மொட்டை வேலாப் போடியார்
மொட்டை வேலாப் போடியார் (வேலன்) (1804 - 1880) இலங்கை தமிழ், சைவ அறிஞர், ஈழத்து சிற்றிலக்கியப் புலவர். இவர் எழுதிய 'தம்பிலுவிற் பள்ளு' முக்கியமான நூல்.
வாழ்க்கைக் குறிப்பு
மொட்டை வேலாப் போடியார் 1804-ல் இலங்கை மட்டக்களப்பில் சின்னத்தம்பி போடியாருக்கும், கெங்காத்தைக்கும் மகனாகப் பிறந்தார். இயற்பெயர் வேலன்.
இளமைப் பருவத்தில் திண்ணைப் பள்ளிக் கூடத்தில் கல்வி கற்றார். பின்னர் பள்ளிப்படிப்போடு பாடம் நின்றது. பயிர்த்தொழில் செய்தார்.
இலக்கிய வாழ்க்கை
பயிர்த்தொழில் சார்ந்த பள்ளு, ஊஞ்சல், அம்மானை, சிந்து முதலிய பாவகைகளைப் பாடினார். மட்டக்களப்பு புலவர் மன்றத்தில் நாள்தோறும் செய்யுள் பாடினார்,சொற்பொழிவுகளாற்றினார். வசைப்பாடல்கள் பல பாடினார். நீர்ப்பாசன அதிகாரி தவறான காதல் வழியில் விழுந்து அதனால் காதறுக்கப்பட காதலி அவனுக்குப் பால் மாடு தந்து உதவிய வரலாற்றைப் பற்றி பாடிய நூல் 'தம்பிலுவிற் பள்ளு'.
மறைவு
மொட்டை வேலாப் போடியார் 1880-ல் தன் எழுபதாவது வயதில் மட்டக்களப்பில் காலமானார்.
நூல்கள் பட்டியல்
- தம்பிலுவிற் பள்ளு
உசாத்துணை
- தமிழ்ப் புலவர் வரிசை 28ம் புத்தகம், கருப்பங்கிளர் சு.அ.ராமசாமிப் புலவர், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 1969
- Dictionary of biography of the Tamils of Ceylon, 1997 (compiled by S. Arumugam)
- 17ம் - 20ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்கள், தொகுப்பு: கனக ஸ்ரீதரன் ஆஸ்திரேலியா
- ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்|மு.கணபதிப்பிள்ளை|பாரி நிலையம் வெளியீடு, 1967
✅Finalised Page