under review

நியாயம்: Difference between revisions

From Tamil Wiki
(; Added info on Finalised date)
(Corrected typo errors;)
 
Line 148: Line 148:
*முன்மொழிவு: சிலசமயம் மனித முயற்சி இணையான விளைவை உருவாக்குவதில்லை. ஆகவே அதை தீர்மானிப்பதாக இறை இருந்தாகவேண்டும்
*முன்மொழிவு: சிலசமயம் மனித முயற்சி இணையான விளைவை உருவாக்குவதில்லை. ஆகவே அதை தீர்மானிப்பதாக இறை இருந்தாகவேண்டும்
*எதிர்மொழிவு: எந்த விளைவும் மனிதன் முயலாமல் தானாக நிகழ்வதில்லை. ஆகவே இறை இல்லை
*எதிர்மொழிவு: எந்த விளைவும் மனிதன் முயலாமல் தானாக நிகழ்வதில்லை. ஆகவே இறை இல்லை
*முடிவு: ஆகவே இறை இங்குள்ள செயல்களை முடிவு செய்வதில்லை (நியாயசூத்ரம் 4.1.19 4.1.21)
*முடிவு: ஆகவே இறை இங்குள்ள செயல்களை முடிவு செய்வதில்லை (நியாயசூத்ரம் 4.1.19 - 4.1.21)


[[பிரசஸ்தபாதர்]] தன் பதார்த்த தர்ம சம்கிரகம் என்னும் நூலில் முதன்முதலாக அணுக்களின் இணைவுக்கு ஒரு நிமித்தகாரணம் (தூண்டுதல்காரணம் ) தேவை என்றும் அது ஈஸ்வரன் என்றும் சொன்னார். பின்னர் அது ஒரு ஏற்கப்பட்ட கொள்கையாக ஆகியது. [[நியாயகுசுமாஞ்சலி]] என்ற நூலில் [[உதயணர்]] இறையிருப்புக்கு நியாயவியல் சார்ந்த வாதங்களை விரிவாக முன்வைக்கிறார்
[[பிரசஸ்தபாதர்]] தன் பதார்த்த தர்ம சம்கிரகம் என்னும் நூலில் முதன்முதலாக அணுக்களின் இணைவுக்கு ஒரு நிமித்தகாரணம் (தூண்டுதல்காரணம் ) தேவை என்றும் அது ஈஸ்வரன் என்றும் சொன்னார். பின்னர் அது ஒரு ஏற்கப்பட்ட கொள்கையாக ஆகியது. [[நியாயகுசுமாஞ்சலி]] என்ற நூலில் [[உதயணர்]] இறையிருப்புக்கு நியாயவியல் சார்ந்த வாதங்களை விரிவாக முன்வைக்கிறார்

Latest revision as of 16:02, 22 November 2025

நியாயம்: இந்து தத்துவ அமைப்புகளில் ஒன்று. இந்திய தர்க்கவியல். ஆறு இந்து தரிசனங்களில் ஒன்று. வைசேஷிகத்தின் துணைத்தரிசனம். ஆகவே நியாயவைசேஷிகம் என இணைத்தே சொல்லப்படுகிறது. இதன் முதலாசிரியர் கௌதமர்.

தரிசனம்

நியாயம் இந்து மரபின் ஆறு தரிசனங்களான சாங்கியம், யோகம், வைசேஷிகம், நியாயம், பூர்வ மீமாம்சம், உத்தரமீமாம்சம் (வேதாந்தம்) ஆகியனற்றில் ஒன்று. இதன் பிரபஞ்சக் கொள்கையானது வைசேஷிகத்துக்கு நெருக்கமானது. ஆகவே பிற்காலத்தில் இது வைசேஷிகத்தின் துணைத்தரிசனமாக அறியப்பட்டது. நியாயவைசேஷிகம் என்று சேர்த்தே சொல்லப்பட்டது. பிற்கால அறிஞர்கள் இரண்டையும் சேர்த்தே உரையெழுதி விவாதித்துள்ளனர்.

ஆசிரியர்

நியாயவியலின் முதலாசிரியர் கௌதமர். இவர் எழுதிய நியாயசூத்ரம் என்னும் நியாயவியலின் முதல்நூலாகக் கருதப்படுகிறது.

காலம்

நியாயவியல் வேதகாலத்திலேயே இருந்திருக்கலாம். ரிக்வேதம் 'சேர்ந்தமர்ந்து விவாதியுங்கள், உங்கள் சங்கம் வலுவுடையதாகுக' என்று சொல்கிறது. தத்துவ விவாதங்கள் பற்றிய குறிப்புகள் வேதங்களில் பல இடங்களில் வருகின்றன. வேள்விகளின் ஒரு பகுதியாகவே தத்துவ விவாதமும் இருந்துள்ளது. ஆகவே வேத காலத்திலேயே எல்லாவகையான தத்துவ வினாக்களும் விவாதிக்கப்பட்டிருக்கலாம். அதற்கான நெறிகளும் உருவாகி வந்திருக்கலாம்.

பொமு 200-400 காலகட்டத்தில் கௌதமரால் நியாயவியலின் நெறிகள் சூத்திரங்களாக வகுக்கப்பட்டு தொகுக்கப்பட்டன. அவை நீண்டகாலமாக விவாதிக்கப்பட்டவை, பொதுவான வரையறையை வந்தடைந்தவை என்பதனால்தான் அவற்றுக்கு இலக்கணநூல் உருவாக முடிந்தது என ஷெர்பாட்ஸ்கி முதலிய ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

பெயர்

நியாயம் என்னும் சொல் சம்ஸ்கிருதத்தில் எப்படி வந்தது என்பது அறிஞர்களால் விவாதிக்கப்படுகிறது. நிகமம் (வழிமுறை), நியமம் (நெறி) போன்ற சொற்களின் ஒலிமருவு ஆக இருக்கலாம் என்று பாணினியின் சம்ஸ்கிருத இலக்கணம் குறிப்பிடுகிறது. இந்திய மொழிகளில் நியாயம் என்பது சரியான காரணம், காரணகாரிய விளக்கம், நீதி, சமமான செயல்பாடு என்னும் வெவ்வேறு சொற்களில் பயன்படுத்தப்படுகிறது. நியாயவியலுக்கு ஹேதுவித்யா (காரணக் கல்வி), அன்வீஷிகி (தேடல்ஞானம்), பிரமாண சாஸ்திரம் (அறிதல்கல்வி), தத்வசாஸ்தரம் (ஆய்வறிவு) தர்க்கவித்யை (விவாதக் கல்வி), வாதார்த்தம் ( விவாத வழிமுறை), பாகிக சாஸ்திரம் (பகுத்தறிவு முறை) என்னும் பெயர்கள் உண்டு. காங்கேசரின் தத்வசிந்தாமணி என்னும் முக்கியமான நூலுக்குப்பின் நியாயம் ஒரு பிரபஞ்ச தரிசனம் என்னும் நிலையில் இருந்து ஒரு தர்க்கவியலாக மட்டுமே ஆகிவிட்டது என்று ஹிரியண்ணா இந்திய தத்துவம் நூலில் குறிப்பிடுகிறார்.

அறிஞர் மரபு

நியாயவியல் தொடர்ச்சியான உரைகள் வழியாக வளர்ச்சி அடைந்தது. கீழ்க்கண்ட உரையாசிரியர்கள் நியாயவியலை முன்னெடுத்தவர்கள் என்று கருதப்படுகின்றனர்

செவ்வியல் நியாய மரபு
  • வாத்ஸாயனர், வாத்ஸாயன பாஷ்யம் - பொயு 5 ஆம் நூற்றாண்டு
  • உத்யோதகரர், நியாய வார்த்திகம் - பொயு 6 ஆம் நூற்றாண்டு
  • பாவிவிக்தர், நியாய பாஷ்ய டீகா - பொயு 6 ஆம் நூற்றாண்டு
  • அவித்தகர்ணர், நியாய பாஷ்ய டீகா - பொயு 7 ஆம் நூற்றாண்டு
  • வாசஸ்பதி மிஸ்ரர், நியாயசூசிநிபந்தா நியாயவார்த்திக தாத்பரிய டீகா - பொயு 8-9 ஆம் நூற்றாண்டு
  • ஃபாசர்வஜ்னர், நியாய பூஷ்ணம் & நியாய சாரம் - பொயு 9 ஆம் நூற்றாண்டு
  • ஜயந்தபட்டர், நியாய மஞ்சரி & நியாயாலங்கார விருத்தி - பொயு 9 ஆம் நூற்றாண்டு
  • திரிலோசனர், நியாய பிரகிர்ணிகா - பொயு 10 ஆம் நூற்றாண்டு
  • ஶ்ரீதரர், நியாய கந்தளி - பொயு 10 ஆம் நூற்றாண்டு
நவநியாய மரபு
  • உதயணர், நியாயகுசுமாஞ்சலி - பொயு 975 - 1050
  • கேசவமிஸ்ரர், நியாயப்பிரகாசம் -பொயு 1275
  • காங்கேசர், தத்வசிந்தாமணி - பொயு 1200
  • வர்த்தமான உபாத்யாய, தத்வாம்ர்தசாரோத்தார - பொயு 1250
  • ஶ்ரீகந்தர், நியாயாலங்காரம் - பொயு 13 ஆம் நூற்றாண்டு
  • வல்லபாச்சாரியார், நியாய லீலாவதி - பொயு 1478 - 1530
  • பத்மநாப மிஸ்ரர், வர்த்தமான ஹேது - பொயு 1548 - 1556
  • வாசுதேவ சார்வபௌமர், தத்வசிந்தாமணி டீகா - பொயு 1500
  • கோவர்த்தன மிஸ்ரர், நியாயபோதினி - பொயு 1550
  • ரகுநாத சிரோமணி, தத்வசிந்தாமணி தீதிதி - பொயு 1550
  • மதுரநாத தர்க்கவாகீசர், நியாயசூத்ர வியாக்யானம் - பொயு 1550
  • மகாதேவ வேதாந்தி, மிதபாஸினி விருத்தி - பொயு 1600
  • அன்னம பட்டர், தர்க்கசம்கிரகம் - பொயு 1623
  • விஸ்வநாதர், நியாய சித்தாந்த முக்தாவலி, நியாயசூத்ர விருத்தி பாஷாபரிச்சேதா - பொயு 1634
  • கதாதர பட்டாச்சாரியா, தத்வசிந்தாமணி வியாக்யான, தத்வசிதாமணி தீதிதி - பொயு 1604 - 1709

அடிப்படைக் கொள்கைகள்

நியாயத்தின் கொள்கைகளை நியாயசூத்ரம் விரிவாக விளக்குகிறது. நியாயசூத்ரத்திற்கு உரையெழுதியவர்கள் அதை வளர்த்தெடுத்தனர். பின்னர் அதில் ஈஸ்வரனின் இருப்பு, உபமானப் பிரமாணம் ஆகிய இரண்டு புதுக்கூறுகள் இணைக்கப்பட்டு அது நவநியாயம் என புதுவடிவம் கொண்டது.

வைசேஷிகத்துடன் தொடர்பு

நியாயத்தின் அடிப்படை பிரபஞ்சப்பார்வை வைசேஷிக தரிசனத்தை ஒட்டியது. ஆகவே அறிஞர்கள் நியாயவைசேஷிகம் என்ற சொல்லால் இக்கொள்கையை குறிப்பிடுகின்றனர். வைசேஷிகத்தில் இருந்து நியாயம் எடுத்துக்கொண்டவை இவை

  • வைசேஷிகத்தின் அணுக்கொள்கையை நியாயம் எடுத்துக் கொண்டது. இப்பிரபஞ்சம் பொருளாலானது. புறவயமானது, தோன்றாதது அழியாதது. பொருட்கள் அணுக்களாலானவை. அணுக்களின் கூட்டால் இப்பிரபஞ்சத்தின் பொருட்கள் உருவாகின்றன. பிரபஞ்சநிகழ்வு நடைபெறுகிறது.
  • வைசேஷிகம் ஆறு பதார்த்தங்களை முன்வைத்தது. அவை திரவியம் (பொருள்), குணம் (இயல்பு), கர்மம் (செயல்), சாமான்யம் (பொது இயல்பு), விசேஷம் (தனி இயல்பு), சமவாயம் (இயைபு, இருப்பு). நியாயம் அவை ஆறையும் ஒரே பொருளாகச் சுருக்குகிறது. அதை பிரமேயம் (அறிபடுபொருள்) என்கிறது. அந்த அறிபடுபொருளை அறிவதற்கான வழிமுறைகள் என 15 படிநிலைகளை வகுத்து ஒட்டுமொத்தமாக 16 படிநிலைகளாக ஆக்குகிறது. நியாயம் இந்த 16 நிலைகளையே பதார்த்தம் என்கிறது. பிற்கால நியாயம் அபாவம் (இருப்பின்மை) என்பதையும் சேர்த்துக்கொண்டது.

திரவியங்கள்

திரவியங்கள் (பொருட்கள்) ஒன்பது என வைசேஷிகம் வரையறை செய்வதை நியாயவியல் ஏற்றுக்கொள்கிறது. (பிருத்வி (மண்), ஜலம் (நீர்), அக்னி (தீ), வாயு (காற்று), ஆகாசம் (வானம்), காலம் , திக் (திசை/ இடம்), ஆத்மா, மனம்). இவற்றில் நான்கு பூதங்கள் மண், நீர்,நெருப்பு, வாயு ஆகியவை மட்டுமே நுண்துகள்களால் ஆனவை. வானம், காலம், திசை,ஆத்மா, மனம் ஆகியவை எவற்றையும் உருவாக்குவதில்லை.

அபாவம்

நியாயவியல் உருவாக்கிய தனிக்கொள்கை அபாவம் எனப்படுகிறது. பிரசஸ்தபாதர் இதைப் பற்றிப் பேசினாலும் இதன் முழுமையான வடிவம் உதயணர் எழுதிய நூல்களிலேயே திரண்டு வருகிறது. வைசேஷிகம் சொல்லும் ஆறு பதார்த்தங்களுடன் ஒரு பொருளின் இன்மையும் ஓர் இருப்பே எனறு நியாயவியல் வாதிட்டது.

அபாவத்தின் தர்க்கம்

அபாவம் பொருண்மையானது என்பதற்கான வாதங்கள்

  • ஒரு பொருளின் இருப்பு என்பது இன்னொன்றிலிருந்து வேறுபடுத்தி அறிவதன் வழியாகவே நிகழ்கிறது. இன்மையும் அவ்வாறே வேறுபடுத்திப் பார்க்கத்தக்கது
  • ஒரு பொருளின் இருப்பு பிறபொருட்களில் விளைவை உருவாக்குகிறது. அதன் இன்மையும் அவ்வாறே விளைவை உருவாக்குகிறது.
அபாவமும் சூனியமும்

நியாயவியல் பேசும் அபாவம் என்பது ஒரு பொருளின் சாத்தியமான இருப்பு இல்லாமலிருப்பது. முழுமையான இன்மை (சூனியம்) நியாயவியலுக்கு ஏற்புடையது அல்ல. அது நியாயவியல் பேசும் பொருண்மைத்தன்மை கொண்ட பிரபஞ்ச உருவகத்துக்கு எதிரானதாகும். அதேபோல பொருட்கள் காட்சித்தோற்றங்களே என்பதும் நியாயவியலுக்கு ஏற்புடையது அல்ல.

பிரமாணங்கள்

நியாயவியல் தொன்மையான அறிதல்முறைகளான பிரத்யக்ஷம், அனுமானம், சுருதி ஆகியவற்றை ஏற்றுக்கொள்கிறது. கூடுதலாக அபாவம் (இன்மையிருப்பு) என்பதை சேர்த்துக்கொள்கிறது.

பிரத்யக்ஷம்

நியாயவியலின் கொள்கையின்படி நாம் கண்முன் அனுபவமாக அறியும் பருப்பொருட்களாலான பிரபஞ்சம் என்பது உண்மையான புறவயமான இருப்பே. அதில் இருந்து நம் அறிதலை உருவாக்கிக்கொள்வதே நமக்கு தேவையானது. நம் அறிதலென்பது அப்பொருள்வயப்பிரபஞ்சத்தின் ஒரு தோற்றம் மட்டுமே. நம் அறிவு நமக்கு பயனுள்ளதாக இருக்கவேண்டும் என்பதே முக்கியமானது. பிரத்யக்ஷம் என்பது ஒரு தோற்றமே என்றும், பொருள்வயப்பிரபஞ்சத்தை நம்மால் அறியமுடியாது என்றும் சொல்லப்படுவதை நியாயம் ஏற்கவில்லை.

பிரத்யக்ஷம் என்பது பொருளுடன் புலன்கள் கொள்ளும் தொடர்பால் உருவாவதும், திட்டவட்டமானதும், பிழையில்லாமல் மொழியால் சொல்லத்தக்கதுமான அறிதல் என கௌதமர் வரையறை செய்கிறார். (நியாயசூத்ரம் 1-1-4)

நேரனுபவ அறிதலின் ஐந்து நிலை

பிரத்யக்ஷத்தை அறிய ஐந்து நிலைகள் தேவை என்கிறார் கௌதமர்

  • அறிபடுபொருள் : எதை அறியவேண்டுமோ அது புலன்களுக்கு சிக்கவேண்டும்.
  • அறியும் கருவிகள் : ஒளி போன்ற பொருள்வயமான துணைகள் அறிதலுக்குத் தேவை.
  • புலன்கள் : அறிவதற்குரிய புலன்கள் அறிதலை நிகழ்த்துகின்றன
  • மனம் : மனமே அறிதலை ஆத்மாவுக்கு தெரியப்படுத்துகிறது.
  • ஆத்மா : அறிபவன், அறியும் தன்னிலை.
நேரனுபவ அறிதலின் இரு வகைகள்

பிரத்யக்ஷம் என்னும் நேரனுபவ அறிதல் இரண்டு வகை. லௌகீக பிரத்யக்ஷம் என்பது புலன்களால் உலகியல் தளத்தில் அறியப்படுவது. அலௌகீக பிரத்யக்ஷம் என்பது நேரடியறிதலை கடந்து அறிவால் சென்று அறிதல்.

அலௌகீக பிரத்யக்ஷம் மூன்று வகையானது.

  • தனியறிதலில் பொதுமையை அறிதல் : பசு என ஒன்றைப் பார்க்கையிலேயே பசுத்தன்மை என்ற ஒன்றையும் பார்த்துவிடுகிறோம். அதைக்கொண்டே பிறபசுக்களை அறிகிறோம்
  • துளியிலிருந்து முழுமையை அறிதல் : ஒருபொருளின் சிறுபகுதியே எஞ்சியதை நமக்கு அறியத் தந்துவிடுகிறது. அதன் வடிவம், செயல்பாடு வழியாக. மிகத்தொலைவில் தெரியும் ஒரு வாலின் அசைவில் நம்மால் பசுவை பார்க்கமுடிகிறது. ஒரு பொருளின் ஒரு பகுதி மொத்தத்தையும் பிரதிநிதித்துவம் செய்கிறது.
  • யோகப்பிரத்யக்ஷம் : ஒரு பொருளின் அணுக்கள், அதன் தர்மம் குணம் போன்றவற்றை பார்த்ததுமே ஒருவர் அறியக்கூடும். அவர் ஞானத்தாலும் யோகத்தாலும் அதை அறியலாம்.
சவிகல்ப பிரத்யக்ஷம், அவிகல்ப பிரத்யக்ஷம்

பிரத்யக்ஷம் இரண்டு வகையாக மீண்டும் கௌதமரால் பகுக்கப்படுகிறது

  • சவிகல்பம் : எல்லைக்குட்பட்ட, வரையறைசெய்யப்பட்ட அனுபவ அறிவு. குதிரையில் குதிரைத்தன்மை என்பது ஒரு குறிப்பிட்ட மிருகத்தில் வெளிப்படுவது.
  • அவிகல்பம் : எல்லையற்ற, பிரிவற்ற அனுபவ அறிவு. குதிரைத்தன்மை இயந்திரங்களில், ஓட்டப்பந்தய வீரனில், மானில், நெருப்பில் எல்லாம் அருவமாக அறியத்தக்கது.
அனுமானம்

நியாயவியலின்படி அனுமானமே முதன்மையான பிரமாணமாகும். பிரத்யக்ஷமாக தெரிபவை அனுமானம் வழியாகவே அறிதலாக ஆகின்றன. அனுமானம் தன் அறிதலுக்கு சுருதியை பயன்படுத்திக் கொள்கிறது. நியாயவியலின் கொள்கைகள் அனைத்துமே அனுமானத்தில்தான் உள்ளன. அனுமானம் என்பதை எப்படி தர்க்கபூர்வமாக, புறவயமாக அமைத்துக்கொள்வது என்பதையே நியாயம் முதன்மையாகப் பேசுகிறது.

அனுமானத்தை ஹேதுவனுமானம் என்று நியாயம் சொல்கிறது. அதில் பிரதிக்ஞா, ஹேது, உதாஹரணம், உபநய, நிகமனம் என ஐந்து அங்கங்கள் (அவயவங்கள்) உள்ளன என்று வரையறை செய்கிறது. அந்த அனுமானத்தில் பிழை வருவதை ஹேத்வாபாசம் என சுட்டுகிறது. அதில் அசித்தா அல்லது சத்யாசமா, சவ்யாபிசார, சத்பிரதிபக்ஷ, பதிதா ,விருத்த என ஐந்து பிழைத்தர்க்கங்கள் உண்டு என வகுத்துரைக்கிறது. (பார்க்க: நியாயசூத்ரம்)

மூன்றுவகை அனுமானங்கள்

கௌதமர் அனுமானங்கள் மூன்று வகை என விளக்குகிறார்

  • பிரத்யக்ஷம் நிகழ்வதற்கு முந்தைய அனுமானம் : வெக்கையும் குளிர்காற்றும் கலந்துள்ளது. இது அனுமானம். மழை என்பது பிரத்யக்ஷம். அனுமானம் நிகழ்ந்தபின் பிரத்யக்ஷம் நிகழ்கிறது
  • பிரத்யக்ஷம் நிகழ்ந்தபின் அனுமானம் : ஆற்றில் நீர் பெருகிச் செல்கிறது என்பது பிரத்யக்ஷம். ஆகவே மலையில் மழை பெய்திருக்கலாம் என்பது அனுமானம்.
  • சாமானியத்தில் இருந்து விசேஷம் : கோரைப்பல் கொண்டிருக்கும் இந்த விலங்கு ஓர் ஊனுண்ணி.
சுருதி

சுருதி என்னும் பிரமாணத்தை நியாயவியல் முன்னறிதல் என்ற பொருளில் பயன்படுத்துகிறது. பூர்வமீமாம்சம் மற்றும் உத்தரமீமாம்சகர்களில் சில தரப்பினரைப் போல வேதமே சுருதி என்னும் கொள்கையை ஏற்றுக்கொள்வதில்லை. ஒவ்வொரு அறிதலுக்கு முன்னரும் ஒரு முன்னறிதல் நமக்கு உள்ளது. அனுமானம் என்பதே பிரத்யக்ஷத்தை சுருதியுடன் இணைக்கும் செயல்பாடுதான். கணாதர் வேதங்களை சுருதிகளில் ஒன்று என ஏற்றுக்கொள்கிறார். சுருதி என்பதை நியாயநூல்கள் சப்தம் (ஒலி) என்ற சொல்லால் சுட்டுகின்றன.

உபமானம்

நியாயவியல் உவமையை ஓர் அறிதல்முறையாக ஏற்றுக்கொள்கிறது. நுண்ணிய அறிதல்களை நாம் ஒப்பிடுவதன் வழியாகவே அறியவும் வகுக்கவும் விவாதிக்கவும் முடியும் என்கிறது. அறிந்த ஒரு பொருளுடன் புதிய ஒரு பொருளை இணைத்து புரிந்துகொள்வது.

மனம்

மனம் (மனஸ்) என்பதை நியாயம் ஒரு அறிதல்கருவி என்ற அளவிலேயே கையாள்கிறது. ஆத்மாவை புறவயமான பொருட்களுடன் புலன்கள் வழியாக இணைப்பதும், அவ்வறிதல்களை உணர்ச்சிகளாக அடைவதும் மனமே. அது ஆறாவது புலன் போன்றது. புலன்களில் உதவி இன்றியே மனம் கனவில் பொருட்களை அறியக்கூடும். அதுவே மனம் தனியானது என்பதற்கான சான்று.

மனம் அகப்புலன். பிற்கால நூல்கள் புத்தி என்பதை மனதைப் போலவே இன்னொரு அகப்புலனாகப் பயன்படுத்துகின்றன. ஆனால் நியாயம் புத்தி என்பதை அறிவு என்ற பொருளில் மட்டுமே பயன்படுத்துகிறது. ஆத்மா அடைவது அறிவு. புத்தி (அறிவு), உபலப்தி (அடைவது), ஞானம் என்னும் மூன்று சொற்களையும் கௌதமர் இணையாகவே பயன்படுத்துகிறார்.

மனம் புலன்களுக்குக் கட்டுப்பட்டது. புலன்கள் அறிவனவற்றையே மனம் உள்வாங்கிக்கொள்ள முடியும். மனமும் ஆத்மாவும் ஒன்றல்ல. ஆத்மாவின் ஓர் ஊடகம் மட்டுமே மனம்.

ஐந்து நிலைகள்

மனதின் ஐந்து நிலைகள் கீழ்க்கண்டஅறிதலைத் தீர்மானிக்கின்றன என்று நியாயவியல் சொல்கிறது.

  • ராகம் (விருப்பு)
  • துவேஷம் (வெறுப்பு)
  • சுகம் (மகிழ்வு)
  • துக்கம் (துயரம்)
  • யத்னம் (முயற்சி)
  • ஞானம் (அறிவு)

ஆத்மா

நியாயசூத்திரத்தின் மூன்றாவது பகுதி ஆத்மா பற்றி விவாதிக்கிறது. ஆத்மா நியாயத்தின் நோக்கில் உயிர்களில் இருக்கும் தன்னுணர்வு, தன்னிலை மட்டுமே. அதுவே ஞானத்தை அடைகிறது. ஞானத்தினூடாக வீடுபேறு அடைவதும் அதுவே. நியாயத்தின்படி வீடுபேறு என்பது அறிவுமயக்கங்களில் இருந்து விடுபட்டு தூய அறிவை அடைவது மட்டுமே.

இறைக்கொள்கை

நியாயவியலின் தொடக்க வடிவில் இறை கிடையாது. அணுக்களால் ஆனது இப்பிரபஞ்சம். பதார்த்தங்கள் அதன் அடிப்படைகள். பதார்த்தங்கள் தொடக்கம் , முடிவு அற்றவை. அணுக்களின் இணைவாக, பதார்த்தங்களின் வழியாக இப்பிரபஞ்சம் இயங்குகிறது. அவை இயல்பான நெறிகள். பருப்பொருளுக்கு வெளியே இருந்து எந்த காரணமும், தூண்டுதலும் அதற்குத் தேவையில்லை.

கௌதமர் தன் நூலில் இதை இவ்வாறு விவாதிக்கிறார்.

  • முன்மொழிவு: சிலசமயம் மனித முயற்சி இணையான விளைவை உருவாக்குவதில்லை. ஆகவே அதை தீர்மானிப்பதாக இறை இருந்தாகவேண்டும்
  • எதிர்மொழிவு: எந்த விளைவும் மனிதன் முயலாமல் தானாக நிகழ்வதில்லை. ஆகவே இறை இல்லை
  • முடிவு: ஆகவே இறை இங்குள்ள செயல்களை முடிவு செய்வதில்லை (நியாயசூத்ரம் 4.1.19 - 4.1.21)

பிரசஸ்தபாதர் தன் பதார்த்த தர்ம சம்கிரகம் என்னும் நூலில் முதன்முதலாக அணுக்களின் இணைவுக்கு ஒரு நிமித்தகாரணம் (தூண்டுதல்காரணம் ) தேவை என்றும் அது ஈஸ்வரன் என்றும் சொன்னார். பின்னர் அது ஒரு ஏற்கப்பட்ட கொள்கையாக ஆகியது. நியாயகுசுமாஞ்சலி என்ற நூலில் உதயணர் இறையிருப்புக்கு நியாயவியல் சார்ந்த வாதங்களை விரிவாக முன்வைக்கிறார்

முக்தி

நியாயவியலைப் பொறுத்தவரை முக்தி என்பது தூய அறிவின் வழியாக அறியாமையின் விளைவாக வந்துசேரும் துயர்களை வெல்வதேயாகும். இதை நிஸ்ரேயஸ் என்று நியாயவியல் வகுக்கிறது.

நவநியாயம்

பிரசஸ்தபாதரின் பதார்த்ததர்ம சம்கிரகம் இரண்டு புதிய கருதுகோள்களை முன்வைக்கிறது. அபாவம், ஈஸ்வரன். அவற்றை உதயணர், ஸ்ரீதரர் போன்றவர்கள் விரிவாக முன்னெடுத்தனர்.

பௌத்த தத்துவ இயலுடன் நியாயம் தொடர்ச்சியாக விவாதித்தது. பௌத்தம் முன்வைத்த இறையிலா நியாயவியலை இறையுள நியாயவியல் வழியாக உதயணர் போன்றவர்கள் எதிர்த்தார்கள்.

வாசஸ்பதி மிஸ்ரர் நியாயவியலை தன் நூல்கள் வழியாக ஏற்கனவே சங்கரரின் அத்வைதத்துக்கு அணுக்கமானதாக விளக்கியிருந்தார். பிற்காலத்தைய நியாயவியல் ஆசிரியர்களில் பெரும்பாலானவர்கள் சங்கரரின் அத்வைதத்தை ஏற்றுக்கொண்டார்கள்.

விளைவாக நியாயவியல் வேதாந்தம் நோக்கிச் சென்றது. வேதாந்தத்தை விளக்கும் தர்க்கவியலாக, பிரமாண சாஸ்திரமாக மட்டும் சுருங்கியது. நியாயவியலில் இருந்த வைசேஷிக தரிசனக்கூறுகள், அணுக்கொள்கை முதலியவை, பின்னகர்ந்தன. இந்த புதிய நியாயவியல் நவநியாயம் எனப்படுகிறது. பொயு 10 நூற்றாண்டில் இது உருக்கொண்டது. பொயு 12 நூற்றாண்டுக்குப்பின் நியாயவியல் என நவநியாயவியல் மட்டுமே கருதப்பட்டது.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 01-Apr-2025, 08:08:53 IST