சாவேரி கந்தஸ்வாமி பிள்ளை
- கந்தசாமி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: கந்தசாமி (பெயர் பட்டியல்)
சாவேரி கந்தஸ்வாமி பிள்ளை (கீழ்வேளூர் சாவேரி கந்தஸ்வாமி பிள்ளை) (1836 - 1897) பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த நாதஸ்வரக் கலைஞர்.
இளமை, கல்வி
கந்தஸ்வாமி பிள்ளை திருவாரூர் மாவட்டம் கேக்கரையில் 1836-ம் ஆண்டு பிறந்தார்.
தனிவாழ்க்கை
கந்தஸ்வாமி பிள்ளையின் மனைவியின் பெயர் கருந்தாயி அம்மாள். இவர்களுக்கு ஒரு மகன் - முருகையா பிள்ளை, நாதஸ்வரக் கலைஞர், ஒரு மகள் - அபூர்வத்தம்மாள்.
கந்தஸ்வாமி பிள்ளை கீழ்வேளூர் கேடிலியப்பர் ஆலயத்தில் இசைக் கைங்கரியம் செய்யும் நாதஸ்வரக் கலைஞராக இருந்தார். வாரத்தில் ஒருநாள் மட்டும் அங்கு வாசிக்கும் வழக்கம் கொண்டிருந்தார். பிற நாட்களில் அவரது மாணவர்கள் கவனித்துக் கொள்வார்கள். அந்த ஆலயத்தின் தர்மகர்த்தாவாகவும் ஆறு ஆண்டுகள் இருந்தார்.
கேக்கரையில் வாழ்ந்த கந்தஸ்வாமி பிள்ளை கிடிகிட்டிக் கலைஞரான கீழ்வேளூர் சுப்பராய பிள்ளையால் கீழ்வேளூருக்கு குடிபெயர்ந்தார்.
இசைப்பணி
சாவேரி ராகம் பாடுவதில் ஈடுஇணையற்றவராக இருந்ததால் சாவேரி கந்தஸ்வாமி பிள்ளை எனப் பெயர் பெற்றார். கந்தஸ்வாமி பிள்ளையின் நாதஸ்வர வாசிப்பை சிறப்பிக்கும் ஒரு கல்வெட்டு சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் இருக்கிறது.
தவில் வாசித்த இசைக்கலைஞர்கள்
சாவேரி கந்தஸ்வாமி பிள்ளையுடன் தவில் வாசித்த கலைஞர்கள்:
- கீழ்வேளூர் தக்ஷிணாமூர்த்தி பிள்ளை
- திருக்கண்ணங்குடி இருளப்ப பிள்ளை
இவ்விருவரில் ஒருவரது தவில் இல்லாமல் கந்தஸ்வாமி பிள்ளை நாதஸ்வரக் கச்சேரி செய்ததில்லை.
மாணவர்கள்
கீழ்வேளூர் சாவேரி கந்தஸ்வாமி பிள்ளையின் முக்கியமான மாணவர்கள்:
- நாகப்பட்டணம் வேணுகோபால் பிள்ளை
- கோட்டூர் சுப்பையா பிள்ளை
- சிக்கல் ருத்ராபதி பிள்ளை
மறைவு
சாவேரி கந்தஸ்வாமி பிள்ளை 1897-ம் ஆண்டு தனது அறுபத்தியொன்றாவது வயதில் காலமானார்.
உசாத்துணை
- மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
09-Mar-2023, 07:02:17 IST