under review

பேய்மகள் இளவெயினி

From Tamil Wiki
இளவெயினி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: இளவெயினி (பெயர் பட்டியல்)

பேய்மகள் இளவெயினி, சங்க காலப் பெண்பாற் புலவர்களில் ஒருவர். இவரது ஒரு பாடல் சங்கத் தொகை நூலான புறநானூற்றில் 11- வது பாடலாக இடம் பெற்றுள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

பேய்மகள் இளவெயினி பரணர் காலத்தைச் சேர்ந்த பெண் புலவர். குறவர் சமுதாயத்தில் பிறந்தவர். தேவராட்டினால் அல்லது பெண் பூசாரியைக் குறிக்கும் சொல்லாக பேய்மகள் என்பது முன்னொட்டாக வந்திருக்கலாம் என அறிஞர்கள் கருதினர்.

இலக்கிய வாழ்க்கை

பேய்மகள் இளவெயினி பாடிய பாடல் புறநானூற்றில் 11-வது பாடலாக உள்ளது. வஞ்சி நகர வேந்தன் சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ பற்றி பாடப்பட்டது.

பாடலால் அறியவரும் செய்திகள்

  • தண்பொருநை பாயும் வஞ்சி நகரம். அதன் வேந்தன் சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ தான் விரும்பிய கோட்டைகளையெல்லாம் வென்றவன். வலிமை மிக்க வீரர்களை வென்றவன். இவனைப்பாடிய பாடினிக்கு சேரமான் கழஞ்சு நிறைக்கு மிகுதியாக ஏரழகும், சீர்சிறப்பும் உடைய அணிகலன்களைப் பரிசாக வழங்கினான். பாடினிக்கு உடன் குரல் கொளைப்பண் தந்த பாணனுக்கு வெள்ளிநாரால் தொடுத்த தங்கத் தாமரைப் பூவைப் பரிசாக வழங்கினான்.
  • பொருநை ஆற்று மணலில் பாவை செய்து பூப்பறித்துவந்து சூட்டி மகளிர் விளையாடுவர். பாவைக்குப் பூச்சூட்டிய பின்னர் பொருநை ஆற்றுப் புனல்நீரில் பாய்ந்து விளையாடுவர். இவர்கள் வெண்ணிற இழையணியை அணிந்திருப்பர்.

பாடல் நடை

  • புறநானூறு 11

(திணை: பாடாண் திணை) (துறை: பரிசில் கடாநிலை)

அரி மயிர்த் திரள் முன்கை
வால் இழை, மட மங்கையர்
வரி மணற் புனை பாவைக்குக்
குலவுச் சினைப் பூக் கொய்து
தண் பொருநைப் புனல் பாயும்
விண் பொருபுகழ், விறல்வஞ்சிப்
பாடல் சான்ற விறல்வேந் தனும்மே
வெப் புடைய அரண் கடந்து,
துப்புறுவர் புறம்பெற் றிசினே:
புறம் பொற்ற வய வேந்தன்
மறம் பாடிய பாடினி யும்மே,
ஏர் உடைய விழுக் கழஞ்சின்,
சீர் உடைய இழை பெற்றிசினே!
இழை பெற்ற பாடி னிக்குக்
குரல் புணர்சீர்க் கொளைவல்பாண்
மகனும்மே. என ஆங்கு,
ஒள்அழல் புரிந்த தாமரை
வெள்ளி நாரால் பூப்பெற் றிசினே.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 23-Sep-2023, 08:15:58 IST