first review completed

நாக குமார காவியம்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 43: Line 43:
*[https://www.chennailibrary.com/iynchirukappiangal/nagakumarakaviyam.html நாக குமார காவியம்:சென்னை நூலகம்]
*[https://www.chennailibrary.com/iynchirukappiangal/nagakumarakaviyam.html நாக குமார காவியம்:சென்னை நூலகம்]
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
{{Standardised}}
{{first review completed}}

Revision as of 09:32, 17 August 2022

நாக குமார காவியம், ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்று. சமண சமயத்தைச் சார்ந்தது. ஐம்பெருங் காப்பியங்களில் சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, வளையாபதி மூன்று மட்டுமே சமண சமயம் சார்ந்தவை. மணிமேகலை, குண்டலகேசி இரண்டும் பௌத்த சமயச் சார்புடையவை. ஆனால், ஐஞ்சிறு காப்பியங்கள் அனைத்துமே சமண சமயம் சார்ந்தவை.

நாக குமார காவியத்தின் காலம் பொது சகாப்தம் 16-ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டது என்பர். இதனை இயற்றியவர் பெயர் தெரியவில்லை. அவர் ஒரு சமணப் பெண் துறவி என்ற கருத்து உள்ளது. அழிந்து போன நூல் என்று கருதப்பட்ட இதனை சமண அறிஞர் ஜீவபந்து ஸ்ரீபால் அவர்களின் உதவியால் மு. சண்முகம் பிள்ளை பதிப்பித்தார். ‘அச்சில் வாரா அருந்தமிழ் நூல்’ என்ற வரிசையில், 1973-ல், சென்னைப் பல்கலைக் கழகம் இந்த நூலை வெளியிட்டது.

நூல் அமைப்பு

நாக குமார காவியம், 5 சருக்கங்களில் 170 விருத்தப்பாக்களில் நாகபஞ்சமியின் கதையைக் கூறுகிறது. இதன் கதை வடமொழியில் மல்லிசேனர் எழுதிய நாக பஞ்சமி கதையினை ஒட்டியதாகக் கருதப்படுகிறது. அருகனை வாழ்த்துவதும், அருக சமயக் கோட்பாடுகளை ஆங்காங்கே எடுத்துரைப்பதும் நூலின் முக்கிய நோக்கமாக உள்ளது.

காப்பியத்தின் கதை

சிரோணிக நாட்டு மன்னனின் வேண்டுகோளுக்கு இணங்க, கௌதமர் என்பவர் அவனுக்குக் கதை கூறுவது போல் இந்த நூல் அமைக்கப்பட்டு உள்ளது. 519 பெண்களைக் கதையின் நாயகன் மணப்பதாக இந்த நூலின் கதை அமைப்பு உள்ளது. இளமைக் காலத்தில் இன்பம் அனுபவிப்பதிலேயே தனது காலத்தைக் கழித்த நாககுமாரன், தனது இறுதிக் காலத்தில் வாழ்வின் நிலையாமையை உணர்ந்து துறவு மேற்கொள்வதே இச்சிறுகாப்பியத்தின் கதை.

நாக குமாரனின் பிறப்பு, அவன் பல பெண்களைத் திருமணம் செய்தது, பல வீர தீரச் செயல்களைச் செய்தது, அவனது முற்பிறப்பு வரலாறு, அவன் செய்த பஞ்சமி நோன்பு, அதனால் அவனுக்குக் கிடைத்த பலன், அவன் வாழ்க்கையின் உண்மை உணர்ந்து மகனான இளவரசனுக்கு முடி சூட்டித் துறவு மேற்கொண்டது ஆகியவை கதை நிகழ்ச்சிகளாக இந்த நூலில் இடம் பெற்றுள்ளன.

பாடல் சிறப்பு

வர்த்தமானரை வாழ்த்தி இயற்றப்பட்டிருக்கும் பாடல்கள் சொற் சுவையும், கவிச்சுவையும் கொண்டதாக விளங்குகின்றன.

கஞ்சமலர் திருமார்பில் தரித்தாய் நீயே
காலம்ஒரு மூன்றுஉணர்ந்த கடவுள் நீயே
பஞ்சாத்தி தான்உரைத்த பரமன் நீயே
பரமநிலை ஒன்றுஎனவே பணித்தாய் நீயே
துஞ்சாநல் உலகுதொழும் தூயன் நீயே
தொல்வினை எல்லாம்எரித்த துறவன் நீயே
செஞ்சொல் பாவையை நாவில் சேர்த்தாய் நீயே
சிரீவர்த்தமான் எனும் தீர்த்தன் நீயே


அறவன்நீ கமலன்நீ ஆதி நீயே
     ஆரியன்நீ சீரியன்நீ அனந்தன் நீயே
திரிலோக லோகமொடு தேயன் நீயே
     தேவாதி தேவன்எனும் தீர்த்தன் நீயே
எரிமணிநற் பிறப்புடைய ஈசன் நீயே
     இருநான்கு குணமுடைய இறைவன் நீயே
திரிபுவனம் தொழுது இறைஞ்சும் செல்வன் நீயே
     சீர்வர்த்த மானன்எனும் தீர்த்தன் நீயே

- போன்ற பாடல்களில் வரும் அருக வழிபாடு, கவிஞரின் சமய உணர்வுக்குச் சான்றாக உள்ளது.

அறம்இன்றிப் பின்னை ஒன்றும் உயிர்க்குஅரண் இல்லைஎன்றும்
மறம்இன்றி உயிர்க்கு இடர்செய் மற்றுஒன்றும் இல்லை என்றும்
திறம்இது உணர்ந்து தேறித் தீக்கதிப் பிறவிக்கு அஞ்சி
மறம்இதை விட்டு அறத்தில் வாழுமின் உலகத் தீரே!

- என்ற அறவுரைப் பாடலுடன் ‘நாககுமார காவியம்’ நிறைவு பெறுகிறது.

உசாத்துணை


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.