under review

பெ.மு. இளம்வழுதி

From Tamil Wiki
பெ.மு. இளம்வழுதி

பெ.மு. இளம்வழுதி(செப்டம்பர் 1, 1932- ஆகஸ்ட் 17, 2019) மலேசியாவின் மூத்த மரபுக் கவிஞர், எழுத்தாளர், சமூக செயற்பாட்டாளர்.

பிறப்பு, கல்வி

பெ.மு. இளம்வழுதி செப்டம்பர் 1, 1932-ல் கோல சிலாங்கூரிலுள்ள சுங்கை திங்கி தோட்டத்தில் பிறந்தார். பெ.மு. இளம்வழுதி பெரியசாமி-பொன்னியம்மா இணையரின் மூத்த மகனாவார். இவருக்கு இரு சகோதரர்கள். பெ.மு. இளம்வழுதியின் இளம்வயதிலேயே இவரின் தாயார் மலேரியா காய்ச்சலால் இறந்துவிட இவரின் அத்தை குடும்பத்தினர் கவனிப்பில் வளர்ந்தார்.

பெ.மு. இளம்வழுதியின் தந்தை பெரியசாமி தமிழகத்திலிருந்து வருகையிலேயே ஓரளவு கல்வி கற்றிருந்தார். இவர்கள் வாழ்ந்த தோட்டத்தில் தமிழ்ப் பள்ளியொன்றை கட்டித்தருமாறு ஆங்கிலேய நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தார். கட்டடத்தோடு அனைத்து தளவாடப் பொருட்களையும் வழங்கி இவரையே ஆசிரியராகவும் நியமித்து ஊதியம் வழங்கினர். ராஜகிரி தோட்டத் தமிழ்ப் பள்ளி என்றழைக்கப்பட்ட இப்பள்ளியில் பெ.மு. இளம்வழுதி ஆரம்பக் கல்வியைப் பெற்றார். இரண்டாம் உலகப் போருக்குப்பின் கோலாலம்பூர் அப்பர் பள்ளியில் ஏழாம் வகுப்பைத் தொடர்ந்தார். 1949 முதல் 1951 வரை ஆசிரியர் போதனா முறை பயிற்சி பெற்றார். பெ.மு. இளம்வழுதி மதுரை காமராஜர் பல்கலைகழகம் நடத்திய அஞ்சல் வழி கல்வியில் மூன்றாண்டுகள் பயின்றார்.

தனி வாழ்க்கை

பெ.மு. இளம்வழுதி 1952-ல் ஜாவா சிலாங்கூர் தோட்டத் தமிழ்ப் பள்ளியில் ஆசிரியர் பணியைத் தொடங்கினார். 1972-ல் தலைமையாசிரியராகப் பொறுப்பேற்றார். 1987-ல் புக்கிட் ரோத்தான் பாரு தமிழ்ப் பள்ளியில் (முன்னாள் ராஜகிரி தோட்டத் தமிழ்ப் பள்ளி) பணிஓய்வு பெற்றார். பெ.மு. இளம்வழுதி தன் அத்தை மகளான காசியம்மாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.

இலக்கிய வாழ்க்கை

பெ.மு 2.png

படைப்பிலக்கியத்தில் ஆர்வம் கொண்டிருந்த பெ.மு. இளம்வழுதிக்கு தொடக்கத்தில் இவரின் தந்தையும் ராமானுஜம் ஆச்சாரியாரும் வழிகாட்டினர். தொடர்ந்து புலவர் தணிகை உலகநாதன் ஊக்குவிப்பு வழங்கினார்.

1950-ல் தமிழ் நேசன் நாளேட்டில் சுப. நாராயணனும் பைரோஜி நாராயணனும் நடத்திய கதை வகுப்பில் கலந்து கொண்டு சிறந்த எழுத்தாளர் பட்டியலில் இடம் பெற்றவர் பெ.மு. இளம்வழுதி. 1950-களின் பிற்பகுதியில் தமிழ் முரசு நாளிதழில் துணையாசிரியராக இருந்த வை. திருநாவுக்கரசின் முயற்சியில் மலேசிய எழுத்தாளர்களுக்கான சிறுகதைப் போட்டி நடத்தப்பட்டது. பெ.மு. இளம்வழுதி இதில் பங்கேற்றுப் பரிசு பெற்றிருக்கின்றார்.

இவரது முதல் கட்டுரை 1949ல் தமிழ் முரசு மாணவர் மணிமன்ற மலரிலும் 'ஓர் இரவு' எனும் சிறுகதை தமிழ் முரசு நாளிதழிலும் வெளிவந்தன. 1949-ம் ஆண்டிலேயே இவர் எழுதத் தொடங்கினார். மலேசிய தமிழ் இதழ்களிலும் தமிழக ஏடுகளிலும் இவரின் படைப்புகள் இடம்பெற்றன. சிறுகதைகள், கட்டுரைகள், நாடகங்கள் தவிர நிறைய கவிதைகளை எழுதினார். 1953, 1954-ம் ஆண்டுகளில் சென்னையிலிருந்து வெளிவந்த 'கலைமன்றம்' இதழில் பெ.மு. இளம்வழுதியின் ஐந்து சிறுகதைகளும், சிறப்பு மலர்களில் கவிதைகளும் இடம்பெற்றன.

இவர் சிறுகதைகளை மணிவண்ணன் எனும் புனைபெயரில் எழுதிவந்தார். 'அடிவானம்' என்ற சிறுகதை தொகுப்பு, இளம்வழுதி கவிதைகள் (இரு தொகுதிகள்), திருக்குறள் கவிதைக் களஞ்சியம், வெற்றிச் செல்வி முத்தம்மா, புதுமைப்பெண் தமிழரசி ஆகிய இரு குறும்பாவியங்கள், புதிய நூற்றாண்டுத் தமிழர் (ஐந்து உட்பிரிவுகளைக் கொண்ட வெண்பாக்கள்), மலேசிய மண்ணின் வரலாறு ஆகிய நூல்களை வெளியிட்டார். 2012ல் இளந்துளிர், இளம்பயிர், இளங்கதிர் ஆகிய சிறுவர் கவிதை நூல்களும் வெளியிட்டுள்ளார்.

பெ.மு. இளம்வழுதி தம் படைப்புகளுக்குப் பல பரிசுகள் பெற்றுள்ளார். மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் மலேசியத் தமிழ் பாவலர் மன்றமும் இவருக்குத் தங்கப்பதக்கப் பரிசு அளித்தன. மலேசிய பாரதிதாசன் இயக்கம் இவரின் 'உன்னால் முடியும் ராசாத்தி' சிறுகதைத் தொகுப்பிற்கு 5000 மலேசிய ரிங்கிட் பரிசு வழங்கியது. இவரின் சிறந்த கல்விச் சேவையைப் போற்றும் வண்ணம் சிலாங்கூர் மாநில கல்வித்துறை 2014ல் நல்லாசிரியர் விருது வழங்கிச் சிறப்பித்தது.

இலக்கியச் செயல்பாடுகள்

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் பெ.மு. இளம்வழுதி துணைத் தலைவர், செயலவை உறுப்பினர் ஆகிய பொறுப்புகளை வகித்துள்ளார். சிலாங்கூர் பாவலர் மன்றத்தின் தலைவராக இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பொறுப்பு வகித்திருக்கின்றார். பெ.மு. இளம்வழுதி தன் பணி ஓய்வுக்குப் பின்னரும் தொடர்ந்து தன் இலக்கியப் பணிகளை மேற்கொண்டு வந்தார். சிலாங்கூர் பாவலர் மன்ற ஏற்பாட்டில் 2018-ல் கிள்ளானில் யாப்பிலக்கணப் பயிற்சி வகுப்புகளை நடத்தி வந்தார். 1330 குறட்பாக்களுக்கும் கவிதை நடையில் விளக்கங்களைத் தந்திருக்கும் இந்நூல் பெ.மு. இளம்வழுதியின் தனிச் சிறப்புமிக்க படைப்பாகத் திகழ்கிறது. இந்நூல் 2012-ன் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் வழங்கும் தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப் பரிசுக்கான பரிசீலனைப் பட்டியலில் இடம்பெற்றிருந்தது.

பெ.மு. இளம்வழுதி தமிழ் இளைஞர் மணிமன்றம், தமிழாசிரியர் தேசிய சங்கம், தமிழ் இலக்கியக் கழகம் ஆகியவற்றிலும் சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளார். தமிழ்மொழி, தமிழர் வாழ்க்கை, தமிழரின் பொருளாதார முன்னேற்றம் தொடர்பான திறனாய்வுக் கட்டுரைகளையும் சமர்ப்பித்துள்ளார்.

மாணவர்களுக்கு கவிதை வகுப்புகள், நாடகங்கள் நடத்துவதில் பெரும் ஆர்வத்துடன் செயலாற்றிவந்தார். ஓரங்க நாடகங்கள், முழுநாடகங்கள் பலவற்றை மாணவர்களுக்காக எழுதி அரங்கேற்றினார். பெ.மு. இளம்வழுதியின் ஐந்து நாடகங்கள் வானொலியிலும் ஒளிபரப்பாகின.

பெ.மு. இளம்வழுதி நினைவு மரபுக்கவிதைப் போட்டி

பெ.மு. இளம்வழுதியின் நினைவாக இவரின் குடும்பத்தினர் மலேசியத் தமிழ்ப் பாவலர் மன்றத்தின் ஆதரவோடு தேசிய நிலையில் மரபுக்கவிதைப் போட்டியை 2020-லிருந்து மூன்றாண்டுகளாக நடத்தி வருகின்றனர்.

தமிழ் இளைஞர் மணிமன்றம்

1960-களில் பத்தாங் பெர்ஜுந்தை (தற்போது பெஸ்டாரி ஜெயா) வட்டாரத்தில் மணிமன்றத்தை அமைத்து அதன்வழி இளைஞர்களைக் கொண்டு பல சமூகச் சேவைகளை மேற்கொண்டதை இவரின் மாணவரும் மூத்த எழுத்தாளரும், 'மலேசிய இந்தியர்களின் இக்கட்டான நிலை' நூலாசிரியருமான மா. ஜானகிராமன் பதிவு செய்துள்ளார்.

விருதுகள்

  • மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பொற்பதக்கம்
  • மலேசியத் தமிழ்ப் பாவலர் மன்றத்தின் பொற்பதக்கம்
  • மலேசிய பாரதிதாசன் இயக்கம் 5000 மலேசிய ரிங்கிட் இலக்கியப் பரிசு
  • நல்லாசிரியர் விருது சிலாங்கூர் மாநில கல்வித்துறை 2014

இறப்பு

பெ.மு.இளம்வழுதி ஆகஸ்ட் 17, 2019-ல் மரணமடைந்தார்.

நூல்கள்

சிறுகதைகள்
  • அடிவானம் (திலகா பதிப்பகம், சிலாங்கூர், 1972)
  • மெலாவாத்தி சிறுகதைகள், (தமிழ் இளைஞன் மணி மன்றம், சிலாங்கூர், 1992)
  • உன்னால் முடியும் ராசாத்தி, (மணிமேகலைப் பிரசுரம், சென்னை, 2002)
காவியம்
  • வெற்றித் திருமகள் முத்தம்மா, (மணிமேகலைப் பிரசுரம், சென்னை, 2001)
  • புதுமைப் பெண் எழிலரசி, (மணிமேகலைப் பிரசுரம், சென்னை, 2001)
  • மலேசிய மண்ணின் வரலாறு, (தமிழ்ச்செல்வன் அறக்கட்டளை, 2002)
கவிதைகள்
  • குறளறம், (முல்லைப் பதிப்பகம், சிலாங்கூர், 1993)
  • புதிய நூற்றாண்டுத் தமிழர், (மணிமேகலைப் பிரசுரம், சென்னை, 2002)
  • இளம்வழுதி கவிதைகள் பாகம் 1, (தமிழ்ச்செல்வன் அறக்கட்டளை, 2002)
  • இளம்வழுதி கவிதைகள் பாகம் 2, (தமிழ்ச்செல்வன் அறக்கட்டளை, 2002)
  • மலேசியாவில் தமிழாசிரியர், (மணிமேகலைப் பிரசுரம், சென்னை, 2004)
  • திருக்குறள் கவிதைக் களஞ்சியம், (தமிழ்ச்செல்வன் அறக்கட்டளை, 2008)
  • இளங்கதிர், (தமிழ்ச்செல்வன் அறக்கட்டளை, 2011)
  • இளம்பயிர், ஆண்டு 1, (உலகத் தமிழர் பதிப்பகம், சென்னை, 2012)
  • இளம்பயிர், ஆண்டு 4, (உலகத் தமிழர் பதிப்பகம், சென்னை, 2012)

இணைய இணைப்பு


✅Finalised Page