முதுமைத்தமிழ்
முதுமைத்தமிழ், பிள்ளைத்தமிழுக்கு மாற்றாக இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய சிற்றிலக்கியங்களுள் ஒன்று. பிள்ளைத்தமிழைப் போலவே முதுமைத்தமிழிலும் பத்துப் பருவங்கள் இடம் பெறுகின்றன.
முதுமைத்தமிழ் விளக்கம்
இறைவன், இறைவி, இறையடியவர்கள், அரசர்கள், வள்ளல்கள், தலைவர்கள், ஆசிரியர்கள் மீது பிள்ளைத்தமிழ் நூல்கள் இயற்றப்பட்டன. முதுமை வரை வாழ்பவர்களுக்கு, அவர்களது பிள்ளைப்பருவச் சிறப்புக்களையும், பெருமைகளையும் கூறுவதாகப் பிள்ளைத்தமிழ் நூல்கள் அமைந்தன. அதற்கு மாற்றாக இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய சிற்றிலக்கியம் முதுமைத்தமிழ்.
இளமையிலேயே மறைந்தவர்களுக்கு, அவர்கள் உயிரோடு வாழ்ந்திருந்தால் முதுமையில் இன்ன இன்ன சாதனைகளைச் செய்திருப்பர் என்ற வகையில் அவர்களது பெருமைகளைக் கூறும் வகையில் இயற்றப்படுவதாக முதுமைத் தமிழ் இலக்கியம் அறியப்படுகிறது. பிள்ளைத்தமிழைப் போலவே முதுமைத்தமிழிலும் பத்துப் பருவங்கள் இடம் பெற்றன.
முதுமைத்தமிழ்ப் பருவங்கள்
முதுமைத்தமிழில் கீழ்க்காணும் பத்துப் பருவங்கள் இடம்பெற்றன.
- காப்புப் பருவம்
- பிள்ளைக் கனியமுதுப் பருவம்
- வருகைப் பருவம்
- நரைமுடிப் பருவம்
- கண்ணாடிப் பருவம்
- பேரர் மகிழ் பருவம்
- வழுக்கைத் தலைப் பருவம்
- பொக்கை வாய்ப் பருவம்
- கைத்தடிப் பருவம்
- கைக்கொட்டுப் பருவம்
முதுமைத்தமிழ் நூல்
மருத்துவர் மறையரசன் என்னும் வேதராசன், கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மீது 'பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் முதுமைத்தமிழ்' என்ற நூலை இயற்றினார்.
உசாத்துணை
- இருபதாம் நூற்றாண்டுச் சிற்றிலக்கியங்கள், சிலம்பு நா. செல்வராசு, காலச்சுவடு பதிப்பக வெளியீடு, முதல் பதிப்பு: டிசம்பர் 2018
- பிள்ளைத் தமிழ் இலக்கியம், பூர்ணசந்திரன் தளம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 01-Jan-2025, 16:15:17 IST