பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் முதுமைத்தமிழ்: Difference between revisions
(; Added info on Finalised date) |
(Added language category) |
||
| Line 70: | Line 70: | ||
{{Fndt|01-Jan-2025, 15:50:06 IST}} | {{Fndt|01-Jan-2025, 15:50:06 IST}} | ||
[[Category:Tamil | [[Category:Tamil Content]] | ||
Revision as of 07:24, 29 March 2025
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் முதுமைத்தமிழ், இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய சிற்றிலக்கியங்களுள் ஒன்று. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு இயற்றப்பட்டது. இதன் ஆசிரியர் த. வேதராசன்.
வெளியீடு
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் முதுமைத்தமிழ் நூலை தஞ்சாவூர் நீடாமங்கலத்தைச் சேர்ந்த வளர்தமிழ்ப் பதிப்பகம் 1982-ல் வெளியிட்டது. இந்நூலின் ஆசிரியர் த. வேதராசன் என்னும் மருத்துவர் மறையரசன்.
ஆசிரியர் குறிப்பு
த. வேதராசன் என்னும் மருத்துவர் மறையரசன், 1951-ல், தஞ்சாவூரில் உள்ள திருத்துறைப்பூண்டியில் பிறந்தார். தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் பயின்று எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்றார். மரபுக்கவிதை, புதுக்கவிதை, சிறுகதை, கட்டுரைகளை எழுதினார். இவர் இயற்றிய மற்றொரு நூல், ‘பெரும்பாவலர் பாரதி பிள்ளைத்தமிழ்’.
நூல் அமைப்பு
முதுமைத்தமிழ் என்னும் சிற்றிலக்கிய வகைமை 20-ம் நூற்றாண்டில் தோன்றியது. இளமையிலேயே மறைந்தவர்கள் முதுமை வரை வாழ்ந்திருந்தால் நிகழ்ந்திருக்கக்கூடியவற்றைக் கூறுவது. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் முதுமைத்தமிழ் நூலில் கீழ்க்காணும் பத்துப் பருவங்கள் இடம்பெற்றன.
- காப்புப் பருவம்
- பிள்ளைக் கனியமுதுப் பருவம்
- வருகைப் பருவம்
- நரைமுடிப் பருவம்
- கண்ணாடிப் பருவம்
- பேரர் மகிழ் பருவம்
- வழுக்கைத் தலைப் பருவம்
- பொக்கை வாய்ப் பருவம்
- கைத்தடிப் பருவம்
- கைக்கொட்டுப் பருவம்
நூலின் தொடக்கத்தில் தமிழணங்கின் மீதான வாழ்த்துப் பாடல் இடம் பெற்றது. தொடர்ந்து பருவத்திற்குப் பத்துப் பாடல்கள் வீதம் நூறு பாடல்கள் இடம்பெற்றன. பாடல்கள் ஆசிரிய விருத்தத்தால் அமைந்துள்ளன.
உள்ளடக்கம்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் முதுமைத்தமிழ் நூலின் தொடக்கத்தில் வாழ்த்தை அடுத்து காப்புப் பருவம் இடம்பெற்றது. காப்புப் பருவத்தில், இளங்கோ, வள்ளுவர், கம்பன், காளமேகம், பாரதி, பாரதிதாசன், பரிதிமாற்கலைஞர், புதுமைப்பித்தன், கண்ணதாசன், தமிழ்ஒளி ஆகியோர் காப்புக் கடவுளராகப் பாடப்பட்டுள்ளனர்.
பிள்ளைத்தமிழில் இடம்பெறும் செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர் என்னும் பருவங்கள் அனைத்தும், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் முதுமைத்தமிழின் இரண்டாவது பருவமான பிள்ளைக்கனியமுது பருவத்தில் இடம்பெற்றன.
மூன்றாவதாக உள்ள வருகைப் பருவத்தில் உலாவிற்குரிய ஆண்பாற் பருவங்களான மீளி, மறவன், திறவோன், காளை, விடலை என்னும் ஐந்து பருவங்களைப் பற்றிய பத்துப்பாடல்கள் இடம்பெற்றன.
தொடர்ந்து வரும் நரைமுடிப் பருவம், கண்ணாடிப் பருவம், பேரர் மகிழ் பருவம், வழுக்கைத் தலைப் பருவம், பொக்கை வாய்ப் பருவம், கைத்தடிப் பருவம், கைக்கொட்டுப் பருவம் ஆகிய பருவங்களில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் புகழ், கொள்கை, செயல்கள், சமூக சிந்தனைகள், பகுத்தறிவுத் தாக்கம், பொதுவுடைமை இயக்க ஈடுபாடு, உழைப்பாளர் வர்க்கம் பற்றிய சிந்தனைகள், பெண் விடுதலை, சாதி மறுப்பு, தொழிலாளர் நலன் பற்றிய கருத்துக்கள் இடம்பெற்றன.
பாடல் நடை
வருகைப் பருவம்
அமிழ்தின் இனிய பெட்டகத்தை
அருமைத் துணையாய்ப் பெற்றவனே
அணைத்துப் பிறந்த குமரவேலன்
அழைத்தே ஈண்டு வருகவே
கமழு முகத்து விழியொளிரும்
கனக சுப்பு மாணவனாய்
கடிய நடைகொள் உழைப்பவருக்
கரசே வருகவே
புரட்சிப் பாதை வகுத்தவன்
கஞ்சியி லையெனுஞ் சொல்லையே ஏற்றுவோம்
கப்பலி லென்றுரைத்தோய்
கஞ்சனைப் பொருள்தரா வஞ்சனை முதலாளி
காட்டிய சுந்தரனே
பஞ்சையென் றேழைகள் எண்ணிடும் மேதைகள்
பான்மையை வென்றவனே
பஞ்சமில் லாதொரு நாட்டிற்குப் புரட்சிப்
பாதைவ குத்தவனே
மதிப்பீடு
சிற்றிலக்கியங்களுள் ஒன்றான பிள்ளைத் தமிழ் இலக்கியம், காலத்திற்கேற்றவாறு புதுமைச் சிறப்புடனும் தனித்தன்மையுடனும் வளர்ந்துள்ளது. அவற்றுள் ஒன்று முதுமைத்தமிழ். மரபிலிருந்து மாறாது, அதேசமயம் புதுமையையும் மரபுக்கேற்ற வகையில் இணைத்துக்கொண்டு படைக்கப்பட்ட சிற்றிலக்கியமாகவும், தமிழில் தோன்றிய முதல் முதுமைத்தமிழ் இலக்கியமாகவும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் முதுமைத்தமிழ் நூல் அறியப்படுகிறது.
உசாத்துணை
- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் முதுமைத்தமிழ், த. வேதராசன், வளர்தமிழ்ப் பதிப்பகம், நீடாமங்கலம், தஞ்சாவூர் - 614404, முதல் பதிப்பு: 1982
- இருபதாம் நூற்றாண்டுச் சிற்றிலக்கியங்கள், சிலம்பு நா. செல்வராசு, காலச்சுவடு பதிப்பக வெளியீடு, முதல் பதிப்பு: டிசம்பர் 2018
- பிள்ளைத் தமிழ் இலக்கியம், பூர்ணசந்திரன் தளம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 01-Jan-2025, 15:50:06 IST