under review

இன்னிலை: Difference between revisions

From Tamil Wiki
(Stage updated)
Line 99: Line 99:
{{Finalised}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:போலி நூல்கள்]]

Revision as of 17:36, 24 December 2022

இன்னிலை - வ.உ.சிதம்பரம் பிள்ளை உரை

இன்னிலை (1917) பதினெண் கணக்கு நூல்கள் பற்றிய பாடலில் இடம்பெறும் நூல் இன்னிலை. இதனை இயற்றியவர் பொய்கையார். இன்னிலை என்பதற்கு இனிமையாகிய நிலை என்பது பொருள். இது ஓர் அற நூலாகும். தனக்கு கிடைத்த சுவடியில் இருந்து இந்நூலை வ.உ.சிதம்பரம் பிள்ளை உரையெழுதி பதிப்பித்தார். பின்னர் இது ஒரு போலியான நூல் என்று நிறுவப்பட்டது.

பதிப்பு வரலாறு

இன்னிலையை 1917 ல் வ.உ.சிதம்பரம் பிள்ளை உரை எழுதிப் பதிப்பித்தார். புரவலரான பெத்தாச்சிச் செட்டியாருக்கு நூலை உரிமையாக்கியிருந்தார். பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரும், முதல் திருவந்தாதியை இயற்றியவருமான பொய்கை ஆழ்வாரே இதனை இயற்றியவர் என்பது வ.உ.சிதம்பரம் பிள்ளையின் கருத்து. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றே இன்னிலை என்பதும் சிதம்பரம் பிள்ளையின் கருத்தாக இருந்தது.

இயல் பகுப்பு

இன்னிலையை 'மதுரையாசிரியர்' தொகுத்துள்ளார். பாரதம் பாடிய பெருந்தேவனார் கடவுள் வாழ்த்துப் பாடியுள்ளார்.

இன்னிலை அறம், பொருள், இன்பம், வீடு என்று நான்கு பகுதிகளாக வகுக்கப்பட்டுள்ளது. வீட்டுப்பால், இல்லியல், துறவியல் என இரண்டு இயல்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. அறத்துப்பால் பத்து வெண்பாக்களையும் பொருட்பால் ஒன்பது வெண்பாக்களையும், இன்பத்துப்பால் பனிரெண்டு வெண்பாக்களையும், வீட்டுப்பால் பதினான்கு வெண்பாக்களையும் (இல்லியல், எட்டு வெண்பாக்கள்; துறவியல், ஆறு வெண்பாக்கள்) என மொத்தம் 45 செய்யுள்கள் இன்னிலையில் உள்ளன.

இன்னிலை சில பாடல்களும் விளக்கங்களும்

அம்மை இழைத்த தலைப்பட்டு அழிவாயா

இம்மையும் கொண்டுறுத்தும் ஈர்ம் பெயலாம் - மும்மை

உணர்ந்தால் திருவத்தர் ஓரார் உழண்டைத்

தளைப்படுவர் தட்பம் தெறார் (பாடல் - 6)

விளக்கம் : முற்பிறப்பிற் செய்த வினைகள் அப்பிறப்பிலேயே அவனைச் சென்றடையும். அடுத்த பிறவியிலும் அது தொடரும். இப்பிறப்பிற் செய்யும் வினைப்பயனை இனி வரும் பிறப்பில் அடையவேண்டும். இவற்றை உணராதவர் துன்பத்தில் ஆட்படுவார். பாசங்களைக் களைய மாட்டார்.


குருட்டுஆயன் நீள்கானம் கோடல் சிவணத்

தெருட்டுஆயம் காலத்தால் சேரான் - பொருட்டாகான்

நல்லறமும் பேணான் நாரம்இவர்த் தானாம்

பொல்லாங்கு உறைவிடாமாம் புல் (பாடல் - 15)


விளக்கம் : இளமைப்பருவத்திலேயே செல்வத்தைச் சேர்க்க வேண்டும். அவ்வாறு அல்லாமல் இளமையில் செல்வத்தைச் சேர்க்காமல் இருப்பது பார்வையற்றவர் ஆடு மேய்த்ததைப் போன்றதாகும். அவன் யாராலும் மதிக்கப்பட மாட்டான். நல்லறங்களும் அவனால் செய்ய இயலாது. பொல்லாங்கிற்கு உடையவனாக அவன் ஆவான்.


முப்பொருள் உண்மை தெளிவான் அருஞ்சீலன்

முப்பொருள் உண்மை உடையான் அருமுனிவன்

முப்பொருள் உண்மை மடுப்பான் இறையாங்கு

முப்பொருள் உண்மைக்கு இறை (பாடல் - 16)

விளக்கம் : அறம் பொருள் இன்பம் என்ற மூன்று பொருள்களின் இயல்பை அறிந்து தெளிந்தவன் நல்லொழுக்கமுடையவன்;

அவற்றை அறிந்தவன் முனிவன்;

அவற்றை மக்களுக்குச் சொல்லி வழிநடத்துபவன் குரு;

இம்மூன்று பொருள்களும் மெய்ப் பொருளுக்கு உறைவிடமாகும்.


எய்ப்பில்லைப் பாக வருவாயில் ஐந்தொன்றை

மெய்ப்பிணி சேய்வரைவில் கூட்டிடுக - கைப்பொருள்வாய்

இட்டில்உய் வாய்இடுக்க ஈங்க விழையற்க

வட்டல் மனைக்கிழவன் மாண்பு. (பாடல் - 34)

விளக்கம் : குடும்பத் தலைவன் உரிய வழியில் செல்வத்தைச் சேர்க்க வேண்டும்;

வருவாய் குறைந்தால் செலவைக் குறைத்து வாழ வேண்டும்;

ஐந்தில் ஒரு பங்கைச் சேமிப்பாக வைத்திருக்க வேண்டும்;

அப்பொருள் மக்களுக்கும் தன் முதுமைப் பருவத்திற்கும் நோய்க்கும் உதவியாக இருக்கும்.


ஐங்குரவர் ஓம்பல் இனன்நீக்கல் சேர்ந்தோர்க்குப்

பைங்கூழ் களைகணாப் பார்த்தளித்தல் நையுளத்தர்க்கு

உற்ற பரிவுஈர்த்தல் எண்ணான்கு அறநெறியில்

உற்ற புரிதல் கடன் (பாடல் - 37)

விளக்கம் : இல்வாழ்க்கையில் உள்ளவர்கள் தம்முன்னோர்கள், தம் குரு, தாய், தந்தை, தம் சுற்றத்தார் ஆகியோருக்கு உரிய கடமைகளைச் செய்து காக்க வேண்டும்.

இன்னிலை மூலம் அறிய வரும் பிற செய்திகள்

  • கண்ணன் அர்ஜூனனுக்குக் கீதையை உபதேசித்தது;
  • அதனைக் கேட்ட பேய் ஒன்று தனது பேய்த் தன்மை நீங்கி உயர்வு பெற்றது;
  • நற்செயல்களைச் செய்ய வேண்டும் என்ற அறவுரை;
  • உடம்பில் உயிர் நின்று வினை செய்யச் செய்ய மேன்மேலும் பிறப்பு வளரும் என்ற தகவல்;
  • செல்வத்தைச் சேர்ப்பது முக்கியம் என்னும் அறிவுரை;
  • செல்வத்திற்குத் தக்கவாறு செலவழிக்க வேண்டும் என்ற ஆலோசனை;
  • அளவுகடந்து செலவழித்தல் கூடாது என்ற எச்சரிக்கை;
  • பெரியோரின் அறவுரையைக் கேட்டு வாழ்தல் வேண்டும் என்ற ஆலோசனை;
  • வீட்டிற்கு மக்களும், நிலத்திற்கு உழவரும், கண்களுக்குச் சூரியனும், போருக்கு வீரரும், பெண்ணுக்கு மடமையும், இல்வாழ்வாருக்குப் பயிர்த்தொழிலும் சிறப்பைத் தரும் என்பது;
  • பரம்பொருளை உணர்ந்து வாழ்பவர்களுக்கு முக்தி கிடைக்கும் என்ற உறுதி;

- எனப் பல செய்திகள் இன்னிலையில் உள்ளன.

வரலாற்றுப் பின்புலம்

இன்னிலைக்கு உரை எழுதிய சங்குப்புலவர், தனது ஆய்வு முன்னுரையில் "உரையாசிரியர்களில் இன்னார், இந்நூற்கவிகளை மேற்கோள் காட்டி, இன்னிலையில் உள்ளது என்று குறிப்புக் காட்டியுள்ளனர் என்பதற்கு ஆதாரம் ஒன்றுமின்று. வ. உ. சி அவர்களும் சான்று காட்டினாரல்லர். உரையாசிரியர் சிலர் மேற்கோளாக இன்னிலையிலுள்ள கவிகளை எடுத்தாண்டனர் என்று வ. உ. சி. அவர்கள் கூறியதை ஆராய்ந்தால் வியப்பு விளைகின்றது. தொல்காப்பியம், பொருளதிகாரம், களவியல், 23-ஆம் சூத்திரம் இளம்பூரணருரை, கற்பியல், 5-ஆம் சூத்திரவுரை 12-ஆம் சூத்திரவுரை ஆகிய இடங்களைச் சுட்டி இன்னிலை நூலில் 2, 37, 29, 32, 35 எண்ணுடைய ஐந்து பாடல்களும் வந்துள்ளன என விளக்கினர். இளம்பூரணத்தை நோக்க அவற்றுள் ஒன்றேனும் வந்திலது. முந்தின பதிப்புக்களில் இருந்து பின்னர் அவை விடுபட்டனவோ என ஐயுறும் நிலையிலுள்ளது. தொல்காப்பியம் செய்யுளியல் 113-ஆம் சூத்திரம் பேராசிரியருரையில் அவர்கள் கூறியவாறே இன்னிலை 5-ஆம் செய்யுள் மேற்கோளாக வந்துள்ளது. யாப்பருங்கலவிருத்தி யுரையாசிரியரும் இன்னிலை 2-ஆம் செய்யுளை மேற்கோளாகக் காட்டியுள்ளார். ஆயினும் அக்கவிகள் இன்னிலை என்ற நூற்கவிகள் தாம் என்பதற்குச் சான்று தோன்றும்வகை ஆங்கில்லை. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாக இன்னிலை வந்த வழி இந்த வழி என்றுணர்க." [1] என்று குறித்துள்ளார்.

பொய்நூல்

"திருநெல்வேலியைச் சேர்ந்த சொர்ணம் பிள்ளை என்பவர் 'இன்னிலை' என்ற பேரில் ஒரு நூலின் ஏட்டை வ.உ.சி.யிடம் கொடுத்து இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று எனக் கூறி வ.உ.சி.யிடம் கணிசமாக பணமும் பெற்றிருக்கிறார். பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் இன்னிலையையும் சேர்த்து அதை பதிப்பித்தார் வ.உ.சி. இப்பதிப்பு போலியானது, தவறானது என மயிலை சீனி. வேங்கடசாமி, மு. அருணாசலம் ஆகியோர் எழுதிய பின்பு வ.உ.சி.யின் பதிப்பு தவறானது என்று தெரிந்தது. 1931-ல் அனந்தராம ஐயர் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று 'கைந்நிலை' என பதிப்பித்த பின்னர் வ.உ.சி. மனம் நொந்திருக்கிறார். இதை வையாபுரிப்பிள்ளையும் கு. அருணாசலக் கவுண்டரும் பதிவு செய்துள்ளனர்" என்று அ.கா. பெருமாள் குறிப்பிடுகிறார். [2] இதற்குப்பின் கூத்தநூல் இதேபோல பொய்நூல் என கண்டறியப்பட்டது.

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page