under review

தாழம்பூ (கையெழுத்து இதழ்)

From Tamil Wiki
தாழம்பூ - கையெழுத்து இதழ்

தாழம்பூ, 1977-ல் தொடங்கி இன்றளவும் வெளிவந்து கொண்டிருக்கும் கையெழுத்து இதழ். இதன் ஆசிரியர் எம்.எஸ். கோவிந்தராசன். முதல்பக்கம் தொடங்கி இறுதிப் பக்கம் வரை ஓவியங்கள், ஒளிப்படங்கள் மற்றும் செய்திக் குறிப்புகளுடன் முழுக்க முழுக்க கையெழுத்து வடிவிலேயே இவ்விதழ் வெளியாகிறது.

பிரசுரம், வெளியீடு

தாழம்பூ, 1977-ம் ஆண்டில், பாரம்பரிய சித்த மருத்துவரான எம்.எஸ். கோவிந்தராசனால் தொடங்கப்பட்டது. முழுக்க முழுக்கக் கையெழுத்து வடிவிலேயே இதழைக் கொண்டு வருவது என்னும் லட்சிய நோக்கில் இன்றளவும் கையெழுத்து வடிவிலேயே வெளிவருகிறது. ஆரம்பத்தில் மாத இதழாக வெளிவந்து கொண்டிருந்த தாழம்பூ, தற்போது இரு மாத இதழாக வெளிவருகிறது.

32 பக்கங்களைக் கொண்ட இக்கையெழுத்து இதழ், இதன் 150-க்கும் மேற்பட்ட சந்தாதார்களுக்கு, அஞ்சல் மூலம் அனுப்பப்படுகிறது. இவ்விதழின் ஆண்டுச் சந்தா ரூ.150/-

எம்.எஸ். கோவிந்தராசன் (படம் நன்றி: தினமணி)

இதழின் வரலாறு

தாழம்பூ இதழின் ஆசிரியர் எம்.எஸ். கோவிந்தராசன். புதுக்கோட்டை அறந்தாங்கி அருகே உள்ள வடக்கு விஜயபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர். பள்ளி, மற்றும் கல்லூரியில் படிக்கும்போதே கையெழுத்து இதழ்களை நடத்தினார். புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் பி.யு.சி. வரை படித்தார். ஓவிய ஆசிரியர் பயிற்சியை நிறைவு செய்தார். இலக்கிய ஆர்வத்தால். 1977-ல் ‘தாழம்பூ’ இதழைத் தொடங்கினார். முதல் கையெழுத்து இதழை கார்பன் தாள்களை வைத்து நகலெடுத்து வெளியிட்டார். இதழுக்கு பிலிப்பைன்ஸ் தமிழ் வானொலி மூலம் பாராட்டு கிடைத்தது. தொடர்ந்து வாசக வரவேற்பு கிடைத்ததால், மாத இதழாக வெளியிடத் தொடங்கினார். கார்பன் பிரதிகளைக் கொண்டு நகலெப்பதற்குப் பதிலாக ‘நகலச்சு’ (XEROX) மூலம் பல பிரதிகளைத் தயாரித்து வெளியிட்டார்.

நூறாவது இதழை மட்டும் கணினி அச்சு மூலம் தயாரித்து வெளியிட்டார். பொருளாதாரப் பிரச்சனைகளால் மீண்டும் கையெழுத்து இதழாகவே நடத்தினார். நடுவில் சிலகாலம் இதழ் வெளியீடு எம்.எஸ். கோவிந்தராசனின் உடல் நலப் பிரச்சனைகளால் தடைப்பட்டது என்றாலும் மீண்டும் நடத்தினார் அக்டோபர் 2023 வரை 398 இதழ்கள் வெளியாகியுள்ளன. அனைத்துமே எம்.எஸ். கோவிந்தராசன், தன் கைப்பட எழுதி, நகலெடுக்கப்பட்டவை. நகல் எடுப்பது, அஞ்சல், கூரியர் தபாலில் சேர்ப்பது, பிரதி எடுப்பது போன்ற வேலைகளில் எம்.எஸ். கோவிந்தராசனின் மனைவி மாதவியும் உதவுகிறார்.

தாழம்பூ இதழ் 2022
இதழின் உள்ளடக்கம்

உள்ளடக்கம்

தாழம்பூ இதழில், தமிழ்நாடு மட்டுமின்றி வெளிநாட்டைச் சேர்ந்த தமிழர்களின் படைப்புகளும் வெளியாகின்றன. கவிதை, கதை, கட்டுரை, நேர்காணல், சிறப்புக் கட்டுரைகள், நூல் விமர்சனம், துணுக்குகள், கலை, இலக்கியம் சார்ந்த பதிவுகள் இவ்விதழில் வெளியாகின்றன. பிற இதழ்களில் வெளியான செய்திகளும் இவ்விதழில் எடுத்தாளப்பட்டுள்ளன.

தாழம்பூ இதழ், அறிமுகக் கவிஞர்கள் பலரது படைப்புகளை வெளியிட்டு ஊக்குவிக்கிறது. தீபாவளி, பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு, மகளிர் தினம் போன்ற நிகழ்வுகளின்போது சிறப்பு மலர்களை வெளியிடுகிது. கவிஞர்கள், சான்றோர்கள், சாதனையாளர்களின் பிறந்தநாள் மற்றும் நினைவுநாட்களின் போது அவர்களைக் குறித்த விரிவான செய்திகள் அடங்கிய சிறப்பிதழ்களை வெளியிடுகிறது.

இதழுக்கு வாசகர்கள் படைப்புகளைத் தட்டச்சி அனுப்பினாலும் முழுக்க முழுக்க அவை எம்.எஸ். கோவிந்தராசனால் மீண்டும் எழுதப்பட்டு அவரது கையெழுத்தில் வெளியாகின்றன. தேவையான ஒளிப்படங்கள், ஓவியங்கள் ஆகியன ஆங்காங்கே பயன்படுத்தப்படுகின்றன. முகப்பில் நேர்காணல் செய்யப்படுவர்களின் ஒளிப்படங்கள், அல்லது சிறப்பிதழாளர்களின் படங்கள் இடம்பெறுகின்றன. மு. மேத்தா, வல்லிக் கண்ணன், என்.சி. மோகன்தாஸ், ரபிபெர்னாடின் தந்தை எம்.ஏ. சுவாமி, பாகிஸ்தான் வானொலி அறிவிப்பாளார் அமீர்பாட்ஷா உள்ளிட்ட பலரது நேர்காணல்கள் தாழம்பூ இதழில் இடம்பெற்றன.

தாழம்பூ இதழை, அப்துல்கலாம், மேனாள் தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா, மன்னர்மன்னன் (பாரதிதாசனின் மகன்), வ.உ.சி. வாலேஸ்வரன், (வ.உ.சிதம்பரம் பிள்ளையின் புதல்வர்) மணிமேகலை குப்புசாமி (பாரதிதாசனின் பேத்தி), ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர் உள்ள்ட பலர் பாராட்டி ஊக்குவித்தனர்.

கவிஞர் சோலச்சி, புதுகை பி. வெங்கட்ராமன், புதுகை மு. தருமராசன், பாவலர் கருமலைப் பழம் நீ, மா. தனசேகரன், வீர. மணிகண்டன் உள்பட பலரது படைப்புகள் இவ்விதழில் வெளியாகின. தாழம்பூ கையெழுத்து இதழ் குறித்து மோகனா மற்றும் சந்திரசேகர் முனைவர் பட்டத்துக்காக ஆய்வு செய்தனர்.

விருதுகள்/பரிசுகள்

  • கன்னியாகுமரி 'உதய தாரகை' தமிழ்க் கழகம் அளித்த சிறந்த கையெழுத்து இதழ் பரிசு (1999 - 2001)
  • கோவை தமிழ்ச் சிற்றிதழ்ச் சங்கம் அளித்த சிறந்த சிற்றிதழ் விருது (2000)

மதிப்பீடு

இலக்கியச் சிற்றிதழ்கள் அச்சு, இணையம், பி.டி.எஃப்., ஆண்ட்ராய்ட், கிண்டில் என்று புதுப்புது வடிவங்கள் எடுத்துவிட்ட நிலையில் இன்றளவும், இலக்கிய ஆர்வத்தால், கையெழுத்து இதழாகவே ‘தாழம்பூ’ இதழை வெளியிட்டு வருகிறார், எம்.எஸ். கோவிந்தராசன். தமிழில் நாற்பது வருடங்களுக்கும் மேலாக, வெளிவந்துகொண்டிருக்கும் இலக்கியப் பல்சுவைக் கையெழுத்து இதழாக ‘தாழம்பூ’ இதழ் அறியப்படுகிறது.

உசாத்துணை


✅Finalised Page