கே.ஜி. இராதாமணாளன்
கே.ஜி. இராதாமணாளன் (பிறப்பு: டிசம்பர் 15, 1925) எழுத்தாளர், இதழாளர், திரைப்படக் கதை-வசன ஆசிரியர். திராவிட முன்னேற்றக்கழகத்தைச் சேர்ந்த அரசியல்வாதி. பொது வாசிப்புக்குரிய பல நூல்களை எழுதினார். திராவிட இயக்க வரலாறு நூலுக்காக தமிழக அரசின் விருது பெற்றார்.
பிறப்பு, கல்வி
கே.ஜி. இராதாமணாளன், டிசம்பர் 15, 1925 அன்று, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசிக்கு அருகேயுள்ள கண்டிநல்லூரில் பிறந்தார். வந்தவாசி உயர்நிலைப் பள்ளியில் பள்ளி இறுதிவகுப்பு வரை படித்தார். தொடர்ந்து இடைநிலை வகுப்பு(Intermediate) பயின்றார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பயின்று இளங்கலைப் பட்டம் பெற்றார்.
தனி வாழ்க்கை
கே.ஜி. இராதாமணாளன், பல்வேறு இதழ்களில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். மணமானவர்.
இலக்கிய வாழ்க்கை
கே.ஜி. இராதாமணாளனின் ‘பேசும் பிணம்’ என்னும் தலைப்பிலான முதல் கட்டுரை, அண்ணா ஆசிரியராக இருந்த திராவிட நாட்டில் வெளியானது. தொடர்ந்து திராவிட நாடு இதழில் பல கவிதைகளை, கட்டுரைகளை எழுதினார். காஞ்சி இதழில் ’பாண்டியன் திருமேனி’ என்னும் தொடர்கதையை எழுதினார். புதுவாழ்வு இதழில், வீணை, பூக்குடலை என்ற தொடர்களை எழுதினார்.
கே.ஜி. இராதாமணாளன், பொதுவாசிப்புக்குரிய, பகுத்தறிவுச் சிந்தனைகளைக் கொண்ட பல சிறுகதை, கட்டுரை, நாவல், நாடகங்களை எழுதினார். கே.ஜி. இராதாமணாளன், 25-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். பல கட்சிக் கூட்டங்களில், மாநாடுகளில், இலக்கிய விழாக்களில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். ‘மதம் அவசியமா?’ என்னும் கட்டுரையை எழுதினார்.
இதழியல்
கே.ஜி. இராதாமணாளன், போர்வாள் இதழின் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். 'சுதந்திர நாடு', 'எங்கள் நாடு', 'நவ இந்தியா' போன்ற நாளிதழ்களில் துணை ஆசிரியராகப் பணிபுரிந்தார். க. அன்பழகன் நடத்திய புதுவாழ்வு இதழில் துணை ஆசிரியராகப் பணிபுரிந்தார். கே.ஜி. இராதாமணாளன், அண்ணா, கருணாநிதிக்குப் பிறகு, மாலைமணி இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார். தமிழக அரசின் குடும்ப நலத்துறையின் ‘குடும்ப நலச் செய்திக் கதிர்’ இதழின் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.
திரைப்படம்
கே.ஜி. இராதாமணாளன், நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன் தயாரித்த தங்க ரத்தினம், முத்துப் மண்டபம் போன்ற திரைப்படங்களுக்குக் கதை, வசனம் எழுதினார்.
பொறுப்புகள்
கே.ஜி. இராதாமணாளன் தமிழ்நாடு காசநோய் கழக அமைப்புச் செயலாளராகப் பணிபுரிந்தார்.
அரசியல்
இராதாமணாளன் பள்ளியில் படிக்கும் போது ஆசிரியர் ராஜலிங்கம் மூலமாகத் சுயமரியாதை இயக்கம் பற்றிய அறிமுகத்தைப் பெற்றார். பள்ளி மாணவனாக இருக்கும்போதே அண்ணாவை வந்தவாசியில் நடந்த கூட்டத்திற்குத் தலைமை தாங்க அழைத்து வந்தார். திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துகொண்டு பேச்சு வழியாகவும், எழுத்து வழியாகவும் இயக்கக் கொள்கைகளைப் பரப்புரை செய்தார்.
விருதுகள்
- தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு - திராவிட இயக்க வரலாறு (2007)
- பதிப்புச் செம்மல் மெய்யப்பன் நினைவு விருது - திராவிட இயக்க வரலாறு நூலுக்கு.
மறைவு
கே.ஜி. இராதாமணாளன் எப்போது காலமானார் என்பது குறித்த விவரங்களை அறிய இயலவில்லை.
இலக்கிய இடம்
கே.ஜி. இராதாமணாளன், திராவிட முன்னேற்றக் கழகத்து ஆதரவு இதழாளராகச் செயல்பட்டார்.பகுத்தறிவுக் கொள்கைகளை அடியொற்றி பொது வாசிப்புக்குரிய பல படைப்புகளை எழுதினார். இராம. அரங்கண்ணல், ஏ.வி.பி. ஆசைத்தம்பி, எஸ்.எஸ். தென்னரசு போன்ற திராவிட இயக்க எழுத்தாளர்கள் வரிசையில் இடம் பெறுகிறார் கே.ஜி. இராதாமணாளன்.
நூல்கள்
நாவல்கள்
- பாண்டியன் திருமேனி
- தாராவின் புன்னகை
- கல்லறைக் குயில்
- இளவரசி
- மறவர் குலத்து மலர்க்கொடி
- மனப்புயல்
- கல்லறைக் குயில்
- பொற்சிலை
- வீணை
- சிவந்த கன்னம்
- தேன்மொழி
- பாலைவனம்
- பெண்
- நீரோ
- சபதம்
- மூடுபனி
- களபலி
- பசி
- எழிலரசி கிளியோபாட்ரா
- அன்னம்
- பாசக்கனல்
- அரக்கு மாளிகை
- அரண்மனை அழகிகள்
- பாண்டியன் திருமேனி
- உயிரோவியங்கள் - பாகம் 1 & 2
சிறுகதைகள்
- மருதாயி
- பூக்குடலை
- பொன்னி
- பலியுள்ளம்
- கந்தலீலா
- புதுவெள்ளம்
- மயானத்தில் முத்தம்
- இன்பச்சுவை
- இன்பக்கனவு
- ருஷ்ய நாட்டு அழகி
- துளிதேன்
- கானல் நீர்
- அந்தப் புன்னகை
- சிவந்த கன்னம்
- இரு கைதிகளின் கதை
- தேன்மொழி
- குந்தமன் துறவு
- பிரேதக்களை
- பேசாமடந்தை
- நன்றி கெட்டவர்கள்
- கண்ணீர் விட்டார்
- தற்கொலை
- கனல் தணிந்து
- அய்யோ கடவுளே
கட்டுரை நூல்
- பேசும்பிணம்
- மதம் அவசியமா?
- இங்கர்சால்
நாடகம்
- அரக்கு மாளிகை
- நீலமணி
வரலாற்று நூல்
- திராவிட இயக்க வரலாறு
உசாத்துணை
- கே.ஜி. இராதாமணாளன் நூல்கள்
- கே.ஜி. இராதாமணாளன் நூல்கள்: மெரீனா புக்ஸ்
- கே.ஜி.இராதாமணாளன் சிறுகதை: உண்மை ஆன் லைன்.காம்
- கே.ஜி.இராதாமணாளன், திராவிட இயக்க வரலாறு (திராவிட இயக்கம் – ஒரு வரலாறு), பாரி நிலையம், சென்னை, 2007.
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
22-Jul-2023, 09:37:39 IST