under review

குடந்தை.ப.சுந்தரேசனார்

From Tamil Wiki
குடந்தை ப. சுந்தரேசனார் (நன்றி- http://muelangovan.blogspot.com/)

குடந்தை ப. சுந்தரேசனார் (மே 28, 1914 - ஜூன் 9, 1981) தமிழ் பண்ணாராய்ச்சி வித்தகர். மரபான தமிழிசை மீட்சிக்கு அரை நூற்றாண்டுக்கும் மேலாக உழைத்தார். தமிழ் இலக்கியங்களில் பொதிந்து கிடந்த அரிய இசை நுட்பங்களை, குறிப்பாகச் சிலப்பதிகாரத்தின் இசைக்கூறுகளை, எளிய தமிழில் எடுத்துரைத்தார். மரபான தமிழிசை நுட்பங்களை அடையாளம் கண்டு எளிய தமிழில் எடுத்துரைத்தார். இலக்கிய நூலாக மட்டுமே கற்கப்பட்டு வந்த சிலப்பதிகாரத்தில் உள்ள பல அரிய இசை நுட்பங்களை வெளிக்கொணர்ந்தார்.

தமிழகம் முழுவதும் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் பயணம் செய்து, பொது அரங்குகளில் பன்னிரு திருமுறைகள், திருமுருகாற்றுப்படை மற்றும் சிற்றிலக்கியங்களை முறையுடன் பாடியும் நடித்தும் காட்டி தமிழிசையின் பண்ணழகையும், பண்ணியல்பையும் மக்களிடம் கொண்டுசென்றார்.

பிறப்பு, கல்வி

குடந்தை.பா.சுந்தரேசனார் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள குடந்தையில் பஞ்சநாதம் பிள்ளை-குப்பம்மாள் இணையருக்கு மே 28, 1914 அன்று பிறந்தார். வறுமையினால் நான்காம் வகுப்புக்குமேல் கல்வி பெற இயலவில்லை. நகைக்கடையில் வேலை செய்துகொண்டே தன் சொந்த முயற்சியால் தமிழ் நூல்களைத் தானே கற்றார். இசை மீது இருந்த ஈடுபாட்டால் ஆபிரகாம் பண்டிதரின் கர்ணாமிர்த சாகரம், பேராசிரியர் சாம்பமூர்த்தியின் இசைநூல்கள் இவற்றின் இசைத்தட்டுக்களைக் கேட்டு இசையறிவை வளர்த்துக் கொண்டார். சைவத்திருமுறைகளைப் பயின்றார். தெலுங்கு, ஹிந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளையும் கற்றார்.

சுந்தரேசனார் முதலில் (பிடில்) கந்தசாமி தேசிகரிடமும் வேப்பத்தூர் பாலசுப்பிரமணியத்திடமும் இசை பயின்றார். 1935-ம் ஆண்டு முதல் 17 ஆண்டுகளுக்கு, குடந்தை வேதாரண்யம், இராமச்சந்திரன் ஆகியோரிடம் செவ்வியல் இசை பயின்றார்.

தனி வாழ்க்கை

சுந்தரேசனார் 1944-ல் சொர்ணத்தம்மாளை மணந்தார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன. ஆனால் மூன்றும் இறந்துவிட்டன. இசையின் மீதுள்ள விருப்பத்தின் காரணமாக இவரது மூன்றாவது பிள்ளைக்கு விபுலானந்தன் என்றே பெயர்சூட்டியிருந்தார். வாழ்நாள் முழுவதும் கும்பகோணம், பேட்டை நாணயக்காரத் தெருவில் வசித்ததால் "குடந்தை" சுந்தரேசனாராகவே அடையாளப்படுத்தப்பட்டார்.

கல்விப்பணி

  • புலவர் வகுப்பு இசையாசிரியர்-திருவையாறு அரசர் கல்லூரி (1949-1952)
  • தேவார இசை விரிவுரையாளர்-அண்னாமலைப் பல்கலைக்கழகம் (1952-1955)

இசைப்பணி

ப. சுந்தரேசனார், நன்றி: பொதிகை தொலைக்காட்சி

குடந்தை சுந்தரேசனார் மிகப் பழமையான அரிய தமிழிசை நூலாக கருதப்படும் அறிவனார் எழுதிய பஞ்ச மரபு"என்ற நூலை கிட்டத்தட்ட அழியும் தருவாயில் இருந்து மீட்டு கொண்டு வந்தார். அறிவனாரின் பஞ்ச மரபு அழிந்து விட்டதாக அன்றைய தமிழிசை சான்றோர்கள் அனைவரும் நம்பியிருந்த வேளையில், அந்தநூலின் மூலச்சுவடிகள் ஈரோடு மாவட்டம் வேலம்பாளையத்தை சேர்ந்த வித்துவான் வே.ரா.தெய்வசிகாமணிக் கவுண்டரிடம் இருப்பதை அறிந்து, அரும்பாடுபட்டு ஒவ்வொரு ஓலைச்சுவடியாக அவரிடமிருந்து மீட்டுக்கொண்டு வந்து, நவீன தமிழில் உரைக்குறிப்புகள், அடிக்குறிப்புகள் எழுதி சேர்த்து புதிதாக பதிப்பித்து 1975-ல் வெளியிட்டார்.

சுந்தரேசனார் தமிழ் இலக்கியங்களில்- பாடல்களில் எத்தகு பண்ணமைப்புகள் உள்ளன என்பதை ஆராய்ந்து வெளிப்படுத்தினார். ஒவ்வொரு ஊராகச் சென்று, பெரிய புராணம், திருவிளையாடல் புராணம், சிலப்பதிகாரம் போன்ற நூல்களைப் பாடி விரிவுரை செய்தார். மூவர் தேவாரத்தை முறையாகப் பண்ணுடன் பாடி அதில் அமைந்திருக்கும் பண்ணழகையும், பண்ணியல்பையும் எடுத்துக்காட்டினார். விபுலானந்த அடிகள் தாம் எழுதிய யாழ்நூலை குடவாசல் அருகிலுள்ள திருக்களம்பூரில் (1947) அரங்கேற்றம் செய்தபோது சுந்தரேசனார் யாழ்நூலின் சிறப்பை விளக்கி உரையாற்றினார். அதன்பின் விபுலானந்தர் வழியில் சிலப்பதிகாரம் மற்றும் பண்ணாராய்ச்சியில் ஈடுபட்டார். இளஞ்சேரன் ஏற்பாட்டில் அமைக்கப்பெற்ற நாகைத் தமிழ்ச்சங்கத்தில் ப .சுந்தரேசனார் சிலப்பதிகாரத்தை மாதந்தோறும் சொற்பொழிவாக நிகழ்த்தி அப்பகுதியில் தமிழிசை ஆர்வத்தை மக்களிடம் ஏற்படுத்தினார். குறிப்பாக அனைவராலும் புறக்கணிக்கப்படும் சிலம்பின் அரங்கேற்று காதையை நடத்திக்காட்டினார்.

ஆடுதுறையில் 1946-ம் வருடம் அப்பர் திருநெறிக்கழகத்தில் தொடர் திருமுறை இசைச் சொற்பொழிவுகள் நடத்தினார். நாகைப்பட்டினத்தில் நாகைத் தமிழ்ச் சங்கத்தில் மாதந்தோறும் சிலப்பதிகாரத் தொடர் சொற்பொழிவை நடத்தினார். அதன்பின் வாழ்நாளெல்லாம் அவரது தமிழிசை விரிவுரை மற்றும் இசைச் சொற்பொழிவுப்பணி தொடர்ந்தது.

பஞ்சமரபு நூலுக்கு உரையெழுதியது அவரது குறிப்பிடத்தக்க பணிகளில் ஒன்று

தமிழிசை குறித்த ப.சுந்தரேசனாரின் சில முடிவுகள்
  • தமிழ்மக்கள் இசையை உணர்ந்தது குழற்கருவிகள் வழியாகும்
  • முல்லை நில மக்களே குழற்கருவிகளையும் யாழ்க்கருவிகளையும் கண்டுபிடித்தனர்
  • முதல் குழல்கருவி ஐந்து துளைகள் கொண்டிருந்தது.ஐந்து நரம்புகள் கொண்ட யாழ் பயன்படுத்தப்பட்டது
  • ஐந்து துளைகளின் வழியாக எழுந்த ஐந்து இசைகளே ஆதி இசையாகும்
  • குழற்கருவி முந்தியது எனினும் யாழ்க்கருவியின் வாயிலாகவே இசை வளர்ச்சியுற்றது
  • இசைத்தமிழில் முதல் இசைக்குப் பெயர் தாரம்
  • முதல் ஐந்திசைப் பண்ணின் இசைநிரல் 1) தாரம் 2) குரல் 3) துத்தம் 4) உழை 5) இளி என்பன
  • தாரம் என்பது ஆசான் எனவும், ஆசாந்திறம் எனவும், காந்தாரம் எனவும் வழங்கப்பட்டது. இன்று மோகனம் எனப்படுகிறது.
  • குரல் பண் என்பது செந்திறம், செந்துருதி, செந்துருத்தி என வழங்கப்பட்டது. இன்று மத்யமாவதி எனப்படுகிறது.
  • துத்தப்பண் இந்தளம், வடுகு என்று அழைக்கப்பட்டது. இன்று இந்தோளம் எனப்படுகிறது.
  • உழைப்பண் சாதாளி எனப்பட்டு இன்று சுத்தசாவேரி எனப்படுகிறது.
  • இளிப்பண் தனாசி எனும் பெயர்பெற்று இன்று சுத்த தன்யாசி எனப்படுகிறது.
  • பழைய பண்முறைகள் இன்றளவும் தமிழ்நாட்டில் தேவாரங்களிலும் மற்ற திருமுறைகளிலும் உள்ளன.

விருதுகள்

  • பண்ணாராய்ச்சி வித்தகர்-மதுரை ஆதீனம்
  • திருமுறை கலாநிதி-தருமை ஆதீனம்
  • ஏழிசைத் தலைமகன் - குன்றக்குடி ஆதீனம்
நினைவு விழாக்கள்
  • ப. சுந்தரேசனார் நூற்றாண்டு விழா ஆகஸ்ட் 12,2014- ல் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்டது
  • வடஅமெரிக்க தமிழ்ச்சங்க பேரவையின் 27-வது தமிழ் விழா ராபர்ட் கால்டுவெல் நூற்றாண்டு விழாவாகவும், பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் நூற்றாண்டு விழாவாகவும் ஒன்றிணைத்து அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நடத்தப்பட்டது

படைப்புகள்

நூல்கள்
  • இசைத்தமிழ்ப் பயிற்சி நூல் (1971)
  • முதல் ஐந்திசைப் பண்கள் (1956)
  • முதல் ஐந்திசை நிரல்
  • முதல் ஆறிசை நிரல்
  • முதல் ஏழிசை நிரல்
  • பஞ்ச மரபு உரை
தொடர் கட்டுரைகள்
  • நித்திலம்
  • காவியங்களில் இசை நாடகம்
  • இசைத் தமிழ் நுணுக்கம்
வெளிவராத நூல்கள்

ப.சுந்தரேசனார் எழுதிய கீழ்க்கண்ட நூல்கள் வெளியிடப்படவில்லை.

  • ஓரேழ்பாலை
  • இரண்டாம் ஏழிசை நிரல்
  • பரிபாடல் இசைமுறை
  • பாணர்கள் பயிற்றுவித்த இசைமுறை
  • இசைத்தமிழ்ப் பயிற்சி நூல்
  • இசைத்தமிழ் அகரநிரல்
  • வேனிற்காதை இசைப்பகுதி விளக்கம்
  • சேக்கிழார் கண்ட இசைத்தமிழ்
  • சமயக்குரவர்கள் கைக்கொண்ட இசைத்தமிழ்
  • பெரும்பண்கள் பதிநாறு
  • நூற்றுமூன்று பண்கள் தாளநூல்கள்
  • கடித இலக்கிய இசைத்தமிழ்க் குறிப்புகள்
  • இசைத்தமிழ்-தமிழிசைப்பாடல்கள்
  • இசைத்தமிழ் வரலாறு

உசாத்துணை


✅Finalised Page