under review

நாகூர் ரூமி

From Tamil Wiki
Rumi.jpg

நாகூர் ரூமி (ஏ. எஸ். முகம்மது ரஃபி (பிறப்பு: மார் 23, 1958) தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதிய எழுத்தாளர் மொழிபெயர்ப்பாளர். புதினம், வாழ்க்கை வரலாறு, ஆன்மிகம், சுயமேம்பாடு போன்ற பல துறைகளில் அவர் படைப்புகள் அமைந்தன. 'குட்டியாப்பா' குறிப்பிடத்தக்க படைப்பு.

பிறப்பு, கல்வி

ஏ. எஸ். முகம்மது ரஃபி நாகூரில் சாகுல் அமீது, சித்தி ஜெமீமா பேகம் இணையருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். நாகூரில் பள்ளிக் கல்வியை முடித்தார். திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். கம்பனையும் மில்டனையும் ஒப்பாய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.

முகம்மது ரஃபி வண்ணக் களஞ்சியப் புலவரின் வழிவந்தவர். அவரது பெரியம்மா சித்தி ஜுனைதா பேகம் தமிழின் முதல் இஸ்லாமிய எழுத்தாளர் என அறியப்பட்டவர். தாய்மாமன்கள் கவிஞர், பாடலாசிரியர், கலைமாமணி சலீம், எழுத்தாளர் தூயவன்(எம். எஸ். அக்பர்).

தனி வாழ்க்கை

ஆம்பூரில் மஸ்ஹரூல் உலும் கல்லூரியின் ஆங்கிலப் பேராசிரியராகவும் துறைத்தலைவராகவும் பணியாற்றினார் ரூமி. மாணவர்களுக்கான சுயமுன்னேற்றப் பயிற்சியரங்குகளிலும், ஆளுமைத்திறன் பயிற்சியரங்குகளிலும் மாணவர்களுக்குப் பயிற்சியளித்து வருகிறார். ஆல்ஃபா தியானப் பயிற்சியும் அளித்து வருகிறார்.

நாகூர் ரூமியின் மனைவி நஸிஹா, மூன்று மகள்கள்.

இலக்கிய வாழ்க்கை

நாகூர் ரூமியில் படைப்புகள் கவிதை, சிறுகதை, நாவல், கவிதை, மொழியாக்கங்கள், சூஃபி தத்துவம், ஆன்மிகம், வாழ்க்கை வரலாறு , சுய முன்னேற்றம் எனப் பல துறைகளில் 70-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.

1980-ல் கல்லூரியில் படிக்கும்போது நாகூர் ரூமியின் முதல் கட்டுரை 'தமிழ் சில வட்டங்கள்' கணையாழியில் வெளியானது. தொடர்ந்து கொல்லிப்பாவை, மீட்சி, மானுடம், சுபமங்களா போன்ற சிற்றிதழ்களிலும், குமுதம், விகடன் போன்ற வெகுஜன இதழ்களிலும் அவரது படைப்புகள் வெளிவந்தன. குமுதம்.காமில் எழுதிய 'கப்பலுக்குப் போன மச்சான்' பரந்த கவனத்தைப் பெற்றது.

நாகூர் ரூமியின் தலைசிறந்த படைப்பாகக் கருதப்படும் 'குட்டியாப்பா' சிறுகதைத் தொகுப்பு தி.ஜானகிராமன் விருதைப் பெற்றது. திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் தமிழ்த்துறையிலும் குட்டியாப்பா தொகுதியிலிருந்து பத்து கதைகள் தமிழிலக்கியம் பயிலும் மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டுள்ளன.

நாகூர் ரூமி ஆங்கிலத்திலும் நூல்கள் எழுதியிருக்கிரார். இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் பல விமர்சனக் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தினமணி டாட்.காமின் ஜங்ஷனில் இவர் எழுதிய ஆரோக்கியம் தொடர்பான கட்டுரைகள் 'நலம் நலமறிய ஆவல்' என்ற நூலாக தினமணியின் வெளியீடாக பிரசுரமானது.

நாகூர் ரூமியின் 'இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம்' இஸ்லாமிய மதத்தின் அடிப்படைகளின் அறிமுக நூல். 'அடுத்த வினாடி, 'இந்த விநாடி' , 'ஜாலியா ஜெயிக்கலாம் வாங்க ஸ்டூடண்ட்ஸ்', 'மேஜிக் ஏணி' ஆகியவை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக இவர் எழுதிய சுய முன்னேற்ற நூல்கள்.

மொழியாக்கம்

நாகூர் ரூமி வண்ணநிலவனின் 'மழை' சிறுகதையை 'The Rain' என்ற பெயரில் மொழியாக்கம் செய்தார். இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் பல கட்டுரைகள் எழுதினார். ஹோமரின் இலியட் காப்பியத்தை ஆங்கில மூலத்திலிருந்து தமிழில் மொழியாக்கம் செய்ததற்காக நல்லி திசை எட்டும் விருதைப் பெற்றார்.

விருதுகள், பரிசுகள்

  • திருப்பூர் தமிழ்ச்சங்க விருது, இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் நூலுக்காக, 2004
  • நல்லி திசையெட்டும் விருது, ஹோமரின் இலியட் காவிய மொழியாக்க விருது, 2009
  • இலக்கியச் சுடர் விருது, 2009
  • சிராஜுல் மில்லத் மதநல்லிணக்க விருது, 2017
  • சிறந்த கட்டுரையாளர், சுகி. சுப்ரமணியன் நூற்றாண்டு விருது, 2017.

இலக்கிய இடம்

"குட்டியாப்பா குறுநாவல் ஒரு மகத்தான சாதனை என்றே கருதத் தோன்றுகிறது. பாத்திரத் தேர்வு, சம்பவத் தேர்வு எவ்வளவுக்கெவ்வளவு இயல்பாகத் தோன்றுகிறதோ, அதே அளவு தனித்துவம் மிக்கது" என்று அசோகமித்திரன் குறிப்பிடுகிறார். இது நேஷனல் புக் ட்ரஸ்ட் இந்தியாவின் சிறுகதைத் தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது.

அ.ச. ஞானசம்பந்தன், மு. வரதராசனார் போன்றோரின் வரிசையில் மக்கள் விரும்பிய படைப்புகளைத் தந்த பேராசிரியர்களில் ஒருவராக நாகூர் ரூமி அறியப்படுகிறார்.

நூல்கள்

நாவல்கள்
  • கப்பலுக்குப் போன மச்சான் (நாவல், சந்தியா, சென்னை)
  • திராட்சைகளின் இதயம் (நாவல்,கிழக்கு மற்றும் சிக்ஸ்த்சென்ஸ், 2012, 2013, சென்னை)
  • தாயுமானவள்
சிறுகதைகள்
  • கதைகதையாம் காரணமாம்
  • குட்டியாப்பா (சிறுகதைகள், ஸ்நேகா, சென்னை)
  • திரௌபதியும் சாரங்கப் பறவையும் (சிறுகதைத் தொகுப்பு, சந்தியா, சென்னை).
  • நாகூர் ரூமி கதைகள்
அபுனைவு
  • அஞ்சுகறி சோறு
  • இந்திய சூஃபிக்கள் வரிசை நூல்கள்
  • உடல் என்னும் ஞானி
  • ஆல்ஃபா தியானம்
  • இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் (ஆன்மிகம், கிழக்கு, சென்னை)
  • அடுத்த விநாடி - 2007 (கிழக்கு, சென்னை. ஒலிப்புத்தகமாகவும் வந்துள்ளது).
  • ஜாலியா ஜெயிக்கலாம் வாங்க ஸ்டூடண்ட்ஸ் (மாணவர்களுக்கு)
  • காமராஜ்: கறுப்பு காந்தியின் வெள்ளை வாழ்க்கை (கிழக்கு, சென்னை)
  • கொல்லப் பிறந்த கொடுங்கோலன்
  • ஆல்ஃபா தியானம்
  • நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர்
  • மேஜிக் ஏணி, ப்ராடிஜி, சென்னை
  • முற்றாத புள்ளி
  • சொற்களின் சீனப்பெருஞ்சுவர்
  • சூஃபி வழி ஓர் எளிய அறிமுகம்
  • சூஃபி வழி இதயத்தின் மார்க்கம்
  • இலியட் (குழந்தைகளுக்கான காவிய அறிமுகம். ப்ராடிஜி, சென்னை)
  • HIV எய்ட்ஸ்
  • சொல்லாத சொல்
  • மென்மையான வாள்
  • ஸ்டீஃபன் ஹாகிங்: சக்கர நாற்காலியில் சிக்கிய பிரபஞ்சம்
  • முத்துக்கள் பத்து
  • மந்திரச்சாவி
  • வரலாறு படைத்த வரலாறு
  • மாற்றுச்சாவி
  • இந்த விநாடி
  • அதே வினாடி
  • நாகூர் நாயகம் அற்புத வரலாறு
  • வெற்றிக்கொடி கட்டு
  • கதைகதையாம் காரணமாம்
  • நலம் நலமறிய ஆவல்
  • சிலையும் நீ சிற்பியும் நீ
  • சின்ன மனசுக்குள் சீனப்பெருஞ்சுவர்
  • நபிமொழிக்கவிதைகள்
  • நிஜாமுத்தீன் அவ்லியா
  • குணங்குடி மஸ்தான் சாஹிப்
  • புறாக்கள் கட்டிய மாளிகை
  • நாகூர் ரூமி கதைகள்
  • இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம்
கவிதை
  • நதியின் கால்கள் (கவிதை, ஸ்நேகா, சென்னை)
  • ஏழாவது சுவை (கவிதைத் தொகுதி, சந்தியா, சென்னை)
மொழியாக்கங்கள்
  • உடல் மண்ணுக்கு (பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷர்ரஃபின் சுயசரிதம்): கிழக்கு, சென்னை.
  • இலியட் -- ஹோமரின் காவியம், கிழக்கு, சென்னை.
  • கவிஞானி ஜலாலுத்தீன் ரூமியின் கதைகள் கவிதைகள், சந்தியா, சென்னை.
  • உமர் கய்யாமின் ருபாயியாத், ஆரூத் புக்ஸ்,சென்னை.
  • கனவுகளின் விளக்கம், சிகமண்ட் ஃப்ராய்ட், ஸ்நேகா,சென்னை, அழகப்பர் பதிப்பகம், காரைக்குடி.
  • செல்வம் சேர்க்கும் விதிகள், ரிச்சர்ட் டெம்ப்ளர்(கிழக்கு, சென்னை, 2009), கிழக்கு. சென்னை
  • நம்மால் முடியும், பராக் ஒபாமாவின் The Audacity of Hope என்ற நூலின் தமிழாக்கம் (கிழக்கு, சென்னை, 2009)
  • என் பெயர் மாதவி, சுசித்ரா பட்டாச்சார்யாவின் வங்காளச் சிறுகதைகள் தமிழாக்கம் (அம்ருதா, சென்னை 2010)
  • இதயத்தை நோக்கித் திரும்புதல் (கிழக்கு, சென்னை, 2017)
ஆங்கில நூல்கள்
  • HIDAYATUL ANAM (From Tamil to English)
  • The cat and the sea of milk(A Comparative Study of Kamban and Milton)
  • Value education (A Text-book for UG First Year Students of Thiruvalluvar University, Vellore, Pub. Kathavugal, Chennai, 2009)
  • YOU ARE YOUR FUTURE (Karaikudi Alagappar Pathippagam, 2012)
  • Alpha Meditation An Introduction (Sixthsense Publications, Chennai, 2012)
  • The Ocean of Miracles: Life of Qadir Wali of Nagore (Kathavugal Publications, Chennai, 2014)
  • Prabakaran Entry and Exit (Translation from Tamil), Amazon
  • Prophetic Traditions in Verse, Select Ahadith in the form of simple English poems, Pub. Sixthsense, Chennai, 2019)
  • You are Your Fortune, Amazon.

உசாத்துணை


✅Finalised Page