under review

க. கைலாசபதி: Difference between revisions

From Tamil Wiki
(Corrected error in line feed character)
(Added First published date)
 
Line 68: Line 68:
* [https://www.noolaham.net/project/68/6770/6770.pdf க. கைலாசபதி ஆக்கங்கள்: தேர்ந்த நூல்விவரப்பட்டியல்: நூலகம்]
* [https://www.noolaham.net/project/68/6770/6770.pdf க. கைலாசபதி ஆக்கங்கள்: தேர்ந்த நூல்விவரப்பட்டியல்: நூலகம்]
* [https://marxistreader.app/2022/07/26/from-here-to-where-kailasapathi-kalanithi/ இங்கிருந்து எங்கே…?: க. கைலாசபதி]
* [https://marxistreader.app/2022/07/26/from-here-to-where-kailasapathi-kalanithi/ இங்கிருந்து எங்கே…?: க. கைலாசபதி]
{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|02-Mar-2023, 20:43:41 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:ஈழத்து ஆளுமைகள்]]
[[Category:ஈழத்து ஆளுமைகள்]]

Latest revision as of 13:48, 13 June 2024

க. கைலாசபதி (நன்றி: geotamil)

க. கைலாசபதி (ஏப்ரல் 5, 1933 - டிசம்பர் 6, 1982) ஈழத்து தமிழ் எழுத்தாளர், இதழாசிரியர், பேராசிரியர், ஒப்பியல் ஆய்வாளர், இலக்கிய விமர்சகர், திறனாய்வாளர். ஈழத்தின் கலை, இலக்கிய விமர்சகர்களில் குறிப்பிடத்தகுந்தவர். மார்க்சிய நோக்கிலான இலக்கியத்தின் வளர்ச்சிக்கு பங்காற்றியவர்.

பிறப்பு, கல்வி

க. கைலாசபதி மலேசியாவின் கோலாலம்பூரில் இளையதம்பி, தில்லைநாயகி நாகமுத்து இணையருக்கு ஏப்ரல் 5, 1933-ல் பிறந்தார். தந்தை மலேசியாவில் பணிபுரிந்தார். ஆரம்பக் கல்வியை கோலாலம்பூரில் பயின்றார். 1946-ல் இலங்கை வந்தார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இடை நிலைக்கல்வி கற்றார். கொழும்பு ரோயல் கல்லூரியில் உயர் நிலைக்கல்வி பயின்றார்.

1953-57 ஆண்டுகளில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழும் மேலைத் தேய வரலாறும் படித்து இளங்கலை (சிறப்பு) பட்டம் பெற்றார். க. கணபதிப்பிள்ளை, வி. செல்வநாயகம், சு. வித்தியானந்தன் ஆகியோர் இவரின் ஆசிரியர்கள். பர்மிங்காம் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து, பேராசிரியர் ஜார்ஜ் தாம்சனின் வழிகாட்டுதலில் ”தமிழ் வீரயுகக் கவிதை” (Tamil Heroic Poetry) என்னும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் மூலம் இந்நூலை வெளியிட்டார்.

தனி வாழ்க்கை

க. கைலாசபதி சர்வமங்களம் என்பவரை மணந்து கொண்டார். குழந்தைகள் சுமங்களா, பவித்ரா.

க. கைலாசபதி

ஆசிரியப்பணி

க. கைலாசபதி 1966-ல் இலங்கை திரும்பி பேராதனைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். 1969-ல் கொழும்பு பல்கலைக்கழக்த்தில் இடமாற்றம் பெற்றார். 1974-ல் இலங்கைப் பல்கலைக்கழக வித்தியாலங்கார பலகலைக்கழகத்தில் தமிழ் இந்து நாகரிகத்துறைத் தலைவரானார். 1977 வரை இப்பதவியில் இருந்தார். 1974-ல் இலங்கைப்பல்கலைக்கழக யாழ்ப்பாண வளாகம் உருவான போது அதன் முதல் தலைவரானார். அவ்வளாகத்தின் தமிப்பேராசிரியர் பணியையும் ஏற்றார். யாழ் பல்கலைக்கழகம் தனித்துவமாக உருவான போது அதன் கலைப்பீடாதிபதியாக ஆனார். அமெரிக்காவில் உள்ள கார்னல் பல்கலைக் கழகத்தில்(1977), வருகைதரு பேராசிரியராகப் பணிபுரிந்தார்.

ஈழத்து பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் 'மூலபாடத்திறனாய்வு' நூலை அறிமுகப்படுத்தினார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் தமிழ் சிறப்பு மாணவர்களுக்கு ஈழத்து இலக்கியம் என்ற பாடத்திட்டதை முதன்முதலாக அறிமுகப்படுத்தினார். யாழ் பல்கலைக்கழக்த்திலும் இப்பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தினார். ஈழத்து இலக்கியம் தொடர்பான பட்டப்படிப்பு ஆய்வுகளை மேற்கொள்ள வழிகாட்டினார்.

அமைப்புப் பணிகள்

யுனெஸ்கோவுக்கான தேசிய துணைக்குழு, இலங்கை, பாடநூல் ஆலோசனைக்குழு, இலங்கைப் பல்கலைக் கழக மக்கள் தொடர்பு ஆய்வுக் கழகம், இலங்கை வானொலி தமிழ் நிகழ்ச்சி ஆய்வுக்குழு, இலங்கைப் பல்கலைக் கழகத்தின் தமிழ் இலக்கியக் குழு, நாட்டியக் குழு முதலிய பல்வேறு அமைப்புகளில் உறுப்பினராகவும், தலைவராகவும் செயல்பட்டார்.

ஒப்பியல் ஆய்வு

”இரு மகா கவிகள்” என்னும் நூலில் ரவீந்திரநாத் தாகூரையும், பாரதியாரையும் ஆய்வு செய்தார். 'பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும்' என்னும் நூலை மார்க்சியக் கண்ணோட்டத்தில் ஆய்வு செய்தார். திறனாய்வு நூல்கள் பல எழுதினார்.

இதழியல்

கொழும்பில் 'லேக் ஹவுஸ்' பத்திரிகை நிறுவனத்தில் இணைந்து பத்திரிகைத் தொழிலில் ஈடுபட்டார். 1957-ல் இந்நிறுவனம் வெளியிட்டுவந்த தமிழ் நாளேடான தினகரனில் துணை ஆசிரியரானார். 1958-ல் பிரதம ஆசிரியராக ஆனார். கவிதை, சிறுகதை, நாவல் போன்ற இலக்கிய ஆக்கங்கள், ஈழத்து மண் சார்ந்த எழுத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து படைப்புகளை பிரசுரம் செய்தார். 1961 வரை தினகரனில் பணியாற்றினார்.

க. கைலாசபதி

இலக்கிய வாழ்க்கை

ஈழத்து இலக்கிய உலகில் தாக்கம் கொண்டிருந்த முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார். முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தின் வழிகாட்டியாக இருந்தார். நவீன தமிழ் இலக்கியச் சிறப்புகளைப் பற்றிய கட்டுரைகள் பல எழுதினார். ஜனமகன், உதயன், அம்பலத்தான், அம்பலத்தாடி, அபேதன் போன்ற புனைபெயர்களில் எழுதினார். இலங்கையிலிருந்து வெளிவந்த தொழிலாளி, தேசாபிமானி, செம்பதாகை, ரெட்பானர் முதலிய பொதுவுடைமை இயக்க இதழ்களில் கட்டுரைகள் எழுதினார். தமிழ்நாட்டு இதழ்களான ‘தாமரை’ ‘சாந்தி’, ‘சரஸ்வதி’, ‘செம்மலர்’, ‘தீக்கதிர்’, ‘ஜனசக்தி’, ‘ஆராய்ச்சி’, முதலியவற்றில் ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதினார்.

க. கைலாசபதி பதினேழு நூல்களை வெளியிட்டார். பல கட்டுரைகளையும் எழுதினார். ஆங்கிலத்தில் ஆறு நூல்கள் வெளியாயின. இலக்கியம் தவிர்த்து சமயம், பண்பாடு, சமுதாயம், அரசியல் போன்ற பல துறைகள் சார்ந்த நூல்களையும் எழுதினார். அணிந்துரைகள், நூல் மதிப்புரைகள், ஆய்வுக்கட்டுரைகள் பல எழுதினார். 1979-ல் தன் சீன பயண அனுபவத்தை தன் மனைவியுடன் இணைந்து 'மக்கள் சீனம்-காட்சியும் கருத்தும்' என்ற நூலாக வெளியிட்டார்.

க. கைலாசபதி பேச்சாளர். 1982-ல், "ஈழத்துத் தமிழ்ச் சமுதாயத்தின் பண்பாட்டு மற்றும் இன உணர்வுகள்" என்னும் தலைப்பில் புனிதவதி திருச்செல்வம் நினைவுப் பேருரை குறிப்பிடத்தகுந்த ஒன்று. வானொலி உரைகள் பல ஆற்றினார்.

இலக்கிய இடம்

”பல்கலைக்கழக மட்டத்தில் ஆராய்ச்சி அறிஞராகத் திகழ்ந்த பேராசிரியர் கைலாசபதி நல்ல இலக்கியக்காரர் மத்தியில் ஓர் இலக்கியவாதியாகத் திகழ்ந்தார். நவீன இலக்கிய வளர்ச்சியை மதிப்பிடுபவராகவும் படைப்பாளிகளை ஊக்குவிப்பவராகவும் பணி செய்தார். திறனாய்வு தொடர்பான இப்பணி அவரது ஆரய்ச்சி திறனுக்குரிய சிறப்புடையது” என சு. வித்தியானந்தன் மதிப்பிடுகிறார்.

“தமிழ் திறனாய்வு உலகிற்கு கைலாசபதியின் பங்களிப்பு நிலைத்திருக்கக்கூடிய சிறப்புடையது. அவருடைய ஒப்பிய சிந்தனையும் திறனாய்வுக்குப் புதுப்பாதை போட்டுக் கொடுத்தது. பல ஈழ எழுத்தாளர்களையும், கவிஞர்களையும், திறனாய்வாளர்களையும் தமிழ் மக்களுக்கு அறிமுகபப்டுத்தினார். தமிழகத்து அறிஞர்களை தமிழர்களுக்கு அறிமுகப்படுத்திய பெருமையும் இவருக்கு உண்டு” என பு.சி. கணேசன் மதிப்பிடுகிறார்.

மறைவு

க. கைலாசபதி யாழ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது உடல் நலக் குறைவு காரணமாக தன் நாற்பத்தி ஒன்பதாவது வயதில் டிசம்பர் 6, 1982-ல் காலமானார்.

நூல்கள் பட்டியல்

  • தமிழ் நாவல் இலக்கியம் (1968)
  • ஈழத்துத் தற்காலத் தமிழ்நூற்காட்சி(கமாலுதினுடன்) (1971)
  • கவிதை நயம்(இ.முருகயனுடன்) (1976)
  • சமூகவியலும் இலக்கியமும் (1979)
  • மக்கள் சீனம்-காட்சியும் கருத்தும்(சர்வமங்களத்துடன் இணைந்து) (1979)
  • ஈழத்து இலக்கிய முன்னோடிகள் (1986)
  • சர்வதேச அரசியல் நிகழ்வுகள் (1979-1982)
திறனாய்வு நூல்கள்
  • பண்டைத்தமிழர் வாழ்வும் வழிபாடும் (1966)
  • ஒப்பியல் இலக்கியம் (1969)
  • அடியும் முடியும் (1970)
  • இலக்கியமும் திறனாய்வும் (1976)
  • திறனாய்வுப் பிரச்சினைகள் (1980)
  • நவீன இலக்கியத்தின் அடிப்படைகள் (1980)
  • பாரதி நூல்களும் பாடபேத ஆராய்ச்சியும் (1980)
  • இலக்கியச் சிந்தனைகள் (1983)
  • இரு மகாகவிகள் (1987)
  • பாரதி ஆய்வுகள் (1984)
  • கவிதை நயம் (இ. முருகையனுடன் இணைந்து)
ஆங்கிலம்
  • Tamil Heroic Poetry (Oxford, 1968)
  • The Tamil Purist Movement - A Re-Evalution, Social Scientist
  • The Relation of Tamil and Western Literatures
  • On Art and Literature (1986)
  • On Bharathi (1987)
  • Tamil (co-author A.Shanmugadas)

உசாத்துணை

இணைப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 02-Mar-2023, 20:43:41 IST