சி.மணி: Difference between revisions
No edit summary |
(changed template text) |
||
Line 61: | Line 61: | ||
== குறிப்புகள் == | == குறிப்புகள் == | ||
<references /> | <references /> | ||
{{ | {{Finalised}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:Spc]] | [[Category:Spc]] |
Revision as of 13:33, 15 November 2022
To read the article in English: C. Mani.
சி.மணி (1936 - 2009) தமிழில் புதுக்கவிதைகளும் கவிதை பற்றிய கட்டுரைகளும் எழுதிய கவிஞர். நவீனத் தமிழ்க்கவிதையின் முன்னோடிகளில் ஒருவராக கருதப்படுகிறார். எழுத்து இதழில் இருந்து எழுதத் தொடங்கிய சி.மணி பின்னர் நடை என்னும் சிற்றிதழையும் நடத்தினார்.
பிறப்பு, கல்வி
சி.மணியின் இயற்பெயர் சி.பழனிச்சாமி. 1936-ல் சேலத்தில் பிறந்தார்.
தனிவாழ்க்கை
சி.மணி ஆங்கிலப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். சி.மணி மதம்சாரா ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார். ஹோமியோபதி மருத்துவத்தில் பட்டம்பெற்றிருந்தார் என்றும், சோதிடத்தில் ஆர்வம் கொண்டவர், தன்னுடன் வாசன் பஞ்சாங்கத்தை வைத்திருப்பார் என்றும் சாகிப் கிரான் குறிப்பிடுகிறார்.
இலக்கிய வாழ்க்கை
கவிஞர் சி. மணி டி.எஸ். எலியடின் சிந்தனைகளால் பெரிதும் கவரப்பட்டார். 1959-ல் எழுத்து சிற்றிதழ் தொடங்கப்பட்டு புதுக்கவிதை கருதுகோள்கள் பேசப்பட்டபோது சி.மணி அதில் தீவிரமாக ஈடுபட்டார். சி.பழனிச்சாமி என்னும் பெயரிலும் அதில் அவருடைய கவிதைகள் பிரசுரமாகியிருக்கின்றன. சி.மணி என்ற பெயரில் வெளியான குகை என்னும் கவிதை கவனிக்கப்பட்டது. தொடர்ச்சியாக கவிதைகள் எழுதிய சி.மணி டி.எஸ்.எலியட்டின் The Waste Land[1] என்னும் நீள்கவிதையின் பாதிப்பில் 1962-ல் எழுத்து இதழில் நரகம் என்னும் நீள்கவிதையை எழுதினார். தமிழில் ஒரு சாதனை என எழுத்து இதழ் அதை குறிப்பிட்டது. தானே நடத்திய நடை இதழில் யாப்பும் கவிதையும் என்னும் தலைப்பில் விரிவாக நவீனக் கவிதையின் யாப்புமுறை பற்றியும் மரபுக்கும் அதற்குமான உறவு பற்றியும் எழுதினார்.
இதழியல்
சி.மணி நண்பர்களுடன் இணைந்து நடை என்னும் சிற்றிதழை சேலத்தில் இருந்து 1968-1969-ல் நடத்தினார்.
விருதுகள்
- மு.கருணாநிதி பொற்கிழி விருது
- மொழிபெயர்ப்புக்கான தமிழ்ப்பல்கலைக்கழகப் பரிசு 1983, 1985
- ஆசான் கவிதை விருது
- கவிஞர் சிற்பி விருது
- "விளக்கு" இலக்கிய விருது 2002
மறைவு
சி.மணி 05-ஏப்ரல்-2009 அன்று காலமானார்.
இலக்கிய இடம்
தமிழ்ப் புதுக்கவிதை இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர் சி.மணி.யாப்பிலிருந்து கவிதை உரைநடை நோக்கி நகர்ந்த காலப் பகுதியில் அதிகம் எழுதியவர். புதுவடிவத்தை நிலைநிறுத்தும் வகையில் கோட்பாட்டுப் பின்னணியை உருவாக்க விரும்பிய ந. பிச்சமூர்த்தி , க.நா.சுப்ரமணியம், சி.சு. செல்லப்பா ஆகியோருடன் கவிதையியல் பற்றி விவாதித்தவர்.'யாப்பும் கவிதையும்' என்ற மணியின் நூல்தான் புதுக்கவிதை பற்றிய முதலாவது ஆய்வு நூல். யாப்பிலிருந்து விடுப்பட்டதுதான் புதுக்கவிதை என்று நிறுவினாலும் அதில் மரபின் தொடர்ச்சியைக் காணமுடியும் என்று ருசுப்படுத்தியவரும் அவர்தான். அதை வெறும் கருத்தாக்கமாக மட்டுமல்லாமல் படைப்பின் ஆதாரத்துடனும் முன்வைத்தார். அவரைத் தவிர்த்த முன்னோடிகள் பலரும் உரைநடை சார்ந்த மொழியைக் கவிதைக்குப் பயன்படுத்தியபோது செய்யுளின் நடையை மறுவார்ப்புச் செய்தவர் சி.மணி என்று சுகுமாரன் குறிப்பிடுகிறார்.
சி.மணி மொழிபெயர்ப்பாளராகவும் முக்கியமானவர். இந்திய தத்துவ இயலிலும், மேற்கத்திய மதம்சாரா ஆன்மிகத்திலும் ஈடுபாடுகொண்டவர். தாவோ தே ஜிங் அவருடைய குறிப்பிடத்தக்க மொழியாக்கம்.
நூல்கள்
கவிதை
- வரும் போகும்
- ஒளிச் சேர்க்கை
- இதுவரை
- நகரம்
- பச்சையின்நிலவுப் பெண்
- நாட்டியக்காளை
- உயர்குடி
- அலைவு
- குகை
- தீர்வு
- முகமூடி
- பழக்கம்
- பாரி
கவிதையியல்
- யாப்பும் கவிதையும்
மொழிபெயர்ப்பு
- பௌத்தம்
- தோண்டுகிணறும் அமைப்பும்
- தாவோ தே ஜிங்
உசாத்துணை
- எழுத்தும் நடையும் - சி.மணி, கால சுப்பிரமணியம் - மணல்வீடு | panuval.com
- writermaanee: சி.மணி
- சி.மணி பற்றி சிறகு இதழ்
- பிரமிள்: சி.மணி கவிதைகள்
- கவிஞர் சி.மணி :அஞ்சலி | எழுத்தாளர் ஜெயமோகன்
- கவிதை மீதொரு உரையாடல்: சி.மணி - யார் அந்த மனிதன்? | கவிதை மீதொரு உரையாடல்: சி.மணி - யார் அந்த மனிதன்? - hindutamil.in
- சி.மணி வெங்கட் சாமிநாதன்
- சி. மணி பற்றிய சில கனிந்த நினைவுகள், வைதீஸ்வரன், திண்ணை.காம், 2004
- சி.மணி- சாகிப் கிரான் வனம் இதழ்
குறிப்புகள்
✅Finalised Page