சல்லியங்குமரனார்
சல்லியங்குமரனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று நற்றிணையில் இடம்பெற்றுள்ளது.
வாழ்க்கை குறிப்பு
சல்லியங்குமரனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். குமரன் என்னும் இயற்பெயர் உடையவர். சல்லியன் என்பாரின் மகன்.
இலக்கிய வாழ்க்கை
சல்லியங்குமரனார் பாடிய பாடல் நற்றிணையில் 141-ம் பாடலாக இடம்பெற்றுள்ளது. பொருளீட்டச் செல்லும் தலைவன், தலைவியை எண்ணித் துயருற்று தனக்குத் தானே செல்லும் வழியின் தன்மையை உரைப்பதாக பாலைத் திணையில் அமைந்துள்ள பாடல்.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
- ஆடவர் பொருளீட்டச் செல்லும் வழியில் பெரிய மத்தகமும் நீண்ட துதிக்கையும் அகன்ற வாயும் உடைய யானைகள் காணப்படும். துளைகளையுடைய காய் அமைந்த கொன்றை மரங்கள் காய்த்து பூத்து குலுங்கி நிற்கும். பாறைகளில் அமர்ந்து முனிவர் தவம் செய்வர்.
- பாண்டியன் கிள்ளி வளவனது யானைப் படையானது பகைவரின் தேர்ப்படை தாக்கி அழித்து பருந்துகள் பிணங்களை உண்டு களிக்கும்படி நாசம் விளைவிக்கும். அரிசிலாற்றங்கரையில் பாண்டியனது அம்பர் நகர் அமைந்துள்ளது. அரிசிலாற்று மணல் கருநிறம் கொண்டது.
- உவமைகள்: அரிசிலாற்று கருமணல் தலைவியின் கூந்தலின் தன்மைக்கும் யானையானது கரு மேகத்துக்கும் உவமிக்கப்பட்டன.
பாடல் நடை
நற்றிணை - 141
- திணை: பாலை
- கூற்று: பொருள்கடைக்கூட்டியநெஞ்சிற்குத்தலைவன்சொல்லிச்செலவுஅழுங்கியது
இருஞ் சேறு ஆடிய கொடுங் கவுள் கய வாய்
மாரி யானையின் மருங்குல் தீண்டி
பொரி அரை ஞெமிர்ந்த புழற் காய்க் கொன்றை
நீடிய சடையோடு ஆடா மேனிக்
குன்று உறை தவசியர் போலப் பல உடன்
என்றூழ் நீள் இடைப் பொற்பத் தோன்றும்
அருஞ் சுரம் எளியமன் நினக்கே பருந்து பட
பாண்டிலொடு பொருத பல் பிணர்த் தடக் கை
ஏந்து கோட்டு யானை இசை வெங் கிள்ளி
வம்பு அணி உயர் கொடி அம்பர் சூழ்ந்த
அரிசில் அம் தண் அறல் அன்ன இவள்
விரி ஒலி கூந்தல் விட்டு அமைகலனே
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 22-Aug-2025, 08:08:54 IST