நா. முத்துக்குமார்: Difference between revisions
Tamizhkalai (talk | contribs) |
(Edited error in template) |
||
Line 13: | Line 13: | ||
== இலக்கிய வாழ்க்கை == | == இலக்கிய வாழ்க்கை == | ||
====== தொடக்கம் ====== | ====== தொடக்கம் ====== | ||
Line 139: | Line 139: | ||
* [https://www.youtube.com/watch?v=MSNp799C1PE&pp=ygUabmEuIG11dGh1a3VtYXIgdGFtaWwgc29uZ3M%3D நா. முத்துக்குமார் பாடல்கள் யூ ட்யூப்] | * [https://www.youtube.com/watch?v=MSNp799C1PE&pp=ygUabmEuIG11dGh1a3VtYXIgdGFtaWwgc29uZ3M%3D நா. முத்துக்குமார் பாடல்கள் யூ ட்யூப்] | ||
== | == அடிக்குறிப்புகள் == | ||
<references />{{Second review completed}} | <references /> | ||
{{Second review completed}} | |||
[[Category:Tamil Content]] |
Revision as of 07:38, 7 May 2024
நா. முத்துக்குமார் (நாகராஜன் முத்துக்குமார்) (ஜூலை 12, 1975 - ஆகஸ்ட் 14, 2016) தமிழ்க் கவிஞர், எழுத்தாளர், திரைப்படப் பாடலாசிரியர். நூற்றுக்கணக்கான படங்களுக்குப் பாடல்கள் எழுதினார். பட்டாம்பூச்சி பதிப்பகம் என்ற பதிப்பக நிறுவனத்தைத் தொடங்கி நடத்தினார். தனது பாடல்களுக்காக தேசிய விருது, சிறந்த பாடலாசிரியர் விருது உள்படப் பல்வேறு விருதுகள் பெற்றார்.
பிறப்பு, கல்வி
நா. முத்துக்குமார், ஜூலை 12, 1975-ல், காஞ்சிபுரத்தில் உள்ள கன்னிகாபுரம் என்ற சிற்றூரில், நாகராஜன் - சிவலட்சுமி இணையருக்குப் பிறந்தார். பள்ளிக் கல்வியை ஐயம்பேட்டையில் உள்ள தொடக்கப் பள்ளியிலும், மேல்நிலைக் கல்வியை காஞ்சிபுரம் ஆண்டர்சன் மேல்நிலைப் பள்ளியிலும் கற்றார். காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலை இயற்பியல் பயின்றார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் முதுகலை தமிழ் இலக்கியம் கற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் ‘தமிழ்த் திரைப்படப் பாடல்கள் - ஓர் ஆய்வு’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.
தனி வாழ்க்கை
நா. முத்துக்குமார் தொடக்க காலத்தில் மிட்டாய் விற்பனை, ஊதுவத்தி விற்பனை, ஷாம்பு விற்பனை, மீன் விற்பனை, துணி வியாபாரம் எனப் பல தொழில்களைச் செய்து நஷ்டமடைந்தார். பின் சென்னைக்குச் சென்று திரைப்படத்துறையில் சேர்ந்து பணியாற்றினார்.
நா. முத்துக்குமாரின் மனைவி ஜீவலட்சுமி. மகன்: ஆதவன். மகள்: யோகலட்சுமி.
இலக்கிய வாழ்க்கை
தொடக்கம்
நா. முத்துக்குமார், தன் தந்தை தன் நூலகத்தில் சேகரித்து வைத்திருந்த நூல்களை வாசித்து இலக்கிய ஆர்வம் பெற்றார். இலக்கிய இதழ்களை வாசித்து கவிதைகளின் நுட்பங்களை அறிந்தார். பள்ளியில் படிக்கும்போதே கவிதைகள் எழுதினார். அவற்றைத் தொகுத்து தனது 16-ம் வயதில், ‘தூசிகள்’ என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டார்.
இதழ்களில் கவிதைகள்
காஞ்சிபுரத்தில் இயங்கி வந்த கம்பன் கழகம், கவிதைச் சோலை, சிந்தனையாளர் பேரவை, திருக்குறள் மன்றம் போன்ற பல்வேறு இலக்கிய அமைப்புகளின் நிகழ்வில் பங்கேற்றுக் கவிதை வாசித்தார். ‘இலக்கிய வட்டம்’ என்ற அமைப்பை நடத்தி வந்த வெ. நாராயணன் மூலம் லா.ச. ராமாமிர்தம் தொடங்கி, ஆர்.கே. செல்வமணி வரை பலரது அறிமுகம் பெற்றார்.
கணையாழி இதழில் வெளிவந்த நா. முத்துக்குமாரின் ‘தூர்’ கவிதை, சிறந்த கவிதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசளிக்கப்பட்டது. அதனை அவ்வாண்டில் தமிழில் வெளிவந்த சிறந்த கவிதையாக மதிப்பிட்டார் சுஜாதா. கணையாழி, ஆனந்த விகடன் போன்ற இதழ்களிலும் தூர் கவிதை குறித்தும், முத்துக்குமார் குறித்தும் எழுதினார். அது முதல் பரவலான கவனம் பெற்றார்.
நா. முத்துக்குமார் இதழ்களில் பல கவிதைகளை, தொடர்களை எழுதினார். அவரது கவிதைகள் ஆங்கிலம், மலையாளம், ஃப்ரெஞ்சு, ஜெர்மன் போன்ற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன. நா. முத்துக்குமாரின் கவிதை நுல்கள் சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை-லயோலா கல்லு]ரி, பச்சையப்பன் கல்லு]ரி, கோவை பாரதியார் பல்கலைக்கழகம், மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் போன்றவற்றில் பாட நூல்களாக வைக்கப்பட்டன.
நா. முத்துக்குமாரின் படைப்புகளை ஆய்வு செய்து பல மாணவர்கள் ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டங்களைப் பெற்றனர்.
திரை வாழ்க்கை
நா. முத்துக்குமார், நண்பர் ராஜராஜனின் மூலம் திரையுலக வாய்ப்புகளைப் பெற்றார். நா. முத்துக்குமாரின் திறமையை அறிந்த பட்டுக்கோட்டை பிரபாகர் முத்துக்குமாரை ஊக்குவித்தார். பட்டுக்கோட்டை பிரபாகர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, நடிகை குட்டி பத்மினியின் அண்ணன் இயக்குநர் வெங்கடேஷ் சக்கரவர்த்தியின் இயக்கத்தில் உருவான ‘பரமபதம்’ என்னும் தொலைக்காட்சித் தொடரில் நா. முத்துக்குமார் துணை இயக்குநராகப் பணியாற்றினார். இயக்குநர் பாலுமகேந்திராவிடம் நான்கு ஆண்டுகள் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். 'கிரீடம்', 'வாரணம் ஆயிரம்' போன்ற படங்களுக்கு வசனம் எழுதினார்.
திரைப்பாடலாசிரியர்
நா. முத்துக்குமார், கவிஞர் அறிவுமதி மூலம் திரைப்பாடல் எழுதும் நுணுக்கங்களைக் கற்றார். இயக்குநர் சீமான் இயக்கிய ‘வீர நடை’ படத்தில், ‘முத்துமுத்தா பூத்திருக்கும் முல்லைப்பூவை புடிச்சிருக்கு’ என்னும் தனது முதல் பாடலை எழுதி, திரைப்பாடலாசிரியராக அறிமுகமானார். தொடர்ந்து 7ஜி ரெயின்போ காலனி, நந்தா, வெயில், புதுப்பேட்டை, கற்றது தமிழ், காதல், காதல் கொண்டேன் போன்ற பல படங்களுக்குப் பாடல்கள் எழுதி தமிழ்த் திரையுலகின் தவிர்க்க முடியாத திரைப்பாடலாசிரியராக நிலைபெற்றார்.
நா. முத்துக்குமார் இளையராஜா, ஏ. ஆர். ரஹ்மான், தேவா, வித்யாசாகர், பரத்வாஜ், யுவன் ஷங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், ஜி.வி. பிரகாஷ்குமார், டி. இமான், விஜய் ஆண்டனி, தேவிஸ்ரீ பிரசாத், அனிருத் என தமிழின் முன்னணி இசையமைப்பாளர்கள் பலருக்கும் பாடல்கள் எழுதினார். யுவன் ஷங்கர் ராஜா இசையில் அதிகப் பாடல்களை எழுதினார். நா.முத்துக்குமார் தொடர்ந்து பத்தாண்டுகள் தமிழ் சினிமாவின் முதன்மை பாடலாசிரியராகத் திகழ்ந்தார்.
நா. முத்துக்குமார் 2000-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதினார்.
பதிப்பு
நா. முத்துக்குமார் பட்டாம்பூச்சி பதிப்பகம் என்ற பதிப்பக நிறுவனத்தைத் தொடங்கிப் பல நூல்களை வெளியிட்டார்.
விருதுகள்
- இளம் கவிஞருக்கான அமெரிக்க விருது - 2004
- கஜினி திரைப்படத்திற்காக தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியருக்கான விருது - 2005
- வெயில் திரைப்படத்திற்காக ஃபிலிம்பேர் வழங்கிய சிறந்த பாடலாசிரியருக்கான விருது - 2006
- சிறந்த கவிதைக்கான கண்ணதாசன் விருது - 2007
- அயன் திரைப்படத்திற்காக ஃபிலிம்பேர் அளித்த சிறந்த பாடலாசிரியருக்கான விருது - 2009
- தங்க மீன்கள் திரைப்படத்தின் ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ பாடலுக்கு, சிறந்த பாடலுக்கான தேசிய விருது - 2013
- சைவம் திரைப்படத்தின் ‘அழகே அழகே’ பாடலுக்கு, சிறந்த பாடலுக்கான தேசிய விருது – 2014
- தமிழக அரசின் கலைமாமணி விருது - 2014
- SIIMA தென்னிந்திய சர்வதேசப் பாடலாசிரியர் விருது - 2014
- புதிய தலைமுறை தமிழன் விருது - 2015
- இசைஞானி இளையராஷாவின் இளம் சாதனையாளர் விருது - 2016
- தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருது - 2017
- சிறந்த பாடலாசிரியருக்கான ஆனந்தவிகடன் விருது - 2017
- சிறந்த பாடலாசிரியருக்கான இசை விருது – 2021
- சிற்பி இலக்கிய விருது
- ஈரோடு தமிழன்பன் விருது
- முகில் அறக்கட்டளை அளித்த தமிழ் முழக்கம் விருது
- சிறந்த கவிதை நு]லுக்கான பாரத ஸ்டேட் வங்கியின் முதல் பரிசு - பட்டாம்பூச்சி விற்பவன் நூல்
- மற்றும் பல
பாடல்கள்
நா. முத்துக்குமாரின் பாடல்களில் சில…
- சலாம் குலாமு...
- உன் பேர் சொல்ல ஆசை தான்...
- எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை
- கொடுவா மீசை அருவா பார்வை
- தேவதையைக் கண்டேன்..
- நெஞ்சோடு கலந்திடு உறவாலே..
- தொட்டுத் தொட்டுப் பேசும் கண்கள்...
- சென்னை செந்தமிழ்...
- கனாக்காணும் காலங்கள்..
- கண்பேசும் வார்த்தைகள்...
- நினைத்து நினைத்துப் பார்த்தேன்...
- காதல் வளர்த்தேன்...
- காதல் யானை வருகுது...
- என்னடி மாயாவி நீ..
- பறவையே எங்கு இருக்கிறாய்...
- வெயிலோடு விளையாடி...
- ஐ மிஸ் யூ மிஸ் யூடா
- டாக்சி டாக்சி..
- புள்ளினங்காள்...
மறைவு
நா. முத்துக்குமார் ஆகஸ்ட் 14, 2016 அன்று மஞ்சள் காமாலை நோய் பாதிப்பால் காலமானார்.
நினைவு
நா. முத்துக்குமாரின் நினைவைப் போற்றும் வகையில் அவரது இதழியல் மற்றும் திரையுலக நண்பர்களும், பதிப்பாளர்களும் இணைந்து ‘ஆனந்த யாழ்’ (மனதை நனைக்கும் கண்ணீர் மழை) என்ற நூலை வெளியிட்டனர்.
மதிப்பீடு
கண்ணதாசன், வைரமுத்துவுக்குப் பிறகு கற்பனை நயத்தையும், எளிமையையும், தத்துவக் கருத்துக்களையும் கவிதை வடிவில் தமிழ்த் திரையுலகிற்குத் தந்த திரைப்பாடலாசிரியர்களுள் முதன்மையானவராக நா. முத்துக்குமார் அறியப்படுகிறார்.
நா. முத்துக்குமார் பற்றி ஜெயமோகன், “நா. முத்துக்குமார் ஒருவேளை அவரது சினிமாப்பாடல்களுக்காகவே நினைக்கப்படுவார். இலக்கியத்தில் அவர் எண்ணிய எதையும் எழுத நேரவில்லை. அதற்கான மொழியை அமைத்துக்கொள்ள அவருக்குக் கூடவில்லை. ஆனால் ஓர் இலக்கியவாதியாக ஆகியிருக்கக்கூடிய அனைத்துத் தகுதிகளும் கொண்டவர். நுணுக்கமான ரசனையும் தொடர்ச்சியான வாசிப்பும் கொண்டவர். வாசித்தவற்றைப்பற்றிப் பேசவும் திறமைகொண்டவர்[1]” என்று குறிப்பிட்டார்.
நூல்கள்
கவிதைத் தொகுப்பு
- தூசிகள்
- குழந்தைகள் நிறைந்த வீடு
- பச்சையப்பனில் இருந்து ஒரு தமிழ் வணக்கம்
- நியூட்டனின் மூன்றாம் விதி
- பட்டாம்பூச்சி விற்பவன்
- என்னை சந்திக்க கனவில் வராதே
- நா. முத்துக்குமார் கவிதைகள்
- ஆனா ஆவன்னா…
கட்டுரைத் தொகுப்பு
- பால காண்டம்
- கண் பேசும் வார்த்தைகள்
- கிராமம் நகரம் மாநகரம்
- வேடிக்கை பார்ப்பவன்
- அணிலாடும் முன்றில்
- கிராமம் நகரம் மாநகரம்
- நினைவோ ஒரு பறவை
நாவல்
- சில்க் சிட்டி (முற்றுப்பெறவில்லை)
உசாத்துணை
- பாலகாண்டம், நா. முத்துக்குமார், பட்டாம்பூச்சி பதிப்பகம், முதல் பதிப்பு: 2005
- கண் பேசும் வார்த்தைகள், நா. முத்துக்குமார், பட்டாம்பூச்சி பதிப்பகம், முதல் பதிப்பு: 2005
- வேடிக்கை பார்ப்பவன், நா. முத்துக்குமார், விகடன் பிரசுரம், பதிப்பு: 2017
- நா. முத்துக்குமார் வாழ்க்கைக் குறிப்பு
- நா. முத்துக்குமார் நேர்காணல், தென்றல் இதழ்
- நா. முத்துக்குமார் சிறப்புக் கட்டுரை: விகடன்
- நா. முத்துக்குமார்: யுகபாரதி: நக்கீரன் கட்டுரை
- நா. முத்துக்குமார் நினைவுக் கட்டுரை
- நா. முத்துக்குமாரின் கடைசி பாடல்
- நா. முத்துக்குமார் பாடல்கள்
- நா. முத்துக்குமார் நூல்கள்: அமேசான் தளம்
- நா. முத்துக்குமார் பாடல்கள் யூ ட்யூப்
அடிக்குறிப்புகள்
✔ Second review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.