த்திகை மாத செவ்வாய்க்கிழமைகளிலும் அம்மன் கோவில் சிறப்பு நிகழ்ச்சிகள் நிகழும். இக்காலங்களில் கோவில்களில் கணியான் கூத்து நிகழும். குலத் தெய்வ கோவில் திருவிழாவான பங்குனி உத்திரம் நாளிலும் கணியான் ஆட்டம் நிகழ்த்தப்படும்.

சுடலை மாடன் கோவில் விழாக்கள் வியாழன், வெள்ளி, சனி நாட்களிலும், அம்மன் கோவில் விழாக்கள் திங்கள், செவ்வாய், புதன்கிழமைகளிலும் நிகழும். கணியான் ஆட்டம் கோவிலின் பொருளாதார நிலைக்கு ஏற்ப ஒரு நாளிலிருந்து மூன்று நாட்கள் வரை நிகழும்.

நிகழும் நேரம்

கணியான் கூத்து பெரும்பாலும் இரவு நேரங்களிலேயே நிகழும். இரவு எட்டு மணிக்கு மேல் தொடங்கி அதிகாலை நான்கு, ஐந்து மணி வரை நிகழும். கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் இரவு 12 - 2 க்குள் முடித்துவிட்டு மீதி கதையை மறுநாள் தொடரும் வழக்கம் உள்ளது.

கணியான் கூத்து கதைகள்

நிகழும் ஊர்கள்

கணியான் கூத்து தமிழகத்தின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்தூக்குடி, கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள நாட்டுப்புறத் தெய்வக் கோவில்களின் விழாக்களில் நிகழ்த்தப்படுகிறது. இக்கலை சுடலைமாடன் கோவிலிலும், அம்மன் கோவில்களிலும் நிகழ்த்தப்படும்.

நிகழ்த்தும் சாதியினர்

இந்நிகழ்த்துக்கலையை திருநெல்வேலி, தூத்தூக்குடி மாவட்டங்களில் வாழும் கணியான் சாதியினர் நிகழ்த்துகின்றனர்.

கூத்து பற்றிய ஆய்வு

  • கணியான் கூத்து பற்றி சோமலெ தன் ‘Folklore of Tamilnadu (1973)’ நூலில் குறிப்பிட்டுள்ளார். இந்நூலில் சோமலெ குறிப்பிடும் ஆணும் பெண்ணுமாக இரண்டு கோமாளிகள் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடுவர் என்னும் குறிப்பு தவறானது.
  • பொ.யு. 1976 ஆம் ஆண்டு ஏ.என். பெருமாள் தாமரை மாத இதழில் கணியான் கூத்து பற்றி குறிப்பு எழுதியுள்ளார்.
  • முனைவர் அ.கா. பெருமாள் ராஜபாளையத்திலிருந்து வெளிவந்த யாத்ரா காலாண்டு இதழில் கணியான் ஆட்டம் பற்றி விரிவான கட்டுரையை பொ.யு. 1980 ஆம் ஆண்டு எழுதியுள்ளார்.
  • பொ.யு. 1982-ல் அனந்தசயனம் கணியான் கூத்து பற்றி எம்.ஃபில் ஆய்வு செய்துள்ளார்.
  • பொ.யு. 1986-ல் இரா. பாலசுப்பிரமணியம் கணியான் கூத்து பற்றி பாளையங்கோட்டையில் நூல் வெளியிட்டுள்ளார்.
  • பொ.யு. 1988-ல் நாட்டுப்புற இயல் ஆய்வுக் கோவையில் ‘வில்லிசையும் கணியான் கூத்தும்’ என்ற தலைப்பில் முத்து சண்முகம் கட்டுரை எழுதியுள்ளார்.
  • பொ.யு. 1987-ல் நாட்டுப்புற இயல் ஆய்வுக் கோவையில் அனந்தசயனம் ’இறைவழிபாட்டில் கணியான் ஆட்டம்’ எனும் தலைப்பில் கட்டுரை எழுதியுள்ளார்.
  • பொ.யு. 1988-ல் ஜெயலட்சுமி கணியான் கூத்து கலைகள், கலைஞர்கள் பற்றி எம்.ஃபில் ஆய்வேட்டை சமர்ப்பித்துள்ளார்.
  • மு. ராமசாமி நடத்திய விழிகள் இதழில் ’கணியான் கூத்தும் சாக்கையர் கூத்தும்’ என்ற கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.
  • மகுடாட்டக் கலையில் சமுதாயமும் பண்பாடும் (பொ.யு. 1990) என்ற தலைப்பில் கன்னிகா விசயசிம்மன் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டார்.
  • பொ.யு. 1993 ஆம் ஆண்டு நிகழ்ந்த தென்மாவட்டக் கிராமியக் கலைஞர்கள் மாநாட்டின்போது கணியான் கூத்து கலைஞர்களைப் பேட்டி கண்டு தமிழக இயலிசை நாடக மன்றத்திற்கு கணியான் சமூகம் பற்றிய ஒரு அறிக்கையையும் முனைவர். அ.கா. பெருமாள் சமர்ப்பித்துள்ளார்.


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.