புறத்துழிஞை
புறத்துழிஞை உழிஞைத் திணையின் துறைகளில் ஒன்று. புறத்துழிஞை உழிஞையார் அகழியின் புறத்தே கரையில் தங்கியதைச் சொல்வது.
- காவற்காட்டின் புறத்தே வெட்சியார் தங்கியது வெட்சித்திணையின் புறத்திறை
- உழிஞையார் மதிலின் புறத்தே தங்கியது உழிஞைத்திணையின் புறத்திறை
- உழிஞையார் அகழியின் புறத்தே கரையில் தங்கியதைச் சொல்வது புறத்துழிஞை.
விளக்கம்
புறப்பொருள் வெண்பாமாலை
புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் வானில் படிகின்ற அளவுக்கு உயர்ச்சியையுடைய பகைவரது காவற்காட்டினைக் கடந்து சென்ற உழிஞைப்படை ஆழ்ந்த அகழியின் கரைப் பக்கத்தில் தங்கியதைச் சொல்வது என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
விண் தோயும் மிளை கடந்து
குண்டு அகழி புறத்தன்று(கொளு 6.16)
வெண்பா
கோள்வாள் முதலைய குண்டு அகழி நீராக
வாள்வாய் மறவேந்தன் வந்து இறுத்தான் - நீள்வாயில்
ஓங்கல் அரணத்து ஒளி வயார் வெய்து உயிர்ப்ப
ஆம்கொல் அரிய அமர் (110)
பொருள் உழிஞை மன்னன், ஆட்களை அகப்படுத்திக் கொள்வதில் தப்பாத முதலைகளையுடைய ஆழ்ந்த நீர் அகழியிலுள்ள நீரையே பருகும் நீராகக் கொண்டு அதன் கரையில் வந்து தங்கினான். தங்கிய அதற்கே, மலைபோன்ற அரணுள்ளே இருக்கின்ற வளையல் அணிந்த பெண்டிர் வெப்பப் பெரு மூச்சினை விட்டார்கள்; வெல்லுதற்கரிய போராக இது அமையும் என்பது உறுதி என்று கண்டோர் கூறினர்.
உசாத்துணை
உழிஞைத்திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Jul-2025, 11:52:24 IST