குமரி ஆதவன்: Difference between revisions
(Name corrected) |
Tamizhkalai (talk | contribs) No edit summary |
||
Line 1: | Line 1: | ||
[[File:Writer Kumari Aadhavan.jpg|thumb|எழுத்தாளர், கவிஞர் குமரி ஆதவன் ]] | [[File:Writer Kumari Aadhavan.jpg|thumb|எழுத்தாளர், கவிஞர் குமரி ஆதவன் ]] | ||
[[File:Writer Kumari Adhavan.jpg|thumb|குமரி ஆதவன்]] | [[File:Writer Kumari Adhavan.jpg|thumb|குமரி ஆதவன்]] | ||
குமரி ஆதவன் (செ. ஜஸ்டின் பிரான்சிஸ்) (ஆகஸ்ட் 4, 1970) தமிழக எழுத்தாளர். கவிஞர், பேச்சாளர், இதழாளர், பாடலாசிரியர், ஆவணப் பட இயக்குநர், நடிகர் எனப் பல களங்களில் செயல்பட்டார். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். திண்டுக்கல் லியோனி பட்டிமன்றக் குழுவில் பேச்சாளராக இயங்கினார். தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருது உள்படப் பல்வேறு விருதுகள் பெற்றார். | குமரி ஆதவன் (இயற்பெயர் :செ. ஜஸ்டின் பிரான்சிஸ்) (ஆகஸ்ட் 4, 1970) தமிழக எழுத்தாளர். கவிஞர், பேச்சாளர், இதழாளர், பாடலாசிரியர், ஆவணப் பட இயக்குநர், நடிகர் எனப் பல களங்களில் செயல்பட்டார். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். திண்டுக்கல் லியோனி பட்டிமன்றக் குழுவில் பேச்சாளராக இயங்கினார். தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருது உள்படப் பல்வேறு விருதுகள் பெற்றார். | ||
== பிறப்பு, கல்வி == | == பிறப்பு, கல்வி == | ||
Line 128: | Line 128: | ||
== அடிக்குறிப்பு == | == அடிக்குறிப்பு == | ||
<references /> | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
{{First review completed}} |
Revision as of 23:18, 7 June 2023
குமரி ஆதவன் (இயற்பெயர் :செ. ஜஸ்டின் பிரான்சிஸ்) (ஆகஸ்ட் 4, 1970) தமிழக எழுத்தாளர். கவிஞர், பேச்சாளர், இதழாளர், பாடலாசிரியர், ஆவணப் பட இயக்குநர், நடிகர் எனப் பல களங்களில் செயல்பட்டார். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். திண்டுக்கல் லியோனி பட்டிமன்றக் குழுவில் பேச்சாளராக இயங்கினார். தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருது உள்படப் பல்வேறு விருதுகள் பெற்றார்.
பிறப்பு, கல்வி
செ. ஜஸ்டின் பிரான்சிஸ் என்னும் இயற்பெயர் கொண்ட குமரி ஆதவன், ஆகஸ்ட் 4, 1970-ல், கன்யாகுமரி மட்டத்தில் உள்ள குமாரபுரம் என்ற சிற்றூரில், மா. செபாஸ்டின் - மேரி செபாஸ்டின் இணையருக்கு ஐந்தாவது மகனாகப் பிறந்தார். குமாரபுரத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். உயர்நிலை மற்றும் மேல்நிலைக் கல்வியை மணலிக்கரை, புனித மரிய கொரற்றி மேல்நிலைப்பள்ளியில் பயின்றார்.
ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியில் இளங்கலை கணிதம் கற்றார். முதுகலை கணிதத்தில் பட்டம் பெற்றார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முதுகலை தமிழ் இலக்கியம் பயின்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கல்வியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றார். கணிப்பொறி அறிவியலில் பட்டயம் பெற்றார். தமிழ், ஆங்கிலம், நாகாமிக்ஸ் (நாகாலாந்து மொழி) அறிந்தவர்.
தனி வாழ்க்கை
குமரி ஆதவன், நாகாலந்தில் உள்ள கிறிஸ்தவப் பள்ளி ஒன்றில் இரண்டு ஆண்டுகள் கணிதம் மற்றும் கணிப்பொறி ஆசிரியராகப் பணியாற்றினார். மணலிக்கரை நிர்மலா தொழிற்பயிற்சி நிலையத்தில் கணினி ஆசிரியராகப் பணியாற்றினார். 1999 முதல் தான் படித்த புனித மரிய கொரற்றி மேல்நிலைப்பள்ளியிலேயே கணித ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். மனைவி செலின் பள்ளி ஆசிரியை. இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள்.
இலக்கிய வாழ்க்கை
குமரி ஆதவன், பள்ளியில் படிக்கும் போது ஆசிரியர்களின் ஊக்கத்தால் இலக்கிய ஆர்வம் கொண்டார். பேராசிரியர் ஜேசுதாசன், இவருக்கு இலக்கியத்தின் பல புதிய பரிமாணங்களை அறிமுகப்படுத்தினார். குமரி ஆதவன், கவிதை, சிறுகதை, கட்டுரைகளை தினமலர், தமிழ் முரசு, தீக்கதிர், புதியகாற்று, அமுதம், யுகச் சிற்பி, முதற் சங்கு, பூபாளம், உதய தாரகை, கரவொலி, இளைய நிலா, விளக்கு, தென் ஒலி, செண்பக மலர், எதிர்நீச்சல் போன்ற பல இதழ்களில் எழுதினார். விழிப்புணர்வூட்டும் தொடர்களை எழுதினார்.
நூல்கள்
குமரி ஆதவனின் கவிதைகள் தொகுக்கப்பட்டு ’ரத்தம் சிந்தும் தேசம்’ என்ற தலைப்பில், 1998-ல், நூலாக வெளிவந்தது. மறைந்துவரும் நாட்டுப்புற விளையாட்டுக்கள் பற்றிக் கள ஆய்வு செய்து குமரி அமுதன் எழுதியிருக்கும் ’குலைகுலையா முந்திரிக்கா’ ஆய்வு நூல் குறிப்பிடத்தகுந்த ஒன்று. புனித மரியகொரற்றி, தேவசகாயம் பிள்ளை, பேராசிரியர் இரா. தியாகசுவாமி போன்றோர் பற்றி இவர் எழுதியிருக்கும் வாழ்க்கை வரலாறுகள் முக்கியமானவை. குமரி ஆதவன் 21 நூல்கள் எழுதினார். ஆறு நூல்கள் நூலாக்கம் பெற உள்ளன.
குமரி ஆதவனின் ’சிகரம் தொடு’, ’கைதிகள்’ போன்ற கவிதை நூல்களும், ’குலைகுலையா முந்திரிக்கா’ என்ற நூலும் கல்லூரி மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டன. இவரது ’ஆடுவோம் அகமகிழ்வோம்’ என்ற கட்டுரை கேரளாவில் பள்ளி மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டது. குமரி ஆதவனின் படைப்புகளை ஆய்வு செய்து மாணவர்கள் சிலர் ஆய்வியல் நிறைஞர் மற்றும் முனைவர் பட்டங்களைப் பெற்றனர்.
இதழியல்
குமரி ஆதவன் தென் ஒலி, யுகசக்தி, உதய தாரகை போன்ற இதழ்களில் துணை ஆசிரியராகவும், செண்பக மலர் இதழில் ஆலோசகராகவும் செயல்பட்டார். தென் ஒலி இதழில் இவர் வாசகர்களின் கேள்விக்கு அளித்த பதில்கள் தொகுக்கப்பட்டுப் பின்னர் நூல்களாக வெளியாகின.
நாடகம்
குமரி ஆதவன் சிறு வயதில், தேவசகாயம்பிள்ளை நாடகத்தில் தேவசகாயம் பிள்ளையாக நடித்தார். அதுவே பிற்காலத்தில் தேவசகாயம் பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை எழுத உந்துதல் தந்தது. குமரி ஆதவன் கொற்றைக் கலைச்சோலை, கொற்றிகோடு கலா மன்றம், மரியன்னை கலாமன்றம், தீபம் தியேட்டர்ஸ் போன்ற நாடகக்குழுக்கள் நடத்திய அறுபதிற்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்தார்.
அமைப்புச் செயல்பாடுகள்
குமரி ஆதவன் திண்டுக்கல் லியோனி குழுவில் பட்டிமன்றப் பேச்சாளராக இயங்கினார். பல வெளிநாடுகளுக்குச் சென்று சிறப்புரையாற்றினார். சாலமன் பாப்பையா உள்ளிட்ட பட்டிமன்ற நிகழ்வுகளில் கலந்துகொண்டு உரையாற்றினார். சமூக விழிப்புணர்வுப் பாடல்கள் பலவற்றை எழுதினார். ஆவணப்படங்களையும், குறும் படங்களையும் இயக்கினார். வானொலி மற்றும் தொலைக்காட்சிகளிலும் பங்களித்தார்.
’இலக்கியப் பட்டறை’ என்ற அமைப்பை நிறுவி மாதம் தோறும் பல அறிஞர்களைக் கொண்டு இலக்கிய நிகழ்வுகளை முன்னெடுத்தார். பல்வேறு இலக்கிய அமைப்புகளில் தன்னை இணைத்துக் கொண்டு இலக்கியப் பணியாற்றினார். பள்ளி மாணவர்களுக்கு உதவிவதற்காக ‘இணைந்த கைகள்’ என்ற அமைப்பைத் தன் பள்ளியில் ஏற்படுத்தி மாணவர்களுக்கு வழிகாட்டினார். குமரி ஆதவன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கருத்தரங்குகளில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
பொறுப்புகள்
- தமிழ்நாடு அறிவியல் இயக்கம் (குமாரபுரம் பதிப்புக்குழு) தலைவர்
- அமுதசுரபி இலக்கிய இயக்கச் செயலாளர்
- இலக்கியப் பட்டறை நிறுவனர்
- தென்திசை எழுத்தாளர் இயக்கத் தலைவர்
- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க உறுப்பினர்
- களரி பண்பாட்டு ஆய்வு மைய உறுப்பினர்
விருதுகள்
- திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கப் பரிசு - பல்வேறு நூல்களுக்காக
- நல்நூல் விருது - ‘அருமை மகளே’ கவிதை நூலுக்காக
- பல்வேறு மாத இதழ்கள் நடத்திய கவிதை மற்றும் சிறுகதைப் போட்டிகளில் பரிசு
- இலக்கியச் சாதனையாளர் விருது
- சேவைச் செம்மல் விருது
- மனிதநேய முரசு விருது
- இளம் இலக்கியச் சாதனையாளர் விருது
- கலைச்சுடர் விருது
- கவிக்குருசில் விருது
- நல்லாசிரியர் விருது
- முற்போக்குப் படைப்பாளர் விருது
- ஆய்வறிஞர் பட்டம்
- தமிழக அரசு தமிழ் வளர்ச்சித் துறை வழங்கிய தமிழ்ச்செம்மல் விருது
- மாசிலாமணி இலக்கிய விருது
ஆவணம்
குமரி ஆதவனின் வாழ்க்கையை முனைவர் சிவ லக்ஷ்மி, ‘கவிஞர் குமரி ஆதவன் வரலாறும் படைப்புகளும்' என்ற தலைப்பில் ஆவணப்படுத்தினார். கலைஞன் பதிப்பகம் இதனை வெளியிட்டது.
இலக்கிய இடம்
குமரி மாவட்ட எழுத்தாளர்களில் தனக்கென ஓர் தனி இடத்தைத் தனது படைப்புகளால் தக்க வைத்திருப்பவர் குமரி ஆதவன். விழிப்புணர்வூட்டும் பல கவிதைகளை எழுதினார். இந்தியாவின் முதல் மறை சாட்சியாகவும், தமிழகத்தின் முதல் புனிதராகவும் அறிவிக்கப்பட்ட தேவசகாயம் குறித்து குமரி அமுதன் எழுதியிருக்கும் ‘தெற்கில் விழுந்த விதை' ஒரு முக்கிய வரலாற்று ஆவணமாக கிறிஸ்தவ மறையியல் ஆய்வாளர்களால் கருதப்படுகிறது.
“சென்ற கால்நூற்றாண்டாக குமரியின் வட்டார அறிவியத்தின் முதன்மை முகங்களில் ஒருவர் குமரி ஆதவன்” என்று குறிப்பிடும் ஜெயமோகன், “குமரி ஆதவனின் இலக்கியப் பணி என்பது அவருடைய ஆசிரியப் பணியின் நீட்சி. அவர் தன்னை சமூகம் நோக்கிப் பேசுபவராக, விழுமியங்களின் பிரச்சாரகராகவே முன்வைக்கிறார். அந்த நேரடித்தன்மையே அவர் படைப்புகளின் அழகியல். [1]” என்று மதிப்பிடுகிறார்.
நூல்கள்
கவிதை நூல்கள்
- ரத்தம் சிந்தும் தேசம்
- எரிதழல் கொண்டு வா
- அருமை மகளே
ஆய்வு நூல்கள்
- குருதியில் பூத்த மலர்
- குலைகுலையா முந்திரிக்கா
- தமிழக கிராமிய விளையாட்டுகள்
வரலாற்று நூல்கள்
- ஒரு தமிழ்ச்சிற்பியின் பயணம்
- தெற்கில் விழுந்த விதை
நேர்காணல்/கேள்வி-பதில்/கட்டுரை நூல்கள்
- பேரறிஞர்களுடன்...
- ஆதவன் பதில்கள்
- அறிக: பாசிசம்
- என் கேள்விக்கென்ன பதில்?
- குரலற்றவர்களின் குரல்
- பெருங்கடலின் சிறுதுளி
- கேட்கச் செவியுள்ளவர் கேட்கட்டும்
- சிகரம் நோக்கி சிறகுகள் விரிப்போம்
- தூண்டில்காரனும் ஒரு கூடை மனிதர்களும்
- தம்பதியர்களின் கனிவான கவனத்திற்கு
தொகுப்பு நூல்கள்
- ஒருகோப்பை அமுதம்
- தன்னம்பிக்கை தீபம்
குறும் படம்
- நதி ஓடிக் கொண்டிருக்கிறது
- மறுபக்கம்
குறுந்தகடு
- ராக தீபம்
- மனிதனாக வா
உசாத்துணை
- கவிஞர் குமரி ஆதவன் வரலாறும் படைப்புகளும், முனைவர் சிவ. லட்சுமி, கலைஞன் பதிப்பக வெளியீடு.
- குமரி ஆதவன் தன் நினைவுக் குறிப்புகள்: அமுதம். காம்
- குமரி ஆதவன் உரைகள்: யூ ட்யூப் தளம்
- குமரி ஆதவன் வலைப்பூ
- குமரி ஆதவன் நேர்காணல்: காமதேனு: இந்து தமிழ் திசை இணைப்பிதழ்
- குமரி ஆதவன் நூல் விமர்சனம்: இந்து தமிழ் திசை
- குமரி ஆதவன் நூல்கள் அமேசான் தளம்
- குமரி ஆதவன் ட்விட்டர் பக்கம்
அடிக்குறிப்பு
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.