under review

ரமேஷ் பிரேதன்: Difference between revisions

From Tamil Wiki
 
Line 115: Line 115:
* [https://www.jeyamohan.in/225544/ ரமேஷ் பிரேதன் நினைவில்... நந்தகுமார்]
* [https://www.jeyamohan.in/225544/ ரமேஷ் பிரேதன் நினைவில்... நந்தகுமார்]
* [https://www.jeyamohan.in/225961/ தனித்து நின்ற யானை -அரிசங்கர்]
* [https://www.jeyamohan.in/225961/ தனித்து நின்ற யானை -அரிசங்கர்]
* அம்மை அப்பன் அயோனிகன் | ரமேஷ் பிரேதன் ஆவணப்படம் | விஷ்ணுபுரம் இலக்கிய விருது 2025
* [https://www.youtube.com/watch?v=fahMYZkLfrM அம்மை அப்பன் அயோனிகன் | ரமேஷ் பிரேதன் ஆவணப்படம் | விஷ்ணுபுரம் இலக்கிய விருது 2025]
* [https://www.youtube.com/watch?v=tCKIQY19kcc The Outsider | Ramesh Predan | Discussion with ரமேஷ் பிரேதன்]
* [https://www.youtube.com/watch?v=tCKIQY19kcc The Outsider | Ramesh Predan | Discussion with ரமேஷ் பிரேதன்]
* [https://www.youtube.com/watch?v=r_1X7Kjx0fE சிதைவுகளின் ஒழுங்கமைவும் ரமேஷ் பிரேதனும் - பாஸ்கர் மணிமேகலை]
* [https://www.youtube.com/watch?v=r_1X7Kjx0fE சிதைவுகளின் ஒழுங்கமைவும் ரமேஷ் பிரேதனும் - பாஸ்கர் மணிமேகலை]

Latest revision as of 07:16, 31 January 2026

ரமேஷ் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: ரமேஷ் (பெயர் பட்டியல்)
ரமேஷ் பிரேதன்
ரமேஷ் பிரேதன்
யுவன் சந்திரசேகர், ஜெயமோகனுடன்
ஜெயமோகனுடன்

ரமேஷ் பிரேதன் (ரமேஷ்) (அக்டோபர் 27, 1964 -செப்டெம்பர் 27, 2025) தமிழ் எழுத்தாளர். கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், விமர்சனக்கட்டுரைகள் எழுதியுள்ளார். பின்நவீனத்துவ படைப்பிலக்கியவாதியாகவும் விமர்சகராகவும் அறியப்படுகிறார்.

பிறப்பு, கல்வி

பிரேமுடன்
பிரேமுடன்

ரமேஷ் பிரேதன் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மருதமுத்து, பாலசுந்தராம்பாள் இணையருக்கு அக்டோபர் 27, 1964 அன்று பிறந்தார். சொந்த ஊர் திருச்சி. புதுச்சேரி அரசு நடுநிலைப்பள்ளியில் ஆரம்பக்கல்வி முதல் நடுநிலைக்கல்வி வரை பயின்றார். வ.உ சிதம்பரம் உயர்நிலைப்பள்ளியில் உயர்நிலைக்கல்வி கற்றார். கல்வே கல்லூரியில் மேல்நிலைக்கல்வியை நிறைவு செய்தார். அலாயன்ஸ் பிரான்சேவில் (Alliance Française) பிரெஞ்சு மொழியியல் டிப்ளமோ முடித்தார். பின்னர் அண்ணாமலை பல்கலைகழகத்தில் முதுகலை வரலாறு படிப்பை முடித்தார்.

பணி

  • 1983 -1985 வரை அசீபா என்ற காந்திய சமூக இயக்கத்தில் ஆசிரியர்
  • 1991 -1993 பாண்டிச்சேரி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்-ல் கிளை மேலாளர்
  • 1998 -1999 சென்னையில் ஆவணமாக்கல் பணியாளர்.
  • 2000 -2004 ஆரோவில் மைய நூலகத்தில் நூலகர்

இதழியல்

இலக்கிய இதழான 'அமீபா', இலக்கிய, நாட்டுபுறவியல் இதழ் 'கதை சொல்லி', அரசியல் மற்றும் சமூக இதழான 'பரிமாற்றம்' ஆகிய இதழ்களில் பணியாற்றினார்.

இலக்கிய வாழ்க்கை

ரமேஷ் பிரேதனின் இலக்கிய வாழ்க்கை இரண்டு கட்டங்களிலானாது.

இணை எழுத்து

1993-ல் பிரேமுடன் இணைந்து "புதைக்கப்பட்ட பிரதிகளும் எழுதப்பட்ட மனிதர்களும்" நாவலை எழுதினார். பிரேதா- பிரேதன் என்ற பெயரில் கதைகளை எழுதினார். ரமேஷ் பிரேம் என்ற பெயரில் தொடர்ச்சியாக எழுதினார். இதுவே ரமேஷ் பிரேதனின் முதல் படைப்பு. கோட்பாட்டுநூல்கள், கவிதைகள் என தொடர்ச்சியாக எழுதினார். மொழிபெயர்ப்பு நீங்கலாக 21 நூல்களை பிரேமுடனும் இணைந்து எழுதினார். கிரணம், நிறப்பிரிகை, சிதைவு, அமீபா, காலச்சுவடு, உயிர்மை, தீராநதி மற்றும் சொல் புதிது ஆகிய இதழ்களில் இவருடைய படைப்புகள் வெளிவந்துள்ளன. இக்காலகட்டத்தில் சாரு நிவேதிதாவும் இவர்களுடன் இணைந்து செயல்பட்டார். பின்நவீனத்துவ பாணி எழுத்து தமிழில் உருவாக அவர்கள் முன்னோடிகளாக அமைந்தனர்.

தனி எழுத்து
சாரு நிவேதிதாவுடன்

ரமேஷ் பிரேமிடம் இருந்து 2010 த்தில் பிரிந்தபின் ரமேஷ் பிரேதன் என்னும் பெயரில் தொடர்ச்சியாக எழுதினார். 2023-ல் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையிலேயே இருந்தார். ஊக்கம் குறையாமல் தொடர்ச்சியாக கவிதைகளையும் கட்டுரைகளையும் நாவல்களையும் இறுதிநாள் வரை எழுதிவந்தார். இரண்டாவது காலகட்டத்தில் வரலாறு, தமிழர் மெய்யியல் குறித்த உட்குறிப்புகள் கொண்ட படைப்புகளை எழுதினார்.

விருதுகள்

  • புதுச்சேரி அரசின் கம்பன் புகழ் இலக்கிய விருது (கவிதை) - 1998
  • ஆஸ்திரேலியா சின்னத்தம்பி வாத்தியார் நினைவு அறக்கட்டளை விருது - 1999
  • புதுச்சேரி அரசின் கம்பன் புகழ் இலக்கிய விருது (நாவல்) - 2001
  • சுஜாதா கவிதை விருது ('காந்தியைக் கொன்றது தவறுதான்' என்ற கவிதை நூலுக்கு) - 2010
  • களம்புதிது கவிதை விருது ('பன்றிக் குட்டி' என்ற கவிதை நூலுக்கு) - 2011
  • கி.ரா. கரிசல் அறக்கட்டளை விருது - 2017

மறைவு

ரமேஷ் பிரேதன் செப்டெம்பர் 27, 2025 அன்று உடல்நலக்குறைவால் புதுச்சேரியில் காலமானார். பிறப்பிலேயே கடுமையான ரத்த அழுத்தச் சிக்கல் கொண்டிருந்த ரமேஷ் 2013 முதல் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையிலேயே இருந்தார்.

நினைவுகள்

ரமேஷ் பிரேதன் நினைவாக 2025ல் அவருடைய விஷ்ணுபுரம் விருது ஐந்து படைப்பாளிகளுக்கு அளிக்கப்பட்டது. தேவி லிங்கம், செல்வகுமார் பேச்சிமுத்து, அழகிய மணவாளன் , சஜு மற்றும் அசோக் ராம்ராஜ் ஆகியோர் அவ்விருதுகளைப் பெற்றனர்.

இலக்கிய இடம்

தமிழில் பின்நவீனத்துவச் சிந்தனைகளையும் அழகியலையும் முன்னெடுத்த முன்னோடிப் படைப்பாளிகளில் ஒருவர் ரமேஷ் பிரேதன். பின்நவீனத்துவ அழகியலில் ஒன்றான கொடுஙகனவுத்தன்மை, சிதைந்த சிந்தனைத்தன்மை கொண்ட கவிதைகளை எழுதினார். வெவ்வேறு கலாச்சாரக் குறிப்புகளும், அவற்றை கலைத்து அடுக்கும் தர்க்கமீறல்கொண்ட கூறுமுறையும் கொண்ட நாவல்களை எழுதினார். பின்நவீனத்துவச் சிந்தனைகளை அறிமுகம் செய்தும் விளக்கியும் கட்டுரைகளை எழுதினார்.

பின்நவீனத்துவச் சிந்தனைகளையும் அழகியலையும் தமிழ்ச்சூழலுக்கேற்ப விரிவாக்கம் செய்தவர் ரமேஷ் பிரேதன். தமிழ்ப்பண்பாடு, விரிவான அளவில் இந்தியப் பண்பாடு என்பது தமிழ் உடல், இந்திய உடல் என ஒன்றைக் கட்டமைக்கிறது என்றும் அதனூடாக ஒவ்வொரு உடல்மேலும் வன்முறையைச் செலுத்தி ஆட்சிசெய்கிறது என்றும் கருதிய ரமேஷ் உடலரசியல் என்னும் கோணத்தை அவருடைய எழுத்தின் அடிப்படைகளில் ஒன்றாக கொண்டிருந்தார். உடலின் விடுதலை, உடலின் திளைப்பு, உடலின் மெய்யியல் ஆகியவையே தன் எழுத்தின் இயல்பு என குறிப்பிட்டார்.

"தமிழில் பின்நவீனத்துவ சிந்தனைகளை அறிமுகப்படுத்தி ஒரு விவாதத்தை உருவாக்கியதில் முக்கியமானவர்கள் பிரேம் -ரமேஷ். ஒருங்கிணைந்த இறுக்கமான வடிவமும், உணர்ச்சியற்ற தன்னிலைக்குரலும், வரலாறற்ற தனிநபர் நோக்கும் கொண்ட நவீனத்துவ எழுத்துக்கள் நிறைந்திருந்த தமிழ்ச்சூழலை நிலைகுலையச்செய்யவும் புதிய தளங்களை நோக்கிக் கொண்டுசெல்லவும் அவர்களின் முயற்சி வழிகோலியது." என்றும்; "தனிமையின் துயர், கட்டற்ற பித்துந்லை, குரூரங்கள், அபத்தங்கள், உணர்ச்சிக்கொந்தளிப்புகள் என பின்நவீனத்துவ நாவல்களை உருவாக்கும் அனைத்து அடிப்படைக்கூறுகளாலும் அமைந்த படைப்பு 'அவன் பெயர் சொல்'. ரமேஷ் பிரேதன் எழுதியிருக்கும் இந்நாவலை ஜே.ஜே.சிலகுறிப்புகளில் இருந்து முன்னகர்ந்தவை என வகைப்படுத்தலாம்" என எழுத்தாளர் ஜெயமோகன் மதிப்பிட்டார்.

நூல்கள்

கவிதை
  • இருபது கவிதைகளும் இரண்டாயிரம் ஆண்டுகளும்
  • கருப்பு வெள்ளைக் கவிதை
  • பேரழகிகளின் தேசம்
  • சக்கரவாளக்கோட்டம்
  • கொலை மற்றும் தற்கொலை பற்றி
  • உப்பு
  • நாவற்கொம்பு
  • அதீதனின் இதிகாசம் (காவியம்)
  • காந்தியைக் கொன்றது தவறுதான்
  • சாராயக்கடை
  • பன்றிக்குட்டி
  • அயோனிகன் (காவியம்)
  • மனநோயர் காப்பகத்தில் பின்காலனிய நா ட்டின் கவிஞன்
  • நடுநிசி மதியம்
  • மார்கழி பாவியம்
  • காமத்துப்பா லரசிய லறிக்கை
நாவல்
  • நல்லபாம்பு: நீல அணங்கின் கதை
  • ஐந்தவித்தான்
  • அவன் பெயர் சொல்
  • சொல் என்றொரு சொல்
  • புதைக்கப்பட்ட பிரதிகளும் எழுதப்பட்ட மனிதர்களும்
  • பொந்திஷேரி
  • ஆண் எழுத்து + பெண் எழுத்து = ஆபெண் எழுத்து (மீ புனைவு)
  • அருகன்மேடு
  • சூன்யதா
சிறுகதைத் தொகுப்பு
  • முன்பு ஒரு காலத்தில் நூற்றியெட்டுக் கிளிகள் இருந்தன
  • கனவில் பெய்த மழையைப் பற்றிய இசைக் குறிப்புகள்
  • பரதேசி
  • மகாமுனி
  • குருவிக்காரச் சீமாட்டி
  • ரமேஷ் பிரேதன் சிறுகதைகள்
நாடகம்
  • ஆதியிலே மாம்சம் இருந்தது (ஐந்து நாடகங்கள்)
  • இரண்டு பிரெஞ்சு நாடகங்கள் (மொழிபெயர்ப்பு)
கட்டுரைத் தொகுப்பு
  • சிதைவுகளின் ஒழுங்கமைவு
  • கட்டுரையும் கட்டுக்கதையும்
  • பேச்சு மறுபேச்சு
  • ரமேஷ் பிரேதன் நேர்காணல்கள்
  • கி.ரா. எழுத்துலகம்
  • இளையராஜா: இசையின் தத்துவமும் அழகியலும்

ரமேஷ் பிரேதன் நேர்காணல்கள்

இணைப்புகள்



✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 05-Mar-2025, 19:01:26 IST