உழுந்தினைம் புலவர்: Difference between revisions
(Corrected Category:புலவர்கள் to Category:புலவர்) |
(Removed Category:Spc) |
||
| Line 33: | Line 33: | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:புலவர்]] | [[Category:புலவர்]] | ||
Latest revision as of 21:44, 8 January 2026
உழுந்தினைம் புலவர், சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவரது ஒரு பாடல் சங்க இலக்கியத் தொகை நூல்களில் ஒன்றான குறுந்தொகையில் இடம் பெற்றுள்ளது.
வாழ்க்கைக் குறிப்பு
"உழுந்தினைம் புலவன் என்ற இப்பெயர், இவர்க்குப் பெற்றோர் இட்டு வழங்கிய இயற்பெயரன்று; யாதோவொரு காரணம் கருதிவந்த காரணப் பெயரே; ஆனால், அக்காரணம் யாது என்பதை இப்போது நம்மால் அறிதல் இயலாது போயிற்று" என்று புலவர் கா. கோவிந்தன் 'சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை' நூலில் குறிப்பிடுகிறார்.
இலக்கிய வாழ்க்கை
உழுந்தினைம் புலவர், இயற்றிய ஒரு பாடல் சங்க இலக்கியத் தொகை நூல்களில் ஒன்றான குறுந்தொகையில் 333-வது பாடலாக இடம் பெற்றுள்ளது. தினைப் புனத்தை அழிக்கவரும் வலிமை மிக்க யானையை விரட்ட வில் அம்புடன் ஆடவரும், எளிய கிளிகளை ஓட்ட மென் தழையாடையுடன் மகளிரும் காவல் இருப்பதை தலைவி காவலில் இருப்பதற்கும் தலைவன் வெருட்டப்பட்டதற்கும் உள்ளுறை உவமமாகச் சுட்டியுள்ளார்.
பாடலால் அறியவரும் செய்திகள்
- கானவர்கள் வில்லும் அம்பும் கொண்டு தம் விளைந்த புனத்தைக் காவல் புரிந்து பயிரை மேய வரும் யானைகளை விரட்டினர். தழையாடை அணிந்த மகளிர் புனத்தில் காவல் புரிந்து கிளிகளை ஓட்டினர்.
- தினை காப்பவரால் யானையும் கிளியும் வெருட்டப்படும் நாடு என்றது செவிலித்தாய் மற்றும் தாய் முதலியோரால் தலைவி காவலால் வைக்கப்பட்டதால், தலைவன் வெருட்டப்பட்டான் என்பதைக் குறிக்கும் உள்ளுறை உவமம்.
- 'பணிக்குறை வருத்தம்' என்றது தலைவன் பெண்கேட்க வராமல் இருப்பதால் வரும் வருத்தத்தைக் குறிக்கிறது. அறத்தொடு நின்றால் உண்மையையுணர்ந்து பெற்றோர்களும் உறவினர்களும் தலைவனை ஏற்றுக் கொள்வார்கள் என்று தலைவி அறிவுறுத்துகிறாள்.
பாடல் நடை
குறுந்தொகை 333
- குறிஞ்சித் திணை அறத்தோடு நிற்பல் எனக் தலைவிக்குத் தோழி உரைத்தது.
குறும்படைப் பகழிக் கொடுவிற் கானவன்
புனமுண்டு கடிந்த பைங்கண் யானை
நறுந்தழை மகளிர் ஓப்புங் கிள்ளையொடு
குறும்பொறைக் கணவுங் குன்ற நாடன்
பணிக்குறை வருத்தம் வீடத்
துணியின் எவனோ தோழிநம் மறையே.
(தோழி! குறிய படையாகிய அம்பையும் வளைந்த வில்லையும் உடைய வேட்டுவன், தினைப்புனத்தில் தினையை உண்ட, பசிய கண்களையுடைய யானையை வெருட்டுகிறான். மணமுள்ள தழையுடையை அணிந்த மகளிர், தினைப் புனத்தில் படிந்துள்ள கிளிகளை வெருட்டுகின்றனர். அந்த யானை, கிளிகளோடு சேர்ந்து, குறுகிய பாறைகள் இருக்கும் இடத்திற்குச் செல்வதற்காக அண்ணாந்து பார்க்கிறது. தலைவன் அத்தகைய மலைநாட்டை உடையவன். தலைவன் உன்னை மணந்துகொள்ளும் செயல் நிறைவேறாமல், குறையாக இருப்பதால் வரும் துன்பம் நீங்கும்படி, நம்முடைய களவொழுக்கத்தைப் பற்றிய செய்தியைத் துணிந்து வெளிப்படுத்தினால் என்ன?)
உசாத்துணை
சங்கத் தமிழ் புலவர் வரிசை, அதியன் விண்ணத்தனார் முதலிய புலவர்கள் , புலவர் கா. கோவிந்தன், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் நல்ல குறுந்தொகை-பாடல் 333 குறுந்தொகை 333 , தமிழ்த் துளி இணையதளம் குறுந்தொகை 333 , தமிழ் சுரங்கம் இணையதளம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
02-Feb-2023, 06:22:18 IST