under review

வடம வண்ணக்கன்

From Tamil Wiki
வண்ணக்கன் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: வண்ணக்கன் (பெயர் பட்டியல்)
வடமவண்ணக்கன் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: வடமவண்ணக்கன் (பெயர் பட்டியல்)

வடம வண்ணக்கன் சங்க காலப் புலவர். இவர் பாடிய பாடல் ஒன்று குறுந்தொகையில் உள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

வடம வண்ணக்கன் நாணய ஆய்வாளர் தொழில் செய்து வந்தார் என்பதை அவரை 'வண்ணக்கர்' என்று வழங்குவதிலிருந்து அறியலாம். வடநாட்டிலிருந்து தமிழ் நாட்டிற்கு தொழில் செய்ய வந்தவர்.

இலக்கிய வாழ்க்கை

வட நாட்டிலிருந்து வந்தாலும் தமிழ் மொழி கற்று, செய்யுள் பாடும் திறமையை வளர்த்து கொண்ட மிகச்சிலருள் ஒருவர் வடம வண்ணக்கன். குறுந்தொகையில் 81-ஆவது பாடல் பாடினார். குறிஞ்சித் திணைப்பாடலாக தோழி கூற்றாக பயின்று வந்துள்ளது. தோழியின் வாயிலாகத் தலைவியோடு அளவளாவப்பெற்ற தலைவன் பிரியும் காலத்தில் அவனை நோக்கி, "நின்னுடைய குறையை நான் முடித்து வைத்தேன்; தலைவி நின்னோடு ஒன்றினள்; இனி நீ அதோ தெரியும் எம் ஊர்க்கண்ணும் வந்து பழகுவாயாக" என்று தோழி கூறியதாக பாடல் அமைந்துள்ளது. இருளில் தோன்றும் நிலவு போல கடலும், கானலும்(மணலும்) தோன்றும் என்ற உவமை சிறப்பாக எடுத்தாளப்பட்டுள்ளது.

பாடல் நடை

  • குறுந்தொகை: 81

இவளே, நின்சொற் கொண்ட என்சொல் தேறிப்
பசுநனை ஞாழற் பல்சினை ஒருசிறைப்
புதுநலன் இழந்த புலம்புமார் உடையள்
உதுக்காண் தெய்ய உள்ளல் வேண்டும்
நிலவும் இருளும் போலப் புலவுத்திரைக்
கடலும் கானலுந் தோன்றும்
மடல்தாழ் பெண்ணையெம் சிறுநல் லூரே.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 08-Oct-2023, 04:52:52 IST