first review completed

புதுமைப்பித்தன்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 219: Line 219:
*புதுமைப்பித்தன் வரலாறு - தொ.மு.சி.ரகுநாதன்
*புதுமைப்பித்தன் வரலாறு - தொ.மு.சி.ரகுநாதன்
*[http://www.sirukathaigal.com/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D/ புதுமைப்பித்தன்-சிறுகதைகள்]
*[http://www.sirukathaigal.com/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D/ புதுமைப்பித்தன்-சிறுகதைகள்]
{{Standardised}}
{{First review completed}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 21:41, 29 April 2022

புதுமைப்பித்தன் [சொ.விருத்தாசலம்] (ஏப்ரல் 25, 1906 - ஜூன் 30, 1948) தமிழ் நவீன இலக்கியத்தைச் சட்டென்று முழுமைப்படுத்திய மேதை. நவீனத் தமிழ் சிறுகதையின் மூலவருள் ஒருவராக கருதப்படுகிறார். தமிழ் உரைநடையில் புதிய தொடக்கத்தை நிகழ்த்தியவர்.

தனி வாழ்க்கை

புதுமைப்பித்தன் சொ. விருத்தாசலம் என்ற இயற்பெயர் கொண்டவர். கடலூர் மாவட்டத்தில் திருப்பாதிரிப்புலியூரில் ஏப்ரல் 25, 1906 அன்று பிறந்தார். தந்தை சொக்கலிங்கம் பிள்ளை, நிலப்பதிவு தாசில்தாராக அரசாங்கத்தில் பணியாற்றினார். தாயார் பர்வதத்தம்மாள். புதுமைப்பித்தனுக்கு உடன் பிறந்த தங்கையின் பெயர் ருக்மிணி. எட்டு வயதிருக்கையில் புதுமைப்பித்தனின் தாயார் மரணமடைந்தார். தந்தை மறுமணம் செய்து கொண்ட பின்னர் சித்தியின் வளர்ப்பில் வளர்ந்தார். இதன் தாக்கம் அவரது கதைகளில் காணப்படுகிறது.

சொக்கலிங்கம் பிள்ளை தென்னாற்காடு மாவட்டத்தில் பணிபுரிந்து வந்தார். அடிக்கடி நிகழும் அவரது பணியிட மாறுதல்களால் புதுமைப்பித்தன் தனது இளமைக்காலக் கல்வியை செஞ்சி, திண்டிவனம், கள்ளக்குறிச்சி என்று வெவ்வேறு ஊர்களில் பெற்றார். 1918-ஆம் ஆண்டு அவரது தந்தை ஓய்வு பெற்ற பின் சொந்த ஊரான திருநெல்வேலியில் ஆர்ச் யோவான் ஸ்தாபன பள்ளியில் படிப்பை நிறைவு செய்தார். பின்னர் இந்து கல்லூரியில் சேர்ந்து படித்து 1931-ஆம் ஆண்டு இளங்கலை (B.A.) பட்டம் பெற்றார்.

புதுமைப்பித்தன் திருவனந்தபுரத்தை சேர்ந்த கமலாம்பாளை ஜூலை 31,1931 அன்று மணம் புரிந்தார். புதுமைப்பித்தனுக்கு 1946-ஆம் ஆண்டு தினகரி என்ற மகள் பிறந்தாள்.

புதுமைப்பித்தன் தன் வாழ்க்கை முழுக்க இதழாளராகப் பணியாற்றினார். தினமணி, ஊழியன், தினசரி மற்றும் மணிக்கொடி ஆகிய பத்திரிக்கைகளில் வேலை செய்தார். இக்காலக்கட்டத்தில் தந்தையிடம் ஏற்பட்ட மனவிலக்கத்தால் புதுமைப்பித்தன் சென்னையில் குடிபுகுந்து வசிக்கத் தொடங்கினார். பின்பு தன் வாழ்வின் இறுதி காலக்கட்டத்தில் திரைப்படத் துறையில் சிறிது காலம் இயங்கினார். .

இலக்கிய வாழ்க்கை

நடுநாயகமான படைப்பாளி. புதுமைப்பித்தன் இதழாளராகப் பணியாற்றினார். சில மொழிபெயர்ப்புகளையும் ஓரிரு கவிதைகளையும் எழுதினார். அவரது சாதனைகள் சிறுகதைகளிலேயே உள்ளன. முதல் படைப்பான 'குலோப்ஜான் காதல்' காந்தி இதழில் 1933-ல் வெளிவந்தது. 1934-லிருந்து மணிக்கொடியில் இவரது படைப்புகள் பிரசுரமாகத் துவங்கின. மணிக்கொடியில் வெளிவந்த இவரின் முதல் சிறுகதை ஆத்தங்கரைப் பிள்ளையார். புதுமைப்பித்தனின் படைப்புகள் அவர் வாழ்ந்த இடங்களான திருநெல்வேலியையும் சென்னையையும் மையமாகக் கொண்டு அமைந்தவை. இவரது சிறுகதைகள் கலைமகள், ஜோதி, சுதந்திரச் சங்கு, ஊழியன், தமிழ்மணி, தினமணியின் ஆண்டு மலர், நந்தன் ஆகிய பத்திரிகைகளிலும் பிரசுரமாயின. 1940-ல் புதுமைப்பித்தனின் கதைகள் என்ற அவரது சிறுகதைத் தொகுப்பு வெளியானது.

அக உத்வேகத்தின் சாத்தியங்களை மட்டும் நம்பி எழுதும் பாணி புதுமைப்பித்தனுடையது. கதை வடிவம், நடை ஆகியவை பற்றித் தனிக் கவனம் ஏதும் எடுத்துக் கொள்ளவில்லை. அவரது சிறந்த படைப்புகள், எழுதும் கணத்தில் உருவாகும் தன்னிச்சையான வல்லமையுடன் உள்ளன.

புதுமைப்பித்தனின் இலக்கியத் தளம் மிக விரிவானது. திகில் கதைகள், வேடிக்கைக் கதைகள், தத்துவக் கதைகள், மிகை யதார்த்தக் கதைகள், உருவகக் கதைகள், இயல்பு சித்தரிப்புக் கதைகள் என்று பல்வேறு வகைகளில் அவர் கதைகளை எழுதியுள்ளார்.அவரது சமகாலத்து எழுத்தாளர்களான ந. பிச்சமூர்த்தி, கு.ப. ராஜகோபாலன், மௌனி ஆகியோரையும் அவருடன் சேர்த்துச் சொல்வதுண்டு. இந்நால்வருக்கும் உரிய வடிவமாக சிறுகதையே இருந்தது. புதுமைப்பித்தன் 'அன்னையிட்ட தீ' என்ற பெயரில் நாவல் எழுத முயன்றார். முழுமை செய்ய முடியவில்லை. சிறுகதையின் வெவ்வேறு வகையான வடிவங்களையும் போக்குகளையும் இவர்கள் நால்வரும் உருவாக்கினர்.இவர்கள் நால்வருமே மணிக்கொடி என்ற இதழில் எழுதியவர்கள்.

இலக்கிய இடம்

புதுமைப்பித்தனின பெரும்பாலான கதைகள் தாவிச் செல்லும் சொற்றொடர்களில் எள்ளலும் விமரிசனமும் ஒலிக்க அமைந்துள்ளன. விதிவிலக்காக ‘சாப விமோசனம்’ போன்ற கதைகளில் உருவகக் கவித்துவம் கொண்ட நடையும் ‘செல்லம்மாள்’ போன்ற கதைகளில் கச்சிதமான சித்தரிப்பு நடையும் உள்ளன. சிறுகதை வடிவம் மிகையின்றி அமைந்த புதுமைப்பித்தன் கதைகள் அனேகமாக ஏதுமில்லை. ஆனால், அவ்வடிவம் பற்றிய தெளிவானதொரு பிரக்ஞை அவரிடம் இருந்ததன் தடயமும் எல்லாக் கதைகளிலும் உள்ளது.

புதுமைப்பித்தனின் விமரிசகர்கள், அவர் தன் கதைப்பாணியையும் நடையையும் அடிக்கடி மாற்றிக்கொண்டது வலுவான தேடல் இல்லாமையினால்தான் என்றும் பெரும் படைப்பாளிகள் எவரிடமும் இத்தகைய பதற்றம் இருந்ததில்லை என்றும் சுட்டிக் காட்டுகிறார்கள். உத்தி விஷயத்தில் புதுமைப்பித்தன் கொண்ட மிகையான பரபரப்பு அவருடைய மிகப் பெரிய பலவீனம் என்பதில் ஐயமில்லை. எல்லாப் படைப்புகளிலும் ஊடுருவும் தன்முனைப்பு மிக்க படைப்பாளியின் குரல், வடிவம் கோரும் முழுமையைத் தர முயலாத பொறுமையின்மை, கரு முதிரும் முன்பே எழுத நேரும் அவசரம் முதலியவை புதுமைப்பித்தனின் பெரும் குறைபாடுகள். ஆனால் சமரசமின்றி தன் அந்தரங்கத்தை நோக்கிய பாய்ச்சலை மேற்கொண்டவர் அவர். அத்தீவிரத்தைப் பிற ஈடுபாடுகள் திசை திருப்ப அவர் அனுமதித்ததில்லை. அதுவே அவரைப் பெரும் படைப்பாளியாக ஆக்குகிறது.

புதுமைப்பித்தன் இலக்கியத் திறனாய்வுகளையும் எழுதி இருக்கிறார்.

திரைப்படைத்துறை

ஜெமினி நிறுவனத்தின் ஔவை மற்றும் காமவல்லி படங்களில் பணிபுரிந்தார். பின்பு திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான "பர்வதகுமாரி புரொடக்ஷன்ஸ்"-ஐத் துவங்கி 'வசந்தவல்லி' என்ற படத்தைத் தயாரிக்க முயன்று தோல்வியுற்றார். எம். கே. தியாகராஜ பாகவதரின் 'ராஜமுக்தி' திரைப்படத்திற்கு வசனம் எழுதுவதற்காகப் புனேவில் சில மாதங்கள் வாழ்ந்தார். அங்கே ஏற்பட்ட தீவிர காசநோயின் காரணமாக தன் மனைவியின் வீடான திருவனந்தபுரத்திற்கு திரும்பினார்.

விவாதங்கள்

  • அ. புதுமைப்பித்தனுக்கும் கல்கிக்கும் நடந்த தழுவல் குறித்த விவாதம் [ரசமட்டம் கட்டுரைகள்]
  • ஆ. மூனாவருணாசலமே மூடா விமரிசன கவிதை.- மு.அருணாசலம், இன்றைய தமிழ் உரைநடை என்ற தன் நூலில் மணிக்கொடி இயக்கத்தை குறிப்பிடாமல் விட்டமைக்காக பாடியது.

இறுதிக்காலம்

புதுமைப்பித்தன் ஜூன் 30, 1948 அன்று திருவனந்தபுரத்திலிருந்த தன் மனைவியின் பிறந்த வீட்டில் காசநோயின் காரணமாக மறைந்தார்.

படைப்புகள்

கவிதைகள்
  • திரு ஆங்கில ஆசான் தொண்டரடிப்பொய்யாழ்வார் வைபவம்
  • மூனாவருணாசலமே மூடா
  • இணையற்ற இந்தியா
  • செல்லும் வழி இருட்டு
சிறுகதைகள்
  1. அகல்யை
  2. செல்லம்மாள்
  3. கோபாலய்யங்காரின் மனைவி
  4. இது மிஷின் யுகம்
  5. கடவுளின் பிரதிநிதி
  6. கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்
  7. படபடப்பு
  8. ஒரு நாள் கழிந்தது
  9. தெரு விளக்கு
  10. காலனும் கிழவியும்
  11. பொன்னகரம்
  12. இரண்டு உலகங்கள்
  13. மனித யந்திரம்
  14. ஆண்மை
  15. ஆற்றங்கரைப் பிள்ளையார்
  16. அபிநவ் ஸ்நாப்
  17. அன்று இரவு
  18. அந்த முட்டாள் வேணு
  19. அவதாரம்
  20. பிரம்ம ராக்ஷஸ்
  21. பயம்
  22. டாக்டர் சம்பத்
  23. எப்போதும் முடிவிலே இன்பம்
  24. ஞானக் குகை
  25. கோபாலபுரம்
  26. இலக்கிய மம்ம நாயனார் புராணம்
  27. 'இந்தப் புரவி'
  28. காளி கோவில்
  29. கபாடபுரம்
  30. கடிதம்
  31. கலியாணி
  32. கனவுப் பெண்
  33. காஞ்சனை
  34. கண்ணன் குழல்
  35. கருச்சிதைவு
  36. கட்டிலை விட்டிறங்காக் கதை
  37. கட்டில் பேசுகிறது
  38. கவந்தனும் காமனும்
  39. கயிற்றரவு
  40. கேள்விக்குறி
  41. கொடுக்காப்புளி மரம்
  42. கொலைக்காரன் கை
  43. கொன்ற சிரிப்பு
  44. குப்பனின் கனவு
  45. குற்றவாளி யார்?
  46. மாயவலை
  47. மகாமசானம்
  48. மனக்குகை ஓவியங்கள்
  49. மன நிழல்
  50. மோட்சம்
  51. 'நானே கொன்றேன்!'
  52. நல்ல வேலைக்காரன்
  53. நம்பிக்கை
  54. நன்மை பயக்குமெனின்
  55. நாசகாரக் கும்பல்
  56. நிகும்பலை
  57. நினைவுப் பாதை
  58. நிர்விகற்ப சமாதி
  59. நிசமும் நினைப்பும்
  60. நியாயம்
  61. நியாயந்தான்
  62. நொண்டி
  63. ஒப்பந்தம்
  64. ஒரு கொலை அனுபவம்
  65. பால்வண்ணம் பிள்ளை
  66. பறிமுதல்
  67. பாட்டியின் தீபாவளி
  68. பித்துக்குளி
  69. பொய்க் குதிரை
  70. 'பூசனிக்காய்'அம்பி
  71. புரட்சி மனப்பான்மை
  72. புதிய கூண்டு
  73. புதிய கந்த புராணம்
  74. புதிய நந்தன்
  75. புதிய ஒளி
  76. ராமனாதனின் கடிதம்
  77. சாப விமோசனம்
  78. சாளரம்
  79. சாமாவின் தவறு
  80. சாயங்கால மயக்கம்
  81. சமாதி
  82. சாமியாரும் குழந்தையும் சீடையும்
  83. சணப்பன் கோழி
  84. சங்குத் தேவனின் மர்மம்
  85. செல்வம்
  86. செவ்வாய் தோஷம்
  87. சிற்பியின் நரகம்
  88. சித்தம் போக்கு
  89. சித்தி
  90. சிவசிதம்பர சேவுகம்
  91. சொன்ன சொல்
  92. சுப்பையா பிள்ளையின் காதல்கள்
  93. தனி ஒருவனுக்கு
  94. தேக்கங் கன்றுகள்
  95. திறந்த ஜன்னல்
  96. திருக்குறள் குமரேச பிள்ளை
  97. திருக்குறள் செய்த திருகூத்து
  98. தியாகமூர்த்தி
  99. துன்பக் கேணி
  100. உணர்ச்சியின் அடிமைகள்
  101. உபதேசம்
  102. வாடாமல்லிகை
  103. வாழ்க்கை
  104. வழி
  105. வெளிப்பூச்சு
  106. வேதாளம் சொன்ன கதை
  107. விபரீத ஆசை
  108. விநாயக சதுர்த்தி
  109. தமிழ் படித்த பெண்டாட்டி
மொழிபெயர்ப்புகள்

புதுமைப்பித்தன் தன் வாழ்நாளில் மொழிபெயர்த்த உலக இலக்கிய சிறுகதைகள் 58 ஆகும். அவற்றின் பட்டியல் பின்வருமாறு.

  1. ஆஷாட பூதி
  2. ஆட்டுக் குட்டிதான்
  3. அம்மா
  4. அந்தப் பையன்
  5. அஷ்டமாசித்தி
  6. ஆசிரியர் ஆராய்ச்சி
  7. அதிகாலை
  8. பலி
  9. சித்திரவதை
  10. டைமன் கண்ட உண்மை
  11. இனி
  12. இந்தப் பல் விவகாரம்
  13. இஷ்ட சித்தி
  14. காதல் கதை
  15. கலப்பு மணம்
  16. கனவு
  17. காரையில் கண்ட முகம்
  18. கிழவி
  19. லதீபா
  20. மகளுக்கு மணம் செயது வைத்தார்கள்
  21. மணிமந்திரத் தீவு
  22. மணியோசை
  23. மார்க்ஹீம்
  24. மிளிஸ்
  25. முதலும் முடிவும்
  26. நாடகக்காரி
  27. நட்சத்திர இளவரசி
  28. ஓம் சாந்தி! சாந்தி!
  29. ஒரு கட்டுக்கதை
  30. ஒருவனும் ஒருத்தியும்
  31. பைத்தியகாரி
  32. பளிங்குச் சிலை
  33. பால்தஸார்
  34. பொய்
  35. பூச்சாண்டியின் மகள்
  36. ராஜ்ய பாதை
  37. ரோஜர் மால்வினின் ஈமச்சடங்கு
  38. சாராயப் பீப்பாய்
  39. சகோதரர்கள்
  40. சமத்துவம்
  41. ஷெஹர்ச்சாதி - கதை சொல்லி
  42. சிரித்த முகக்காரன்
  43. சுவரில் வழி
  44. தாயில்லாத குழந்தைகள்
  45. தையல் மிஷின்
  46. தந்தை மகற்காற்றும் உதவி
  47. தெய்வம் கொடுத்த வரம்
  48. தேசிய கீதம்
  49. துன்பத்திற்கு மாற்று
  50. துறவி
  51. உயிர் ஆசை
  52. வீடு திரும்பல்
  53. ஏ படகுக்காரா!
  54. யாத்திரை
  55. எமனை ஏமாற்ற
  56. யுத்த தேவதையின் திருமுக மண்டலம்
  57. தர்ம தேவதையின் துரும்பு

இவை தவிர புதுமைப்பித்தன் பிற ஆக்கங்கள்,

  • பிரேத மனிதன் - மேரி ஷெல்லி
  • ஷேக்ஸ்பியர் நாடகங்கள்
பிற படைப்புகள்
  • சிற்றன்னை (குறுநாவல்)
  • ஆண்மை
  • நாரத ராமாயணம்
அரசியல் நூல்கள்
  • ஃபாசிஸ்ட் ஜடாமுனி
  • கப்சிப் தர்பார்
  • ஸ்டாலினுக்குத் தெரியும்
  • அதிகாரம்

உசாத்துணைகள்

  • நவீன தமிழிலக்கிய அறிமுகம் - ஜெயமோகன்(2002)
  • நவீன தமிழிலக்கிய முன்னோடிகள் (முதல்சுவடு)- ஜெயமோகன்(2003)
  • புதுமைப்பித்தன் வரலாறு - தொ.மு.சி.ரகுநாதன்
  • புதுமைப்பித்தன்-சிறுகதைகள்


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.