under review

ம.கோபாலகிருஷ்ண ஐயர்

From Tamil Wiki
ம.கோபாலகிருஷ்ண ஐயர்
ம.கோபாலகிருஷ்ண ஐயர் வாழ்க்கை
ம.கோபாலகிருஷ்ண ஐயர்

ம.கோபாலகிருஷ்ண ஐயர் (தியாகராஜன்) (1878 -1927 ) தமிழறிஞர், கல்வியாளர். மதுரைக் கல்லூரி தமிழாசிரியராகப் பணியாற்றினார். தொடக்க கால இதழாளர்களில் ஒருவர்.

ம.கோ.களஞ்சியம்

பிறப்பு, கல்வி

ம.கோபாலகிருஷ்ண ஐயர் 1878-ல் லால்குடி திருத்தவத்துறையில் மகாதேவ ஐயருக்கும் பிரவர்த்த ஸ்ரீமதிக்கும் பிறந்தார். ம. கோபாலகிருஷ்ண ஐயருக்கு ஜகதீசன் பரமசிவன் என்னும் அண்ணன்களும் துரைசாமி என்னும் தம்பியும் செல்ல மீனாட்சி, பர்வதம் என்னும் தங்கைகளும் இருந்தனர். ம.கோபாலகிருஷ்ண ஐயரின் தந்தை மகாதேவ ஐயர் துணைநீதிமன்றத்தில் சிரஸ்ததாராக பணிபுரிந்து பின் இராமேஸ்வரம் ஆலயத்தின் நிர்வாகியாகப் பொறுப்பேற்றார்.

ம.கோபாலகிருஷ்ண ஐயருக்கு அவருடைய அண்ணன் ஜெகதீசன் வாசிப்பதில் வழிகாட்டியாக இருந்தார். ஜெகதீசன் ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர் மீது ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். நீதிமன்றத்தில் லத்தீன் விளக்கவுரையாளராக பணியாற்றினார். ம.கோபாலகிருஷ்ண ஐயருக்கு பெற்றோர் இட்ட பெயர் தியாகராஜன். அவரே அதை கோபாலகிருஷ்ணன் என பின்னாளில் மாற்றிக்கொண்டார்.

ம.கோபாலகிருஷ்ண ஐயர் எஃப்.ஏ படிப்பை முடித்துவிட்டு சோழவந்தான் அரசன் சண்முகனாரிடம் தமிழ் கற்றார். தமிழ்ப்பண்டிதர் தேர்வில் வென்று மதுரைக் கல்லூரில் தமிழ்ப்பண்டிதராக பணிக்குச் சேர்ந்தார். திருச்சி தேசியக் கல்லூரி தமிழ்த்துறை தலைவராகப் பணியாற்றினார்.

தனிவாழ்க்கை

ம.கோபாலகிருஷ்ண ஐயர் தர்மாம்பாளை மணந்தார்.

மீனாட்சிக் கல்லூரி அண்ணாமலைப் பல்கலைக்கழகமாக ஆக்கப்பட்டபோது அதில் ஆசிரியராகப் பணியாற்ற ம.கோபாலகிருஷ்ண ஐயருக்கு 1927-ல் அழைப்பு வந்தது. ஆனால் அதற்குள் அவர் உடல்நிலை குன்றியதனால் அப்பொறுப்பை ஏற்கவில்லை.

அமைப்புப் பணிகள்

ம. கோபாலகிருஷ்ண இயர் 1901-ல் தன் இருபத்து மூன்றாம் வயதில் மதுரை மாணவர் செந்தமிழ்ச் சங்கம் என்னும் அமைப்பை உருவாக்கி தமிழிலக்கிய கூட்டங்களை நடத்தினார். இச்சங்கம் சார்பில் நச்சினார்க்கினியர் பெயரில் ஒரு நூலகத்தை அமைத்தார்.

அரசியல்

1907-ல் சூரத் நகரில் நடந்த காங்கிரஸ் மகாசபைக் கூட்டத்திற்கு மதுரையில் இருந்து சென்றவர்களில் ம.கோபாலகிருஷ்ண ஐயரும் இருந்தார். அதை விவேகபாநு இதழில் விரிவாகப் பதிவுசெய்திருக்கிறார்.

இதழியல்

  • 1909-ல் கந்தசாமி கவிராயருடன் இணைந்து 'வித்யாபானு' என்னும் இதழை நடத்தினார்.
  • 1923-ல் 'நச்சினார்க்கினியர்' என்னும் பெயரில் ஓர் இலக்கிய இதழை நடத்திவந்தார்.
  • 1916-ல் 'விவேகோதயம்' என்னும் இதழை நடத்தினார்.

ஆன்மிகம்

1897-ல் சுவாமி விவேகானந்தர் பாம்பன் வந்தபோது ராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதியுடன் சென்று அவரை வரவேற்றார். விவேகானந்தரின் 'Song of the Sanyasin' என்னும் பாடலை மொழியாக்கம் செய்து 1904-ம் ஆண்டு விவேகசிந்தாமணி என்னும் இதழில் வெளியிட்டார். மதுரை விவேகானந்த சபையின் செயலாளராகவும் பணியாற்றினார்.

இலக்கியப் பணிகள்

அரசன் சண்முகனார் 'வள்ளுவர் நேரிசை' என்னும் பெயரில் எழுதிய நூறு வெண்பாக்களுக்கு அரும்பதவுரையும் விளக்கமும் எழுதி தன் விவோகோதயம் இதழில் வெளியிட்டார். 1919-ல் அதை நூலாக்கினார். பாரதியார் எட்டையபுரத்தை விட்டு மதுரைக்கு வந்தபோது அவருக்கு ம.கோபாலகிருஷ்ண ஐயர் உதவி செய்தார் என்று கவியோகி சுத்தானந்த பாரதி தன்னுடைய 'கவிக்குயில் பாரதி' என்னும் நூலில் குறிப்பிடுகிறார். 1904-ல் ம.கோபாலகிருஷ்ண ஐயர் தன் நண்பர் ஜி. சுப்ரமணிய ஐயர் மூலம் பாரதியாருக்கு சுதேசமித்திரன் இதழில் வேலைவாங்கி தந்தார்.

மொழியாக்கம்

'அரும்பொருட்டிரட்டு' என்னும் தலைப்பில் ம.கோபாலகிருஷ்ண ஐயர் ஆங்கிலத்தில் இருந்து மொழியாக்கம் செய்த கவிதைகள் தொகுக்கப்பட்டன. ஷேக்ஸ்பியர் முதல் டென்னிசன் வரையிலான நானூறு வருட ஆங்கில இலக்கிய மரபில் இருந்து கவிதைகளைத் தெரிவுசெய்து தமிழாக்கம் செய்துள்ளார்

கட்டுரைகள்

ம.கோபாலகிருஷ்ண ஐயர் அறிவியல், அரசியல், சமூகவியல் மற்றும் இலக்கியம் சார்ந்து ஏராளமான கட்டுரைகளை தான் நடத்திய இதழ்களிலும் வேறு இதழ்களிலும் எழுதியுள்ளார். அவை 'ம.கோ.களஞ்சியம்' என்னும் தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன.

கவிதைகள்

ம.கோபாலகிருஷ்ண ஐயர் ஏராளமான வாழ்த்துக் கவிதைகளையும்,' விசுவநாதன் அல்லது கடமை முரண்' என்னும் கவிதை நாடகத்தையும் எழுதியிருக்கிறார்.

நாடகம்

ம.கோபாலகிருஷ்ண ஐயர் 'மௌனதேசிகர்' என்னும் நகைச்சுவை நாடகத்தை எழுதினார்.

மறைவு

ஏப்ரல் 1927-ல் ம.கோபாலகிருஷ்ண ஐயர் மறைந்தார்.

நினைவுகள், தொகுப்புகள்

பண்டித ம.கோபாலகிருஷ்ண ஐயர் - உஷா மகாதேவன், சாகித்ய அக்காதமி

ம.கோபாலகிருஷ்ண ஐயரின் பெயர்த்தியான உஷா மகாதேவன் அவருடைய அரும்பொருட்டிரட்டு நூலை மறுபதிப்பாக வெளியிட்டார். அவருடைய படைப்புகளை ம.கோ.களஞ்சியம் என்னும் தலைப்பில் வெளியிட்டார்.

இலக்கிய இடம்

ம.கோபாலகிருஷ்ண ஐயர் தொடக்க கால இதழாளர், தேசிய விடுதலைப் போரில் பங்கெடுத்தவர், தமிழ்க் கல்விக்கு முன்னோடியாக அமைந்தவர் என்னும் வகைகளில் முக்கியமானவர்.

நூல்கள்

  • சன்யாசி கீதம் 1904
  • அரும்பொருட்டிரட்டு 1915
  • அரசன் சண்முகனாரின் வள்ளுவர் நேரிசை, உரை 1919
  • விசுவநாதன் அல்லது கடமை முரண் 1919
  • மௌனதேசிகர் 1919
  • புதல்வர் கடமை 1926
  • ம.கோ. களஞ்சியம் - தொகுப்பாசிரியர் உஷா மகாதேவன் 2014

உசாத்துணை


✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 27-Sep-2022, 23:22:46 IST