being created

ஆ. சிவசுப்பிரமணியன்

From Tamil Wiki
ஆ.சிவசுப்ரமணியம்
ஆ.சிவசுப்ரமணியம்

ஆ.சிவசுப்பிரமணியன்.(பிறப்பு: ஏப்ரல் 9, 1943 ) தமிழகத்தின் குறிப்பிடத்தக்க பண்பாட்டு ஆய்வாளர் . தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு அசைவுகளை அவதானித்து ஆவணப்படுத்தியவர். தமிழகத்தின் பத்தொன்பதாம் நூற்றாண்டு வரலாற்றின் மீது வெளிச்சம் வீழ்த்திய முக்கியமான ஆய்வுநூல்களை எழுதியவர். நா. வானமாமலை அவர்களை முன்னோடியாகக் கொண்டு ,மார்க்ஸியச் சமூகவியல் நோக்கில் பெரும்பாலும் அடித்தளமக்களின் வரலாறாகவும், ஒடுக்குமுறையின் இயங்கியலை விளக்குவதாகவும் அவரது ஆய்வுகள் அமைந்தன.

பிறப்பு, கல்வி

ஆ. சிவசுப்பிரமணியன் நெல்லை மாவட்டம்(இன்றைய தூத்துக்குடி மாவட்டம்) ஓட்டப்பிடாரத்தில் ஏப்ரல் 9, 1943 அன்று பிறந்தார். பெற்றோர் பெயர் ஆழ்வாரப்பன், சுப்பம்மாள். தந்தையாரின் பணி நிமித்தம் இவரது இளமைக் காலமும் பள்ளிக் கல்வியும் ஓட்டப்பிடாரம், சென்னைச் சூளைமேடு, திருநெல்வேலி என்று தமிழகத்தின் பல ஊர்களில் அமைந்தது.

திருநெல்வேலி ம.தி.தா இந்துக்கல்லூரியில் புகுமுக வகுப்பு பயின்றார். 1963-1967 வரை நான்கு ஆண்டுகள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்துப், புலவர் பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

1967-ல் தூத்துக்குடியில் உள்ள வ.உ.சி. கல்லூரியில் தமிழ்த்துறையில் விரிவுரையாளராகப் பணியேற்று. ஏப்ரல்,2001 வரை பணியாற்றி ஓய்வு பெற்றார்.

ஆ.சிவசுப்ரமணியம் மனைவி பெயர் அருணா. ஆழ்வார், ராமலிங்கம் என இரு மகன்கள், சுப்பு என ஒரு மகள். ஆ.சிவசுப்ரமணியம் தூத்துக்குடியில் வசிக்கிறார்.

பேராசிரியர் அருணாசலக் கவுண்டர் (வையாபுரிப்பிள்ளையின் சிந்தனைப் பள்ளியைச் சேர்ந்தவர்), தொ.மு.சி.ரகுநாதன், பேராசிரியர் நா.வானமாமலை, ப.மாணிக்கம், தோழர் நல்லக்கண்ணு போன்ற ஆளுமைகளுடன் 17 வயதிலேயே இவருக்கு நட்பு ஏற்பட்டது. இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி ஆதரவாளர்.

இலக்கியப் பங்களிப்பு

ஆய்வுகள்

பெரும்பாலும் வாசிப்பதில் மட்டுமே ஆர்வம் கொண்டிருந்த தன்னை ஆய்வுக் கட்டுரைகளை எழுதத் தூண்டியது நா.வானமாமலை தான் என்று விகடனுக்கு அளித்த ஒரு பேட்டியில் நினைவு கூர்ந்திருக்கிறார். நா.வா அவர்களின் 'ஆராய்ச்சி' எனும் இதழுக்காக திருமண உறவுகள் தொடர்பாக, நாட்டார் பாடல்கள் என்ன சொல்கின்றன என்பதைப் பற்றி 'நாட்டுப்புறப் பாடல்களும் திருமண உறவுகளும்’ என்ற கட்டுரையை எழுதினார். நீண்ட கள ஆய்வு செய்துஅதே இதழுக்காக 'பரதவர்களின் வாசல்படி மறியல்’ என்ற கட்டுரையை எழுதினார். இவ்விரு கட்டுரைகளுக்குப் பிறகு தான் தனக்கு நிறைய தொடர்புகள் கிட்ட ஆரம்பித்தன என்றும் அப்பேட்டியில் நினைவு கூர்ந்திருக்கிறார்.

இவருடைய கட்டுரைகளும் நூல்களும் தமிழகத்தில் அறியப்படாமல் இருந்த வரலாற்றின் பக்கங்களை வெளிக்கொண்டு வந்தன. ஆஷ் கொலை குறித்தும், வ.உ.சிதம்பரனார். குறித்தும் இவர் எழுதியுள்ள ஆய்வுரைகள் தமிழ்நாட்டு அறிஞர்களால் பெரும் வரவேற்பைப் பெற்றவை. நெல்லை மாவட்டத்தின் கிராமப் புறங்களிலும் கடற்கரைப் பகுதிகளிலும் மக்களிடையே இருந்த வாய்மொழி வழக்காறுகளைத் தொகுத்து, தமிழகத்தின் மக்கள் வரலாறு எழுதுவதற்கு முன்னோடியாகச் செயல்பட்டார்.

நூல்கள்

ஆ.சிவசுப்பிரமணியனின் வ.உ.சியும் முதல் தொழிலாளர் வேலை நிறுத்தமும், பின்னி ஆலை வேலைநிறுத்தம் (இணையாசிரியர் ஆ.இரா. வேங்கடாசலபதி) ஆகிய இருநூல்களும் தமிழ்ச்சூழலில் தொழிலாளர் இயக்கம் உருவாகிவந்த சித்திரத்தை அளிப்பவை.

கிறித்தவமும் சாதியும் தமிழ்ச்சூழலில் அலைகளை உருவாக்கிய நூல். இந்தியாவுக்கு வந்த ஆரம்பகால கிறிஸ்தவம் இங்கே சாதியை ஒழிக்க முயலவில்லை, இங்கிருந்த சாதியமைப்புடன் சமரசமே செய்துகொண்டது என்று காட்டிய நூல். இங்கிருந்த கிறித்தவ ஆலயங்களில் சாதிகளை பிரித்து அமரச்செய்யும் சுவர்கள் கட்டப்பட்டிருந்தன, பல ஆலயங்களில் தலித்துக்கள் உள்ளே விடப்படவே இல்லை என்பதை சுட்டிக்காட்டியது.தொடர்ந்து வந்த கிறிஸ்தவமும் தமிழ்ச்சூழலும் இன்னொரு ஆழ்ந்த பார்வையை முன்வைத்தது

இலக்கிய இடம்

ஆ.சிவசுப்ரமணியனின் ஆய்வுமுறை மேலைநாட்டு நாட்டாரியல், சமூகவியல் ஆகிய அறிவுத்துறைகளின் முறைமைகளை ஒட்டியது. அந்த ஐரோப்பியவாதத்துடன் வானமாமலையிடமிருந்து பெற்றுக்கொண்ட மார்க்ஸிய கண்ணோட்டமும் இணைந்து அவருடைய பார்வை உருவானது.

மார்க்சிய செவ்வியலை (அரசு, கலை போன்ற மேற்கட்டுமானங்கள் உற்பத்தி, உழைப்பு, சுரண்டல் போன்ற கீழ்கட்டுமானங்களால் மட்டுமே உருப்பெற்றவை) தன் ஆய்வுகளின் அடிப்படையாகக் கொண்டிருந்தவர், பிற்காலத்தில் அதிலிருந்து சற்று விலகி சாதி போன்ற பண்பாட்டுக் காரணிகளின் தோற்றத்தை பொருளியல் அடிப்படையில் மட்டுமே ஆராய்வது முழுமையாக இருக்க முடியாது என்றும் கண்டு கொண்டிருக்கிறார்.

ஆய்வுகள் கோட்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டாலும், அவற்றை ஆய்வுமுடிவுகளை இறுக்கும் வேலியாக அனுமதிக்கக் கூடாது என்கிறார்.

வழக்காறுகளை வெறும் ஆய்வுப் பொருளாக மட்டும் பார்க்காமல், இந்த வழக்காற்றிற்கு யார் உரிமையாளர்களாக இருக்கிறார்களோ அவர்களின் வாழ்க்கையையும் வழக்காற்றையும் மேம்படுத்த முனைவதாக இருந்திருக்க வேண்டும். அதாவது பயன்பாட்டு வழக்காற்றியலாக (Applied Folklore) அமைந்திருக்க வேண்டும் என்பதையும் தொடர்ந்து வலியுறுத்துகிறார்.

"ஆ.சிவசுப்பிரமணியனின் அத்தனை தரவுகளும் நம்பகமானவை, அவருடைய முறைமை புறவயமானது. ஆகவே நம் காலகட்டத்தின் முக்கியமான சமூக – பண்பாட்டு ஆய்வாளர்களில் ஒருவர்" என்று ஜெயமோகன் குறிப்பிடுகிறார்.

விருதுகள்

விளக்கு விருது - 2018

படைப்புகள்

ஆய்வுநூல்கள்

  • பொற்காலங்கள் – ஒரு மார்க்சிய ஆய்வு (1981)
  • அடிமை முறையும் தமிழகமும் (1984)
  • வ.உ.சியும் முதல் தொழிலாளர் வேலை நிறுத்தமும் (1986,2012)
  • ஆஷ் கொலையும் இந்தியப் புரட்சி இயக்கமும் (1986, 2009)
  • மந்திரமும் சடங்குகளும் (1988,1999,2010,2013)
  • பின்னி ஆலை வேலைநிறுத்தம் (1921,1990) (இணையாசிரியர் ஆ.இரா. வேங்கடாசலபதி)
  • எந்தப் பாதை (2000)
  • வ.உ.சி. ஓர் அறிமுகம் (2001)
  • கிறித்தவமும் சாதியும் (2001,2001,2003,2006,2011)
  • தமிழ் அச்சுத்தந்தை அண்டிரிக் அடிகளார் (2003)
  • தமிழகத்தில் அடிமை முறை (2005,2007, 2010,2012)
  • நாட்டார் வழக்காற்றியல் அரசியல் (2006)
  • பஞ்சமனா பஞ்சயனா (2006)
  • தோணி (2007)
  • கிறிஸ்தவமும் தமிழ்ச்சூழலும் (2007,2012)
  • கோபுரத் தற்கொலைகள் (2007)
  • வரலாறும் வழக்காறும் (2008,2010)
  • ஆகஸ்ட் போராட்டம் (2008)
  • வரலாற்றுப் பொருள்முதல்வாதம்-ஓர் அரிச்சுவடி (2008)
  • உப்பிட்டவரை…(2009)
  • இனவரைவியலும் தமிழ் நாவல்களும் (2009)
  • பண்பாட்டுப் போராளி- நா.வானமாமலை (2010)
  • படித்துப் பாருங்களேன்….(2014)
  • பனை மரமே! பனை மரமே! (2016)

சேகரித்து பதிப்பித்த நூல்கள்

  • பூச்சியம்மன் வில்லுப்பாட்டு (1989, 2013)
  • தமிழக நாட்டுப்புறப் பாடல்களஞ்சியம் (தொகுதி 10) (2003)
  • தமிழக நாட்டுப்புறக் கதைக்களஞ்சியம் (தொகுதி10) (2004)
  • உபதேசியார் சவரிராய பிள்ளை 1801 -1874 (2006)
  • கல்லறை வாசகப்பா – கூத்து நாடகம் (2007)
  • பெரியநாயகம் பிள்ளை தன்வரலாறு (2008)

குறுநூல்கள்

  • எந்தப் பாதை (1992)
  • தர்காக்களும் இந்து இஸ்லாமிய ஒற்றுமையும் (1997)
  • பிள்ளையார் அரசியல் (2000)
  • பண்பாட்டு அடையாளப் போராட்டங்கள் (2014)
  • மதமாற்றத்தின் மறுபக்கம் (2002)
  • விலங்கு உயிர்ப்பலி தடைச் சட்டத்தின் அரசியல் (2003)
  • புதுச்சேரி தந்த நாட்குறிப்புகள் (2006)
  • இஸ்லாமியர் குறித்த வரலாற்றுத் திரிபுகள் (2012)
  • தமிழ்ச்சமூகத்தில் சீர்திருத்தச் சிந்தனைகல் (2012)
  • இந்தியாவில் சாதிமுறை அம்பேத்கரும் காந்தியும் (2014)
  • அம்பேத்கரும் மனுஸ்மிருதியும் (2014)

உசாத்துணை



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.