under review

சி.மௌனகுரு

From Tamil Wiki
மௌனகுரு
மௌனகுரு அரங்கில்
மௌனகுரு சிறப்பிதழ்
மௌனகுரு- சித்ரலேகா
கூத்த யாத்திரை
இராவணேசன் விளாம்பரம்

To read the article in English: Maunaguru. ‎


சி.மௌனகுரு (ஜூன் 9, 1943) சின்னையா மௌனகுரு. நாடகப்பேராசிரியர், நிகழ்கலை ஆய்வாளர், தெருக்கூத்து ஆசிரியர், தெருக்கூத்து நடிகர், ஈழ இலக்கிய வரலாற்றசிரியர், எழுத்தாளர்.

பிறப்பு, கல்வி

மௌனகுரு

மட்டக்களப்பு மாநிலத்தில் அமிர்தகழி அருகே சீலாமுனை என்னும் கூத்துக்கலைகளுக்குப் பெயர் பெற்ற ஊரில் சின்னையா - முத்தம்மா இணையருக்கு ஜூன் 9, 1943-ல் பிறந்தவர் மௌனகுரு. அவருக்கு சகோதரிகள் மூவர். மௌனகுருவின் ஆரம்பக்கல்வி அமிர்தகழி மெதடிஸ்ட் மிஷன் பாடசாலையில் தொடங்கியது (பின்னர் அமிர்தகழி மகாவித்திலாயம்) ஆரம்ப வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்புவரை (1948-1953) அங்கே பயின்றபின் புலமைப்பரிசில் பெற்று வந்தாறுமூலை மத்திய கல்லூரிக்குச் சென்றார்.

வந்தாறுமூலை மத்திய கல்லூரியில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை இடைநிலைக் கல்வி கற்றார். அப்போது வகுப்புத் தலைவராக, விடுதித் தலைவராக, விபுலானந்தர் இல்ல விளையாட்டுத் தலைவராக , பாடசாலைத் தலைவராக, தமிழ் மன்றத் தலைவராக இந்துமன்றத்தலைவராக, விடுதி உணவுப் பகுதிப் பொறுப்பாளராக, சாரணர் இயக்கத் தலைவராக- முன்னணி மாணவராக திகழ்ந்தார். கைப்பந்தாட்டம், காற்பந்தாட்டம் முதலிய குழுக்களிலும் பங்கேற்றார் .

மௌனகுரு அரங்கில்

மௌனகுரு பேராதனைப் பல்கலைக் கழகத்தில் பயின்று தமிழில் பட்டம் பெற்றார் (1961-65). பல்கலைக் கழகத்தில் க.கணபதிப்பிள்ளை, எஸ். செல்வநாயகம், சு. வித்தியானந்தன், க.கைலாசபதி, எஸ். சதாசிவம், சி. தில்லைநாதன், ச. தனஞ்செயராஜசிங்கம், க. இந்திரபாலா, வி. சிவசாமி, சி.பத்மநாதன்,பஸ்தியாம்பிள்ளை, பாலகிருஷ்ணன் போன்ற புகழ்பெற்ற ஆசிரியர்கள் அமைந்தனர். பின்னர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் முதுமாணி (எம்.ஏ) பட்டத்தையும் (1970-73) கொழும்பு பல்கலைக்கழகத்தில் கல்வி டிப்ளோமா பட்டத்தையும் பெற்றார் (1975-76). யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் (1978-84) பெற்றார். 1978-ல் யாழ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் கைலாசபதியின் வழிகாட்டலில் ஆரம்பித்த கலாநிதிப் (முனைவர்)பட்ட ஆய்வை 1982-ல் பேராசிரியர் கைலாசபதியின் மறைவிற்குப் பின் பேராசிரியர் சிவத்தம்பியின் மேற்பார்வையில் தொடர்ந்து முடித்தார்.

கல்விப்பணிகள்

முதுகலைப் பட்டம் பெற்ற பின் மௌனகுரு 1967-லிருந்து 1968 வரை செயின்ட் செயிண்ட் வின்செண்ட் மகளிர் உயர்தரக் கல்லூரியிலும் செயின்ட். மைக்கேல் கல்லூரியிலும், மட்டக்களப்பு அரசினர் கல்லூரி (இன்று இந்துக்கல்லூரி) யிலும் ஆசிரியராக தமிழ் பயிற்றுவித்தார். அரச ஆசிரியர் நியமனம் பெற்றபின் 1968-ல் கல்முனை சாஹிராக் கல்லூரியிலும், 1969-ல் கல்முனை வெஸ்லிக் கல்லூரியிலும் 1970-ல் வந்தாறுமூலை மத்திய கல்லூரியிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். 1972 முதல் 1976 வரை கொழும்பில் கல்வி அமைச்சின் பாடவிதான அபிவிருத்தி நிலையத்தில் பாட நூல் எழுத்தாளராக பணியாற்றினார்.

மௌனகுரு, விருது

1977-ல் யாழ் கல்வி வலயத்தில் ஆசிரிய ஆலோசகராக இருந்தார்.யாழ்ப்பாணம் உஸ்மானியாக் கல்லூரியிலும் மூன்று ஆண்டுகள் பணியாற்றினார். 1981-ல் பலாலி ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் விரிவுரையாளராகி இரண்டு ஆண்டுகள் ஆசிரிய மாணவர்களுக்குத் தமிழ் போதித்தார். 1984 முதல் 1988 வரையும் யாழ் பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராகவும், 1989-லிருந்து 1991 வரை சிரேஷ்ட விரிவுரையாளராகவும் பணியாற்றினார். 1992-ல் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கலைத்துறை ஆரம்பிக்கப்பட்ட போது மௌனகுரு அதில் பங்கேற்று விரிவுபடுத்தினார். நுண்கலைத் துறைத்தலைவராக கலை, பண்பாட்டுத்துறை பீடாதிபதியாக, பதில் துணைவேந்தராக, சுவாமி விபுலானந்தர் இசை நடன வளாகத்தின் இணைப்பாளராக நூலகக் குழுத்தலைவராக, தமிழ்ச் சங்கப் போஷகராக பல தளங்களில் பணியாற்றினார்.

தனிவாழ்க்கை

மௌனகுருவின் மாணவியாக பயின்றவர் சித்ரலேகா. (சித்ரலேகா மௌனகுரு) கொழும்பில் வாழ்ந்த காலத்தில் 1973 ல் சித்ரலேகாவை மௌனகுரு மணம்புரிந்துகொண்டார். சித்திரலேகா மட்டக்களப்பில் வாழ்ந்த தமிழறிஞரும், சமூகத் தொண்டருமான திரு. பி. வி. கணபதிப்பிள்ளையின் மூத்தமகள். இலங்கைப் பல்கலைக்கழகம் - கொழும்பு வளாகத்தின் தமிழ்த்துறைச் சிறப்புப் பட்டதாரி. அக்காலத்தில் இலங்கை வானொலியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக இருந்தவர். மௌனகுரு- சித்ரலேகா இணையருக்கு ஒரு மகன், சித்தார்த்தன், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் மானுடவியல்துறை பேராசிரியராகப் பணிபுரிகிறார்.

அரசியல் வாழ்க்கை

பள்ளிநாட்களிலேயே மௌனகுரு தமிழரசுக் கட்சியின் அரசியலில் ஈடுபாடு கொண்டு சட்டமறுப்புப் போராட்டங்களில் பங்குபெற்றார். வந்தாறுமூலையிலிருந்து இரண்டாயிரம் மாணவர்களைத் திரட்டி மட்டக்களப்பு அலுவலகத்துக்கு ஊர்வலமாகச் சென்று பகிரங்க பிரம்படி தண்டனை பெற்றார். சட்டமறுப்புப் போராட்டங்களை நடத்திய, மட்டக்களப்பு தமிழ் மாணவ மன்றத் தலைவராக இருந்து செயற்பட்டார். ’தெருவெல்லாம் தமிழ் முழக்கம்' - இயக்கத்து உறுப்பினராகவும் இருந்தார். இவ்வியக்கம் ஊர் ஊராகச் சென்று பாடல்களால் தமிழ் உணர்வூட்டியது. கவிஞர் காசி ஆனந்தன், முழக்கம் முருகப்பா ஆரையூர் அமரன், மாஸ்டர் சிவலிங்கம், வித்துவான் சா.இ. கமலநாதன் என்று பலர் அதில் செயல்பட்டனர்.

கொழும்பு சென்றபின் மௌனகுரு இடதுசாரி இயக்கங்களின் ஆதரவாளராக மாறிச் செயல்பட்டார். பேராதனை பல்கலைக்கழக வளாகத்தி நிகழ்ந்த மார்க்ஸிய வகுப்புகளுக்குச் சென்ற மௌனகுரு க.கைலாசபதிக்கு அணுக்கமான மாணவரானார். வியட்நாம் மீது அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிராக பேராதனையிலிருந்து கண்டிக்கு சென்ற பாதயாத்திரையில் முன்னணிப் பங்கெடுத்தார்.

ஆசிரியப்பணியில் நுழைந்ததும் தொழிற்சங்கச் செயல்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டார். தோழர் கிருஷ்ணன்குட்டி ,கவிஞர் சுபத்திரன், சாருமதி முதலானோருடன் இணைந்து சமூகப்பணிகளிலும் ஈடுபட்டார்.

இலக்கியவாழ்க்கை

கல்லூரி நாட்களில் கவிதையெழுதுவதில் ஆர்வம் கொண்டிருந்த சி.மௌனகுரு ’பட்டப்பகலில் பாவலர்க்குத் தோன்றுவது' என்ற தலைப்பில் நிகழ்ந்த கவியரங்கில் வாசித்த கவிதையில் ஈழத் தமிழர் தனிநாடு பெற்று, படை கொண்டு புலிக் கொடியுடன் வாழ்வதாக பாடி முதல் பரிசு பெற்றார். அப்போது நிகழ்ந்த சிறுகதைப் போட்டியில் ’சலனம்' என்ற சிறுகதைக்கு மூன்றாம் பரிசு பெற்றார்.

மௌனகுருவின் முதன்மை ஈடுபாடு கூத்து, நாடகம் ஆகியவையே எனினும் அவர் தொடர்ச்சியாக இலக்கிய ஆய்வாளராகவும் செயல்பட்டு வருகிறார். ஈழ இலக்கியவரலாற்றையும், மட்டக்களப்பின் இலக்கிய வரலாற்றையும் பற்றிய முக்கியமான நூல்களை எழுதியிருக்கிறார்.

மௌனகுரு மலர்

நிகழ்த்துகலை பங்களிப்பு

மெளனகுருவின் தந்தையும் கிராமியக் கலைகளில் பயிற்சி கொண்டவர். அவரிடமிருந்து நிகழ்த்துகலைகள் மேல் மௌனகுரு ஆர்வமும் அடிப்படைக் கல்வியும் கொண்டார். கல்லூரியில் நிகழும் நாடகங்களில் முக்கிய பாத்திரங்களையேற்று நடித்து சிறந்த நடிப்புக்கான பரிசுகளைப் பலமுறை வென்ற மௌனகுரு கல்லூரியில் அரங்கேற்றிய பாசுபதம் கூத்தில் சிவவேடன் வேடமேற்றதை கண்டு கவரப்பட்ட பேராசிரியர் சு.வித்தியானந்தன் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் திறந்த வெளியரங்கில் 1959-ல் மேடையேற்றினார். பேராதனை பல்கலைக்கழகத்தில் படித்த காலத்தில் 1962-ல் கர்ணன்போர் கூத்தை நடத்தி அதி கர்ணனாக நடித்தார். 1963-ல் நொண்டிநாடகத்தில் செட்டியாகவும், 1965-ல் இராவணேசன் நாடகத்தில் இராவணன் ஆகவும் நடித்தார். 1966-ல் இவரது பல்கலைக்கழக வாழ்வு நிறைவுற்ற போதிலும் அப்போது தயாரான 'வாலிவதை' -கூத்துக்கும் உதவி செய்து விட்டே வெளியேறினார்.

ஈழத்துக் கூத்து ஆய்வுகளின் மையமான திகழ்ந்த பேராசிரியர் சு.வித்தியானந்தனுக்குத் துணையாக மௌனகுரு கூத்து நூல்களைச் சுருக்கி வடிவமைத்தார். புதிய கூத்துக்களைக் எழுதினார். மட்டக்களப்பில் அண்ணாவிமாரைத் தேடிப்பிடித்து கொடுத்தார். மாணவர்களுக்குக் கூத்தாட்டம் பழக்கினார். கூத்தாட்ட அலங்கார உடைகள் வடிவமைக்க உதவினார்.

கொழும்பில் ஆசிரியப் பணியில் இருக்கையில் தீண்டாமைக்கு எதிராக மௌனகுரு முயற்சியால் 'சங்காரம்' எனும் நாடகம் தயாரிக்கப்பட்டது. 1969-ல் மட்டக்களப்பில் உருவான நாடக சபா மூலம் கொழும்பு லும்பினி அரங்கில் தொழிற்சங்கவாதி திரு.எஸ். சண்முகதாசன் தலைமையில் சங்காரம் மேடையேற்றப்பட்டு கூத்து மரபில் புதுமாற்றம் என்று விமர்சகர்களால் வரவேற்கப்பட்டது.

கொழும்பில் இருக்கையில் இலங்கை வானொலியில் 'சங்கநாதம்' எனும் இளைஞர் நிகழ்ச்சியையும் 'கிராம சஞ்சிகை' எனும் நிகழ்ச்சியையும் தயாரிக்கும் பொறுப்பு மௌனகுருவுக்குக் கிடைத்தது. வானொலியில் உரைச்சித்திரங்கள் சிறப்புச் சொற்பொழிவுகள் எழுதினார். வானொலிக்கு மெல்லிசைப்பாடல்களை எழுதினார். ’சின்னச் சின்னக் குருவிகள்’ ’சேருவோம் ஒன்று சேருவோம்’ என்னும் பாடல்கள் புகழ்பெற்றவை.

திருமதி கார்த்திகா கணேசருடன் இணைந்து வடமோடி ஆட்டங்களையும் பரத நாட்டிய ஆட்டங்களையும் கலந்து 'இராமயணம்' நாட்டிய நாடகத்தை உருவாக்கினார். தாசீசியஸ், சுந்தரலிங்கம், சிவானந்தன், சுஹைர் அப்துல் ஹமீத் போன்றவர்களுடன் இணைந்து பணியாற்றினார். தாசீசியஸ் தயாரித்தளித்த புதியதொரு வீடு, கந்தன் கருணை ஆகிய நாடகங்களில் பங்கேற்று நடித்தார். 1971-லிருந்து 1977 வரை இலங்கைக் கலைக் கழகத்தின் நாடகக் குழுவிலும் இசைக்குழுவிலும் உறுப்பினராக இருந்தார். தர்ம பூரீபண்டார நாயக்கா, சைமன் நவவத்தேகம, தர்மசேன பத்திரராஜ, சுனில் ஆரியரத்தின, சுனில் விஜயறிவர்த்தன, AJ. குணவர்த்தனா முதலிய சிங்கள கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றினார்

மட்டக்களப்பு வடமோடி தாளக்கட்டை அடிப்படையாகக் கொண்டு திரு.பரராசசிங்கம், பேராசிரியர் மகேஸ்வரன் ஆகியோருடன் இணைந்து யுனெஸ்கோ (Unesco) வுக்காக ஒருபாடல் தயாரித்து வெளியிட்டார்.அகில இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்க நாடகக் குழுவின் செயலவை உறுப்பினராகவும் தேர்வுசெய்யப்பட்டு பணியாற்றினார்.

1979-ல் யாழ் பல்கலைக்கழகத்தில் புதியதொரு வீடு'நாடகம் நடிக்கப்பட்டு பல கிராமங்களுக்கும் அது கொண்டு செல்லப்பட்டது. யாழ்ப்பாணத்தில் செயற்பட்டு வந்த நாடக அரங்குக் கல்லூரியுடன் இணைந்து நடிகர்களுக்கு கூத்துப் பயிற்சி அளித்தார். நாடக அரங்குக் கல்லூரியின் சார்பாக சங்காரம், அபசுரம், குருஷேத்திரோபதேசம் ஆகிய நாடகங்கள்த் தயாரித்தார்.யாழ்ப்பாண அவைக்காற்று கலைக்கழகத்துடன் இணைந்து அதிமானிடன், தலைவர் ஆகிய நாடகங்களை உருவாக்கினார்.

நாடகப்பயிற்சியில்

1983-ல் யாழ்ப்பாணக் கலாசாரப் பேரவையுடன் யாழ்.பல்கலைக்கழக நுண்கலைத்துறை இணைந்து நடத்திய நாடகப் பயிற்சிப் பட்டறை அமைப்பாளராக இருந்து செயற்பட்டார். விடுமுறை நாட்களில் ஏறத்தாழ ஒருவருடம் நடந்த அப்பயிற்சிப் பட்டறையால் பல நாடகக் கலைஞர்கள் யாழ்ப்பாணத்தில் உருவாயினர். வி.வி.வைரமுத்து போன்ற கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றினார். 1992-ல் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கலைத்துறை ஆரம்பிக்கப்பட்டபோது அதை பொறுப்பேற்று நடத்தினார். நான்கு விரிவுரையாளர்களுடனும் ஐந்து பாடநெறிகளுடனும் இருந்த கலைத்துறை 12 பாட நெறிகளுடன் ஆறு துறைகள் கொண்டதாக வளர்ச்சிபெறச்செய்தார்.

2008-ல் அரசுப்பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு பாரம்பரிய கலை வடிவங்களை நவீனமயப்படுத்தி மக்களுக்கு வழங்கும் செயற்திட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார். ஈழப்பண்பாட்டின் கூத்துகள், நாடகங்கள், நாட்டுப்புற இசைகள், இசைக்கருவிகள் அனைத்தையும் ஆவணப்படுத்தியுள்ளார். மௌனகுருவின் மாணவர்களுள் சிதம்பரநாதன், பாலசுகுமார், கணேசன், ஜெயசங்கர், செல்வி, பாளி.அகிலன், கனகரத்தினம், (வளநாடன்) சோ.தேவராசா, கலாலட்சுமி, இளங்கோ, மட்டக்களப்பு சீவரத்தினம், அன்பழகன், சதாகரன், இன்பமோகன், பிரியந்தினி, ரவிச்சந்திரன், தவராசா போன்றோர் நாடகத்துறையில் குறிப்பிடத்தக்கவர்கள்.

1978-ல் யாழ் பல்கலைக்கழக மாணவர்களை வைத்துத் தொடங்கப்பட்ட மகாகவி யின் பா நாடகமான ’புதியதொரு வீடு’ நாடகத்தை தனது 76-வது வயதில், நான்காவது தலைமுறை மாணவர்களைக் கொண்டு 2018-ல் அரங்கேற்றினார். இதுவரை இருபதுக்கும் மேற்பட்ட நாடகங்களை இயக்கியுள்ளார். இராவணன் வாழ்க்கையை மையமாகக் கொண்டு, ஊடாக கூத்து, இசை, பாடல், தாளம் குறித்த கலைக்கூறுகள் கொண்ட மௌனகுருவின் இராவணேசன் நாடகம் ஒரு குறிப்பித்தக்க ஆக்கம். குழந்தைகளுக்காகப் பல நாடகங்களை உருவாக்கி நடித்த மௌனகுருவின் 'தப்பி வந்த தாடி ஆடு’ புகழ்பெற்ற குழந்தைகள் நாடகம்.

கொடகே தேசிய சாகித்ய விருது

கூத்தை பரதத்துடன் இணைத்து புதிய ஆற்றுகை வடிவங்களையும் கூத்து மரபை நவீன அரங்குடன் இணைத்து நவீன தமிழ் அரங்கையும் உருவாக்கியிருக்கிறார். மட்டக்களப்பின் கூத்துமுறை, தனிப்பண்பாடு ஆகியவற்றை உலகளாவ கொண்டுசெல்பவராக பணியாற்றி வருகிறார். நிகழ்த்துகலைகளுக்கான ஐரோப்பிய பயிலரங்குகளில் பங்குபெற்றும் நடத்தியும் வருகிறார்.

அழகியல்

ஈழத்தின் கூத்துருவ நாடகத்தின் அரங்கேற்றத்தில் முக்கியமானவர் மௌனகுரு. கூத்துக்கலையினை சமூகத்தேவைகளுக்கேற்ப,ம் உள்ளடக்க மற்றும் அழகியல் சார்ந்து சமகாலத்தன்மையுடன் மீளுருவாக்கம் செய்தார். பாரம்பரியத்தைப் பேணும் நோக்கில் அதன் பழமையைப் பேணிக் காப்பதும் ,மாற்றத்தை நிராகரிப்பதும் அந்தப் பாரம்பரியத்துக்குச் சமாதி கட்டும் வழியாகும் என்கிறார் மௌனகுரு. அதேசமயம் நவீனம் என்பது மரபின் வழியாக வரவேண்டும் என்ற கொள்கை உடையவர்.

மௌனகுருவின் அழகியல் கொள்கை என்பது உரையாடல், பரிமாற்றம், அதன் வழியாக வளர்ச்சி என்பதுதான். ஈழத்தின் பாரம்பரியக் கூத்துக்கும் நவீன காலகட்டத்தின் கலைவடிவங்களுக்குமான உரையாடலை அவர் உருவாக்கினார். சிங்கள மக்களின் கூத்துகள், நாடகங்களையும்; தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் பிற பகுதிகளில் உள்ள தெருக்கூத்து, கூத்து, நாடக மரபுகளையும் ஒருங்கிணைக்கும் கலைசார்ந்த பார்வையை படிப்படியாக வளர்த்தெடுத்தார். மிக எதிர்மறையான போர்சூழல்களில்கூட ஈழக் கலைமரபுள் அழியாமல் காக்கவும், அழிந்த மரபுகளை மீட்டு மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கவும் உழைத்தார். கசப்பும் அவநம்பிக்கையும் நிறைந்த சூழல்களிலும் தமிழ்க் கூத்துமரபுகளையும் சிங்களக் கூத்து வடிவங்களையும் கலைக்குரிய தளத்தில் இணையச் செய்தார். இலங்கையில் தமிழ்க்கலைகளுக்கும் சிங்களக்கலைகளுக்கும் உள்ள உறவை ஆராய்ந்து நிறுவியவர் என மௌனகுரு மதிப்பிடப்படுகிறார்.நாடகப்பயிற்சி, கூத்துப்பயிற்சி, அரங்கேற்றங்கள் ஆகியவற்றுடன் நாடகம், கூத்துத் தொடர்பான நூல்களை எழுதியும் அம்மரபை நிலைநாட்டியவர் மௌனகுரு.

விருதுகள்

  • நாடகக்கீர்த்தி - 2013 (இலங்கை கலை கலாசார அமைச்சகம்)
  • கொடகே தேசிய சாஹித்திய விருது (வாழ்நாள் சாதனையாளர்) - 2014
  • தேசநேத்துரு விருது - 2015 (நாடகத்துறை சேவைக்காக)
  • வாழ்நாள் சாதனையாளர் விருது - 2019 (இலங்கை அரசின் பாரம்பரிய மற்றும் நவீன கலைகள் கலைஞர்களுக்கான விருது)
  • சாதனைத் தமிழன் விருது - 2020
  • உலக நாடக தின விருது - 2022 (ஆஸ்திரேலியா)

நூல்கள்

பேராசிரியர் மௌனகுருவின் முப்பது நூல்கள் இணையநூலகத்தில் கிடைக்கின்றன ( பேராசிரியர் மௌனகுரு நூல்கள்)

நாடகம், இசை, கூத்து
  • புதியதொரு வீடு
  • சங்காரம்
  • இராவணேசன்
  • புத்துயிர்ப்பு
  • மழை
  • தப்பி வந்த தாடி ஆடு
  • சரிபாதி
  • வேடனும் புறாக்களும்
  • சக்தி பிறக்குது
  • நம்மைப் பிடித்த பிசாசுகள்
  • ஒரு முயலின் கதை
  • ஒரு உண்மை மனிதனின் கதை
  • கலையில் உயிர்க்கும் மனிதன்
  • பரதமும் கூத்தும்
  • இலங்கைத் தமிழர் கூத்துகள்
  • கண்ணகி குளிர்த்தி
  • கிழக்கு ஆட்டங்கள்
  • கிழக்கிசை
  • வடமோடி, தென்மோடி ஆட்ட அறிமுகம்
  • இலயம்

புத்துயிர்ப்பு ,மழை ,தப்பி வந்த தாடி ஆடு,சரி பாதி,வேடரும் புறாக்களும் ,சக்தி பிறக்குது,நம்மைப் பிடித்த பிசாசுகள்,பரபாஸ்,ஒரு உண்மை மனிதனின் கதை, சங்காரம், இராவணேசன், வனவாசத்தின் பின் ஆகிய நாடகங்கள் பின்னாளில் நூல்களாக வெளிவந்தன.

சிறுகதைகள்
  • சமரச பூமி (தினகரன் வாரஇதழ்)
  • சலனம் (1958 இனக்கலவரம் பற்றியது)
  • உலகங்கள் மூன்று
  • இருள் இன்னும் முற்றாக விலகவில்லை
குறுநாவல்
  • சார்வாகன்
நாடகம் தொடர்பான நூல்கள்
  • நாடகம் நான்கு (நாடகம்) (1980) இணை ஆசிரியர்
  • 20-ம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியம் (1984)
  • சடங்கிலிருந்து நாடகம் வரை (1985)
  • மௌனகுருவின் மூன்று நாடகங்கள் (1985)
  • தப்பி வந்த தாடி ஆடு (1987)
  • ஈழத்துத் தமிழ் நாடக மரபில் யாழ்ப்பாண மகாஜனக் கல்லூரி (1989) (பாவலர் தெ.அ.துரையாப்பிள்ளை நினைவுப் பேருரை)
  • பழையதும் புதியதும்- நாடகம் அரங்கியல் (1992)
  • சுவாமி விபுலானந்தர் காலமும் கருத்தும் (1992)
  • சுவாமி விபுலாநந்த அடிகளாரின் கலை இலக்கியக் கொள்கைகள் (1992) (சுவாமி விபுலாநந்ந அடிகளாரின் நினைவுப் பேருரை)
  • சங்காரம்- ஆற்றுகையும் தாக்கமும் - (நாடகம்) (1993)
  • ஈழத்துத் தமிழ் நாடக அரங்கு (1993)
  • கால ஓட்டத்தினூடே ஒரு கவிஞன் - நீலாவணன் (1994)
  • நடிப்பு முறைமைகள் பற்றிய எண்ணக்கருக்கள் (1996)
  • கலை இலக்கியக் கட்டுரைகள் (1997)
  • சக்தி பிறக்குது - நாடகம் (1997)
  • பேராசிரியர் எதிரிவீர சரத்சந்திராவும் ஈழத்து நாடக மரபும் (1998)
  • இராவணேசன் - நாடகம் (1998)
  • மட்டக்களப்பு மரபுவழி நாடகங்கள் (1998)
  • அரங்கு ஓர் அறிமுகம் - இணை ஆசிரியர் (2000)
  • சுபத்திரன் கவிதைகள் (தொகுப்பாசிரியர்) (2001)
  • வனவாசத்தின் பின் நாடகம் (2002)
  • மட்டக்களப்பு தமிழகத்தில் இந்துப் பண்பாடு - பதிப்பாசிரியர் (2003)
  • அரங்கியல் (2003)
  • ஈழத்துத் தமிழ் நாடக அரங்கு (2-வது திருத்திய பதிப்பு) (2004)
  • தமிழ்க்கூத்துக்கலை
  • தமிழர் வரலாறும் பண்பாடும்
  • கலையில் உயிர்க்கும் மானுடம்
  • இலங்கைத் தமிழரின் கூத்துக்கள்
  • கிழக்கிசை
  • கிழக்கின் ஆட்டங்கள்
  • வடமோழி தென்மோடி ஆட்டங்கள் அறிமுகம்
  • பண்டைத்தமிழர் வரலாறும் இலக்கியமும்
  • எதிரிவீர சரத்சந்திர
  • மட்டக்களப்பு மரபுவழி நாடகங்கள்
  • விலாசம்

உசாத்துணை


✅Finalised Page