under review

ஜே.பி.சந்திரபாபு

From Tamil Wiki
சந்திரபாபு
சந்திரபாபு
சந்திரபாபு- ஷீலா
சந்திரபாபு- சிவாஜி கணேசன்
சந்திரபாபு- எம்.ஜி.ஆர்
சந்திரபாபு கல்லறை

ஜே.பி. சந்திரபாபு (ஆகஸ்ட் 5,1927 - மார்ச் 8, 1974 ) தமிழ் திரைப்பட நடிகர். பாடகர். நடனக்கலைஞர். தமிழில் நகைச்சுவை நடிப்பில் மேற்கத்திய பாணியை அறிமுகம் செய்தவர். தன் தனிவாழ்க்கையால் சந்திரபாபு தமிழில் ஒரு கலாச்சார அடையாளமாகவும் நவீனத்தொன்மமாகவும் கருதப்படுகிறார்.

பிறப்பு, கல்வி

சந்திரபாபு ஆகஸ்ட் 5, 1927 அன்று சுதந்திரப்போராட்ட தியாகியும், காங்கிரஸ் செயல்வீரரும், இதழாளருமான ஜே.பி.ரோட்ரிக்ஸ் ஃ பெர்னாண்டோவுக்கும் சுதந்திரப்போராட்ட வீராங்கனையும், கள்ளுக்கடை மறியல் போராளியுமான ரோஸ்லின் ஃபெர்னாண்டோவுக்கும் தூத்துக்குடியில் பதிமூன்று குழந்தைகளில் ஆறாவதாக பிறந்தார். சந்திரபாபுவின் இயற்பெயர் ஜோசப் பிச்சை பனிமயதாசன். உடன்பிறந்தவர்கள் கிளாஸ்டன், மாணிக்கம்மாள், சத்யா, நெப்போலியன், துரைராஜ், ஏஞ்சலின், ராஜம், ஜவகர், ஜோதி, நோபிள், ரவி, பெஞ்சமின். சந்திரபாபு பரதவர் குடியில் சந்திரகுலத்தில் பிறந்தவர், வீட்டுப்பெயர் பாபு. ஆகவே பின்னாளில் தன் பெயரை சந்திரபாபு என மாற்றிக்கொண்டார்.

தூத்துக்குடியில் அச்சகமும், சுதந்திரவீரன் என்னும் இதழும் நடத்திவந்தார் ரோட்ரிக்ஸ். தூத்துக்குடியில் சந்திரபாபு ஆரம்பக் கல்வி பயின்றார். 1939-ல் ரோட்ரிக்ஸ் உப்புசத்யாக்கிரகத்தில் கலந்துகொண்டமைக்காகச் சிறை சென்றார். விடுதலைக்குப்பின் அவர் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டார். சந்திரபாபு அவருடன் இலங்கைக்குச் சென்றார்.

இலங்கையில் ரோட்ரிக்ஸ் 'காலச்சக்கரம்' என்னும் வார இதழை தொடங்கி நடத்தினார். சந்திரபாபு கொழும்பு செயிண்ட் ஜோசப் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து சீனியர் கேம்பிரிட்ஜ் வரை பயின்றார். ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் நன்றாக உரையாடுவார். இலங்கையில் சந்திரபாபு மேலையிசைப் பயிற்சியையும் பெற்றார். பைலோ பாடல்களில் ஈடுபாடு உருவாகியது. அந்த தாக்கம் இறுதிவரை அவருடைய பாடல்களில் இருந்தது.

1942-ல் இலங்கையில் உலகப்போரின் நெருக்கடி உருவானபோது சந்திரபாபுவின் குடும்பம் மலைநகரமான ஹட்டனுக்கு குடிபெயர்ந்தது. ரோட்ரிக்ஸ் அங்கே ஒரு சிறிய கடை வைத்து நடத்தினார். அது கைகொடுக்கவில்லை. 1943-ல் போர் முடிவுக்கு வந்தபோது ரோட்ரிக்ஸ் தன் குடும்பத்துடன் சென்னைக்கு குடியேறினார். அங்கே டி.எஸ்.சொக்கலிங்கம் பரிந்துரையால் தினமணி நாளிதழில் உதவி ஆசிரியராகப் பணிக்குச் சேர்ந்தார். சென்னைக்கு வந்த சந்திரபாபு திரைப்பட வாய்ப்புகளுக்காக தேடத்தொடங்கினார்.

சினிமா வாழ்க்கை

சந்திரபாபு திரைப்படத்தில் நடிக்க முயற்சி செய்தது அவர் தந்தைக்கு பிடிக்கவில்லை. சென்னை கார்ப்பரேஷன் பேரவை உறுப்பினராக இருந்த ஏ.ஆர்.வி.ஆச்சாரி சந்திரபாபுவை இயக்குநர் கே.சுப்ரமணியம் நடத்திவந்த கலைவாணி ஃபிலிம்ஸ் என்னும் நிறுவனத்தில் சேர்த்துவிட்டார். அங்கே கோபிநாத் என்பவரிடம் சந்திரபாபு சினிமா நடனம் கற்றார். ஆனால் அங்கிருந்து உடனே வெளியேற நேர்ந்தது.

1945-ல் எழுத்தாளர் பி.எஸ். ராமையா 'தன அமராவதி' என்னும் படத்தை இயக்கவிருந்தார். தினமணி ஆசிரியர்குழுவில் இருந்த புதுமைப்பித்தன் சந்திரபாபுவை ராமையாவுக்கு அறிமுகம் செய்துவைத்தார். 1947-ல் வெளிவந்த தன அமராவதிதான் சந்திரபாபு நடித்த முதல்படம். அதில் அவர் சிறிய கதாபாத்திரத்தில் தோன்றினார்.

அதன்பின் சந்திரபாபு மீண்டும் படவாய்ப்புகளுக்காக அலைந்தார். எஸ்.எஸ்.வாசன் தயாரித்து 1952-ல் வெளிவந்த 'மூன்று பிள்ளைகள்' என்னும் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். வாய்ப்புக்காக அவர் துத்தநாகத்தை உண்டு தற்கொலைக்கு முயன்றதாகவும், அதைக்கண்டு இரங்கி வாசன் வாய்ப்பளித்ததாகவும் சொல்லப்படுகிறது. தொடர்ந்து வாசன் சந்திரபாபுவுக்கு வாய்ப்பளிக்கவே 'மோகனசுந்தரம்', 'சின்னத்துரை', 'தாய் உள்ளம்' என சந்திரபாபு நகைச்சுவை வேடங்களில் நடித்தார்

சந்திரபாபு 1953-ல் வெளிவந்த 'கண்கள்' என்னும் படத்தில் சிவாஜி கணேசனுடன் இணைந்து நடித்தார். தன் படங்களில் பாடல்களை தானே பாடுவது சந்திரபாபுவின் வழக்கம். இன்னொருவருக்காக அவர் குரல்கொடுத்தது 1954-ல் வெளிவந்த 'பெண்' என்னும் படத்தில் எஸ்.பாலச்சந்தருக்காக. 1955-ல் எம்.ஜி.ராமச்சந்திரனுடன் முதன்முறையாக 'குலேபகாவலி' என்னும் திரைப்படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்தார்.

தனிவாழ்க்கை

சந்திரபாபு மே 29, 1958 அன்று ஷீலா என்பவரை மதுரையில் திருமணம் செய்துகொண்டார். ஷீலாவின் தாய் தமிழ் சினிமா முன்னோடியாகிய சாமிக்கண்ணு வின்சென்ட் குடும்பத்தில் வந்தவர். ஆங்கில இந்தியர். ஷீலாவின் அப்பா மதுரை டி.வி.எஸ் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றினார். ஷீலா திருமணத்திற்கு பின் சந்திரபாபுவை பிரிந்து லண்டன் சென்று இன்னொருவரை மணந்துகொண்டதாகச் சொல்லப்படுகிறது. சந்திரபாபு அதன்பின் மணம்செய்துகொள்ளவில்லை.

வீழ்ச்சி

சந்திரபாபு நடிப்பில் ஒழுங்குகளைக் கடைப்பிடிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. 1960-ல் கண்ணதாசன் தயாரித்த 'கவலை இல்லாத மனிதன்' படத்திற்கு அவர் சரியாக ஒத்துழைக்கவில்லை என்று கண்ணதாசன் குற்றம் சாட்டினார். கண்ணதாசன் தன்னிடம் பணம் அளிக்கவில்லை என சந்திரபாபு அதற்கு பதில் சொன்னார்.

1960-ல் சந்திரபாபு எம்.ஜி.ராமச்சந்திரன் நடிப்பில் 'மாடிவீட்டு ஏழை' என்னும் படத்தை தொடங்கினார். பணத்தைப் பெற்றுக்கொண்ட எம்.ஜி.ராமச்சந்திரன் அப்படத்திற்கு தேதிகள் வழங்காமையால் எம்.ஜி.ராமச்சந்திரனின் தமையன் எம்.ஜி.சக்கரபாணியை சந்திரபாபு தாக்கமுயன்றதாகச் சொல்லப்படுகிறது. இச்செய்திகளை சந்திரபாபு ‘மாடிவீட்டு ஏழையின் கண்ணீர்க்கதை’ என்னும் தலைப்பில் ஃபிலிமாலயா என்னும் இதழில் தொடராக எழுதினார். அதற்கு எம்.ஜி.ராமச்சந்திரன் பதில் சொல்லவில்லை. ஆனால் எம்.ஜி.ராமச்சந்திரனே சந்திரபாபுவுக்கு அவருடைய 'பறக்கும்பாவை' (1966), 'அடிமைப்பெண்' (1969) ஆகிய படங்களில் நடிக்க வாய்ப்பளித்தார் என்று சொல்லப்படுகிறது.

எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதி நாகேஷ் நடிப்பில் 1966-ல் வெளிவந்த 'யாருக்காக அழுதான்' என்னும் திரைப்படத்தை சந்திரபாபு இயக்கி நடிப்பதாக இருந்தது என்றும், சந்திரபாபு அதை முறைப்படி உரிமை பெறாத காரணத்தால் ஜெயகாந்தன் அதை அவருக்கு அளிக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது. சந்திரபாபு யாருக்காக அழுதான் கதைநாயகனைப் போலவே வாய்பேச முடியாத கதைநாயகனை உருவாக்கி தானே இயக்கி நடித்து 'தட்டுங்கள் திறக்கப்படும்' (1966) என்னும் திரைப்படத்தை உருவாக்கினார். அப்படம் பெரும் தோல்வியைச் சந்தித்தது.

தொடர்ச்சியான குடிப்பழக்கத்தால் சந்திரபாபுவின் உடல்நிலை கெட்டது. கடன்களால் சொத்துக்களையும் இழந்தார். இறுதிக்காலத்தில் மிகுந்த வறுமையில் இருந்தார். 1974-ல் வெளிவந்த 'பிள்ளைச்செல்வம்' என்னும் படம்தான் சந்திரபாபுவின் இறுதிப்படம் எனப்படுகிறது.

மறைவு

சந்திரபாபு மார்ச் 8, 1974-ல் மறைந்தார். அப்போது அவருக்கு வயது 46. பட்டினப்பாக்கம் ( Quibble island )கல்லறைத் தோட்டத்தில் அவர் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

விருதுகள்

1958-ல் லூர்தம்மாள் சைமன் அளித்த நடிகமணி பட்டம்

வாழ்க்கைவரலாற்று நூல்கள்

  • சந்திரபாபு கண்ணீரும் புன்னகையும். -முகில்
  • சந்திரபாபு கலையில் எரிந்த கலைஞன் -நாஞ்சில் மு.ஞா.செ.இன்பா
  • நான் ஒரு முட்டாளுங்க: ஜே.பி. சந்திரபாபு கதை- கே.ராஜேஷ்வர்

உசாத்துணை


✅Finalised Page