under review

வாதூலன்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Added First published date)
 
(One intermediate revision by one other user not shown)
Line 53: Line 53:
* [https://www.jeyamohan.in/183252/ வாதூலன் அஞ்சலிக் குறிப்பு: ஜெயமோகன் தளம்]  
* [https://www.jeyamohan.in/183252/ வாதூலன் அஞ்சலிக் குறிப்பு: ஜெயமோகன் தளம்]  
* [https://marinabooks.com/category/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4%e0%af%82%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d?authorid=1225-5853-2017-9147 வாதூலன் நூல்கள்: மெரீனா புக்ஸ் தளம்]  
* [https://marinabooks.com/category/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4%e0%af%82%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d?authorid=1225-5853-2017-9147 வாதூலன் நூல்கள்: மெரீனா புக்ஸ் தளம்]  
{{Second review completed}}
 
 
{{Finalised}}
 
{{Fndt|04-Jun-2024, 12:57:31 IST}}
 
 
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 15:55, 13 June 2024

எழுத்தாளர் வாதூலன்

வாதூலன் (ஈ. லட்சுமணன்) (1940 - மே 20, 2023) எழுத்தாளர், இதழாளர், நாடக ஆசிரியர். வங்கியில் உயரதிகாரியாகப் பணியாற்றினார். பொது வாசிப்புக்குரிய சிறுகதைகளையும், நகைச்சுவைக் கட்டுரைகளையும் எழுதினார். இசை விமர்சகராகச் செயல்பட்டார்.

பிறப்பு, கல்வி

ஈ. லட்சுமணன் என்னும் வாதூலன் 1940 களில் சென்னையில் பிறந்தார். பூர்வீக ஊர், நாகர்கோவில் அருகில் உள்ள இறச்சக் குளம் கிராமம். வாதூலன் பள்ளிக் கல்வியைச் சென்னையில் படித்தார். மாநிலக் கல்லூரியில் பயின்று பி.எஸ்ஸி. பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

வாதூலன் வங்கித் தேர்வெழுதித் தேர்ச்சி பெற்று கனரா வங்கியில் ஊழியராகச் சேர்ந்தார். இந்தியா முழுவதும் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றினார். முதுநிலை மேலாளராகப் பணி ஓய்வு பெற்றார். மணமானவர். மனைவி: லலிதா. மகன்: ஈஸ்வர்; மகள்: மீனாட்சி.

வாதூலன் நூல்கள்

இலக்கிய வாழ்க்கை

வாதூலன் அணில், கண்ணன், கல்கண்டு இதழ்கள் மூலமும், தான் வசித்த புரசைவாக்கம் பூங்காவில் உள்ள நூலகத்தில் வாசித்தும் இலக்கிய ஆர்வம் பெற்றார். ஜ. ரா. சுந்தரேசன், ரா. கி. ரங்கராஜன் ஆகியோரின் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டார். வாதூலனின் முதல் படைப்பு குமுதத்துக்கு எழுதிய வாசகர் கடிதம். ரா. கி. ரங்கராஜனைத் தனது முன்னோடியாகக் கொண்டு ’வாதூலன்’ என்ற புனை பெயரில் எழுதினார். வாதூலனின் முதல் சிறுகதை, ‘அவளுக்கு அவன்' 1957-ல், தினமணி கதிரில் வெளியானது. அப்போது கதிரின் ஆசிரியராக இருந்த துமிலன், வாதூலனைத் தொடர்ந்து எழுத ஊக்குவித்தார். தினமணி கதிர், கலைமகள், ஆனந்த விகடன், கல்கி, மஞ்சரி, அமுதசுரபி, குமுதம், கணையாழி எனப் பல இதழ்களில் வாதூலனின் சிறுகதை, கட்டுரைகள் வெளியாகின.

தினமணி கதிரின் ஆசிரியராக இருந்த சாவி தந்த ஊக்கத்தால் வாதூலன் நகைச்சுவைக் கட்டுரைகளை எழுதினார். கி. கஸ்தூரிரங்கன் வாதூலனின் படைப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டார். இராம. சம்பந்தம் தினமணி ஆசிரியரானபோது வாதூலனின் இசை, இலக்கியம், பொருளாதாரம் சார்ந்த பல கட்டுரைகளை தினமணி நடுப்பக்கத்தில் வெளியிட்டார். 'தமயந்தி', 'ஈஸ்வர குமாரி', 'லலிதா லட்சுமணன்' போன்ற புனை பெயர்களிலும் எழுதினார். கல்கி அறக்கட்டளையும், தேவன் அறக்கட்டளையும் இணைந்து கல்லூரி மாணவர்களுக்காக நடத்திய நகைச்சுவை எழுத்துப் பயிலரங்கில் எழுத்தாளர் சுஜாதா, கிரேசி மோகன் ஆகியோர் ஆற்றிய உரையுடன், கல்கியின் நகைச்சுவையையும் இணைத்துத் தொகுத்து, ‘கல்கி வளர்த்த சிரிப்பு அலைகள்’ என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டார் வாதூலன். அந்நூலுக்கு சிறந்த வாசக வரவேற்பு கிட்டியது.

வாதூலனின் முதல் சிறுகதைத் தொகுப்பு ‘கலிபோர்னியா திராட்சை’ அவரது 75-ம் வயதில் வெளியானது. அசோகமித்திரன் அதற்கு முன்னுரை எழுதியிருந்தார். தொடர்ந்து பங்கு வர்த்தகம், இசை, நகைச்சுவைக் கட்டுரைகள் எனச் சில நூல்கள் வெளியாகின.

இதழியல்

கல்கியின் ஆசிரியராக இருந்த கி. ராஜேந்திரன் வாதூலனின் படைப்புகளால் ஈர்க்கப்பட்டார். வாதூலன் பணி ஓய்வுக்குப் பின் சாருகேசியுடன் இணைந்து கல்கியில் பல பேட்டிகள், விமர்சனங்கள், கட்டுரைகளை எழுதினார். ‘தமயந்தி’ என்ற புனை பெயரில் பல பேட்டிக் கட்டுரைகளை எழுதினார்.

கல்கியில் சாருகேசியுடன் இணைந்து ‘வாசகர் சிறப்பிதழ்’ தயாரித்தார். அதில் எழுத்தாளர் லக்ஷ்மி தொடங்கி பாலகுமாரன் வரை பல எழுத்தாளர்களுடன் அவர்களது வாசகர்களை கலந்துரையாடச் செய்து உரையாடல்களைத் தொகுத்து எழுதினார். கல்கி இசை விழாச் சிறப்பு மலரை சாருகேசியுடன் இணைந்து தயாரித்தார்.

விருதுகள்

  • கல்கி சிறுகதைப் போட்டியில் பரிசு
  • அமுதசுரபி பொன்விழாப் போட்டியில் சிறந்த சிறுகதைக்கான பரிசு

மறைவு

வாதூலன், உடல் நலக்குறைவால் மே 20, 2023 அன்று, தனது 83-ம் வயதில் காலமானார்.

மதிப்பீடு

வாதூலன் பொது வாசிப்புக்குரிய கட்டுரைகளை எழுதினார். வாதூலன் எழுதிய இசை விமர்சனக் கட்டுரைகளும், நகைச்சுவைக் கட்டுரைகளும் குறிப்பித்தகுந்தன. நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதிய சாவி, பாக்கியம் ராமசாமி, பி.எஸ். ரங்கநாதன் வரிசையில் குறிப்பிடத்தகுந்த ஒருவராக வாதூலன் அறியப்படுகிறார்.

நூல்கள்

  • சங்கீத நினைவலைகள்
  • கர்நாடக சங்கீதத்தை ரஸியுங்கள்
  • கலிபோர்னியா திராட்சை
  • வெற்றிக்கு ஏழு எழுத்துக்கள்
  • பங்குச் சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி என்று உங்களுக்குத் தெரியுமா?
  • இனிமை பண்பு சொல் இவை வளர்ச்சிக்குப் படிக்கட்டுகள்
  • கல்கி வளர்த்த சிரிப்பலைகள்
  • உறவுகள் மேம்பட
  • அருள் தரும் ஒளி

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 04-Jun-2024, 12:57:31 IST