செம்புலப் பெயனீரார்
From Tamil Wiki
செம்புலப் பெயனீரார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடிய பாடல் ஒன்று குறுந்தொகையில் உள்ளது.
வாழ்க்கை குறிப்பு
செம்புலப் பெயனீரார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவரது இயற்பெயர் தெரியவில்லை. எனவே இவரது பாடலில் இடம்பெற்றுள்ள 'செம்புலப் பெயல்நீர்' என்ற உவமையின் சிறப்பை முன்னிட்டு அதையே புலவரின் பெயராக கொண்டனர்.
இலக்கிய வாழ்க்கை
செம்புலப் பெயனீரார் பாடிய ஒரு பாடல் குறுந்தொகையில் 40-வது பாடலாக அமைந்துள்ளது. காதல் கொண்ட தலைவனின் பிரிவை எண்ணி அஞ்சிய தலைவியை ஆற்றுப்படுத்தும் வண்ணம் தலைவன் உரைப்பதாக அமைந்துள்ள பாடல்.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
- பிரிவை எண்ணி அஞ்சிய தலைவியை நோக்கி நம்மிடையே பிரிவு நிகழாது என்று உணர்த்தும் பொருட்டு தலைவன் கூறியது.
- என் தாயும் உன் தாயும் யாரென்று அறியோம். நம் தந்தையர் கொண்ட உறவு முறை என்னவென்றும் அறியோம்.
- உவமை: செம்மண் நிலத்தில் கலந்த நீரினை போல நம் இருவர் உள்ளமும் ஒன்றுடனொன்று இரண்டற கலந்து விட்டன.
பாடல் நடை
குறுந்தொகை - 40
- துறை: தலைவனின் பிரிவை அஞ்சிய தலைவிக்கு தலைவன் உரைத்தது.
யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ் வழி அறிதும்?
செம் புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 12-Nov-2024, 12:23:23 IST