under review

பிரயோக விவேகம்

From Tamil Wiki
பிரயோக விவேகம்

பிரயோக விவேகம் (பொ.யு. 17-ம் நூற்றாண்டு) சுப்பிரமணிய வேதியர் வடமொழி நூலைத் தழுவி எழுதிய இலக்கண நூல்.

ஆசிரியர்

சுப்பிரமணிய வேதியர் பொ.யு. 17-ம் நூற்றாண்டில் பிரயோக விவேகம் எனும் இலக்கண நூலை சுவாமிநாத தேசிகரின் அறிவுரைப்படி எழுதினார். இந்நூலுக்கான உரையையும் சுப்பிரமணிய வேதியரே எழுதினார்.

நூல் அமைப்பு

இதில் காரக படலம், சமாசபடலம், தத்திதபடலம், திங்கப்படலம் எனும் நான்கு படலங்களில் 51 கலித்துறைப் பாடல்கள் உள்ளன. இவற்றுள் 17 பாடல்களைக்(காரிகை) கொண்ட காரகப்படலம் வேற்றுமையைப் பற்றியும், 11 காரிகைகளாலான சமாசப் படலம் தொகைச்சொல் பற்றியும், 6 காரிகைகளிலாலான தத்தித படலம் தத்தித்தாந்த சொற்கள் பற்றியும், 17 காரிகைகளிலாலான திங்கப் படலம் வினைமுற்றுக்களைப் பற்றியும் சொல்பவை.

மதிப்பீடு

சோழர் காலத்தில் தமிழ்நாட்டில் ஏற்பட்ட வடமொழிப் பரவலின் தாக்கத்தினால் விளைந்த புதிய இலக்கணத் தேவைகளை வீரசோழியம் என்னும் இலக்கண நூல் ஓரளவுக்கு நிறைவு செய்தது. எனினும் அக்காலத்தில் எழுந்த இலக்கியங்களான சைவசித்தாந்த சாத்திரங்கள், வைணவ நூல்கள், மணிப்பிரவாள நடையில் அமைந்த இலக்கியங்கள் வழியாக தமிழுக்கு அறிமுகமான வடமொழி மரபு சார்ந்த இலக்கணக் கூறுகளை விளக்குவதற்கு ஏற்பட்ட தேவையை நிறைவு செய்த இலக்கண நூல்களுள் பிரயோக விவேகமும் ஒன்று.

பதிப்புகள்

  • ஆறுமுக நாவலர் பரிசோதித்த பிரயோகவிவேகவுரையின் பதிப்பொன்று சென்னை வித்தியானுபாலன யந்திரசாலையில் 1882-ல் அச்சிடப்பட்டது.
  • தி.வே. கோபாலையர் புதிய விளக்கக் குறிப்புகளுடனும், பின்னிணைப்புகளுடனும் பிரயோக விவேகவுரையை வெளியிட்டார்.

இணைப்புகள்


✅Finalised Page