under review

குமுதம்: Difference between revisions

From Tamil Wiki
 
Line 59: Line 59:


2010-ல் ஜவஹர் பழனியப்பன் பி.வரதராஜன் மீது குமுதம் நிறுவன நிதி மற்றும் பங்குகளில் மோசடி செய்து நிறுவனத்தைக் கைப்பற்றிக்கொண்டதாக காவல்துறையில் புகார் கொடுத்தார். அமெரிக்க பிரஜையான ஜவஹர் பழனியப்பன் குமுதம் பங்குகளை வைத்திருக்க முடியாது என பி.வரதராஜன் வாதாடினார். வழக்கு பல படிகளாக நீண்டது. இறுதியாக 2020 ஜூன் மாதம் ஜவஹர் பழனியப்பனுக்கே குமுதம் நிர்வாகம் சொந்தம் என்று தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது<ref>[https://www.hindutamil.in/news/tamilnadu/557779-kumudham-again-goes-to-jawahar-palaniyappan-2.html மீண்டும் ஜவஹர் பழனியப்பன் பொறுப்புக்கு செல்கிறது குமுதம் நிர்வாகம்: தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயம் தீர்ப்பு | kumudham again goes to jawahar palaniyappan - hindutamil.in]</ref>.  
2010-ல் ஜவஹர் பழனியப்பன் பி.வரதராஜன் மீது குமுதம் நிறுவன நிதி மற்றும் பங்குகளில் மோசடி செய்து நிறுவனத்தைக் கைப்பற்றிக்கொண்டதாக காவல்துறையில் புகார் கொடுத்தார். அமெரிக்க பிரஜையான ஜவஹர் பழனியப்பன் குமுதம் பங்குகளை வைத்திருக்க முடியாது என பி.வரதராஜன் வாதாடினார். வழக்கு பல படிகளாக நீண்டது. இறுதியாக 2020 ஜூன் மாதம் ஜவஹர் பழனியப்பனுக்கே குமுதம் நிர்வாகம் சொந்தம் என்று தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது<ref>[https://www.hindutamil.in/news/tamilnadu/557779-kumudham-again-goes-to-jawahar-palaniyappan-2.html மீண்டும் ஜவஹர் பழனியப்பன் பொறுப்புக்கு செல்கிறது குமுதம் நிர்வாகம்: தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயம் தீர்ப்பு | kumudham again goes to jawahar palaniyappan - hindutamil.in]</ref>.  
== மதிப்பீடு ==
குமுதம் முதன்மையாக ஒரு பொதுவாசிப்புக்குரிய கேளிக்கை இதழ். ஜெயகாந்தன், அசோகமித்திரன் போன்ற தமிழ் நவீனப்படைப்பாளிகளும்; கிருபானந்த வாரியார், கண்ணதாசன் போன்ற மரபிலக்கியவாதிகளும் அதில் எழுதினாலும்கூட அடிப்படையில் அது பொழுதுபோக்கு வாசிப்புக்கே முதன்மையிடம் அளித்தது. நகர்ப்புறத்தன்மைகொண்டதாகவும், சமகால உலக பொதுரசனைக்கூறுகளை கொண்டுவந்து சேர்ப்பதாகவும் அது செயல்பட்டது. சினிமா மற்றும் தொடர்கதைகள் ஆகியவற்றையே  அது சார்ந்திருந்தது.
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
*[https://www.kumudam.com/ முகப்பு - குமுதம் செய்தி தமிழ்]
*[https://www.kumudam.com/ முகப்பு - குமுதம் செய்தி தமிழ்]

Latest revision as of 10:29, 16 July 2026

குமுதம் முதல் இதழ்

To read the article in English: Kumudam (Magazine). ‎

குமுதம்
குமுதம் முத்திரை

குமுதம் (1947-) தமிழில் வெளிவரும் பல்சுவை வார இதழ். சென்னையில் இருந்து வெளிவருகிறது. வெவ்வேறு துணை இதழ்களை வெளியிடுவதன் வழியாகவும், இணைய இதழ்களின் வழியாகவும் தமிழின் முதன்மையான செய்தி -கேளிக்கை ஊடகங்களில் ஒன்றாக குமுதம் உள்ளது. பெரும்பாலும் பொதுவாசிப்புக்குரிய செய்திகள், கட்டுரைகள், கதைகளை வெளியிடும் இதழ்.

வரலாறு

குமுதம் இதழ் 1947-ம் ஆண்டு எஸ்.ஏ.பி.அண்ணாமலையால் டாக்டர் ஆர்.எம்.அழகப்பச் செட்டியாரை கௌரவ ஆசிரியராகக் கொண்டு தொடங்கப்பட்டது. அமெரிக்க பொழுதுபோக்கு இதழ்களான Life மற்றும் Look இதழ்களை முன்னுதாரணமாகக் கொண்டு இது வெளியிடப்பட்டது.

முப்பதாண்டுகளில் இந்தியாவில் விற்கப்படும் வார இதழ்களில் மூன்றாவது இடத்தில் ( மலையாள மனோரமா, ராணி வாராந்தரிக்கு அடுத்ததாக) ஆறு லட்சம் பிரதிகள் விற்றது. எஸ்.ஏ.பி அண்ணாமலை அதன் பொறுப்பாசிரியராகவும் பி.வி.வரதராஜன் வெளியீட்டாளராகவும் திகழ்ந்தனர். குமுதம் இதழ் லிமிட்டட் கம்பெனியாக ஆனபோது நூறு சத பங்குகளும் எஸ்.ஏ.பி.அண்ணாமலை மற்றும் அவர் மனைவி கோதை ஆச்சி ஆகியோருக்கு உரிமையானதாக இருந்தது.

துணை இதழ்கள்

எஸ்.ஏ.பி.அண்ணாமலை

குமுதம் இதழின் நிர்வாகப்பொறுப்பில் இருந்து தமிழ்வாணன் ஆசிரியராக இருந்த கல்கண்டு வெளிவந்தது. பின்னர் வெவ்வேறு இதழ்கள் வெளிவந்தன.

ஆசிரியர்கள்

ரா.கி.ரங்கராஜன், ஜ.ரா.சுந்தரேசன், புனிதன்
குமுதம் அண்மைக்கால இதழ்

குமுதம் இதழின் பொறுப்பாசிரியராக இருந்த எஸ்.ஏ.பி.அண்ணாமலை எழுத்தாளர். அவருடன் ரா.கி.ரங்கராஜன், ஜ.ரா.சுந்தரேசன், புனிதன் ஆகியோரும் ஆசிரியர் குழுவில் உறுப்பினர்களாக இருந்தனர். குமுதம் இதழின் வெற்றிக்கு அவர்களே காரணம் என்று கூறப்படுகிறது. அவர்கள் மூவரும் வெவ்வேறு பெயர்களில் குமுதம் இதழில் எழுதினார்கள். குமுதம் இதழில் பின்னர் சுஜாதா, மாலன், பிரியா கல்யாணராமன் போன்றவர்கள் ஆசிரியப்பொறுப்பில் இருந்தனர்.

இதழின் தனித்தன்மைகள்

குமுதம் இதழ் விற்பனையில் வெற்றியடைந்தமைக்கு காரணங்கள் பல சொல்லப்படுகின்றன.

  • அன்று புகழ்பெற்றிருந்த இதழ்களான கலைமகள், கல்கி, ஆனந்த விகடன் ஆகியவை பிராமணப் பண்பாட்டை முதன்மையாக முன்வைத்தவை. வாசகர்களும் எழுதுபவர்களும் முதன்மையாக பிராமணர்கள் என்பதே காரணம். குமுதம், பிராமணர்கள் எழுதினாலும்கூட பிராமணப் பண்பாட்டுச் சாயலே இல்லாமல் நடத்தப்பட்டது. ஆகவே இந்திய சுதந்திரத்திற்கு பின் கல்வி கற்று மேலெழுந்து வந்த பிராமணரல்லாத சமூகங்களின் ஆதரவை அது பெற்றது.
  • கலைமகள், ஆனந்தவிகடன், கல்கி ஆகியவை குடும்பப் பத்திரிகை என்னும் இலக்கணத்திற்குள் நின்று பாலியல் சார்ந்த எழுத்துக்களை மட்டுப்படுத்தின. குமுதம் தொடர்ச்சியாக அன்றைய பாலியல் வெளிப்பாட்டு எல்லையை மென்மையாக மீறிக்கொண்டே இருந்தது. ஆகவே இளையவாசகர்களை ஈர்த்தது.
  • குமுதம் எதிர்வினைகள் வழியாக தன்னை உருவாக்கிக் கொண்டது. ஆகவே அது சினிமாவை மிக நெருக்கமாகவே தொடர்ந்தது. சினிமாச்செய்திகளுடன் சினிமாவை பயன்படுத்தியே மற்ற அனைத்தையும் முன்வைப்பது என்னும் பாணியை மேற்கொண்டது. (உதாரணமாக காஞ்சி மடாதிபதியான சந்திரசேகர சரஸ்வதி பிடியரிசி திட்டம் ஒன்றை அறிவித்தபோது அச்செய்தியை அன்றைய நட்சத்திரமான சௌகார் ஜானகி பிடியரிசி போடும் படத்துடன் வெளியிட்டது)

குமுதம் தொடர்கதைகள்

குமுதம் கல்கிக்குப் பின் மிக வெற்றிகரமாக தொடர்கதைகளை பயன்படுத்திக்கொண்ட வார இதழ்.

  • சாண்டில்யன் குமுதத்தில் கன்னிமாடம் என்னும் தொடர்கதையை எழுதினார். அதன்பின் மன்னன் மகள் வெளிவந்து பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து கடல்புறா,யவனராணி, ராஜமுத்திரை, ராஜதிலகம், ஜலதீபம், ராஜ பேரிகை என நீளமான தொடர்கதைகள் குமுதத்தில் வெளிவந்தன. அவை பெரிய வாசகர் எண்ணிக்கையை குமுதத்திற்கு கொண்டுவந்தன.
  • ரா.கி.ரங்கராஜன் ஹென்றி ஷாரியரின் பாப்பில்யான் நாவலை மொழியாக்கம் செய்து குமுதத்தில் பட்டாம்பூச்சி என்னும் பெயரில் வெளியிட்டார். குமுதத்தில் மிக விரும்பப்பட்ட தொடர்களில் அது ஒன்று
  • மு. கருணாநிதி குமுதம் இதழில் எழுதிய ரோமாபுரிப் பாண்டியன் குமுதத்தின் புகழ்பெற்ற தொடர்
  • பி.வி.ஆர் குமுதத்தின் முக்கியமான தொடர்கதையாசிரியராகத் திகழ்ந்தார். அவர் உண்மையான சூழல்களை களமாகக்கொண்டு எழுதிய 'கூந்தலிலே ஒரு மலர்' 'கிண்டி ஹோல்டான்' 'மிலாட்' போன்ற கதைகள் புகழ்பெற்றவை.
  • சுஜாதா 1968, ஆகஸ்ட் மாதம் நைலான் கயிறு என்னும் நாவல் வழியாக குமுதத்தில் அறிமுகமானார். அனிதா இளம் மனைவி புகழ்பெற்ற இரண்டாவது தொடர்கதை. தொடர்ந்து குமுதத்தில் துப்பறியும் கதைகளை எழுதினார். அவை பெரும் வாசகர் வரவேற்பைப் பெற்றன.

குமுதம் கேலிச்சித்திரங்கள், கதைமாந்தர்

குமுதம் இதழின் புகழ்பெற்ற கேலிச்சித்திரக் கதைமாந்தர் அப்புசாமி- சீதாப்பாட்டி .இந்த கதாபாத்திரங்களை ஜ.ரா.சுந்தரேசன் பாக்கியம் ராமசாமி என்ற பெயரில் எழுதினார். ஜெயராஜ் ஓவியங்கள் வரைந்தார். படக்கதை வடிவிலும், தொடர்கதை வடிவிலும், கேலிப்பட வடிவிலும் இக்கதாபாத்திரங்கள் தொடர்ச்சியாக வெளியாயின.

குமுதம் 1959

குமுதம் பத்திகள்

குமுதத்தின் பத்திகள் புகழ்பெற்றவை. அவற்றில் குறிப்பிடத்தக்கவை

குமுதம் ஆசிரியர் குழுவால் எழுதப்பட்ட பத்திகள்
  • லைட்ஸ் ஆன் - வினோத் (ரா.கி.ரங்கராஜன் எழுதிய சினிமாச்செய்திகள்)
  • அரசு பதில்கள் - எஸ்.ஏ.பி. எழுதிய கேள்வி-பதில்கள்
  • கிசுகிசு (சினிமா குறித்த ரகசியச் செய்திகள்)
விருந்தினர்களால் எழுதப்பட்டவை
  • வாரியார் விருந்து
  • திரும்பிப்பார்க்கிறேன் - ஜெயகாந்தன
குமுதம் பிற்கால அணி. பாலகுமாரன், சுஜாதா, மாலன்

விவாதங்கள்

குமுதம் இதழ் பலவகையான விவாதங்களை தொடர்ச்சியாக உருவாக்கிக் கொண்டிருந்தது. நடிகர்கள் அரசியல்வாதிகள் பற்றிய செய்திகள் சார்ந்து விவாதங்கள் உருவாயின.

சுஜாதா 1980-ல் குமுதம் இதழில் சிப்பாய் கலவரத்தின் பின்னணியில் 'சிவப்பு கறுப்பு வெளுப்பு' என்னும் தலைப்பில் ஒரு தொடர்கதையை எழுதியபோது அதில் நாடார் சாதியினர் பற்றி இழிவாக எழுதப்பட்டுள்ளது என்று கருதிய சாதிச்சங்கங்களின் வன்முறை நிறைந்த எதிர்ப்பு. சுஜாதா மன்னிப்பு கோரினார். தொடர் நிறுத்தப்பட்டது. பின்னர் சுஜாதா சாதி குறிப்புகள் இல்லாமல் 'ரத்தம் ஒரே நிறம்' என்ற பெயரில் அந்நாவலை எழுதினார்.

உரிமைப்பூசல்

குமுதம் எஸ்.ஏ.பி அண்ணாமலையின் முதலீட்டில் தொடங்கப்பட்டது. அது லிமிட்டட் கம்பெனியாக நடைபெற்றது. நிர்வாக இயக்குனர் எஸ்.ஏ.பி. அண்ணாமலையும், அவரது மனைவி கோதை ஆச்சியும் 100 சதவீத பங்குதாரர்களாக இருந்தனர். இந்த நிறுவனத்தின் வெளியீட்டாளராகவும் செயலாளராகவும் பி.வி. பார்த்தசாரதி இருந்தார்.

1994-ம் ஆண்டு எஸ்.ஏ.பி. அண்ணாமலை காலமானபோது தந்தையின் பங்குகள் அவர் மகன் ஜவஹர் பழனியப்பன் பெயருக்குச் சென்றன. கோதை ஆச்சி நிர்வாக இயக்குனரானார். பி.வி. பார்த்தசாரதியும் அவரது மகன் பி.வரதராஜனும் நிறுவனத்தின் அன்றாடப் பணிகளை கவனித்து வந்தனர். மறைந்த எஸ்.ஏ.பி அண்ணாமலையின் விருப்பப்படி அவர்களுக்கு 33.39 சதவீத பங்குகள் கொடுக்கப்பட்டன. எஸ்.ஏ.பி. அண்ணாமலையும், பார்த்தசாரதியும் நெருங்கிய நண்பர்கள். குமுதம் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு இருவரும் இணைந்து பாடுபட்டனர். அந்த தொடர்பின் காரணமாகவே 33.9 சதவீத பங்குகள் பி,வி. பார்த்தசாரதி குடும்பத்துக்கு தரப்பட்டன. ஜவகர் பழனியப்பன் அமெரிக்காவில் மருத்துவர். ஆகவே 2008-ம் ஆண்டு நிர்வாக இயக்குனர் பொறுப்பை பார்த்தசாரதியின் மகன் பி. வரதராஜனிடம் ஒப்படைத்தார்

2010-ல் ஜவஹர் பழனியப்பன் பி.வரதராஜன் மீது குமுதம் நிறுவன நிதி மற்றும் பங்குகளில் மோசடி செய்து நிறுவனத்தைக் கைப்பற்றிக்கொண்டதாக காவல்துறையில் புகார் கொடுத்தார். அமெரிக்க பிரஜையான ஜவஹர் பழனியப்பன் குமுதம் பங்குகளை வைத்திருக்க முடியாது என பி.வரதராஜன் வாதாடினார். வழக்கு பல படிகளாக நீண்டது. இறுதியாக 2020 ஜூன் மாதம் ஜவஹர் பழனியப்பனுக்கே குமுதம் நிர்வாகம் சொந்தம் என்று தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது[1].

மதிப்பீடு

குமுதம் முதன்மையாக ஒரு பொதுவாசிப்புக்குரிய கேளிக்கை இதழ். ஜெயகாந்தன், அசோகமித்திரன் போன்ற தமிழ் நவீனப்படைப்பாளிகளும்; கிருபானந்த வாரியார், கண்ணதாசன் போன்ற மரபிலக்கியவாதிகளும் அதில் எழுதினாலும்கூட அடிப்படையில் அது பொழுதுபோக்கு வாசிப்புக்கே முதன்மையிடம் அளித்தது. நகர்ப்புறத்தன்மைகொண்டதாகவும், சமகால உலக பொதுரசனைக்கூறுகளை கொண்டுவந்து சேர்ப்பதாகவும் அது செயல்பட்டது. சினிமா மற்றும் தொடர்கதைகள் ஆகியவற்றையே அது சார்ந்திருந்தது.

உசாத்துணை

அடிக்குறிப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:32:31 IST