under review

கையறு நிலை(பொதுவியல் திணை)

From Tamil Wiki

கையறு நிலைபொதுவியல் திணையின் துறைகளில் ஒன்று. கையறு நிலை என்பது ஒன்றும் செய்யவியலாத நிலை. இறந்தவரைக் குறித்து செயலற்று வாடுதலலும், இறந்தவனுடைய புகழை அன்பு காரணமாகக் கூறுவதும் கையறு நிலை.

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் இரு கொளுப்பாடல்கள் கையறு நிலையின் இலக்கணத்தைக் கூறுகின்றன.

கொளு 1

வீரக் கழல் அணிந்த மன்னன் இறந்தானாக, அவனால் புரக்கப்பட்டோர் வருந்தி உரைத்துச் செயலற்று இருத்தல்

செய்கழல் மன்னன் மாய்ந்து என சேர்ந்தோர்
கையற உரைத்துக் கை சோர்ந்தன்று(கொளு 11.14 )

வெண்பா

தாய் அன்னான் தார் விலங்கி வீழத் தளர்வொடு
நீ என்னாய் நின்றாய் நெஞ்சளியை - ஈஎன்றார்க்கு
இல்என்றல் தேற்றா இகல்வ வெய்யோன் விண்படரப்
புல் என்ற நாப் புலவர் போன்று (267)

பொருள்: ஈ' என இரந்தோர்க்கு இல்லை என்ற வார்த்தையைச் சொல்லாத தாய் போன்ற அரசன், மாற்றாரோடு பொருது மறைந்தான். நீ என்னவானாய் நெஞ்சே

கொளு 2

இறந்தவனுடைய புகழை அன்பு காரணமாகச் சொல்லினும் அதுவும் கையறு நிலை.

கழிந்தோன் தன் புகழ் காதலித்து உரைப்பினும்
மொழிந்தனர் புலவர் அத்துறை என்ன(கொளு 11.15 )

வெண்பா

நின்று நிலமிசையோர் ஏத்த நெடு விசும்பில்
சென்று கழிந்தான் செருவெய்யோன் - என்றும்
அழலும் கதிர் வேல் அவன்பமுகழ் பாடி
உழலும் உலகத்து உயிர் (268)

பொருள்: உலகிலுள்ளோர் புகழ வானுலகம் சென்றான். அவனது புகழைப் பாடி இவ்வுயிர் உழலும்.

தொல்காப்பியம்

'கழிந்தோர் தேஎத் தழிபடருறீஇ, ஒழிந்தோர் புலம்பிய கையறு நிலையும்' என்று தொல்காப்பியம் இதன் இலக்கணத்தை வகுக்கிறது.

இளிவே இழவே அசைவே வறுமையென
விளியில் கொள்கை அழுகை நான்கே

என கையறுநிலையின் நான்கு நிலைகளை வரையறை செய்கிறது.

புறநானூற்றில் கையறுநிலை

  • புறநானூறு 65 - சேரமான் பெருஞ் சேரலாதன் சோழன் கரிகாற் பெருவளத்தானோடு போரிட்டு, புறப் புண் நாணி, வடக்கிருந்தானைக் கழாத்தலையார் பாடியது.
  • புறநானூறு 112- பாரி மகளிர் பாடியது.
  • புறநானூறு 113- அவன் மகளிரை அந்தணர் பாதுகாப்பில் விடச் செல்லும்போது பறம்பு விடுத்த கபிலர் பாடியது.
  • புறநானுஉறு 114 -கபிலர் பாரியை எண்ணி இரங்கிப் பாடியது
  • புறநானூறு 115- கபிலர் பாரி உயிரோடு இருந்த பொழுது பறம்பு மலையின் சிறப்பை நினைத்து வருந்திப் பாடியது புறநானூறு 116 -பாரி மகளிரின் நிலை கண்டு கபிலர் பாடியது
  • புறநானூறு 117- பாரி இருந்த பொழுது வளமாக இருந்த பறம்பு நாடு அவன் இறந்த பிறகு வளம் குன்றியதைக் கண்டு மனம் கலங்கிப் பாடியது
  • புறநானூறு 118- பறம்பு மலை பாதுகாவலின்றி அழிவதைக் கண்டு கபிலர் வருந்திப் பாடியது\
  • புறநானூறு 119- பறம்பு நாட்டின் அழிவு கண்டு கலங்கும் கபிலர், முன்பு அந்நாடு வளமாக இருந்ததையும் பாரியின் வள்ளல் தன்மையையும் நினைவு கொண்டு பாடியது
  • புறநானூறு 120- பறம்பு நாடு அழிதுவிடுமோ என்னும் அச்சத்தில் கபிலர் பாடியது
  • புறநானூறு 217 - வடக்கிருந்த பிசிராந்தையாரைக் கண்டு பொத்தியார் பாடியது
  • புறநானூறு - 218-வடக்கிருந்த பிசிராந்தையாரைக் கண்டு கண்ணகனார் பாடியது

எடுத்துக்காட்டு

புறநானூறு 65
  • திணை: பொதுவியல் துறை:கையறுநிலை
  • பாடியவர்:கழாத்தலையார்
  • பாடப்பட்டவர்: சேரமான் பெருஞ்சேரலாதன் கரிகாற் பெருவளத்தானோடு பொருது புறப்புண்பட்டு, வடக்கிருந்தபோது பாடியது.

மண்முழா மறப்பப், பண் யாழ் மறப்ப
இருங்கண் குழிசி கவிழ்ந்து இழுது பறப்பச்,
சுரும்பூஆர் தேறல் சுற்றம் மறப்ப,
உழவர் ஓதை மறப்ப, விழவும்
அகலுள் ஆங்கண் சீறூர் மறப்ப,
உவவுத் தலைவந்த பெருநாள் அமையத்து,
இருசுடர் தம்முள் நோக்கி, ஒரு சுடர்
புன்கண் மாலை மலைமறைந் தாங்குத்,
தன்போல் வேந்தன் முன்பு குறித்து எறிந்த
புறப்புண் நாணி, மறத்தகை மன்னன்
வாள் வடக்கு இருந்தனன்; ஈங்கு,
நாள்போல் கழியல, ஞாயிற்றுப் பகலே!

பொருள்: எங்கும் துயரம். எதிலும் துயரம். முழவு முழக்கம் மறந்தது. யாழ் பண் மறந்தது. சமைக்கும் உண்கலம் நெய் மறந்து கவிழ்ந்து கிடந்தது. சுற்றத்தார் வண்டு மொய்க்கும் தேறல் உண்பதை மறந்தனர். உழவர் பாட மறந்தனர். ஊர்த் தெரு விழாக்கொண்டாட்டம் மறந்தது. நிறைமதி நாளில் ஒரு சுடர் (ஞாயிறு) மறைய ஒரு சுடர் (திங்கள்) தோன்றுவது போல, சேரன், சோழன் ஆகிய இருவரில் ஒருவன் வெளிப்பட மற்றொருவன் மறைந்தான். தன்னை ஒத்த அரசன் (கரிகாலன்) தன் வலிமையால் தாக்கிய வேல் தன் முதுகிலும் காயப்படுத்தியதை எண்ணி நாணம் கொண்ட அரசன் (பெருஞ்சேரலாதன்) போர்க்களத்திலேயே உயிர் துறக்கும் உண்ணா நோன்புடன் தன் வாளைத் தன்முன் நிறுத்தி வடக்கு நோக்கி அமர்ந்திருக்கிறான். இனி, பகல் பொழுது முன்பு போல் மகிழ்வாகச் செல்லாது.

புறநானூறு 117
  • திணை: பொதுவியல்; துறை: கையறுநிலை
  • பாடியவர்: கபிலர்
  • பாடப்பட்டவன் : பாரி மன்னன் இறந்தபோது பாடியது

மைம் மீன் புகையினும், தூமம் தோன்றினும்,
தென் திசை மருங்கின் வெள்ளி ஓடினும்,
வயல்அகம் நிறையப், புதற்பூ மலர,
மனைத்தலை மகவை ஈன்ற அமர்க்கண்
ஆமா நெடு நிறை நன்புல் ஆரக், 5
கோஒல் செம்மையின் சான்றோர் பல்கிப்,
பெயல் பிழைப்பு அறியாப் புன்புலத் ததுவே;
பிள்ளை வெருகின் முள் லெயிறு புரையப்
பாசிலை முல்லை முகைக்கும்
ஆய் தொடி அரிவையர் தந்தை நாடே.

பொருள்: பாரி மகளிர் 'ஆய்தொடி அரிவையர்'. அவர் நாடு இயற்கைச் சீற்றங்கள் தாக்கினாலும் வளம் குன்றாமல் முல்லை பூக்கும் நலம் கொண்டது. அதற்குக் காரணம் அந்நாட்டில் அரசன் ஆட்சி செங்கோலாக அமைந்து சான்றோர் பல்கி வாழ்வதே ஆகும். இயற்கைச் சீற்றங்கள் மைம்மீன் புகைதல் - புகையைக் கக்கிக்கொண்டே எரிமீன் விழுதல். தூமம் தோன்றல் - வால்மீன் தோன்றல் வெள்ளி தென்திசையில் நகர்தல் முல்லை அரும்பல் - காட்டுப்பூனைக் குட்டியின் முள் போன்ற கூர்மையான பற்களைப்போல் முல்லை அரும்புகள் தோன்றல். மழைவளம் - செங்கோல் ஆட்சி, சான்றோர் வாழ்தல் ஆகியனவும் பருவமழை பொய்யாமல் பெய்யக் காரணம் என நம்பப்பட்டது.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 24-Jul-2025, 21:12:54 IST