தாரகைமாலை
தாரகைமாலை தமிழ்ச் சிற்றிலக்கியங்களின் வகைமைகளில் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். தாரகைமாலை குறித்து இரண்டு வகையான இலக்கணங்கள் பாட்டியல் நூல்களில் காணப்படுகின்றன. தாரகை என்றால் விண்மீன் என்று பொருள்படும்.
அசுவினி முதல் ரேவதி வரையான இருபத்தேழு நட்சத்திரங்களின் சிறப்புக்களைக் கூறுவது தாரகைமாலை என்று பிரபந்த மரபியல் கூறுகிறது.
தாரகை இருபத் தேழையும் தகைபெற
சொல்லணி வகுப்பில் தூசி அணிதக
வழுத்துதல் தாரகை மாலை என்ப
- பிரபந்த மரபியல் 36
அருந்ததியை ஒத்த மகளிரின் கற்பின் சிறப்புப் பற்றிப் பாடுவது தாரகைமாலை என இலக்கண விளக்கம் கூறுகிறது.
வகுப்பால் கற்புடை மகளிர்க்கு உள்ள
தகைத்திறம் கூறுதல் தாரகை மாலை
இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 867
வெண்பாப் பாட்டியல் தாரகை மாலையின் பாடுபொருள், யாப்பு வகை ஆகியன குறித்துத் தெளிவுபடுத்துகிறது.
ஓதுசந்தத் தாலுரைத்தல் ஒண்தா ரகைமாலை
கோதிலாக் கற்பிற் குலமகளை - நீதிசேர்.
மங்கல வள்ளை வகுப்பொடு வெண்பாவால்
'இங்காமொன் பானென் றிசை - வெண்பாப் பாட்டியல் - 54
உசாத்துணை
- நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்
- கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், திருவையாறு.
- சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), முத்துவீரியம்
இணைப்புகள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
05-Jun-2023, 09:33:14 IST