under review

நாகபிரகாஷ்

From Tamil Wiki
நாகபிரகாஷ்

நாகபிரகாஷ் (பிறப்பு: ஜூன் 1997) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர், சிறுகதையாசிரியர். தொடர்ந்து சிறுகதைகள் எழுதி வருகிறார்.

பிறப்பு, கல்வி

நாகபிரகாஷ் சேலம் மாவட்டத்தில் ஜூன் 1997-ல் வெங்கடேசன், சுகவனேஷ்வரி இணையருக்குப் பிறந்தார். எட்டாம் வகுப்பில் பள்ளிப்படிப்பு இடைநின்றதால், முழுநேர வேலைக்குச் சென்றார். பைத்தான் நிரலாக்கம், பகுப்பாய்வு முறைகள், அடிப்படை புள்ளியியல் போன்ற இணைய சான்றிதழ் படிப்புகளைப் படித்தார். இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் மூலம் பொது மேலாண்மையில் இளங்கலைப் பட்டம் பெற்றார். அமெரிக்காவின் எம்.ஐ.டி வழங்கும் 'மைக்ரோ மாஸ்டர்ஸ்' (MicroMasters) பட்டயப்படிப்பை முடித்தார்.

தனிவாழ்க்கை

நாகபிரகாஷ் வெள்ளிக் கொலுசுப் பட்டறைகளில் இரண்டு வருடங்கள் வேலை பார்த்தார். இணைய முகவங்களிலும் (Internet profile) தகவல் பதிவிலும்(data entry) பணியாற்றினார். பத்தொன்பது வயதிலிருந்து தனியார் நிறுவனத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணி செய்து வருகிறார். தகவல் தர ஆய்வாளராக உள்ளார்.

நாகபிரகாஷ் ஆரதி கிருஷ்ணாவை 2021-ல் மணந்து கொண்டார்.

எரி சிறுகதைத் தொகுப்பு

இலக்கிய வாழ்க்கை

நாகபிரகாஷின் முதல் முதல் சிறுகதை 'என் வீடு' மார்ச் 2016-ல் கணையாழியில் வெளியானது. முதல் தொகுப்பு 'எரி' யாவரும் பதிப்பக வெளியீடாக ஜனவரி 2020-ல் வெளியானது. வலைதளத்திலும், இதழ்களிலும் சிறுகதைகள், கவிதைகள், நூல் விமர்சனங்கள், பயணக்கட்டுரைகள் தொடர்ந்து எழுதி வருகிறார். ஆதர்ச எழுத்தாளராக அசோகமித்திரன், ஜெயமோகன், கு. அழகிரிசாமி ஆகியோரைக் குறிப்பிடுகிறார்.

இலக்கிய இடம்

"நாகபிரகாஷின் இத்தொகுப்பிலுள்ள கதைகளின் சரடாக அமைந்திப்பது சிறுவர்களின் உலகம். இளமையில் உழைக்க நேர்ந்தவர்களின் மனக்கோலங்களும் அவற்றின் வெவ்வேறு திரிபுகளுமே கதைகளாக அனுபவமாகியுள்ளன." என எழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணன் 'எரி' சிறுகதைத் தொகுப்பை மதிப்பிடுகிறார்.

நூல் பட்டியல்

  • எரி (சிறுகதைகள் தொகுப்பு)

வெளி இணைப்புகள்


✅Finalised Page