தக்கயாகப் பரணி
- பரணி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: பரணி (பெயர் பட்டியல்)
தக்கயாகப் பரணி(பொ.யு.12-ம் நூற்றாண்டு) ஒட்டக்கூத்தர் சிவபெருமானைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு இயற்றிய பரணி நூல். சிவபெருமானின் கட்டளைப்படி வீரபத்திரர் தக்ஷனின்(தக்கன்) யாகத்தைஅழித்து அவனை வென்றதைப் பாடும் பரணி.
பதிப்பு, வரலாறு
உ.வே. சாமிநாதையர் தருமபுர ஆதீனமடத்துப் புத்தகசாலையிலுள்ள பல புத்தகங்களுள் தக்கயாகப்பரணியின் உரைப்பிரதியைக் கண்டெடுத்தார். பின்பு சென்னைத் தங்கசாலைத் தெருவிலிருந்த திருத்தணிகைச் சரவணப் பெருமாளையரின் பரம்பரையின ராகிய குருசாமி ஐயரென்பவருடைய வீட்டிலிருந்த சுவடிகளில் இவ்வுரையின் வேறு சில பகுதிகள் கிடைத்தன. அதன்பின் கிடைத்த மூலப்பிரதிகளையும் ஒப்புநோக்கி பிழைதிருத்தி பாடபேதங்கள், குறிப்புரையுடன் உ.வே. சா தக்கயாகப்பரணி நூலை ஜனவரி 1930-ல் பதிப்பித்தார்.
ஆசிரியர்
தக்கயாகப் பரணியை இயற்றியவர் ஒட்டக்கூத்தர். விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராஜராஜன் ஆகிய மூன்று சோழ மன்னர்களுக்கும் அவைப் புலவராகவும், அமைச்சராகவும் பணியாற்றியவர்.
பெயர்க்காரணம்
சிவபெருமானை அவமதிக்கும் பொருட்டு அவரை அழைக்காமல் தக்ஷன் யாகம் செய்தபோது சிவன் அந்த யாகத்தை அழித்து தக்ஷனை வென்ற கதையைப் பாடுவதால இது தக்கயாகப் பரணி எனப் பெயர் பெற்றது.
ஒரு நூலை எழுதச் சொல்லி, புலவர் எழுதுவதற்கு உதவி செய்பவன் ஆக்குவித்தோன் எனப்படுகிறான். தக்கயாகப் பரணியை எழுதச் சொல்லி ஒட்டக்கூத்தருக்கு உதவிய அரசன் இரண்டாம் இராசராசன்.
நூல் அமைப்பு
இந்த நூலில் உள்ள தக்கனின் யாகத்தைச் சிவபெருமான் அழித்த கதை எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. ஆனால் வட மொழியில் உள்ள சிவ மகாபுராணம் போன்ற நூல்களில் உள்ள தக்கயாக சங்காரக் கதையிலிருந்து இது வேறுபட்டுள்ளது என்று அறிஞர்கள் கூறுகின்றனர். சிவபெருமானின் கட்டளைப்படி வீரபத்திரன் யாகத்தை அழித்ததால், வீரப்த்திரனே இந்நூலின் பாட்டுடைத் தலைவன் எனக் கொள்வோரும் உண்டு.
தக்கயாகப் பரணி என்று ஒட்டக்கூத்தரால் இயற்றப் பட்ட இப்பரணி, தாட்சாயணி (உமாதேவி)யின் தந்தை தக்கன், சிவபெருமானை மதிக்காமல், அவரை அவமதிக்கும் நோக்கில் செய்யப் புகுந்த யாகத்தைச் சிவபெருமான் வீரபத்திரக் கடவுளைத் தோற்றுவித்து, அவரைக் கொண்டு அந்த யாகத்தை அழித்து, தக்கனுக்கு உதவ வந்த தேவர்களுடன் போரிட்டு தக்கனுடைய தலையையும் துண்டித்த புராணக் கதையை காப்பிய நயம்பட விளக்குகின்றது.
தக்கயாகப் பரணி பதினோரு பகுதிகளும் 814 தாழிசைகளும் கொண்டது. கலிங்கத்துப் பரணியில் காணப் பெறும் இந்திரசாலம், இராசப் பாரம்பரியம், அவதாரம் போன்றவை தக்கயாகப் பரணியில் இல்லை.
முதலாம் குலோத்துங்க சோழனைப் பாடியது கலிங்கத்துப் பரணி எனில் இரண்டாம் இராசராசனைப் பாடுவது தக்கயாகப் பரணி. இரண்டாம் ராசராசன் இரண்டாம் குலோத்துங்கன் மகன். பரணியும் உலாவும் பெற்ற ஒரே சோழன்.
தாட்சாயணி தனது தந்தையுடன் செய்யும் வாதம், தக்கனிடம் தோற்றுப் போய் அவள் சிவனிடம் சென்று முறையிட்டால், சினந்த சிவன் தக்கனின் தருக்கு அடக்க வீரபத்ரனைப் படைத்தல், வீரபத்திரன் தக்கனுடன் போர் செய்தல் எனத் தக்கயாகப் பரணி நீள்கிறது. போரில் தேவர் படைகளுடன் தேவேந்திரனும் பேய்ப் படைகளுடன் வீரபத்திரனும் போரிடும் வீரம் பேசப்படுகிறது. தேவியின் படைகளின் போர்த்திறமும் பாடப்படுகிறது. இறுதியாக இந்திரன் தன் முதன்மையான வலிய ஆயுதமாகிய வச்சிராயுதத்தை ஏவ, வீரபத்திரனது திரிசூலம் அதை எரித்துச் சாம்பலாக்குகிறது.
கடவுள் வாழ்த்து
இதில் வைரவக்கடவுள். காப்பு, உமைபாகர் வாழ்த்து, ஆளுடைய பிள்ளையார் வாழ்த்து ஆகியவை இடம்பெறுகின்றன. விநாயகக் கடவுள் காப்பு இல்லாமல் வைரவக் கடவுள் காப்புடன் நூல் தொடங்குகிறது. திருஞான சம்பந்தர் சமணரை வாதில்வென்ற வரலாறும் கூறப்படுகிறது. ஒன்பதாம் தாழிசையில் பொதுவியல் முறையில் சோழனுக்கு வாழ்த்து கூறப்படுகிறது.
கடை திறப்பு
கடைதிறப்பில் வீரபத்திதேவருடைய வெற்றியைப் பாடுதற்குப் பலவகை மகளிரைக் கதவு திறக்கும்படி விளித்தல் கூறப்படுகின்றது; தேவியின் அடியார்களாகிய பெண்கள், தேவமங்கையர், உருத்திரகணிகையர், இராசராசபுரத்து பெண்கள், வித்தியாதர மகளிர், நீரரமகளிர், நாககன்னியர், சக்கரவாளம், மேரு போன்ற மலைகளில் வாழும் பெண்கள் ஆகியோரை விளித்து தக்கயாக சங்காரத்தில்(அழிப்பு) தேவர்கள் தோற்ற செய்தியைப் பாடுவதற்காகக் கடைதிறமின்' எனக் கூறப்படுகிறது.
காடு பாடியது
காடுபாடியதில் தேவி கோயில்கொண்ட பாலைவனத்தின் வெம்மை, வாமமார்க்கத்தாருடைய செயல்கள், யோகினிகள், காளியின் கோயிலைச் சூழ்ந்த சோலைகள், பைரவர்களின் செயல்கள் முதலியன கூறப்படுகின்றன.
தேவியைப் பாடியது
காளியின் பெருமையும் அவளது பூசைக்குரிய திரவியங்களும் விரித்துச் சொல்லப்படுகின் றன.
பேய்களைப் பாடியது
பேய்களைப்பாடியதில் பேய்களின் உருவமும் அவற்றின் பசிமிகுதியும் விளங்கக் கூறப்படுகின்றன,
கோயிலைப் பாடியது
கோயிலைப்பாடியதில் காளிக்குரியனவாக கோயில், ஆலமரம், ஆதிசேடன், பஞ்சாயுதங்கள் முதலியவற்றின் பெருமைகள் கூறப்படுகின்றன. பின்பு காளி நாமகளை விளித்து முருகக்கடவுள் ஆளுடையபிள்ளையாகி( திருஞான சம்பந்தர்) வந்து சமணரை வாதில் வென்ற கதையைக் கூறும்படி கட்டளையிட அவ்வாறே கலைமகள் கூறுவதாக ஆளுடையபிள்ளையாருடைய சரித்திரப் பகுதி கூறப்படுகின்றது.
பேய்முறைப்பாடு
பேய் முறைப்பாட்டில் பேய்கள் தம்முடைய குறைகளைக் கூறி முறையிடுகின்றன.“அம்மே, உணவளிக்க வாய்த்த சமயங்களிலெல்லாம் உன்னுடைய கணவர் எங்களை ஏமாற்றிவிட்டார்.; நீ வேண்டிய பொருள்களை உன்பிள்ளைகளுக்குமட்டும் தடையின்றி அருளுகின்றாய். பண்டைக்காலத்தில் நடந்தபெரும் போரில் நாங்கள் பசி தீர உண்டு வாழ்ந்தோம்; இப்போது பசியால் உலர்ந்து வாடுகிறோம்" என்று முறையிட்டுத் தாம் கண்ட கனாக்களைக் கூறிக்கொண்டிருக்கையில், தக்கன் யாகத்தை அழிப்பதற்குப்போன பூதகணக்களோடு முன்பு சென்றிருந்த பேயொன்று ஓடிவந்து, "உணவு உள்ளது, என்னுடன் வருக" என அழைத்துவிட்டு உணவின் ஆசையால் யாக சாலைக்கு விரைந்தோடக் காளி அதனைப் பிடித்துவரச்செய்து தேவர்கள் தக்கன்யாகத்தில் அழிந்த வரலாற்றைக் கூறும்படி கட்டளையிட பேயும் அவ்வரலாற்றைச் சொல்லத் தொடங்குகிறது.
காளிக்கு கூளி கூறியது
காளிக்குக் கூளி கூறியதில் தக்கன் சிவபெருமானை மதிக்காமல் வேதவிதிக்கு மாறாக யாகம் செய்யத் தொடங்கியதும், அங்கு வந்த தாக்ஷாயணி தக்கனால் அவமதிக்கப் பெற்றதும் அவள் சினந்துசென்றதும் அதையறிந்த சிவபெருமான் வீரபத்திரக்கடவுளை வருவித்து அவ்வேள்வியை அழிக்கும்படி அனுப்பியதும், அவர் அங்கனமே பூதகணங்களுடன் சென்று தக்கனுக்கு உதவிசெய்வதற்கு வந்த தேவர்களுடன் போர்செய்து கொன்று யாகத்தைச் சிதைத்ததும், இறந்த தேவர்கள் பேயானதும் மிக விரிவாகக் கூறப்படுகின்றன.
கூழடுதலும் இடுதலும்
இப்பகுதியில் கதையைக்கேட்ட காளி யாகசாலைசென்று கூடும்படி. பேய்களுக்குக் கட்டளையிடுதலும், அவ்வாறே பேய்கள் அக்களத்தில் இறந்தவர்களுடைய தசைமுதலியவற்றைக் கொண்டு கூழ்சமைத்துக் காளிக்குப் படைத்து, பிறபேய்களுக்கு இட்டுத் தாமும் உண்டுகளித்தபின் இரண்டாம் இராசராசனுடைய முன்னோர்களையும் அவனையும் வாழ்த்துதலும் கூறப்படுகின்றன.
களங்காட்டல்
சிவபெருமான் அம்பிகையோடு எழுந்தருளிப் போர்க்களத்தில் இருந்த பேய்களைச் சுட்டிக்காட்டி இறந்த இன்ன தேவர் இன்னபேயாக ஆயினரென்று சுட்டிக்காட்டதேவி அவர்கள்மேல் கொண்டிருந்த கோபம் தணிந்தருள வேண்டுமென்று சிவபெருமானை வேண்டுதலும், அவர் இரங்கித் தம்மை இகழ்ந்த தக்கனுக்கு ஆட்டின் தலையையும் உயிரையும் ஏனைய தேவர்களுக்கு உயிரையும் உரியபதவிகளையும் அளித்ததும், அவர்கள் அவற்றைப்பெற்று வலம் வந்து வணங்கி வீரபத்திரதேவரை வாழ்த்தித் தத்தம் இடம் செல்லுதலும் கூறப்படுகின்றன.
வாழ்த்து
இதில் நூலாசிரியர் தம்மை ஆதரித்தவர்களுள் ஒருவனும் இந்நூலைச் செய்வித்தோனுமாகிய இராசராச சோழனையும் பிறரையும் வாழ்த்துதல் காணப்படுகின்றது. இப் பகுதியின் ஈற்றிலுள்ள மூன்று தாழிசைகளால் உறையூரையும் காவிரியையும் திருமகள் கலைமகள் முதலியோரையும் தமிழையும் ஆசிரியர் வாழ்த்துகின்றார்.
மற்ற பரணிகளிடமிருந்து வேறுபாடுகள்
- மற்றப் பரணிகளைப்போலப் பாட்டுடைத் தலைவனுக்கு நன்மை உண்டாக வேண்டுமென்று வாழ்த்தாமல் ஆக்குவித்தோனுக்கு நன்மை உண்டாகும்படி. தெய்வங்களை வேண்டுதல்
- உமாபாகர், விநாயகர், முருகக்கடவுள், திருஞான சம்பந்தர் இவர்களை மட்டும் வாழ்த்தியிருத்தல்.
- நூலுறுப்புக்களின் பிறழ்ச்சி,
- காடுபாடியது முதலியவற்றில் யாமளநூலின் முறைப்படி வர்ணித்தல்
- சைவத்தின் ஏற்றம் புலப்படும்படி திருஞானசம்பந்தர் சமணரை வென்ற கதையைத் தேவிக்கு நாமகள் கூறியதாகப் பாடியிருத்தல்
- கூழடுதலென்னும் உறுப்பில் பேய்கள் கூழைக் குடித்து பாட்டுடைத் தலைவனை வாழ்த்தாமல் இக்தூலை ஆக்குவிக்த இராசராச சோழனையும் அவன் முன்னோர்களையும் அவர்களுடைய நற்செய்கைகளையும் வாழ்த்தல்
- களங்காட்டுதலில் காளி பேய்களுக்குக் களங்காட்டியதாகச் கூறுவது போலன்றிக் கதைத் தொடர்பு புலப்படத் தேவிக்குச் சிவபெருமான் காட்டியதாகப் பாடியிருப்பது
- ஆக்குவித்தோனை நூலின் இறுதியில் வாழ்த்தல்
வரலாற்றுச் செய்திகள்
தக்கயாகப்பரணியில் இடம்பெறும் வரலாற்றுச் செய்திகளில் சில
- இராசகம்பீரன் (இரண்டாம் இராசசாசன்) பிரட்டனை வென்று இரட்ட.னுக்குப் பட்டம் கட்டியது
- இராசராசபுரி பல அரசர்களால் காக்கப்பட்டது
- இராசராசன் தில்லைத்தலத்தில் தேர்அமைத்தது, பாண்டியரை வெல்லப் படைவிடுத்தது
- ராசராசன் மலையை வெட்டிப் பொன்னி நதிக்கு வழி கண்டது, அவன் வஞ்சியில் வாகை சூடியது
- பொற்கைப் பாண்டியன் பற்றிய குறிப்பு
- ;காவிரிப்பூம்பட்டினத்தார் கட்டாணம் வல்லவனை நடைகொண்டது
- குலோத்துங்கன் தில்லையில் ஏழ்நிலைக் கோபுரம் அமைத்தது, ஆனிரையையும் யானைகளையும் வழங்கியது
- குலோத்துங்கன் மாக்கோதை மற்றும் பாண்டியன்மேல் படையெடுத்துச் சென்றது
- விக்கிரமசோழன் கலிங்கரைவென்று பரணி கொண்டது
பாடப்பட்ட ஊர்கள்
இராசராசபுரி, உறையூர், காஞ்சீபுரம், காவிரிப்பூம்பட்டினம், கோழி(உறையூர்), தில்லை, மாக்கோதை, மதுரை, வஞ்சி,
பாடல் நடை
வைரவர் காப்பு
உரக கங்கணம் தருவன பணமணி
உலகடங்கலும் துயிலெழ வெயிலெழ
உடை தவிர்ந்ததன் திரு அரை உடை மணி
உலவி ஒன்றோடொன்று அலமார விலகிய
கரதலம் தரும் தமருக சதிபொதி
கழல் புனைந்த செம்பரிபுர ஒலியொடு
கலகலன் கலன்கலன் என வருமொரு
கரிய கஞ்சுகள் கழலினை கருதுவாம்
கடை திறப்பு
உருகுவார் உயிர்படு படா முலை
உழறு மேல் உலகிலும் எனத்
திருகுவார் முசிவிசி விடாதவர்
திறமினோ! கடை திறமினோ!
எளிவரும் கொழுநர் புயமும் நுங்கள் இரு
குயமும் மண்டி எதிர் எதிர் விழுந்து
எளிவரும் கலவி புலவிபோல் இனிய
தெய்வ மாதர்! கடை திறமினோ!
பேய் முறைப்பாடு
வையம் உண்ணோம்; கடல் மடோம்
மற்றும் புவனம் முற்றும் போய்
ஐயம் உண்ணோம்; கடல் நஞ்சு
குடியோம் உங்கள் அடியோமே!
கார்மலையச் சந்தனமும் வட இமயக் கார் அகிலும்
போர் மலையக் கடவதொரு பிள்ளைக்கும் போக்கினையே!
எப்பயிறும் எக்கனியும் எக்கிழங்கும் எத்தேனும்
தொப்பை ஒரு பெருவயிற்றுப் பிள்ளைக்குச் சுமத்துதியே!
மிக்கள்ளும் கறி அநந்தமிடாப் பலவும் தடாப்பலவும்
எக்கள்ளும் ஒரு பிள்ளை மருந்தாட எடுக்குதியே!
வாழ்த்து
இறைவாழி, தரை வாழி, நிரை வாழி
இயல்வாழி, இசை வாழியே!
மறைவாழி, மனுவாழி, மதிவாழி,
ரவி வாழி, மழை வாழியே!
வாழி தமிழ்ச் சொல் தெரிந்த நூல் துறை;
வாழி தமிழ்க் கொத்து அனைத்து மார்க்கமும்;
வாழி திசைக்கு அப்புரத்து நாற்கவி
வாழி கவிச்சக்ரவர்த்தி கூத்தனே
உசாத்துணை
- தக்கயாகப்பரணி உரை -உ.வே.சாமிநாதையர் குறிப்புரையுடன், தமிழ் இணைய கல்விக்கழகம்
- சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள்- தக்கயாகப் பரணி- நாஞ்சில்நாடன் சொல்வனம் ஏப்ரல் 2012
- ஒட்டக்கூத்தர் பாடிய தக்கயாகப் பரணி-வளவ துரையன், திண்ணை மார்ச் 2020
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
08-Jun-2024, 10:02:05 IST