ராய. சொக்கலிங்கன்: Difference between revisions
Logamadevi (talk | contribs) No edit summary |
(changed template text) |
||
Line 102: | Line 102: | ||
* [https://siliconshelf.wordpress.com/2019/03/14/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88-23-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D/ சிலிகான்ஷெல்ஃப் தளம்:] | * [https://siliconshelf.wordpress.com/2019/03/14/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88-23-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D/ சிலிகான்ஷெல்ஃப் தளம்:] | ||
*[http://tamilaivugal.org/TamilPhd/TamilPalkalaikazhagaAayvugal?universityResearchId=1059 ராய. சொக்கலிங்கத்தின் தமிழ்ப்பணி: தமிழ் ஆய்வு] | *[http://tamilaivugal.org/TamilPhd/TamilPalkalaikazhagaAayvugal?universityResearchId=1059 ராய. சொக்கலிங்கத்தின் தமிழ்ப்பணி: தமிழ் ஆய்வு] | ||
{{ | {{First review completed}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Revision as of 14:16, 15 November 2022
கவிஞர், எழுத்தாளர், சொற்பொழிவாளர், பதிப்பாளர், பத்திரிகை ஆசிரியர் என இலக்கியத்தின் பல களங்களில் செயல்பட்டவர் ராய. சொக்கலிங்கன். (ராய.சொ) (1898-1974). ‘ஊழியன்’ இதழின் ஆசிரியர். காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்தவர். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை சென்றவர். சமூக சேவகர்.
பிறப்பு, கல்வி
ராய. சொக்கலிங்கன், (ராய.சொ) காரைக்குடியை அடுத்த அமராவதிப் புதூரில் அக்டோபர் 30, 1898-ல், ராயப்பச் செட்டியார்-அழகம்மை தம்பதியினருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். ஆரம்பக் கல்வியை திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்தார். தந்தை ராயப்பச் செட்டியார் பாலக்காட்டில் தனவணிகம் செய்து வந்தார். பாலக்காட்டில் உள்ள ஆரம்பப் பள்ளியில் மலையாளம், தமிழ் இரண்டையும் பயின்றார் சொக்கலிங்கன்.
தந்தைக்கு பர்மாவில் தன வணிகம் செய்யும் வாய்ப்பு வந்ததால், சொக்கலிங்கனும் உடன் சென்றார். அங்கு வணிக நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்ததுடன் ஆங்கிலம் மற்றும் பர்மிய மொழியைக் கற்றுத் தேர்ந்தார்.
தனி வாழ்க்கை
தம் பதினெட்டாம் வயதில் காரைக்குடி திரும்பினார் ராய. சொக்கலிங்கன். தமிழின் மீது கொண்ட ஆர்வத்தால் பண்டிதர் சிதம்பர ஐயரிடம் தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றுக் கொண்டார். 1918-ல் பள்ளத்தூரில் வாழ்ந்த உமையாள் ஆச்சியுடன், ராய. சொக்கலிங்கனுக்குத் திருமணம் நிகழ்ந்தது. மகப்பேறு வாய்க்கவில்லை என்பதால், தம் உறவினர், குழந்தையன் செட்டியாரைத் தம் மைந்தனாகவும், அவர் மகள் சீதையைத் தம் பெயர்த்தியாகவும் கருதி வளர்த்தார்.
ஹிந்து மதாபிமான சங்கம்
காரைக்குடியில் மிகவும் புகழ் பெற்றவராக இருந்தவர் சொ. முருகப்பா. இவர், ‘குமரன்’, ’சண்டமாருதம்’ போன்ற இதழ்களின் ஆசிரியராக இருந்தார். அவரது நட்பும் ஆதரவும் சொக்கலிங்கனுக்குக் கிடைத்தது. நட்பின் விளைவால் 1917-ல் ’இந்து மதாபிமான சங்கம்’ தோன்றியது. சைவத்தையும், தமிழையும் வளர்ப்பதுடன் நாட்டு விடுதலையையும் முக்கிய நோக்கமாகக் கொண்டு அச்சங்கம் செயல்பட்டது. ராய.சொக்கலிங்கன், அதன் தலைவராக இருந்து செயல்பட்டார்.
மகாகவி பாரதியார் இந்து மதாபிமான சங்கத்துக்கு வருகை தந்ததுடன் ஏழு கவிதைகளையும் இயற்றி அச்சங்கத்தைப் போற்றினார். வ.உ. சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா, வ.வே.சு.ஐயர், ராஜாஜி, திரு.வி.க., ஞானியார் சுவாமிகள், விபுலானந்தர், டி.கே.சி., ந.மு.வேங்கடசாமி நாட்டார், பண்டிதமணி, ரா.பி.சேதுப்பிள்ளை, உமாமகேசுவரம் பிள்ளை என பல தமிழறிஞர்கள், சான்றோர்கள் இந்துமதாபிமான சங்கத்துக்கு வருகை தந்து சிறப்புரையாற்றியுள்ளனர்.
இதழியல் வாழ்க்கை
நகரத்தார் மக்களிடையே ஒற்றுமையைப் பேணுவதற்காக ‘தன வைசிய ஊழியர் சங்கம்’ என்ற ஓர் அமைப்பு தொடங்கப்பட்டது. அதன் சார்பில் 1920-ல் ’தன வைசிய ஊழியன்’ என்ற பெயரில் ஓர் இதழ் துவங்கப்பட்டது. சொ.முருகப்பா சிறிதுகாலம் அதன் ஆசிரியராக இருந்தார். அவருக்குப் பின் ராய.சொக்கலிங்கன் அதன் ஆசிரியராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஊழியன்
1925-ல் ’தன வைசிய ஊழியன்’, ஊழியன் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இவ்விதழ் அரசியல், சமூக விடுதலைக்காகக் குரல் கொடுத்தது. காந்தியையும், காந்தியத்தையும் போற்றிப் பல கட்டுரைகள் இவ்விதழில் வெளியாகின. பெண் கல்வி ஆதரவு, விதவை மறுமணம் ஆதரவு, பால்ய விவாக எதிர்ப்பு போன்றவை குறித்த கருத்துக்களுக்கு இவ்விதழ் இடமளித்தது.
புதுமைப்பித்தன் இவ்விதழில் சில காலம் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். 'சொ.வி', 'சொ.விருத்தாசலம்', 'நந்தன்', 'கூத்தன்’, 'மாத்ரு' போன்ற பல புனை பெயர்களில் அவரது சிறுகதைகள் வெளியாகியிருக்கின்றன. 'அகல்யை' போன்ற அவரது சிறுகதைகள் இவ்விதழில் தான் வெளியாகின. வ.ராமசாமி ஐயங்கார், தி.ஜ.ரங்கநாதன் போன்றோரும் இவ்விதழில் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளனர். கொத்தமங்கலம் சுப்பு அவர்களும் இதழின் வளர்ச்சிக்குப் பங்காற்றினார். எஸ். எஸ். வாசன் ஊழியன் இதழின் சென்னை விளமபர முகவராகப் பணியாற்றினார். பல திறமை மிக்கவர்களின் பங்களிப்பால் ஊழியன் இதழ் சுமார் இருபதாண்டுகள் வரை இலக்கிய உலகில் கோலோச்சியது. 1940-ல் இவ்விதழ் நின்று போனது.
சமூக வாழ்க்கை
காந்தியின் மீது ராய.சொ.வுக்கு பற்று அதிகம். 1934-ஆம் ஆண்டில் காந்தியடிகளைத் தன்னுடைய இல்லத்திற்கு அழைத்து விருந்து படைத்திருக்கிறார். காந்திய வழியை ஏற்று சட்ட மறுப்பு இயக்கத்தில் ஈடுபட்டார். அதனால் பிரிட்டிஷ் அரசால் கைது செய்யப்பட்டு ஓராண்டு காலம் சிறையில் இருந்தார். 1938-ல் காரைக்குடி நகரசபைத் தலைவராகப் பொறுப்பேற்ற ராய.சொக்கலிங்கன், பள்ளிகளின் வளர்ச்சி மீது அக்கறை காட்டினார். புதிய பல பள்ளிகளைத் தோற்றுவித்தார். காரைக்குடியில் நான்கு ஆரம்பப் பள்ளிகள் மட்டுமே இருந்தன. அதனைப் பதினேழாக உயர்த்தினார்.
நகரசபையில்,"காந்தி மாளிகை" என்ற பெயரில் நகராட்சி அலுவலகக் கட்டடத்தை உருவாக்கினார்.
இலக்கியச் செயல்பாடுகள்
ராய. சொக்கலிங்கன், கம்ப ராமாயணம் கற்றவர். கம்ப ராமாயணத்திலும் வில்லி பாரதத்திலும் பல ஆயிரம் பாடல்களை மனப்பாடமாகச் சொல்லக் கூடிய ஆற்றல் பெற்றிருந்தார். கம்பன் கழக மேடைகளிலும், பட்டி மன்றங்களிலும் சொற்பொழிவாற்றி இருக்கிறார். கம்பனைப் பற்றி ஆராய்ந்து கம்ப ராமாயணத்தில் எங்கெல்லாம் சிவன் பற்றிய பாடல்கள், வர்ணனைகள் இடம்பெற்றுள்ளன என்பதைக் குறித்து ஆராய்ந்து ராய. சொக்கலிங்கன் எழுதிய நூல், ’கம்பனும் சிவனும்'. அதுபோல வில்லிபாரத்தை ஆராய்ந்து எழுதப்பட்ட நூல், ‘வில்லியும் சிவனும்’. பல சைவ சித்தாந்த மாநாடுகளிலும் சொற்பொழிவுகளிலும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றியிருக்கிறார்.
’அமுதும் தேனும்’ என்ற நூலில் திருவாசகத்தில் எங்கெங்கெல்லாம் ‘அமுது’ வருகிறது, ’தேன்’ வருகிறது என்றெல்லாம் ஆராய்ந்து, அந்தப் பாடல்களின் சிறப்பை உரையோடு எழுதியிருக்கிறார்.
ராய.சொக்கலிங்கன், அழகப்பா பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் ஆராய்ச்சித்துறை கெளரவத்தலைவராகப் பொறுப்பேற்றபோது, தாம் அரிதின் முயன்று சேகரித்த அனைத்து நூல்களையும் பல்கலைக்கழகத்துக்கே வழங்கிவிட்டார்.
விருதுகள்
- காரைக்குடி இந்துமதாபிமான சங்கம் 1958-ல் "தமிழ்க்கடல்" என்ற பட்டத்தை ராய. சொக்கலிங்கனுக்கு அளித்துச் சிறப்பித்தது
- 1961-ல் ரங்கூன் நகர நாட்டுக் கோட்டைச் செட்டியார்கள் ’தர்ம பரிபாலன சபை’ என்பதன் மூலம் ராய. சொக்கலிங்கனுக்கு “சிவமணி”என்ற பட்டம் வழங்கிச் சிறப்பித்தனர்.
- 1963-ல் கோலாலம்பூர் அருள்நெறித் திருக்கூட்டத்தினர், ராய. சொக்கலிங்கனை “சிவம் பெருக்கும் சீலர்” என்ற பட்டம் அளித்துச் சிறப்பித்தனர்.
மறைவு
1960-ஆம் ஆண்டில் ராய.சொ.வின் மனைவி காலமானார். அதன் பின் சைவம் மற்றும் சமயம் சார்ந்த வளர்ச்சியிலேயே தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார் ராய. சொக்கலிங்கன். தனது நேரத்தை நகரத்தார் ஆலயங்களைச் சீர் செய்வதிலும், பல்வேறு சிவாலயத் திருப்பணிகளிலும் செலவிட்டார்.
ராய. சொக்கலிங்கன், செப்டம்பர், 30, 1974 அன்று, மாணிக்கவாசகரின் திருவாசகப் பாடலைப் பாடியபடியே தம் உயிர் நீங்கினார்.
ஆவணம்
- ராய. சொக்கலிங்கனின் நூல்கள் சில தமிழக அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. அந்நூல்களில் சில தமிழ் இணைய மின்னூலகத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
- ராய. சொக்கலிங்கத்தின் வாழ்க்கை வரலாற்றை "தமிழ்க்கடல் இராய. சொக்கலிங்கம்" என்ற தலைப்பில உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
- ’தமிழ்க்கடல் இராய.சொ.' என்ற தலைப்பில் ந. சுப்புரெட்டியார், ராய. சொக்கலிங்கனின் வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ளார்.
- ’ராய. சொக்கலிங்கத்தின் தமிழ்ப்பணி' என்ற தலைப்பில், பாரதியார் பல்கலைக்கழகத்திற்காக, இரா. சுஜாதா, ஆய்வு ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.
நினைவுச்சிலை
ராய. சொக்கலிங்கனின் நினைவாக, அவரது உருவச்சிலை, ஹிந்து மதாபிமான சங்க வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஜனவரி 22, 1994-ல் நடந்த நிகழ்வில், ம.பொ. சிவஞானம் முன்னிலையில், அப்போதைய செய்தி மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் இராம. வீரப்பனால் இச்சிலை திறக்கப்பட்டது. இராய. சொ. நினைவு மலரை அப்போதைய குன்றக்குடி ஆதினத் தலைவர் குன்றக்குடி அடிகளார் (தெய்வசிகாமணி அருணாசல தேசிகர்) வெளியிட்டார்.
சொற்பொழிவு
ராய. சொ. நினைவாக, கோயமுத்தூர் அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறையில் ராய. சொக்கலிங்கன் நினைவுச் சொற்பொழிவு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.
வரலாற்று இடம்
கவிஞர், பத்திரிகை ஆசிரியர், எழுத்தாளர், தொகுப்பாசிரியர், ஆன்மீகச் சொற்பொழிவாளர் பதிப்பாசிரியர், அரசியல், சமூக சேவகர் என பன்முகங்கள் கொண்டு விளங்கியவர் ராய.சொக்கலிங்கன். ”தமிழ்க்கடலைப் பற்றிப் பேசப் புகுவது இப்பூமண்டலத்தை முக்கால் பகுதி சூழ்ந்திருக்கும் நீர்கடலைப்பற்றிப் பேசுவதோடொக்கும்” என்கிறார் டாக்டர். ந. சுப்புரெட்டியார்.
நூல்கள்
கவிதை, செய்யுள் நூல்கள்
- தாலாட்டும் கும்மியும்
- காந்தி பதிணென்பா
- புதுமைப்பாக்கள்
- பெண் விலைக் கண்டனச் செய்யுட்கள்
- காந்திக் கவிதை
- காந்தி பிள்ளைத் தமிழ்
பாடல்கள்
- தேனும் அமுதும்
- மீனாட்சி திருமணம்
- சீதை திருமணம்
- காதற்பாட்டு
- திருமணப்பாட்டு
- தெய்வப் பாமாலை
- தேவாரமணி
- இராகவன் இசைமாலை
- திருக்கானப்பேர் பாமாலை
கட்டுரை நூல்கள்
- இன்பம் எது?
- காவேரி
- குற்றால வளம்
- வில்லியும் சிவனும்
- கம்பனும் சிவனும்
- வள்ளுவர் தந்த இன்பம் (திருக்குறள் உரை விளக்க நூல்)
- திருத்தலப் பயணம்
வாழ்க்கை வரலாறு
- கண்கண்ட தெய்வம் (ஷீரடி பாபாவின் வாழ்க்கை வரலாறு)
தொகுத்த நூல்கள்
- பூசைப் பாமாலை
- திருத்தலப் பயணம்
பதிப்பித்த நூல்கள்
- சோண சைல மாலை
- திருவிளையாடற் புராணம் - மதுரைக் காண்டம்
- சைவ எல்லப்ப நாவலர் இயற்றிய அருணாசலப்புராணம்
- திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி - உரையும் விளக்கமும்
- திருப்பல்லாண்டு
- வருண குலாதித்தன் மடல்
- சேதுபதி விறலிவிடு தூது
- கூளப்ப நாயக்கன் விறலிவிடு தூது
உசாத்துணை
- தமிழ்க்கடல் ராய சொ. ந. சுப்புரெட்டியார்
- முன்னோடி: ராய. சொக்கலிங்கன்: தென்றல் இதழ் கட்டுரை
- ராய. சொ. தினமணி கட்டுரை
- ராய. சொ. நூல்கள்: தமிழ் இணைய நூலகம்
- இராய சொக்கலிங்கம் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்
- சிலிகான்ஷெல்ஃப் தளம்:
- ராய. சொக்கலிங்கத்தின் தமிழ்ப்பணி: தமிழ் ஆய்வு
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.