புறத்திறை
புறத்திறை வெட்சித்திணையின் துறைகளில் ஒன்று. ஆநிரையைக் கவர முற்பட்ட மறவர் பகைவரின் காவற்காட்டின் வெளியே தங்கியிருத்தலைக் கூறும் துறை.
விளக்கம்
புறப்பொருள் வெண்பாமாலை
புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் காவற்காட்டின் உள்ளிருப்போர் தப்பிப் போகாதபடி வெட்சி மறவர் அதன் புறத்தே தங்கியதைப் பேசுவது என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
நோக்கஅரும் குறும்பின் நூழையும் வாயிலும்
போக்குஅற வளைஇப் புறத்து இறுத்தன்று (கொளு 1.10)
வெண்பா
உய்த்து ஒழிவார் ஈங்கு இல்லை ஊழிக்கண் தீயே போல்
முந்து அமருள் ஏற்றார் முரண் முருங்கத் - தம் தமரின்
ஒற்றினால் ஆய்ந்து ஆய்ந்து உரவோர் குறும்பினைச்
சுற்றினார் போகாமல் சூழ்ந்து (7)
பொருள்: வலிமைகொண்ட வெட்சி மறவர்கள், தம்முடைய இனத்தாரான ஒற்றர்களினால் பன்முறையும் பகைவரது நிலைகளை ஆராய்ந்தறிந்த பின்னர் பகைவரின் மாறுபாடு கெடும்படியாக, ஊழின் இறுதியில் தோன்றும் தீயைப்போல் 'இவ் வரணினின்றும் உயிர்பிழைத்துப் போவார் யாருமில்லை' என்னும்படியாக, எவரும் வெளியேறிப் போகாதபடிக்கு, அரணினைச் சூழ்ந்து வளைத்துக் கொண்டனர்.
உசாத்துணை
நொச்சித் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 29-Mar-2025, 11:58:01 IST