under review

சக்ரவர்த்தினி: Difference between revisions

From Tamil Wiki
(Added First published date)
 
Line 34: Line 34:
*[https://groups.google.com/g/minTamil/c/yYpDdRqphfY பாரதியும் பெண்ணுரிமையும் விவாதம்]
*[https://groups.google.com/g/minTamil/c/yYpDdRqphfY பாரதியும் பெண்ணுரிமையும் விவாதம்]
*[https://www.hindutamil.in/news/literature/6642-.html பெண்வெறுப்பு என்றொரு நீண்ட படலம் அம்பை]
*[https://www.hindutamil.in/news/literature/6642-.html பெண்வெறுப்பு என்றொரு நீண்ட படலம் அம்பை]
{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|15-Nov-2022, 13:33:12 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:இதழ்கள்]]
[[Category:இதழ்கள்]]
[[Category:Spc]]
[[Category:Spc]]

Latest revision as of 16:28, 13 June 2024

சக்ரவர்த்தினி இதழ் முகப்பு (நன்றி: அரவிந்த் சுவாமிநாதன்)

சக்ரவர்த்தினி (இதழ்) பெண்களுக்கென்றே ஆரம்பிக்கப்பட்ட இதழ். மாத இதழாக வெளிவந்தது. இதில் சி.சுப்ரமணிய பாரதியார் ஆசிரியராகப் பணியாற்றினார்.

வரலாறு

சக்ரவர்த்தினி ஆகஸ்ட் 1905 முதல் வெளியானது. இதன் உரிமையாளர் வைத்தியநாத ஐயர். இவ்விதழில் சி.சுப்ரமணிய பாரதியார் முதல் பதின்மூன்று மாதங்கள் ஆசிரியராகப் பணிபுரிந்தார். பாரதியாருக்குப் பின் வரகவி அ. சுப்பிரமணிய பாரதி சக்ரவர்த்தினி இதழின் ஆசிரியராக இருந்தார். எம்.எஸ். நடேச ஐயரும் சில காலம் ஆசிரியராக இருந்தார். பி.எஸ். அப்புசாமி ஐயர் ஜனவரி 1912 வரை சக்ரவர்த்தினி இதழை நடத்தினார். கோ. வடிவேலு செட்டியார் பின்னர் பொறுப்பேற்றுக் கொண்டார். 1916-க்குப் பின் சக்ரவர்த்தினி இதழ் நின்றது.

பாரதியாரும் சக்ரவர்த்தினியும்

பாரதியாருக்கு முன்பு அமிர்தவசனி, மகாராணி, சுகுணகுணபோதினி, மாதர் மித்திரி, பெண்மதிபோதினி, மாதர் மனோரஞ்சனி போன்ற பெண்களுக்கான இதழ்கள் வெளிவந்தன. அவருடைய காலகட்டத்தில் பெண்கல்வி, தமிழ்மாது முதலிய இதழ்கள் வந்துள்ளன. அவற்றில் இருந்து மாறுபட்டு பெண்களுக்காக ஓர் இதழை நடத்தவேண்டும் என எண்ணியமைக்கான காரணத்தை பாரதியார் இவ்வாறு சக்ரவர்த்தினி முதல் இதழில் சொல்கிறார். "அறிவின்மை என்னும் பெருங்கடலில் தத்தளிக்கும் நமது பதினாயிரக் கணக்கான பெண்களைக் கரைசேர்ப்பதற்கும் சில பெருங்கப்பல்கள் இருந்தபோதிலும், யாம் கொண்டுவரும் சிற்றோடம் அவசியமில்லை என்று யாவரே கூறுவார்? (பாரதியார், சக்ரவர்த்தினி, 1905 ஆகஸ்ட்)

அக்கால இதழ்களில் பெண்களுக்கு மரபான ஒழுக்கநெறிகளை உபதேசிப்பது, நோன்புகள் மற்றும் மதச்செய்திகளைச் சொல்வது போன்றவையே நிறைந்திருக்கும். தேசியச் செய்திகளுக்கும், பெண்கல்வி பெண்விடுதலை போன்றவற்றுக்கும் இடமளிக்கும் ஓர் இதழை தொடங்குவதே பாரதியின் நோக்கம். பாரதியார் சக்ரவர்த்தினியில் எழுதிய கட்டுரைகள் சீனி விசுவநாதனாலும், பிற பாரதி ஆய்வாளர்களாலும் வெவ்வேறு வகைகளில் தொகுக்கப்பட்டு நூலாக வெளிவந்துள்ளன.

உள்ளடக்கம்

கவிதை, கதை, நாடகம், மொழிபெயர்ப்பு, நூல் மதிப்புரை, பொது வர்த்தமானங்கள், சமாச்சாரக் குறிப்புகள்(துணுக்குகள்) என இலக்கியத்தின் பல பிரிவுகளுக்கு சக்ரவர்த்தினி இடமளித்தது. சக்ரவர்த்தினி இதழில் பாரதியார் 'ஷெல்லிதாஸ்’ என்ற புனைப் பெயரில் எழுதிய துளஸீபாயி எனும் சிறுகதை நவம்பர் 1905 தொடங்கி வெளிவந்தது. பாரதியார் குறிப்பிடத்தகுந்த சில தலையங்கங்களை இந்த மாத இதழில் எழுதினார். உ.வே.சா வைப் பாராட்டி பாரதியார் எழுதிய வாழ்த்துச் செய்யுள் சக்ரவர்த்தினி இதழில் வெளியாகியுள்ளது. 1906 பிப்ரவரியில் பாரதியார் 'வந்தேமாதரம்’ என்ற தலைப்பில் எழுதிய பாடல் சக்ரவர்த்தினி இதழில் வெளிவந்தது. 1906 முதல் 'சுந்தரி’ என்ற தலைப்பில் ஜானகி என்பவர் எழுதிய தொடர் சக்ரவர்த்தினி இதழில் வெளிவந்தது. 'விஜயலட்சுமி’ என்ற தொடரை தேவகுஞ்சரி அம்மாள் எழுதினார். 'மணிவாசகன்’ தொடரை தெ. பொ. கிருஷ்ணசாமிப் பாவலர் எழுதினார். ஆர்.எஸ். சுப்புலட்சுமி அம்மாள் எழுதிய 'பார்வதி சோபனம்’ என்ற பாடல் தொடர் வெளியானது. ஷேக்ஸ்பியரின் ’ஹேம்லட்’ தமிழில் கே. வெங்கட்ராம ஐயரால் மொழிபெயர்க்கப்பட்டுத் தொடராக வந்தது. பானுமதி என்ற தொடரை வரகவி அ. சுப்பிரமணிய பாரதியார் சக்ரவர்த்தினி இதழில் எழுதினார்.

விவாதங்கள்

  • பாரதி சக்ரவர்த்தினி இதழில் ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர் ஆகியோர் பற்றிய செய்திகளை எழுதி வந்தார். அப்போது ஒரு வாசகி, "ஐயா, உமது சக்ரவர்த்தினிப் பத்திரிக்கை அத்தனை ரஸமில்லை. இன்னும் எத்தனை காலம் விவேகாநந்தரைப் பற்றி எழுதிக் கொண்டே போகப் போகிறீர்? பத்திரிக்கையின் வெளிபுறத்திலே தடித்த எழுத்துக்களில் 'பெண்களின் அபிவிருத்தியின் பொருட்டாக' என்று எழுதி விட்டீர்; உள்ளே விவேகாநந்தர் சந்நியாசம் வாங்கிக் கொண்ட விஷயம், புத்தர் ராஜாங்கத்தை விட்டுவிட்டு பிச்சைக்குப் புறப்பட்ட விஷயம்- இதையெல்லாம் எழுதிக் கொண்டிருந்தால் இதனால் பெண்களுக்கென்ன அப்விருத்தி ஏற்படும்" என்று பாரதியிடம் நேரில் கேட்டார். அப்பெண்மணியைப் பாரதி "மிகுந்த கல்வியில்லாவிடினும் கூர்மையான அறிவு கொண்ட பெண்மணி" என்று அறிமுகம் செய்கிறார். "மேற்படி மாது சொன்னது சரி. நான் செய்தது பிழை" என்று ஒப்புக் கொள்கிறார் பாரதி. "இந்த நிமிஷமே மாதர்களுக்கு அர்த்தமாகக் கூடிய விஷயங்களை, அவர்களுக்கு அர்த்தமாகக் கூடிய நடையிலேயே எழுத ஆரம்பிக்க வேண்டுமென்று நிச்சயித்துவிட்டேன்" என்று இதழில் உறுதியளித்தார். (சீனி. விசுவநாதன், சக்ரவர்த்தினி கட்டுரைகள் (தொகுப்பு), ப.70).
  • எழுத்தாளர் அம்பை தி ஹிந்து நாளிதழில் எழுதிய 'பெண் வெறுப்பு என்றொரு நீண்ட படலம்' என்னும் கட்டுரையில் 'இந்த இலக்கிய நோக்கர்களைப் பொறுத்தவரை பெண்ணின் எழுத்தும் செயல்பாடும் ஒரு மன நோயின் கூறுகள். இத்தகைய சிந்தனை சமீபத்தில் ஏற்பட்டதல்ல. சக்ரவர்த்தினி பத்திரிக்கையில் பாரதியார் 1906-ல் பெண்கள் அரசியல் உரிமை கோருவதைப் பற்றி எழுதும் போது, இத்தகைய உரிமைகளைக் கோரும் பெண்கள் அழகற்றவர்கள், திருமணமாகதவர்கள் என்று குறிப்பிடுகிறார்’ என்று எழுதியிருந்தார். இது பெண்கல்வி, பெண்ணுரிமை ஆகியவற்றை வலியுறுத்தி ஓர் இதழையே தொடங்கி நடத்திய சி.சுப்ரமணிய பாரதிக்குமேல் சுமத்தப்படும் அவதூறு என்றும், மேலோட்டமான செவிவழிச்செய்தியின் அடிப்படையில் இக்கூற்று கூறப்படுகிறது என்றும் பாரதி ஆய்வாளர்கள் மறுத்தனர். பாரதியார் அப்படி ஒரு வரியை சக்ரவர்த்தினியில் எழுதியது உண்மை. ஆனால் அது அன்று, ஓர் அரசியல் பூசலில், குறிப்பிட்ட சிலரை இலக்காக்கி எழுதிய வசை. இதழியலில் எப்போதும் உள்ளது அரசியல்பூசல். பாரதியாரும் அவ்வண்ணம் நிறைய அரசியல் பூசல்களை எழுதியிருக்கிறார். அவ்வாறு எழுதாத சிந்தனையாளர்கள் மிகக் குறைவு. பாரதிக்கு அப்போது 24 வயதுதான். மேலும் பாரதி எழுதியது அரசியலுரிமைக்காக போராடும் பெண்களைப் பற்றி அல்ல, அரசியல் அதிகாரநோக்கம் கொண்ட பெண்களைப் பற்றி. சக்ரவர்த்தினி உட்பட்ட இதழ்களில் பாரதியார் பெண்கல்வி, விதவை மறுமணம், பெண்கள் அரசியல்போராட்டங்களில் பங்கெடுக்கவேண்டியதன் இன்றியமையாமை, பெண்கள் ஆண்களைச் சாராமல் தானாகவே சிந்திக்கவேண்டியதன் தேவை ஆகியற்றைப்பற்றி விரிவாகவே எழுதியிருக்கிறார். அவரை அந்த ஒரு வரியை கொண்டு முத்திரைகுத்துவது உள்நோக்கம் கொண்டது என்கிறார்கள்.

இலக்கிய இடம்

சக்ரவர்த்தினி பெண்ணின் பெருமை பேசும் இதழாக வெளிவந்தது. "தமிழ் நாட்டு மாதர்களின் அபிவிருத்தியே நோக்கமாக வெளியிடப்படும் மாதாந்திரப் பத்திரிகை" என்ற குறிப்புடன் வெளியான இதழ் .சக்ரவர்த்தினி . 'பெண்மை அறிவுயரப் பீடோங்கும் பெண்மைதான் ஒண்மையுற ஓங்கும் உலகு’ என்ற கவிதையுடன் வெளிவந்தது. சென்ற நூற்றாண்டின் தேசியமறுமலர்ச்சி சார்ந்த இலட்சியவாத நோக்கத்துடன் பெண்கல்வி, பெண்களின் சமூக இடம், அவர்களின் சிந்தனைச் சுதந்திரம் ஆகியவற்றை வலியுறுத்தும் இதழாக வெளிவந்த சக்ரவர்த்தினிக்கு தமிழ் சிந்தனைக்களத்தில் முன்னோடி இதழ் என்னும் இடம் உண்டு.

இதழில் எழுதியவர்கள்

பெண் எழுத்தாளர்கள்
ஆண் எழுத்தாளர்கள்

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:33:12 IST