வ. தேனப்பன்
வ. தேனப்பன் (முனைவர் வ. தேனப்பன்; டாக்டர் வ. தேனப்பன்; பேராசிரியர் வ. தேனப்பன்; வள்ளியப்பன் தேனப்பன்) (அக்டோபர் 28, 1950 - மார்ச் 03, 2025) எழுத்தாளர். தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். நகரத்தார் கலை, பண்பாடு குறித்த ஆய்வுகளை மேற்கொண்டார். ஆய்வு நூல்களையும், பொது வாசிப்புக்குரிய நூல்களையும் எழுதினார். தமிழக அரசின் தமிழ்ச்செம்மல் விருது பெற்றார்.
பிறப்பு, கல்வி
வள்ளியப்பன் தேனப்பன் எனும் வ. தேனப்பன், அக்டோபர் 28, 1950 அன்று, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பி. அழகாபுரியில், தே.வள்ளியப்பன் - சேதுக்கரசி இணையருக்குப் பிறந்தார். கீழ்ச்சிவல்பட்டியில் பள்ளிக் கல்வி கற்றார். மதுரை தியாகராசர் கல்லூரியில் பட்டப் படிப்பு பயின்றார். ஒன்பது நகரத்தார் கோயில்கள் பற்றி ஆய்வு செய்து மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில், 'நகரத்தார் வளர்த்த சிற்பக்கலை' என்ற ஆய்வை மேற்கொண்டார். கைரேகைக் கலையைக் கற்றார்.
தனி வாழ்க்கை
வ. தேனப்பன் மணமானவர். மனைவி: வள்ளியம்மை. இவர்களுக்குத் தெய்வானை, அழகம்மை, வள்ளியப்பன், சொக்கலிங்கம் என நான்கு பிள்ளைகள்.
கல்விப் பணிகள்
வ. தேனப்பன், தேவகோட்டையில் உள்ள ஸ்ரீ சேவுகன் அண்ணாமலைக் கல்லூரியில் 1974-ல் தமிழ் உரையாளராகப் பணியில் சேர்ந்தார். 1976-ல் தமிழ் விரிவுரையாளர் ஆனார். 2007 முதல் 2009 வரை தமிழ்ப் பேராசிரியராக, தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.
இலக்கிய வாழ்க்கை
வ. தேனப்பன் சாவி, தாய், குமுதம், ஆனந்த விகடன் போன்ற இதழ்களில் கவிதை, சிறுகதை, கட்டுரை, துணுக்குகளை எழுதினார். 'சித்தாந்தன்' என்ற புனை பெயரிலும் பல படைப்புகளை எழுதினார். பொது வாசிப்புக்குரிய சிறுகதைகளையும், நாவல்களையும் எழுதினார். 350-க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதினார். சிறார்களுக்கான நூல்கள் சிலவற்றை எழுதினார்.
திறனாய்வு
வ. தேனப்பன், புதுமைப்பித்தன் - ஜெயகாந்தன் சிறுகதைகள் குறித்த திறனாய்வை மேற்கொண்டார். தமிழ் மலையாளச் சிறுகதைகளின் ஒற்றுமை வேற்றுமை இயல்புகளைக் குறித்த ஆய்வினை மேற்கொண்டார்.
தனது படைப்புகளுக்காக குன்றக்குடி அடிகளார், கி.ராஜநாராயணன் போன்றோரது பாராட்டுதல்களைப் பெற்றார். வ. தேனப்பனின் 'அயல் மகரந்தங்கள்' நூல் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பாட நூலாக வைக்கப்பட்டது. கவிதைத் தொகுப்பு, சிறுகதைத் தொகுப்பு, குறு நாவல், நாவல், நாடகம், கட்டுரை நூல், வாழ்க்கை வரலாறு, திறனாய்வு எனப் பல நூல்களை எழுதினார்.
மேடையுரை
வ. தேனப்பன் கவியரங்கங்கள் பலவற்றில் கலந்துகொண்டு கவிதை படைத்தார். பட்டிமன்றங்களில் கலந்துகொண்டு சொற்பொழிவாற்றினார்.
அமைப்புச் செயல்பாடுகள்
வ. தேனப்பன் புகைப்படக் கலை, அச்சுக்கலை, கட்டிடக்கலை போன்றவற்றிலும் தேர்ந்தவராக இருந்தார். பிள்ளையார்பட்டியில் கலை நுணுக்கத்துடன் கூடிய 'தெய்வம் ஒண்டர்லாண்ட்' என்ற அமைப்பினை ஏற்படுத்தினார். அதில் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரின் உருவாக்க மாதிரிகளையும், பல விநாயக சிற்பங்களையும் காட்சிப்படுத்தினார்.
நாடகம்
வ. தேனப்பன் நாடகங்கள் சிலவற்றை எழுதினார். பல நாடகங்களில் நடித்தார்.
விருது
- 'சாவி' வார இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் 'ரயில் சிநேகங்கள்' சிறுகதைக்காக முதல் பரிசு.
- குழந்தை எழுத்தாளர் சங்கம் நடத்திய அறிவியல் போட்டியில் 'கணிப்பொறியின் கதை' என்னும் அறிவியல் சிறுகதைக்காக ஏ.வி.எம்.மின் வெள்ளிப் பதக்கம்.
- திருச்சி அந்தியோதயா நடத்திய சுற்றுச் சூழல் பாதுகாப்புப் போட்டியில். 'உயிர் காக்கும் மரங்கள்' சிறுகதைக்கு முதல் பரிசு.
- 'ஒன்பது நகரக் கோயில்கள்' என்னும் திறனாய்வு நூலுக்கு ராஜா சர் அண்ணாமலை செட்டியார் விருது.
- தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருது
வாழ்க்கை வரலாறு
வ. தேனப்பனின் வாழ்க்கை வரலாற்றை சோ. முத்தமிழ்ச்செல்வன் எழுதினார். இந்நூலை கலைஞன் பதிப்பகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறை மற்றும் மலாயா இந்திய ஆய்வியல் துறையுடன் இணைந்து, 2016-ல் வெளியிட்டது.
மறைவு
வ. தேனப்பன், மார்ச் 03, 2025 அன்று, தனது 75-ம் வயதில் காலமானார்.
மதிப்பீடு
வ. தேனப்பன் கவிதை, சிறுகதை, நாவல், நாடகம் என பொது வாசிப்புக்குரிய பல படைப்புகளை எழுதினார். நகரத்தார் கலை, பண்பாடு குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு அவற்றை கட்டுரைகளாக, நூல்களாக வெளியிட்டார். வள்ளியப்பனின் 'நகரத்தார் வளர்த்த சிற்பக்கலை' குறிப்பிடத்தகுந்த ஆய்வு நூலாக அறியப்படுகிறது. வ. தேனப்பன் செட்டிநாட்டுப் பகுதியைச் சேர்ந்த எழுத்தாளர்களுள் ஒருவராகவும், நகரத்தார் குறித்த ஆய்வாளராகவும் அறியப்படுகிறார்.
நூல்கள்
சிறார் இலக்கியம்
- தவளைத் திருமணம்
- சிரிப்புக்குப் படமெடுப்போம்
- துப்பறியும் சிங்காரம் (நாடகம்)
கவிதைத் தொகுப்பு
- கனவு அன்னங்கள்
- அகப்பைக் கூடு
சிறுகதைத் தொகுப்பு
- ரயில் சிநேகங்கள்
- தன்னம்பிக்கை முனை
- கருப்புச் சூரியன்
- மீன்கள்
- தேன்கூடு
- பூ விற்ற காசு மணக்கும்
- இருட்டுக்குள் வெளிச்சம்
- நம்பிக்கை
குறு நாவல்
- ஈரமான ரோஜாக்கள்
- சிறகை உதிர்க்கும் பறவைகள்
நாவல்
- அமுதசுரபிகள்
- சந்தன மரங்கள்
நகைச்சுவை/பயணக் கட்டுரை
- அத்தைக்கு மீசை முளைக்கிறது
- சிரிப்புமழை
- பணம் காய்க்கும் மரம்
- சிதம்பர ரகசியம்
வாழ்க்கை வரலாறு
- நேரு மாமா
- வெற்றிச்செல்வர் எம்.ஏ.எம். ராமசாமி
தொகுப்பு
- நேரு நூறு
- நல்லதே நடக்கும்
திறனாய்வு
- ஒன்பது நகரக் கோயில்கள்
- நகரத்தார் வளர்த்த சிற்பக் கலை
உசாத்துணை
- டாக்டர் வ. தேனப்பன் இணையதளம்
- தெய்வம் ஒண்டர்லேண்ட் இணையதளம்
- ஒன்பது நகரக் கோயில்கள், டாக்டர் வ. தேனப்பன், ஆர்கைவ் தளம்
- நகரத்தார் வளர்த்த சிற்பக்கலை, வ.தேனப்பன், ஆர்கைவ் தளம்
- தமிழறிஞர் வ.தேனப்பன், எழுத்தாக்கம்: சோ. முத்தமிழ்ச் செல்வன், கலைஞன் பதிப்பக வெளியீடு, முதல் பதிப்பு: 2016
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 20-Jul-2025, 02:35:48 IST