under review

செண்பகராமன் பள்ளு

From Tamil Wiki
செண்பகராமன் பள்ளு

செண்பகராமன் பள்ளு பள்ளு வகையைச் சேர்ந்த சிற்றிலக்கியம். இது குமரிமாவட்டத்தில் உள்ள கோவைக்குளம் என்னும் ஊரின் தலைவனான செண்பகராமன் காலிங்கராயன் என்னும் மீனவகுடியைச் சேர்ந்த ஆட்சியாளனைப் புகழ்ந்து பாடப்பட்டது.

தமிழகத்தில் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் தனியாட்சி செய்திருக்கிறார்கள் என்றாலும் ஒரு சில சாதியைச் சேர்ந்த ஆட்சியாளர்களைப் பற்றிய பதிவுகளே கிடைக்கின்றன. மீனவ குடியைச் சேர்ந்த ஓர் ஆட்சியாளரின் புகழைப் பாடும் இந்நூல் அந்த சாதியும் தனியாட்சி செய்தது என்பதற்கான ஆதாரம். தமிழகத்தின் மக்கள் வரலாற்றை எழுதுவதற்கான சான்றுகளில் ஒன்று என்னும் வகையில் இந்நூல் முக்கியமானது.

ஆசிரியர்

இந்நூலில் நூலாசிரியர் பெயர் இல்லை. ஆய்வாளர்களாலும் அதை கண்டறியமுடியவில்லை. ஆகவே வாய்மொழிப்பாடலாகவே இது நீடித்தது. பாடல் ஒன்றில் ஆசிரியர் 'எந்த சந்நீக் குலாயு’ என்று சொல்வதிலிருந்து இவர் கிறிஸ்தவர் என்று ஊகிக்கமுடிகிறது. இவர் வேளாள குடிப்பிறந்த கவிஞர் என்றும் ஓர் ஊகம் உண்டு.

பதிப்பு வரலாறு

செண்பகராமன் பள்ளு

நாகர்கோயில் கோட்டாறு கார்மேல் ஆங்கில உயர்நிலைப்பள்ளி தமிழாசிரியராக இருந்த மரியஜான் காலிங்கராயன் தன் தந்தை சு.மரிய இஞ்ஞாசியின் மரணத்துக்குப் பின் அவரது ஏட்டுச் சுவடிகளில் 'செண்பகராமன் பள்ளு'வின் ஏட்டுச்சுவடிகள் கோவைகுளம் (கோவளம், கன்னியாகுமரி மாவட்டம்) சேவியர் சுவானிக்குரூஸ் என்பவரிடம் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருப்பதை கவனித்தார். அவற்றை பெற்று, பார்வையிட்ட போது காப்பு நீங்கலாக 137 செய்யுள்கள் இருந்தன. கூட்டப்புளியைச் சார்ந்த இஞ்ஞாசிக் கோஸ்தா என்பவரிடமிருந்து 100 பாடல்கள் அடங்கிய பிரதி ஒன்று கிடைத்துள்ளது.

செண்பகராமன் பள்ளு மரியஜானால் கண்டெடுக்கப்படுவதற்கும் எழுபது ஆண்டுகளுக்கும் முன்பு திண்ணைப்பள்ளிகளில் பாடமாக படிக்கப்பட்டு வந்தது. இதன் மூலம் பதிப்பில் சில திருத்தங்களை செய்ய முடிந்தது. 1942-ல் மூலமும் பொழிப்புரையும் அடங்கிய 'செண்பகராமன் பள்ளு' பதிப்பிக்கப்பட்டது. கவிமணி தேசிகவினாயகம்பிள்ளை பிரதி ஒப்பீட்டு ஆய்வு செய்து உதவினார். எஸ். வையாபுரிப் பிள்ளை ஆங்கிலத்தில் ஒரு முன்னுரை எழுதி அளித்தார். செய்குத்தம்பிப் பாவலர் சாற்றுகவி அளித்தார். திருவிதாங்கூர் அரசால் இந்நூல் பள்ளிப்பாடங்களுக்கும் பரிந்துரைக்கப்பட்டது. 1947-ல் மறுபதிப்பு வந்துள்ளது.

2011-ம் ஆண்டின் மறுவெளியீட்டில் எம். ஜெ. காலிங்கராயரிடம் தமிழ் பயின்ற மாணவரும்,- பரதவ எழுத்தாளரும் ஆளுமையுமான எஸ். சோரிஸ் ஆண்றனி அவர்களின் முன்னுரையும் இடம்பெற்றுள்ளது.

இந்நூலை பதிப்பிப்பதற்கு கோவைகுளம் மக்கள் பொருளுதவி செய்தனர் என அதன் முடிவுரையில் எம். ஜெ. காலிங்கராயன் குறிப்பிட்டுள்ளார். கத்தோலிக்க மத குருக்கள் உட்பட்ட மேலும் பலருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார். இந்நூல் எழுதப்பட்ட காலம் 1634-க்கும் 1684-க்கும் இடைப்பட்ட காலமாக இருக்கலாம் என மரியஜான் காலிங்கராயன் சான்றுகளுடன் கணித்திருக்கிறார்.

பள்ளு

தமிழில் சிற்றிலக்கியங்கள் (பிரபந்தங்கள்) என வகைப்படுத்தப்பட்ட தொண்ணுற்றாறு வகை நூல்களில் 'பள்ளு’ ஒரு வகை ஆகும். மருதநில இலக்கியமாகிய பள்ளு வேளாண் குடிகளான பள்ளர்களின் வாழ்க்கையைப் பாடுவது. இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழும் இயைந்து வருவதாக அமைக்கப்பட்டிருக்கும். இதைச் சுட்டும்படி நூலின் ஆசிரியர் 'செந்தமிழ் இசைப்பள்’, 'பள்ளிசை’, 'பள்ளேசல்’, 'பள்மூவகைத் தமிழ்’ என்ற அடைமொழிகளைப் பயன்படுத்தியுள்ளார்

செண்பகராமன்

செண்பகராமன் பள்ளின் பாட்டுடைத் தலைவன் கோவை குளத்தின் அதிபதியான செண்பகராமன் காலிங்கராயன். கோவைகுளம் இன்று கோவளம் என அழைக்கப்படும் கன்னியாகுமரியை அடுத்த பரதவ கடற்கரை கிராமமாகும். இவரின் பெயரைக் கொண்டு இவர் ஒரு இந்துவாக இருக்கக் கூடும் என பதிப்பாசிரியர் குறிப்பிடுகிறார். இவர் பல்வேறு கிறித்துவ திருத்தலங்களுக்கு உதவி செய்திருப்பதைக் கொண்டு இவர் ஒரு கத்தோலிக்கராக இருக்கலாம் என எஸ். வையாபுரிப்பிள்ளை தன் முகவுரையில் குறிப்பிட்டுள்ளார்.

செண்பகராமன் என்பதும் காலிங்கராயன் என்பதும் பட்டப்பெயர்கள்தான்.செண்பகராமன் என்பது சோழர்காலத்தில் நிலவுடைமையாளர்களுக்கும், ஆட்சியாளர்களுக்கும் சோழமன்னர்களால் அளிக்கப்பட்ட பட்டம். பின்னர் திருவிதாங்கூர் ஆட்சியாளர்களும் அதை கடைப்பிடித்தனர். காலிங்கராயன் என்பது பழைய பாண்டியர்களால் அளிக்கப்படும் பட்டம். தென்தமிழகப் பரவர்களிடம்(பரதவர்கள்) இன்றும் காலிங்கராயன் எனும் பட்டப்பெயர் குடும்பப் பெயராக நிலைத்திருக்கிறது. குமரிமாவட்டத்தில் கோவைக்குளம் பகுதியிலிருக்கும் பல கல்வெட்டுகளில் காலிங்கராயன் பெயர் காணப்படுகிறது. இந்த குடி எப்படியும் ஆயிரமாண்டுகள் தொடர்ச்சியாக இங்கே ஆட்சிப்பொறுப்பில் இருந்திருக்கிறது என்பது இவ்விரு பட்டங்களுமே இவர்களுக்கு இருப்பதிலிருந்து தெரியவருகிறது.

 பகர அரிய செண்பகராமன் பண்ணை விளங்கநண்ணியே
பறளியாறு பெருகி வார பான்மை பாரும் பள்ளீரே

என்ற வரி பறளியாற்றின் கரையில் இவனுக்கு நிலங்கள் இருந்திருப்பதை காட்டுகிறது. பறளியாறு இன்றைய மேல்மணக்குடி அருகேதான் கடலில் கலக்கிறது.

செண்பகராமன் காலிங்கராயன் கிறிஸ்தவ மதத்தினன் என்பது நூலில் சொல்லப்பட்டுள்ளது. கோவைக்குளத்திலுள்ள இஞ்ஞாசியார் கோயில், கன்யாகுமரியிலுள்ள அலங்காரமாதா கோயில் போன்றவற்றுக்கு இவன் நிதியளித்ததை நூல் குறிப்பிடுகிறது. 'சந்த இஞ்ஞாசியார் பதசேகரத்தான்’ என்று நூலாசிரியர் பாட்டுடைத்தலைவனைக் குறிப்பிடுகிறார். கோவைக்குளத்தில் ஒரு பாறைமேல் கல்லுமூலை என இன்று அழைக்கப்படும் இடத்திலுள்ள பெரிய கற்சிலுவை செண்பகராமன் காலிங்கராயனால் நிறுவப்பட்டது என இந்நூலே சொல்கிறது.

செண்பகராமன் காலிங்கராயன் அக்கால சேரநாட்டு ஆட்சியாளர்களைப்போல் மருமக்கள் வழி முறைமை கொண்டவன். அவன் தந்தைபெயர் பெரியகுட்டி. செண்பகராமன் காலிங்கராயனின் மருமகன்களின் பெயர்களை நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன. மூத்தநயினார் என அழைக்கப்படும் கற்பூரக் காலிங்கராயன், செண்பகராமன் காலிங்கராயனின் வாரிசு. இவன் தம்பி பிரஞ்சீஸ் கொலிவேர். இவனை நூலாசிரியர் இளையநயினார் என்று அழைக்கிறார். கற்பூரக் காலிங்கராயனின் மகன் சுவானி நயினார்.

நூல்வடிவம், உள்ளடக்கம்

இந்நூல் சிற்றிலக்கியங்களில் ஒருவகையான பள்ளு என்னும் வடிவம் கொண்டது. குமரிமாவட்டத்தில் உள்ள கோவைக்குளம் என்னும் ஊரின் தலைவனான செண்பகராமன் காலிங்கராயன் என்னும் மீனவகுடியைச் சேர்ந்த ஆட்சியாளனை புகழ்ந்து பாடப்பட்டது. பள்ளர்கள் தங்கள் பாட்டுடைத் தலைவனரான செண்பகராமன் காலிங்கராயனை புகழ்ந்து பாடுவதாக அமைக்கப்பட்டது. இது ஒரு செவ்வியல் நூல். நாட்டார்ப்பாடல்களின் கூறுகள் ஆங்காங்கே பயின்று வருகின்றன

பள்ளு அமைப்பு

ஒரு பண்ணையில் வேலை செய்துவரும் பள்ளனுக்கு இரு மனைவியர் அவர்களில் மூத்தவள் அந்த நாட்டவள், இளையவள் அயல் நாட்டவள். இவர்களுக்கிடையேயான பிணக்குகளின் வழியே பாட்டுடைத் தலைவனின் புகழைப் பாடுவதாக இப்பள்ளு உருவாக்கப்பட்டுள்ளது.

அன்னை மரியாளின் மீது காப்புக் கூறி, அன்னம்மாள் (மரியாளின் தாய்), இன்னாசியார் (இக்னேஷியஸ்) மற்றும் அப்போஸ்தலர்களுக்கு (இயேசுவின் சீடர்கள்) வணக்கம் சொல்லி நூல் துவங்குகிறது. அவையடக்கப் பாடலும் இடம்பெற்றுள்ளது.

கதைவடிவமாக பள்ளனும் அவன் மனைவியரும் தத்தம் நாடுகளின் வளங்களைப் பாடுவதாக செய்யுள்களும் பாடல்களும் புனையப்பட்டுள்ளன.நூலின் காலத்தின் சில வரலாற்றுக் குறிப்புகளும், பாடல் பெற்ற செண்பகராமனின் முன்னோர் குறித்த தொன்மங்களையும் உள்ளடக்கியது இந்நூல் . இதில் ஐவகை நிலங்கள் குறித்த பாடல்களும் வடுகர்களின் நாஞ்சில் நாட்டு படையெடுப்பு குறித்த தகவல்களும் இடம்பெற்றுள்ளன.

நாஞ்சி நாடு என இந்த நூலில் குறிப்பிடப்படும் பகுதி கோவளத்தை உள்ளடக்கிய தோவாளை மற்றும் அகஸ்தீஸ்வரம் தாலுக்காக்களை உள்ளடக்கிய பகுதி என பதிப்பாசிரியர் குறிப்பிடுகிறார். இதைத் தவிர பாண்டி நாடு, வள்ளியூர், திரு உத்திரகேச மங்கை, திருச்செந்தூர் போன்ற பகுதிகளையும் இடங்ககளையும் குறித்த பாடல்கள் இப்பள்ளுவில் இடம்பெற்றுள்ளன. கோவளத்துக்கு அருகே கடல் சேரும் பறளியாற்றின் சிறப்பும் பாடப்பட்டுள்ளது.

செண்பகராமன் பள்ளுவில் கீழ்வரும் பாவகைகள் இடம்பெற்றுள்ளன

  • ஆசிரிய விருத்தம்
  • சிந்து
  • வெண்பா
  • கலிப்பா
  • கலித்துறை
  • கட்டளைக் கலிப்பா
  • சந்தத் தாழிசை
  • கலிவிருத்தம்
  • விருத்தம்
  • நெற்கணக்கு
  • சந்த விருத்தம்
கவிதை நடை

கா. ப. செய்குதம்பிப் பாவலரின் சாற்று கவிதை

கோவை குளமளித்த கோன்செண் பகராமக்
காவைக் கனிந்தேத்திக் கண்டபள்ளுப்-பாவைநே
ரொத்திக்கும் பாகும் உறுகனியும் கற்கண்டும்
தித்திக்கு மோசொல்வீர் தேர்ந்து.’

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் சாற்று கவிதை

வள்ளலுயர் தென்கோவை மன்செண் பகராமன்
பள்ளினிமை யானும் ப்கருவதேன்-தெள்ளமுதப்
பாட்டிசைக்கோர் பச்சைப் பசலையுமே சாய்ந்தாடிக்
காட்டியதா லுள்ளக் களிப்பு.

வில்லேபுருவம் சரமே இருகண்கள் வெண்நகை ஒண்
பல்லே தரளம் இதழே பவளம் பழகு தமிழ்ச்
சொல்லே தரும் செண்பகராமன் வெற்பில் சுருண்டிருண்ட
அல்லே குழல் என்னை இவ்வண்ணமாக்கிய ஆயிழைக்கே

என்பதே பொதுவான இந்நூலின் மொழிநடை.

பள்ளன் – பள்ளி உரையாடல்களில் பேச்சுமொழி வருகிறது

அந்தப்பேச்சை விடு போனபுத்தியை
 ஆனை கட்டி இழுத்தால் வருமோ
இந்தப்பாடு பட என் தலையின் எழுத்தைச்
 மற்றதேன் சொல்லவேணும்?

என்னும் நடை அமைந்துள்ளது. இந்த மொழிமாறுபாடு பொதுவாக பள்ளு இலக்கியங்களின் பாணி. குறவஞ்சி, பள்ளு இரண்டுமே நாட்டார்ப்பாடல் வடிவிலிருந்து சிற்றிலக்கியத்தகுதி பெற்ற இலக்கியங்கள்.

நிலக்காட்சிகள்

நெய்தல் நிலக்காட்சி

துள்ளும் மகரம் வாளை மீனைத் துரத்த அந்த வாளைமீன்
துள்ளிப் பாய முள்ளுக் கெளிறு துடுக்காய்த் துடிக்கக் கூருகிர்ப்
புள்ளும் பருந்தும் பாய்ந்து பிடித்துப் புளினத் திடையிற் கொண்டுபோய்ப்
போட அதுகண் டோடி நுளையர் புதல்வர் புணரிக் கரையில்மேய்
வெள்ளை வளைகொண் டெறியப் புளினம் வெருவி வெருவி இரியப்போய்
மீனை எடுத்து முள்ளி யடுக்கி வெந்தீக் கொளுத்திச் சுட்டுண்ணும்
தெள்ளு தமிழ்த்தென் கோவைக் கதிபன் செண்பகராமன் வயல்வளம்
செழிக்கப் பறளி ஆறு வார சித்திரம் பாரும் பள்ளீரே.

மீன்வகைகள்

வாளை தேளி உளுவை குறவை மசறி கயலி திமிங்கலம்
மத்தி பொத்தி அசலை கொளுவை மணலை அயிரை வரிவரால்
சாளை சூடை உல்லங் கெளிறு சம்பான் நொறுக்கி வெங்கணை
சள்ளை ஆரல் திரச்சி கூறவு சரமீன் காரல் நெத்திலி கோளை
பயிந்தி நெய்மீன் கணவாய் குறுமீன் மலங்கு பஞ்சலை
கூனி தொழுத்தை கெண்டை கீளி குத்தாய் குதிப்பு வாவல்மீன்
ஆழப் பாயும் கடலின் மீனும் ஆற்று மீனுங் கூட்டமாய்
அதிரப் பறளி ஆறு வார அதிசயம் பாரும் பள்ளீரே.

வரலாற்றுப் பின்புலம்

செண்பகராமன் காலிங்கராயனின் முன்னோர் ராமேஸ்வரம் அருகே திருஉத்தரகோசமங்கையில் இருந்து குமரிமாவட்டத்தில் குடியேறியவர்கள் என்று நூலாசிரியர் சொல்கிறார். திரு உத்தரகோசமங்கையில் அவர்கள் கல்ரதம் ஓட்டினர் என்னும் செய்தி அங்கும் அவர்கள் அரசகுடியாகவே இருந்தனர் என்பதை காட்டுகிறது. செண்பகராமன் காலிங்கராயனின் முன்னோர் திருச்செந்தூர் முருகனுக்கு கல்மண்டபம் கட்டி அளித்த செய்தியும் சொல்லப்படுகிறது. காலிங்கராஜன் பரத [பரதவ] குலத்தவன் என நூலாசிரியர் பல இடங்களில் சொல்கிறார். 'குருகுலச் சாதிப் பரதன்’ என்கிறார். பண்டையன் என்றும் பழையன் என்றும் குறிப்பிடுகிறார். இவை பாண்டியர்களுக்குரிய அடைமொழிகள். செண்பகராமன் காலிங்கராயனுக்கு கொடியும் மாலையும் இருந்ததை நூல் குறிப்பிடுகிறது. கடம்பமாலையும், மயில்கொடியும். இவை அவன் தனிக்கோல் கொண்ட அரசன் என்றே காட்டுகின்றன. கோவைக்குளத்தை அடுத்து செண்பகராமன் புத்தன்துறை என்னும் கடற்கரை உள்ளது. இது செண்பகராமன் காலிங்கராயனால் அமைக்கப்பட்ட கடல்துறையாக இருக்கலாம்.கீழ்மணக்குடி என்று அருகிருக்கும் கடற்கரை அழைக்கப்படுகிறது. இது அக்காலத்தைய முக்கியமான ஒரு துறைமுகம். அதன்மேலிருந்த கட்டுப்பாடே செண்பகராமன் காலிங்கராயனை செல்வாக்கு மிக்கவனாக ஆக்கியது, தனியாட்சி நடத்தவும் செய்தது. இந்நூல் எழுதப்படும் காலகட்டத்தில் குமரிமாவட்டத்திலுள்ள கடற்கரைகள் முழுக்கவே போர்ச்சுகீசியர் ஆதிக்கத்திலிருந்தன. குறிப்பாக மணக்குடி துறைமுகம் அவர்களின் முழுக்கட்டுப்பாட்டில் இருந்தது. செண்பகராமன் காலிங்கராயன் அவர்களுக்கு கப்பம் கட்டி வந்திருக்க வாய்ப்புண்டு. அக்காலகட்டத்தில் மதுரை நாயக்கர்களின் ஆட்சியில் இருந்தது. தென்காசி, வள்ளியூர் பகுதிகளில் பாண்டியர்வழிவந்த அரசர்கள் ஆட்சியமைத்திருந்தனர். அவர்கள் நடுவே பூசல்கள் இருந்தன. இன்னொரு நாட்டார் பாடலான 'கன்னடியன் போர்’ வள்ளியூரை ஆண்ட பாண்டியர்கள் நடுவே நிகழ்ந்த போரைப்பற்றிச் சொல்கிறது. இந்நூல் அந்தக் காலப்பின்னணி கொண்டது. இந்நூலில் பல குறிப்புகளில் இருந்து இது எழுதப்பட்ட காலகட்டத்தில் கன்யாகுமரிப் பகுதி பாண்டியர்களின் நேரடி ஆட்சியில் இருந்தது என்று தெரிகிறது. 1738-ல்தான் திருவிதாங்கூர் மார்த்தாண்டவர்மாவின் ஆட்சிக்கு வருகிறது. 1766 வரை கன்யாகுமரி பாண்டியர்களின் வசமே இருந்தது. 1766-க்குப்பின் மார்த்தாண்டவர்மா சிற்றரசர்களை ஒழித்து திருவிதாங்கூர் முழுக்க ஒரே ஆட்சியை கொண்டுவந்தார். ஆகவே இந்நூல் 1766-க்கு முன் எழுதப்பட்டதாக இருக்கலாம் என்று தொகுப்பாசிரியர் கருதுகிறார். கோட்டாறில் சவேரியார் ஆலயம் கட்டப்பட்ட செய்தியை இந்நூல் அளிக்கிறது. சவேரியாருக்கு புனிதர் பட்டம் 1622-ல் அளிக்கப்பட்டது. எனவே இந்நூல் இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்டதாக இருக்கலாம் என்பது பொதுக்கருத்து. இந்நூலில் மதுரையின் வடுகர்படை நாஞ்சில்நாட்டில் நுழைந்ததும், அதனால் உருவான அராஜகமும் பேசப்படுகின்றன. இது 1634-ல் திருமலைநாயக்கரின் படைகள் நாஞ்சில்நாட்டில் நுழைந்த செய்தி. அதற்குப் பிந்தைய அராஜக நிலை முப்பதாண்டுகள் நீடித்தது.அப்போது காலிங்கராயன் போன்ற சிற்றரசர்கள் போர்ச்சுக்கீசியர்களுடன் தொடர்புகொண்டு தங்கள் ஆதிக்கத்தை தக்கவைத்துக்கொண்டு தனி முடியாட்சி நடத்தியிருக்க வாய்ப்புண்டு.

உசாத்துணை


✅Finalised Page