under review

ந. சஞ்சீவி

From Tamil Wiki
டாக்டர் ந. சஞ்சீவி
பேராசிரியர், முனைவர் ந. சஞ்சீவி

ந. சஞ்சீவி (டாக்டர் ந. சஞ்சீவி; நடேசன் சஞ்சீவி; மே 2, 1927 - ஆகஸ்ட் 22, 1988) தமிழக எழுத்தாளர், ஆய்வாளர். பதிப்பாசிரியர். தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். உள்நாட்டு, வெளிநாட்டுக் கருத்தரங்குகள் பலவற்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். தமிழ், ஆங்கிலம், ஜெர்மன், ப்ரெஞ்ச் மொழிகள் அறிந்தவர். பல்வேறு விருதுகள் பெற்றவர்.

பிறப்பு, கல்வி

ந. சஞ்சீவி, மே 2, 1927 அன்று, திருச்சியில் மு. நடேசன்-கண்ணம்மாள் இணையருக்குப் பிறந்தார். இவர் தந்தை திருச்சி தூய வளனார் (செயிண்ட் ஜோசப்) கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார்.

சஞ்சீவி பள்ளிக்கல்வியை திருச்சியில் கற்றார். 1941-1943-ம் ஆண்டில் திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் புதுமுக வகுப்பை நிறைவு செய்தார். 1943- 1945-ம் ஆண்டுகளில் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பயின்று தமிழ் பாடத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார் 1947-1950 ஆண்டுகளில் கீழ்த்திசை மொழிகளில் பி.ஓ.எல். ஆனர்ஸ் (Bachelor of Oriental Language-Honours) பட்டம் பெற்றார். அங்கே அ.மு. பரமசிவானந்தம், மு. வரதராசன் போன்ற புகழ்மிக்க பேராசிரியர்களிடம் தமிழ் பயின்றார்.

ந.சஞ்சீவி சென்னைப் பல்கலைக்கழகத்தில் 1963-ல் பேராசிரியர் ரா.பி. சேதுப்பிள்ளையின் வழிகாட்டுதலில் புறநானூற்று ஆராய்ச்சி என்னும் தலைப்பில்ஆய்வு செய்து எம்.லிட் (Master of Literature) பட்டம் பெற்றார். பேராசிரியர் மு.வரதசாசனின் வழிகாட்டுதலில் 'சங்க நூல்களில் அடைவளம்' என்னும் பொருளில் ஆய்வுசெய்து 1969-ம் ஆண்டில் முனைவர் (PhD) பட்டம் பெற்றார்.

ந.சஞ்சீவி மானிடவியல், அரசியல், ஆட்சியியல், மொழியியல் ஆகியவற்றில் பட்டயம் (Diploma) பெற்றார். இயற்கை வைத்தியம் பயின்று சான்றிதழ் பெற்றார்.

தனி வாழ்க்கை

மனைவி: பேராசிரியை கிருஷ்ணா சஞ்சீவி. மகள்: எழிலரசி பாலசுப்பிரமணியன். சஞ்சீவி பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றார்

கல்விப்பணிகள்

ந சஞ்சீவி புகழ்பெற்ற தமிழ்ப்பேராசிரியராக இருந்தார். அவர் ஆற்றிய பணிகள்

  • 1950 – 60 காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்த் துறைத் தலைவர்.
  • 1960 – 65 சென்னைப் பல்கலைக் கழக தமிழ்விரிவுரையாளர்.
  • 1965 -71 சென்னைப் பல்கலைக் கழக தமிழ் இணைப் பேராசிரியர்.
  • 1971- 76 சென்னைப் பல்கலைக் கழக தமிழ்த் துறைத் தலைவர்.
  • 1980 – 87 சென்னைப் பல்கலைக் கழக தமிழ் இலக்கியத் துறைத் தலைவர்.

அரசியல்

ந. சஞ்சீவி தேசிய இயக்கம் சார்ந்த பார்வை கொண்டிருந்தார். கல்லூரியில் படிக்கும்போது 'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தில் ஈடுபட்டார். ம.பொ. சிவஞானம் நடத்திய 'தமிழரசு' கழகத்தில் உறுப்பினராகப் பணியாற்றினார். பிற்காலத்தில் திராவிட முன்னேற்றக் கழகக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவராக இருந்தார். இந்திய விடுதலைப்போர் குறித்த குறிப்பிடத்தக்க நூல்களை எழுதியவர். தமிழியக்கச் சார்பு கொண்ட ஆய்வாளர். பின்னாளில் அ.தி.மு.க அரசுடன் அணுக்கமாக இருந்தார். அ.தி,மு.க அமைச்சர் ப.உ.சண்முகம் இவருடைய உறவினர். காங்கிரஸ் ஆதரவாளரும் எழுத்தாளரும் கல்வித்துறை உயரதிகாரியுமான கு.ராஜவேலுவுக்கும் அணுக்கமானவர். இந்தியாவில் உருவாக்கப்பட்ட நெருக்கடிநிலையை எதிர்த்ததால் 1976–80 ல் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு மீண்டும் பதவிக்கு வந்தார்.

இலக்கிய வாழ்க்கை

ந. சஞ்சீவியின் ‘பாரதியும் பாரதியும்’ என்ற தலைப்பிலான முதல் கட்டுரை அவர் மாணவராக இருந்தபோது திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியின் ஆண்டு மலரில், 1942-ல் வெளியானது. தொடர்ந்து கல்லூரி மலர்களிலும், நினைவு மலர்களிலும், தமிழ்ச் சங்க ஆண்டு மலர்களிலும் எழுதினார். சுதேசமித்திரன், அமுதசுரபி, தமிழ் முரசு, கலைமகள், கலைக்கதிர், கல்கி, ஆனந்த விகடன், தினமணி கதிர், உமா, சீரணி, தமிழ் அரசு, காஞ்சி, தென்னகம் போன்ற இதழ்களில் தமிழாய்வு, வரலாறு, இலக்கியம் தொடர்பான பல கட்டுரைகளை எழுதினார்.

ந.சஞ்சீவி மு.வரதராசன் போன்றவர்களின் ஆய்வுமுறைமையையும் நோக்கையும் கொண்டவர். தமிழின் தனித்தன்மையை நிலைநாட்டும் நோக்கு கொண்ட ஆய்வுக்கட்டுரைகளை எழுதினார். பொதுவாக எளிய பாடநூல்தன்மை கொண்ட நூல்கள். ஆய்வுநூல்களில் விரிவான தரவுத்தொகுப்புகளை அளித்துள்ளார். ந. சஞ்சீவி, 350-க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதினார். ஆங்கிலத்திலும் பல கட்டுரைகளை எழுதினார். உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் நடந்த பல இலக்கிய நிகழ்வுகளில், கருத்தரங்குகளில், மாநாடுகளில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். .

ஊற்று - பெங்களூர் தமிழ்ச் சங்க இதழ்

பொறுப்புகள்

  • தலைவர், இந்திய மற்றும் அயல் மொழிகளின் புலம், சென்னைப் பல்கலைக்கழகம்.
  • உறுப்பினர், பல்கலைக்கழகக் கல்விக்குழு, பேரவை, சென்னைப் பல்கலைக் கழகம்.
  • உறுப்பினர், முதுகலைப் பாடத் திட்டக்குழு, சென்னைப் பல்கலைக் கழகம்.
  • உறுப்பினர், தமிழ்க்குழு, ஒஸ்மானியா, பெங்களூர் பல்கலைக்கழகங்கள்.
  • தலைமைப் பதிப்பாசிரியர், உயராய்வு மையம், தமிழ் இலக்கியத்துறை, சென்னைப் பல்கலைக்கழகம்.
  • உறுப்பினர், தமிழ்பாடத்திட்டக்குழு, திருவேங்கடவன், கள்ளிக்கோட்டை, கேரளப் பல்கலைக் கழகங்கள்.
  • உறுப்பினர், தேர்வுக்குழு, இந்திய உயராய்வு மையம், சிம்லா
  • உறுப்பினர், மரபு வழிப் பண்பாட்டு மையச் செயலாட்சிக் குழு, சென்னைப் பல்கலைக்கழகம்.
  • தலைவர், தமிழ் எழுத்தாளர் சங்கம் (1969).
  • தலைவர், தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் (1971-72).
  • தலைவர், தமிழ்க் கலை மன்றம் (1971-72).
  • உறுப்பினர், செயலர், தமிழகப் புலவர் குழு (1971-76).
  • துணைத்தலைவர், இந்திய அகராதி சார் கழகம், திருவனந்தபுரம், (1976).
  • வாழ்நாள் உறுப்பினர், திராவிட மொழியியல் கழகம், திருவனந்தபுரம்.
  • வாழ்நாள் உறுப்பினர், சித்தாந்த மகா சமாஜம்.

விருதுகள்

  • பி.ஓ.எல். தேர்வில் முதன்மை நிலை பெற்றதற்காக தங்கப் பதக்கம், பரிசு, சான்றிதழ்.
  • தருமபுர ஆதினம் வழங்கிய ’செந்தமிழ் இலக்கியச் செம்மல்; பட்டம்
  • குன்றக்குடி ஆதினம் வழங்கிய ’நூலறி புலவர்’ பட்டம்
  • ’சிந்தனைச் செம்மல்’ பட்டம்

மறைவு

ந. சஞ்சீவி, ஆகஸ்ட் 22, 1988-ல் காலமானார்.

நாட்டுடைமை

ந. சஞ்சீவியின் நூல்கள், அவரது மறைவுக்குப்பின், 2008-ல், தமிழக அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.

ந. சஞ்சீவி கட்டுரைக் களஞ்சியம் நூல் - காவ்யா வெளியீடு

ஆவணம்

தமிழ் இணையக் கல்விக் கழக நூலகத்தில் ந. சஞ்சீவியின் நூல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. காவ்யா சண்முகசுந்தரம், தனது காவ்யா பதிப்பகத்தின் மூலமாக, ந. சஞ்சீவியின் கட்டுரைகளைத் தொகுத்து, ‘பேராசிரியர் ந. சஞ்சீவி கட்டுரைக் களஞ்சியம்’ என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டார்.

ஆய்வுகள்

பேராசிரியர் ந. சஞ்சீவியின் தமிழ்க் கொடை- சூ. இன்னாசி

இலக்கிய இடம்

ந. சஞ்சீவி இரு தளங்களில் தமிழ்ப்பணியாற்றியவர். அவருடைய எளிமையான அறிமுக நூல்கள் தமிழின் மறுமலர்ச்சி இயக்கத்தின் சிந்தனைகளையும் பார்வைகளையும் மாணவர்களிடையே கொண்டுசென்றவை. இந்திய தேசியப்போராட்டம் பற்றிய அறிமுக வரலாற்று நூல்களையும் எழுதியிருக்கிறார். அவருடைய ஆய்வுநூல்களில் தமிழிலக்கியத்தின் தரவுகளை சேகரித்து அட்டவணைப்படுத்துதல், செய்திகளை தொகுத்துரைத்தல் ஆகியவை காணப்படுகின்றன. தமிழ் மறுமலர்ச்சிக் கால ஆய்வுகளை கல்வித்துறைக்கு ஏற்ப மறு ஆக்கம் செய்தவர் என ந. சஞ்சீவியை மதிப்பிடலாம்.

ந. சஞ்சீவி நூல்கள்
ந. சஞ்சீவி புத்தகங்கள்

நூல்கள்

எழுதியவை:
  • 1806
  • ஆராய்ச்சிக் கட்டுரைகள்
  • இருபெருந்தலைவர்
  • இலக்கிய இயல்
  • கம்பன் ஒரு கொம்பன்
  • கம்பன் நம்மவன்
  • வீடணன் ஒரு திறனாய்வு
  • உணர்வின் எல்லை
  • கன்னியாகுமரி அன்னை மாயம்மா (அ.கா. பெருமாள் உடன் இணைந்து எழுதியது)
  • கால்டுவெல்-திருநெல்வேலி சரித்திரம்
  • கவிஞர் தரும் காட்சி
  • இயலிசை நாடகம்
  • பதிற்றுப்பத்துள் மூன்றாம் பத்து
  • தமிழ் நாடக வரலாறு
  • நாடகப் பேராசிரியர் நால்வர்
  • காற்றிலே மிதந்தவை
  • கும்மந்தான் கான்சாகிபு
  • சிவகங்கைச் சிங்கங்கள்
  • முதலில் முழக்கிய முரசு
  • வீரபாண்டியன் விழுப்புகழ்
  • வீரத் தமிழகத்தில் விடுதலை வேள்வி
  • வெள்ளையர் கண்ட தமிழ் வீரர்
  • வெள்ளையர் கண்ட வீரத் தமிழகம்
  • விடுதலை இயக்க வரலாறு
  • வெள்ளை ஆதிக்க வரலாறு
  • போரும் வேரும்
  • சங்க காலச் சான்றோர்கள்
  • சிலப்பதிகார விருந்து
  • சிலம்புத்தேன்
  • சீனம் தரும் சிந்தனைகள்
  • ஆய்வியல் அரிச்சுவடி
  • படிப்படியே தமிழ்ப் பண்பாடு
  • கருத்து மலர்கள்
  • செந்தமிழ் வளர்க்கும் சிந்தனைகள்
  • இலக்கியத் தலைவர் கலைஞர்
  • தமிழியல் கட்டுரைகள்
  • மங்கல மனைமாட்சி
  • மானங்காத்த மருது பாண்டியர்
  • மருதிருவர்
  • வீரத்தலைவர் பூலித்தேவர்
  • வேலூர்ப் புரட்சி
பதிப்பித்தவை:
  • First All India Tirukkural Research Seminar Papers
  • பல்கலைப் பழந்தமிழ்
  • தெய்வத் தமிழ்
  • பெருங்காப்பியச் சிற்றிலக்கியப் பெருந்தமிழ்
  • இந்திய விடுதலையும் தமிழ் இலக்கியமும்

உசாத்துணை


✅Finalised Page