under review

விஷ்ணுபுரம் சரவணன்

From Tamil Wiki
விஷ்ணுபுரம் சரவணன்
சரவணன் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சரவணன் (பெயர் பட்டியல்)

விஷ்ணுபுரம் சரவணன் எழுத்தாளர், கவிஞர், சிறார் இலக்கியம் சார்ந்து தொடர்ச்சியாக எழுதி வருபவர். சொந்த ஊரான விஷ்ணுபுரம் என்பதை முன்னொட்டாகக் கொண்டு விஷ்ணுபுரம் சரவணன் என்கிற பெயரில் எழுதி வருகிறார்.

விஷ்ணுபுரம் சரவணன்

பிறப்பு, கல்வி

விஷ்ணுபுரம் சரவணன் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள விஷ்ணுபுரம் என்னும் ஊரில் சிவராமன், கல்யாணி இணையருக்கு மகனாய்ப் பிறந்தார். தனது ஊரில் தொடக்ககால கல்வியை முடித்து, ஊடகவியலில் பட்டயக் கல்வியை நிறைவு செய்தார்.

தனிவாழ்க்கை

விஷ்ணுபுரம் சரவணன் பிரியதர்ஷிணி என்பவரை மணந்தார். மகள் தமிழினி. தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.

பள்ளிக்காலம் தொட்டே கலை இலக்கியப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். பின்னர் கூட்டங்களை ஒருங்கிணைத்தார்.

இதழியல்

விஷ்ணுபுரம் சரவணன் ஊடகவியலாளராக சென்னைக்கு இடம் பெயர்ந்தார். தமிழ் ஆழி, விகடன் குழுமம் மற்றும் 'நியூஸ் தமிழ்' உள்ளிட்ட அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் 15 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார். சுட்டி விகடனில் உதவி ஆசிரியராகவும் விகடன் தடம் இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவராகவும் பணியாற்றினார்.

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை நடத்தும் ஊஞ்சல், தேன்சிட்டு ஆகிய மாணவர் இதழ்களின் இணையாசிரியர்.தமிழ்நாடு அரசு - பள்ளிக்கல்வித் துறை நடத்தும் மாணவர்களுக்கான நடத்தும் 'கனவு ஆசிரியர்' இதழின் ஆசிரியர் குழுவில் இடம்பெற்றுள்ளார்.

இலக்கிய வாழ்க்கை

விஷ்ணுபுரம் சரவணன் யூமா வாசுகி, வண்ணதாசன், பாமா, ரேவதி உள்ளிட்டோரைத் தனது இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகளாகக் குறிப்பிடுகிறார். தனது கவிதைகளை தன்னுடைய வலைப்பூவில் பதிவேற்றி வந்தார். முற்போக்கு இலக்கியச் செயல்பாடுகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறார். தனது ஊரில் கலை இலக்கியக் கூட்டங்களை ஒருங்கிணைத்தார்.

விஷ்ணுபுரம் சரவணனின் 'ஓவியத்தில் பறக்கும் வண்ணத்துப்பூச்சி' என்கிற கவிதைத் தொகுப்பு 2008-ம் ஆண்டில் வெளியானது. அதுவே அவரது முதல் நூல்.

சிறார் இலக்கியம்

விஷ்ணுபுரம் சரவணனின் குறிப்பிடத்தக்க ஆக்கங்கள் சிறார் இலக்கியம் சார்ந்து உருவானவை. அவர் துவக்கம் முதலே குழந்தைகள் உலகம் சார்ந்து ஆர்வம் கொண்டவராக இருந்தார். குழந்தை நாடகக் கலைஞர் வேலு சரவணன், கவிஞர் யூமா வாசுகி ஆகியோரின் நட்பின் வாயிலாக சிறார் இலக்கியத்தில் இயங்கத் துவங்கினார். பதினைந்துக்கும் மேற்பட்ட சிறார் நூல்களை எழுதினார். அவற்றில் 'கயிறு' என்னும் சிறுகதை நூல் எழுபத்தைந்தாயிரம் பிரதிகள் கடந்து விற்பனையாகியது குறிப்பிடத்தக்கது.

தமிழில் சிறார் எழுத்துக்களையும், மூத்த படைப்பாளிகளின் சிறார் எழுத்துக்களையும் கவனப்படுத்தியுள்ளார். அவ்வகையில், எழுத்தாளர் கு. அழகிரிசாமி எழுதி அச்சில் இல்லாது போன 'மூன்று பிள்ளைகள்' மற்றும் 'காளிவரம்' ஆகிய நூல்களைப் பற்றி கவனப் படுத்தி, அதில் 'மூன்று பிள்ளைகள்' அச்சு வடிவம் கண்டது குறிப்பிடத்தக்கது.

சிறாரையும் எழுதவைக்கும் நோக்குடன் 'தி இந்து தமிழ் திசை' யில் 'மாணவர் எழுத்தாளரே' எனும் தொடர் எழுதியுள்ளார்

அமைப்புப்பணிகள்

விஷ்ணுபுரம் சரவணன் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்குக் கதை எழுதவும் சொல்லவும் தொடர்ந்து பயிற்சி அளித்து வருகிறார். விஷ்ணுபுரம் சரவணன் எழுத்தைத் தாண்டி சிறார் இலக்கியத்தின் தேவை குறித்து தொடர்ச்சியாக உரையாடி வருகிறார். சிறார் எழுத்தாளர்களை ஒருங்கிணைக்கும் விதமான உருவாக்கப்பட்டுள்ள தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலச் செயற்குழு உறுப்பினராக உள்ளார். இந்தச் சங்கத்தை உருவாக்கிய சிலரில் இவரும் ஒருவர்.

விருதுகள்

  • தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வழங்கும் சிறந்த இலக்கிய நூலுக்கான விருது (ஒற்றைச் சிறகு ஓவியா நூலுக்காக)
  • தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வழங்கும் சிறந்த இலக்கிய நூலுக்கான விருது (வித்தைக்காரச் சிறுமி நூலுக்காக)
  • ஆனந்த விகடன் - சிறந்த சிறார் இலக்கிய விருது(ஒற்றைச் சிறகு ஓவியா)
  • வாசகசாலை இலக்கிய அமைப்பு - சிறார் இலக்கிய விருது (ஒற்றைச் சிறகு ஓவியா )
  • கலகம் இலக்கிய அமைப்பு - சிறார் இலக்கிய விருது (வாத்து ராஜா )
  • விடுதலை கலை இலக்கியப் பேரவை - சிறார் இலக்கிய விருது (நீலப்பூ)
  • சமயபுரம் எஸ்.ஆர்.வி கல்விக் குழுமம் அளித்த விருது - சிறார் இலக்கியப் பங்களிப்புக்காக
  • சிறந்த சிறார் நாவல் - படைப்புக் குழுமம் (நீலப்பூ)
  • இந்திய அரசின் சாகித்ய அக்காதமி வழங்கும் பாலபுரஸ்கார் விருது 2025
விஷ்ணுபுரம் சரவணன் - சிறார்களுக்கு கதை சொல்லும் நிகழ்வில்

இலக்கிய இடம்

விஷ்ணுபுரம் சரவணன் முற்போக்கு அரசியல் பார்வையுடன் , சமூக உண்மைகளை சிறார் உணர்ந்துகொள்ளும் நோக்குடன் சிறார் இலக்கியம் படைப்பவர். குழந்தைகளுக்குரிய கற்பனையுலகை சமூக யதார்த்தங்களின் உருவகங்களாக மாற்றி கதைகளை எழுதுகிறார். எளிய நடையில் எழுதப்படும் விஷ்ணுபுரம் சரவணனின் சிறார் கதைகள் தமிழ் சிறார் வாசகர்கள் நடுவே புகழ்பெற்றவை.

நூல் பட்டியல்

கவிதைத்தொகுதி
  • ஓவியத்தில் பறக்கும் வண்ணத்துப்பூச்சி (கவிதைத் தொகுப்பு )
சிறார் இலக்கியங்கள்
  • வாத்து ராஜா
  • ஒற்றைச் சிறகு ஓவியா
  • நீலப்பூ
  • சிறார் சிறுகதை நூல்கள்
  • வித்தைக்காரச் சிறுமி
  • வானத்துடன் டூ
  • கயிறு
  • சாதனாவின் தோழி
  • எங்க தெரு
  • எங்க பூங்கா
  • உறவுகளுக்கு ஒரு வாழ்த்து
  • எங்க ஊரு
  • டிங் டாங்
பெற்றோர் ஆசிரியருக்கான நூல்
  • கதை கதையாம் காரணமாம்
  • குழந்தைகளுக்கு மரியாதை ! - கேள்விகள் - பல கோணங்கள்
  • வாசிப்புப் பேரியக்கம்
பிற மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டு வெளியான படைப்புகள்
  • ஒற்றைச் சிறகு ஓவியா - மலையாளத்தில் எழுத்தாளர் பி.வி.சுகுமாரனால் மொழிபெயர்க்கப் பட்டது
  • வாத்து ராஜா - மலையாளத்தில் எழுத்தாளர் பி.வி.சுகுமாரனால் மொழிபெயர்க்கப் பட்டது
  • கயிறு - மலையாளத்தில் எழுத்தாளர் பி.வி.சுகுமாரனால் மொழிபெயர்க்கப் பட்டது
  • வாத்து ராஜா - மாணவர்களால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டது
  • கயிறு - ஆங்கிலத்தில் எழுத்தாளர் இளம்பரிதியால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது

உசாத்துணை


✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 02-Feb-2024, 21:25:53 IST