under review

வடமோடிக்கூத்து

From Tamil Wiki
ஈழத்து நாட்டுக்கூத்து

வடமோடிக்கூத்து ஈழத்து நாட்டுக்கூத்து வடிவங்களில் ஒரு வகை. இலங்கையின் யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் வடமோடி தென்மோடி கூத்துக்கள் ஆடப்பட்டு வருகின்றன. இலங்கையின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் தமிழர்களின் நெறி சார்ந்த ஆட்ட மரபுகளாக வடமோடி, தென்மோடி கூத்து ஆட்டங்கள் பார்க்கப்படுகின்றன. வடக்குப் பகுதியில் ஆடப்படும் ஆட்டங்களை 'வடமோடி ஆட்டங்கள்' என்றழைத்தனர்.

வடமோடிக்கூத்து நடைமுறை

பாடல்முறை

வடமோடிக் கூத்தில் நடிகர் தன் பாட்டைப் படிக்க ஆரம்பித்த உடன் பக்கப்பாட்டுக்காரர் முழுதாக அதனை பாடிமுடிப்பார். வடமோடித் தென்மோடிக் கூத்துக்களில் முதலில் காப்பு என்றொரு பாடல் பாடப்படுகின்றது. வடமோடி கூத்துகளில் காப்பு வெண்பாவில் அமையும்.

தாளக்கட்டு முறை

இக்கூத்துகளில் ஒவ்வொரு பாத்திரத்தின் வரவு நடைபெறும் போதும் வெவ்வேறு வகையான தாளங்களை இசைக்கின்றனர். அத்தாளங்கள் வாயால் சொல்லப்படும்போது 'பதவரிசை தாளக்கட்டு' என்னப்படுகின்றன. தாளக்கட்டு என்பது ஆட்டத்திற்குரிய தாளங்களை சொற்கோர்ப்பினாலேயே தொடுத்துப் பாடுதல். இத் தாளக்கட்டு கூத்தின் பாத்திரங்களின் வரவின்போது அண்ணாவியார் என்பவரால் தொடர்ந்து பாடப்படுகின்றன. இவை அண்ணாவியாரின் மன நிலைக்கேற்ப எட்டுமுறை, பன்னிரெண்டுமுறை என்ற எண்ணிக்கையில் அமையும். இவை ஆண்கள்,பெண்கள் இருபாலருக்கும் வெவ்வேறு வகைகளாக இருப்பதோடு பாத்திர வேறுபாட்டையும் பிரதிபலிக்கும் தன்மை கொண்டவை.

தாளக்கட்டு வகைகள்

இக்கூத்துகளில் ஆண்களுக்குரிய தாளக்கட்டுக்கள் 'உலா', 'பொடியடி', 'வீசாணம்', 'எட்டு', 'நாலடி', 'குத்துமிதி','பாச்சல்' . பெண்களுக்குரிய தாளக்கட்டுக்கள் 'ஒய்யாரம்', 'பொடியடி', 'வீசாணம்', 'எட்டு', 'தட்டடி', 'அடந்தை', 'குத்துநிலை'. இத்தாளக்கட்டுக்களே வடமோடி தென்மோடிக் கூத்துகளின் உயிர்நாடி.

நடன முறை

வடமோடியின் ஆட்டமுறை சற்று வேகமானது.

ஈழத்து நாட்டுக்கூத்து
பிற முக்கியத் தகவல்கள்
  • இசை: தமிழ் மரபிற்கு வெளியேயிருந்து வந்த இசை கலந்திருக்கும்.
  • ஆரியக்கூத்தின் பண்புகள் கலந்திருக்கும்
  • போரையும், வெற்றியும் மையமாகக் கொண்டு வீரரசம் எஞ்சியிருக்கும்
  • கூத்துக்கள் ஆடப்படும் மேடையான கூத்துக்களரியின் அமைப்பில் வித்தியாசம் உள்ளது.
  • ஒரு பாத்திரம் களரிக்கு வரும்போது வரவுப்பாட்டை குறிப்பிட்ட பாத்திரமே பாடிக்கொண்டு ஆடிவரும். அந்தப்பாத்திரமே தன்னை சபைக்கு அறிமுகப்படுத்தும்.
  • வடமோடியில் வரவு ஆட்டத்திற்குப்பிறகு வரும் பாடல்களை தாமே படிப்பார்.
  • கூத்தர்கள் அணியும் ஆடை கரப்புடுப்பு எனப்படும். உடைகள் தென்மோடிக்கூத்துக்காரர்களை விட பாரமானதாக இருக்கும்.
  • கூத்தில் ராஜாக்கள் போருக்குப் போகும்போது மரவுரி அணிவர்.
  • வட்டாரி, வில் போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்துவர்.
  • பாட்டுக்களின் இசை நீளம் குறைந்தும் விரைவானதாகவும் இருக்கும். பாடல்கள் விறுவிறுப்பாகவும் குறுகியதாகவும் அமையும்.
  • பாட்டுக்களின் விருத்தங்கள் துரித இசையுடையதாக இருக்கும்.
  • பாடல் பாடும்போது பக்கப்பாட்டுக்காரர் சேர்ந்து படிப்பர். பாடல் முழுவதையும் திரும்பப் பாடுவர்.
  • களரியை விட்டுப்போகும்போது துரிதமான ஆட்டம் உள்ளது. இது காலமேற்றம் என்று அழைக்கப்படுகிறது.
  • கந்தார்த்தம் வடமோடியின் சிறப்பம்சம். கந்தார்த்தம் என்பது விருத்தம் பாடி முடித்து தருப்பாடுதலாக அமையும்.
  • கையெழுத்துப்பிரதியில் தென்மோடிக்கூத்தைக்காட்டிலும் வடமோடிக்கூத்தில் முத்திரைப்பல்லவித்தரு செறிந்து காணப்படுகிறது.

பயின்று வரும் இடங்கள்

இலங்கையின் யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் பின்பற்றப்பட்டு வரும் வடமோடி தென்மோடி கூத்துக்கள் இலங்கையின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் தமிழர்களின் நெறி சார்ந்த ஆட்ட மரபுகளாகப் பார்க்கப்படுகின்றன. தெற்குப் பகுதியில் ஆடப்படும் தென்மோடி ஆட்டங்கள் வடக்குப் பகுதியில் ஆடப்படும் வடமோடி ஆட்டங்களை விட பல நுணுக்கமான அம்சங்களைக் கொண்டுள்ளது. வடமோடிக் கூத்தில் போர் சார்ந்த காட்சிகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும். வடமோடிக் கூத்தில் வீர உணர்வு முதன்மைபெறுகின்றன.

கூத்து கையெழுத்துப் பிரதிகள்

மட்டக்களப்பு வடமோடிக் கூத்துப் பிரதிகள்
  • அரசிளங்குமாரி
  • அயோத்திவர்மன்
  • அபிமன்னன் சண்டை
  • அழகேந்திரன்
  • அர்ச்சுணன் தவநிலை
  • அல்லி நாடகம், அசுவமேத யாகம்
  • அரிச்சந்திரன்
  • அல்லியின் எதிர்காலம்
  • ஆடக சௌந்தரி
  • ஆஞ்சநேயர்
  • ஆரவல்லி
  • இந்திரவல்லி
  • இடும்பன் போர்
  • இராம நாடகம்
  • இராவணேசன்
  • இளவரசி உலகநாச்சி
  • உருப்பிணி கல்யாணம்
  • உருத்திரசேனன்
  • உலகநாச்சி சபதம்
  • எல்லாளன் போர்
  • என்றிக்கன் விறதர்
  • எட்டாம் போர்
  • ஏழு கன்னியர்கள்
  • ஏணி ஏற்றம் நாடகம்
  • கடோக்கயன் போர்
  • கஞ்சன் போர்
  • கற்பலங்காரி
  • கண்ணன் சண்டை
  • கங்கையம்மன்
  • கண்ணகையம்மன்
  • கண்டி நாடகம்
  • கனகசுந்தரன்
  • கமலாவதி
  • கலிங்கப்போர்
  • காந்தரூபன்
  • காமதேனு பருவதம், காத்தவராயன்
  • கிருஷ்ணன் சண்டை
  • கிருஷ்ணன் தூது
  • கீசகன் வதை,
  • குறவஞ்சி
  • கும்பகர்ணண் வதை
  • குருஷேத்திரம்
  • குருதட்சணை,
  • குசலவன்
  • குருக்கேத்திரன் போர்
  • கோலியாத்தை வென்ற குமரன்
  • சத்தியசீலன்
  • சராசந்தன்
  • சந்தனு மகாராசன்
  • சந்திரகாசன்
  • சதகண்ட இராவணண்
  • சத்தியபாமா
  • சக்தியின் சபதம்
  • சயிந்தவன்
  • சத்தியவான் சாவித்திரி
  • சிலம்புச்செல்வி
  • சிம்மாசனப்போர்
  • சித்திரபுத்திரர்
  • சித்திரசேனன் சண்டை
  • சிசுபாலன் சண்டை
  • சிவராத்திரி
  • சிறுத்தொண்டர்
  • சீதையின் துயரம்
  • சுந்தரி திருக்கல்லாணம்
  • சுபத்திரை கல்யாணம்
  • சுரசம்காரம்
  • செங்கையம்மன்
  • ஞானசௌந்தரி
  • ஞானபுத்திரன்
  • தருமர் வைகுந்தம்
  • தருமர் அஸ்வமேதயாகம்
  • தக்கன் யாகம்
  • தசக்கிறிவன் தவநிலை
  • தருமபுத்திரர்
  • தமயந்தி
  • தமிழறியும் பெருமான்
  • திருத்தொண்டர்
  • துரோணர் யுத்தம்
  • துரோணர் வில்வித்தை
  • திரௌபதை வில்வளைவு
  • தெய்வ பக்தி
  • நரகாசுரன் வதை
  • நல்லதங்காள்
  • நாரதர் கலகம்
  • நளச்சக்கரவர்த்தி
  • நாகலிங்கர் மகிமை
  • 13ம் 14ம் போர்
  • 15ம் 16ம் போர்
  • 17ம் 18ம் போர்
  • பரிமளகாசன்
  • பகதத்தன் போர்
  • பரசுராமன்
  • பப்பரவாகன்
  • பவளக்கொடி
  • பகாசூரன் வதை
  • பவளேந்திரி
  • பத்மாவதி பகையை வெல்லல்
  • பாலன் பிறந்தநாள்
  • பார்த்தீபன் கனவு
  • பாஞ்சாலி சபதம்
  • பிரத்தியும்மன் பீஷ்மர் சண்டை
  • புவனேந்திரன்
  • புரூருவச் சக்கரவர்த்தி
  • பூதத் தம்பி
  • மன்மத சம்சாரம்
  • மல்லன் சண்டை
  • மணிமாறன் சண்டை
  • மழைப்பழம்
  • மனிசன் இருக்கான் மனுசி எங்கே?
  • மார்க்கண்டேயர்
  • மாரியம்மன் தவநிலை
  • மாடுபிடிச் சண்டை
  • மின்னொளி
  • வள்ளிதினப்புனம்
  • வனராசன் சண்டை
  • வனவாசம்
  • வள்ளியழிமன்
  • வாணன் போர்
  • வாளவீமன்
  • விக்கிரமாதித்தன்
  • விராடபர்வம்
  • வீரகுமாரன்
  • வைகுந்தம்
  • வலகுசா
  • ஜெயசீலன் தீர்த்த யாத்திரை
  • ஜெனோவா
  • ஸ்ரீ கணேசர் கல்யாணம்

ஆகிய 132 கூத்துக்கள் மட்டக்களப்பு வடமோடிக் கூத்துப் பிரதிகளாக உள்ளன.

அச்சு

1969-ல் வித்துவான் பண்டிதர் வி.சீ.கந்தையா அவர்களால் முதன்முதலாக இராமர் நாடகம்; வடமோடிக் கூத்தும், 2013-ல் அதிபர் த.க.கனகநாயகம் அவர்களால் இளவரசி உலகநாச்சி வடமோடிக் கூத்தும் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. 4 மட்டக்களப்பு கல்வி அபிவிருத்திச்சபையினால் கூத்துப் பெருவிழா 2015-ல் 'அபிமன்னன்வதம்', 'நல்லதங்காள் சரித்திரம்', 'கடோக்கசன் போர்', 'கர்ணன் வதை', 'ஸ்ரீ முருகன் திருக்கல்யாணம்', 'சுபத்திரை கல்யாணம்' எனும் ஒவ்வோரு மணித்தியால (ஒரு மணி நேர) ஆறு வடமோடிக் கூத்துக்கள் அடங்கிய நூலொன்றும் வெளியிடப்பட்டது.

கையெழுத்துப் பிரதி அமைப்பு
  • காப்பு வெண்பா
  • இறைதுதி
  • சபை விருத்தம்
  • விருத்தம்
  • பாட்டு (தரு)
  • கொச்சகம்
  • முத்திரைப்பல்லவி
  • தாழிசை
  • கலிப்பா
  • கந்தார்த்தம்
  • அகவல்
  • ஆனந்தக்களிப்பு
  • மங்களம்

உசாத்துணை

  • தமிழில் நாடகம்(கட்டுரைத் தொகுப்பு): பாலசுகுமார்: அனாமிகா வெளியீடு


✅Finalised Page